Saturday, 24 January 2015

‘மாதொருபாகன்’ என்ன செய்யும்? (with Book PDF link)


நான் எந்த புத்தகத்தையும் படித்தே ஆக வேண்டும் என நினைத்து தேடி படித்ததில்லை.
எனக்கு படிக்க தோன்றும் பொழுதெல்லாம் எப்படியோ என் கையில் புத்தகம் வந்துவிடும்.
எப்பொழுதும் நல்ல புத்தகம் கெட்ட புத்தகம் என புத்தகத்தை தரம் பிரிக்கமுடியாது.
மொத்த புத்தகத்தில் ஒரு பக்கத்திலாவது நம்மை கவர எதாவது இருக்கும்.
ஆனால்
இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைத்தேன்.
தேடினேன்.
ஒரு வாரமாக.
கிடைக்கவில்லை.
கடைசியில் எப்படியோ தெரிந்தவர் மூலம் ஒரு வழியாக PDF  ஆக இன்று காலை கிடைத்தது. (PDF link கீழே இணைக்கபட்டுள்ளது)

இதை இப்போ படிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? என கேட்கலாம்.
இருக்கிறது.
நாமக்கல்லை மூன்று வாரமாக தூங்கவிடாமல் செய்த புத்தகம்.
கொங்கு மண்டலமே தன் சொத்தாக நினைத்து(!) கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை கொதித்தெழவைத்த புத்தகம்.
இரண்டு வாரமாக நாளிதழ்களின் விவாத பசிக்கு படையலிட்டு கறி சோறு போட்ட புத்தகம்.
இனி எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் பாதுகாப்பில்லையோ என பயப்படுத்திய புத்தகம்.

புத்தகத்தின் பெயர் : மாதொருபாகன்
எழுதியவர் எழுத்தாளர் பெருமாள்முருகன்.



மாதொருபாகன் என்றால் அர்த்தநாரீசுவரன் என அர்த்தம்.
திருச்செங்கோடு பகுதியில் உள்ள அர்த்தநாரீசுவரன் கோவிலை சுற்றி தான் கதை களம்.

இந்த புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது!!!
நாமக்கல் திருச்செங்கோடு பகுதிகளில் வாழ்ந்த மனிதர்களையும் ஒரு வினோத சம்பிரதாயத்தையும் மையமாக கொண்டு எழுதபட்ட நாவல்.
அந்த சம்பிரதாயம் என்ன என்பதில் தான் இத்தனை பிரச்சனைகளும் அடங்கியிருக்கிறது.
படித்து சில மணி நேரங்கள் ஜீரணிக்கமுடியாமல் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன்.
இப்பொழுதும் செரிக்காமல் தான் எழுதுகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடப்பதாக எழுதியிருக்கிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரங்களாக வருபவர்கள் கொங்கு மண்டலத்தில் இன்றும் சாதி என்ற புண்ணியமான விஷயத்தை கட்டி ஆண்டு அதை அடுத்த தலைமுறைக்கும் போதித்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அது எந்த சாதி என இங்கு நான் சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன்.
முக்கியமான கதாபாத்திரங்களாக காளி என்பவனும் அவன் மனைவி பொன்னா என்பவளும் வருகிறார்கள்.
அத்தனை பக்கங்களிலும் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே.

இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காதலும் அவர்களின் வலியும் படிந்த உரையாடல்கள் அவர்களுக்கே தெரியாமல் வீட்டுகுள் எட்டி பார்த்து எழுதியதை போல அவ்வளவு
உயிருடன் இருக்கிறது.
ஒரு வேளை நானும் இந்த ஊர்காரன் என்பதால் அதில் உள்ள பேச்சு வழக்கு எனக்கு அந்த உணர்வை கொடுத்திருக்களாம்.
கதாபாத்திரங்கள் அடிக்கடி பேசும் கெட்ட வார்த்தைகள் கூட இங்கு சகஜமாக கேட்கும் வார்தைகளாகவே இருக்கிறது.
அதிலும் இடையில் இடையில் மற்ற சாதிகளின் மேல் இவர்கள் செய்யும் ஆதிக்கமும் பதிவு செய்யபட்டிருக்கிறது. இதை இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கொங்கு நாட்டில் மிக தாராளமாக பார்க்கலாம்.

இதில் எனக்கு பிடித்த ஒன்று என்னவென்றால் எந்த வரியில் இந்த நாவலை ஆரம்பித்தாரோ அதே வரியில் இந்த நாவலை முடித்திருக்கிறார் ஆசிரியர்.

இதை படிக்கும் பொழுது குழந்தையின்மையால் அந்த தம்பதி படும் வேதனைகளை அதன் வலி மாறாமல் கொஞ்ச கொஞ்சமாக நம்மேல் புகுத்திவிடுகிறார்.
குழந்தை இல்லை என்றால் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் எவ்வளவு வேதனை என படிக்கும் பொழுது அனுபவித்துவிடலாம் என நினைக்கிறேன்.
ஆனால் இது எதுவும் அவர்களின் சொந்த வலியோ வேதனையோ இல்லை.
அவர்களை சுற்றி உள்ள சமூகம் அவர்களை நிம்மதியாக இருக்கவிடாமல் எதாவது ஒரு விதத்தில் இதை வைத்து குத்திகொண்டே இருக்கிறது.
அவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் சுற்றியுள்ளவர்கள் “அது இருந்தால் தான் சந்தோஷம்” என எது இல்லையோ அதை சொல்லி சொல்லி அவர்களை காயபடுத்திகொண்டே இருக்கிறார்கள்.

சொந்தங்களின் பொழுதுபோக்கே அது தானே.
நம்மிடம் இல்லாததை பற்றி தான் அவர்கள் பேசுவார்கள்.
நன்றாக படம் வரையும் பையனிடம் படிப்பு வரவில்லையே என அங்களாய்ப்பார்கள்.
நன்றாக படிக்கும் பையனிடம் விளையாட்டிலும் கவனம் செலுத்து என அறிவுறுத்துவார்கள்.
நல்ல மார்க் வாங்கிய பையனிடம் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்பார்கள்.
நல்ல வேலையில் உள்ளவர்களிடம் சொந்த தொழில் தான் சிறந்தது என பல்லிளிப்பார்கள்.
செட்டிலானவுடன் கல்யாணப் பேச்சு எடுப்பார்கள்.
கல்யாணமானவுடன் குழந்தைக்கு அவசரம் காட்டுவார்கள்.(கல்யாணமானவர்களை விட)
அது பிறந்ததும் திரும்பவும் முதல் இருந்து ஆரம்பிப்பார்கள்.
இப்படி இவர்களின் எதிர்பார்ப்புக்கும் கேள்விகளுக்கும் பயந்து பயந்தே இங்கு வாழும் வாழ்க்கை செல்லரித்து போய்விட்டது.
இதெல்லாம் எவ்வளவு வலிக்கும் என கேட்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த அழுகாச்சி கவிதைகள்.

பக்கத்துக்கு பக்கம் படிக்க படிக்க அந்த இரண்டு தம்பதிகளின் கண்ணீர்வாடை அடிக்கிறது.

அந்த சமயத்தில் அந்த ஊரில் நடக்கும் 14 நாள் திருவிழாவை பற்றி ஒரு வினோத சம்பிரதாயத்தை கேள்வி படுகிறார்கள்.
அதாவது அந்த திருவிழாவின் பதினான்காவது நாள் இரவில் அங்கு வரும் யாரும் யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துகொள்ளலாம் என்பது.
அங்கு சாதி மதம் மொழி என்று எதுவும் கிடையாது.
அன்று அங்கு வரும் அத்தனை ஆம்பிளைகளும் சாமி என நம்புகிறார்கள்.
அப்படி முகம் தெரியாதவர்களால் பெற்றுகொள்ளும் குழந்தைகளை சாமி புள்ளை என அழைக்கிறார்கள்.
அங்கு போக சொல்லி அந்த தம்பதியிடம் சொல்கிறார்கள்.
கேட்டவுடன் திகைக்கிறான் காளி.
இத்தனை வருடம் அதே ஊரில் இருந்தாலும் திருவிழாவிற்கு இப்படி இன்னொரு முகம் இருக்கும் என்பது எப்படி தெரியாமல் போனது என்ற அதிர்ச்சி அவனுக்கு.
அதை விட கொடுமை இந்த யோசனையை சொன்னவர்கள் காளியின் தாயும், அவன் மாமியாரும்.
பன்னிரண்டு வருடங்களாக குழந்தையில்லாத வருத்தமும் சொந்த பந்தங்களின் கேள்விகளும் அவர்களை கடித்து கொதறியிருந்தது.
இந்த நிலைமையில் அவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது தான் இந்த நாவலின் கடைசி கொஞ்ச பக்கங்கள்.

சரி இப்பொழுது பிரச்சனைக்கு வருவோம்.
எதற்க்காக இத்தனை போராட்டங்கள்??
பெண்களை கேவலமாக சித்தரித்துவிட்டார் என்பதாலா??
அப்படி இருந்திருந்தால் நான் கண்டிப்பாக சந்தோஷ பட்டிருப்பேன்.
பெண்களுக்கு குரல் கொடுக்க ஆண்கள் கூட்டம் இவ்வளவு இருக்கிறதே என.
எனக்கும் இதில் ஆசிரியர் அந்த பெண்ணை கடைசி சில பக்கங்களில் சித்தரித்திற்க்கும் விதத்தில் உடன்பாடு இல்லை.
அதை அப்படி ஒத்துகொள்ள முடியவில்லை.
அதனால் தான் சொல்கிறேன் அப்படி போராடியிருந்தால் நான் கண்டிப்பாக சந்தோஷ பட்டிருப்பேன்.
ஆனால்  இது அதற்கான போராட்டங்கள் இல்லை.
பின் எதற்காக!!
அவர்களின் சாதி பெண்களையும் கோவில் திருவிழாக்களையும் தவறாக சித்தரித்து விட்டார்களாம்.
நன்றாக படியுங்கள்.
“அவர்களின் சாதி பெண்களை”
அப்போ மற்ற சாதி பெண்கள் என்றால் பரவாயில்லையா??
இதில் அக்கரையை காட்டிலும் சாதி நெடி தான் அடிக்கிறது.
சாதிக்காக சாதி கட்சியும்
கோவிலுக்காக மத கட்சியும் போராடுகிறார்கள்.

இதில் முதலில் வைக்கபடும் வினா “அப்படி ஒரு வழக்கம் இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்” என.
ஆதாரம்....
யாரும் ஆதாரம் சொல்லவில்லை.

அப்போ அது வெறும் கற்பனையாக தான் இருக்குமோ??!!
அப்படியும் அதை ஒதுக்கிவிட முடியாது.
எந்த வாய் வழி கதைகளுக்குள்ளும் உண்மையும் புதைந்திருக்கும்.
கொஞ்சம் அதை கற்பனை சேர்த்து ஆசிரியர் தந்திருக்கலாம்.
அப்படி ஒன்று நடக்காவிட்டால் சரி.

ஒரு வேளை அப்படி ஒன்று நடந்திருந்தால்???
பல தலைமுறைகளுக்குமுன் அது வழக்கத்திலிருந்திருந்தால்???!!!
இன்று ஒரு சாதி பெயரில் இருப்பவன் பல வருடங்களுக்கு முன் வேறு ஒரு சாதியின் விதையின் வழியாக வந்தவனாக இருப்பான்.
அந்த விதைக்கு சாதி பெயர் இல்லை.
திருவிழாவில் இருட்டில் விதைத்தவனுக்கு முகமும் இல்லை.. ஊரும் இல்லை... பெயரும் இல்லை...
இந்த இடத்தில் இவர்களின் அடையாளம் இங்கு அழிக்கபடுகிறது.
இப்படி அவர்கள் போராடுவதற்கும் கத்தி கூச்சல் போடுவதற்கு காரணமும் ‘நான் இந்த சாதி இல்லையோ’ எங்கிற பதற்றமும் பயமும் தான்.
எப்பொழுது பயமும் பதற்றமும் தான் மனிதனை கத்த வைக்கிறது.

இது உண்மை இல்லை என நினைத்திருந்தால் இந்த புத்தகத்தை படித்து சிரித்திருப்பார்கள்.
ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ என்ற பயமே இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.
அவர்களின் கூச்சலால் தான் யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த இந்த புத்தகத்தை இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடே தேடுகிறது.
யாருக்குமே தெரியாமல் மறந்து மறைந்து போயிருக்கவேண்டியது இன்று நாமக்கல்லின் அடையாளமாகிபோனது.

இந்த புத்தகத்தால் சமூகத்தில் ஒரு நல்ல விஷயம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படி இந்த மாதொருபாகன் என்ன செய்யும்!!!?

சாதியின் மேல் நம்பிக்கை இருப்பவன் ஒவ்வொருத்தனும் இதை படிக்க வேண்டும்.

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.
இந்த வழக்கம் குறிப்பிட்ட அந்த சாதிக்கு மட்டும் அல்ல.
கதை களம் தான் அந்த சாதி ஆட்கள்.
அந்த கோவில் அனைவருக்கும் பொதுவானது.

அப்போ அந்த சாமி புள்ள என்பதும் அனைத்து சாதிக்கும் பொதுவானது தானே!!

இதை படிக்கும் ஒவ்வொருத்தனுக்கும் அடி வயிரு பதறும்.

தான் ஒரு வேளை வேற்று சாதியின் வழியில் வந்தவனோ என.
அப்படி இருக்காது என தேற்றி கொள்ள நினைப்பார்கள்.
ஒரு வேளை ஒன்பது தலைமுறைக்கு முன்னால் இப்படி நடந்திருந்தால்!!! என பதில் தேட முடியாத கேள்வி தோன்றும்.

சின்ன வயதிலிருந்து சாதி பால் ஊற்றி ஊற்றி வளர்க்கபட்டவன் மனதில் அவன் சாதியும் மதமும் ஆலமரமாக வளர்ந்து நிற்கும்.
இப்படி தன் ஆணி வேரே புடுங்கி எறியப்படும் பொழுது ஒட்டு மொத்த ஆலமரமும் ஆட்டம் காணும்.

அந்த ஆட்டத்தில் சாதி சனியன் அவனுக்குள் உடைந்திருக்கும்.
எவனும் வெளியே சொல்ல மாட்டான். சொன்னால் அசிங்கம்.
ஆனால் கண்டிப்பாக உள்ளுக்குள் இதை நினைத்து பயந்து கொண்டே இருப்பான்.

யோசித்து பாருங்கள் இன்று ஒரு சாதியின் தலைவனாக இருப்பவன் 5 தலைமுறைக்கு முன் வேற்று சாதியால் விதைக்கபட்ட சாமி புள்ளையின் வழிவந்தவனாக இருக்கலாம்!!

இன்று சாதி வெறியில் இன்னொருவனை வெட்டி கொல்பவன் பல தலைமுறைக்கு முன் வெட்டு பட்டவனின் பரம்பரையால் விதைக்கபட்டிருக்கலாம்.
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.
அப்படி வாழ்ந்திருந்தால் அவர்கள் இப்பொழுது இருப்பவர்களின் முன்னோர்களாக கூட இருக்கலாம்.
இந்த கூட்டத்தில் எவன் சாமி புள்ளயின் வழி வந்தவன் என யாரால் கண்டுபிடிக்க முடியும்!!
கதையை படிப்பவன் ஒவ்வொருத்தனுக்கும் இந்த பதற்றம் வரும்.
இங்கு அவன் சாதி பொய்த்துவிடும்.
ஒரு நாள் இந்த பயமே சாதியை உடைக்கும்.
சாதியை சாகடிக்கும்.
மனிதனை மனிதனாக பார்க்க வைக்கும்.
எந்த சாதி அடையாளமும் இல்லாமல் பார்க்கவேண்டும்.
ஜாக்கிரதை!!!

சுற்றி இருப்பவன் உன் தூரத்து சொந்தமாகவும் இருக்கலாம்.
உன் சொந்தம் வேறு சாதியிலும் இருக்கலாம்.
வேறு மதத்திலும் இருக்கலாம்.
ஏன் வேறு நாட்டிலும் இருக்கலாம்.

சாதி சனியனை விரட்ட இப்படி பழைய அசிங்கத்தை தோண்டி எடுக்கபடவேண்டுமோ என்னவோ!!
இன்று அசிங்கமாக படுவது அன்று வழக்கமாக இருந்திருக்கலாம்.
இன்று வழக்கத்தில் இருப்பவை இனி வரும் காலங்களில் அசிங்கமாக மாறலாம்.
மாறும்.
சாதி உடையும்.
சாதி உடைக்கபடும்.
கண்டிப்பாக உடைக்கபடவேண்டும்.




-பிரபு மித்ரன்



Thursday, 15 January 2015

ஹெட் செட் எமன்


வேலை முடிந்து மாலை பஸ்ஸில் வீட்டுக்கு கிளம்பினேன்.
இரண்டு பஸ் மாற வேண்டும்.

முதல் பஸ்ஸில் ஏறி இடம் கிடைச்சு உட்காந்தேன்.
அப்போ என் முன்னால் இருக்கையில் இருந்த ஒரு நடுத்தர வயது இளைஞன் அவன் செல்போனில் பாட்டு போட்டு விட்டுருந்தான்.
மெலடி சாங் தான்.
சீனா போன் என நினைக்கிறேன்.
பயங்கரமான சத்தம்.

அந்த பாட்டை கேட்கும் மூடில் நான் இல்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அது காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

இருப்பதிலேயே கொடுமையானது நமக்கு கேட்க விருப்பமில்லாத சத்தம் நம் காதில் விழும்பொழுது தலைகுள் ஒன்று நடக்குமே. அதுதான்.

கொஞ்ச நேரம் தான் கேட்டிருப்பேன் அதற்குள் தலை வலி உயிர் போகிறது.
அவனுக்கு அது பிடித்த பாடலாக இருந்தால் அதை அவன் மட்டும் மெதுவாக சத்தம் வைத்து கேட்கலாம்.
அதை விட்டு விட்டு இப்படி என்னையும் வாதிக்கிறானே.
யோசித்து கொண்டிருந்த பொழுதே நடத்துனர் அவனை பார்த்து கத்தினார்
“யோ..... அத ஆஃப் பன்றியா இல்ல பஸ்ஸே விட்டு கீழ இறங்குறியா??”
உடனே பாட்டு நின்றுவிட்டது
“பெரிய இவரு.. பாட்டு கேட்காம வர மாட்டாரு... அடுத்தவன சாவடிச்சுட்டு” என முனு முனுத்த வாரே நகர்ந்தார் புண்ணியவான்.
இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
மற்றவர்களும் நடத்துனரை ஆமோதித்து புன்னகித்தனர்.
என்னை போலவே இங்கு பல பேர் இந்த அவஸ்த்தையை அனுபவித்திருப்பார்கள் என அப்பொழுது தான் புரிந்தது.



அந்த பஸ்ஸை விட்டு இறங்கி அடுத்த பஸ்ஸில் ஏறினேன்.
ஏறின பிறகு தான் தெரிந்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேனென.
அங்காவது ஒருத்தன் தான் பாட்டு போட்டு விட்டான். காப்பாற்ற பேருந்து நட்த்துனர் இருந்தார்.
ஆனால் இங்கு பஸ்ஸிலேயே போட்டுவிட்டிருந்தனர்.
சும்மா இல்லை
காது ஜவ் கிழியும் அளவுக்கு சத்தமாக.
அந்த டிரைவருக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை ஓரே சோக பாடல்கள்.
அதுவும் சத்தமாக.
கேட்கும் எனக்கு அந்த பாடலில் உள்ள சோகம் தெரியவில்லை. சத்தம் மட்டும் தான் கேட்கிறது.
நானும் பார்த்து விட்டேன் இந்த டிரைவர்கள் காதல் மூடில் இருந்தால் பாடல்களும் அதை பிரதிபலிக்கும்.
பாடல்களை வைத்து அவர்களின் மூடை கனித்து விடலாம்.
சில சமயம் ஐட்டம் சாங்காகவே வேறு போட்டுகொண்டு பஸ்ஸை ஓட்டுவார்கள். எதை நினைத்து ஓட்டுவார்களோ!!
அங்கு விட்ட தலை வலி இங்கு எகிறிகொண்டிருந்தது. என்னை இங்கு காப்பாற்ற யாரும் இல்லை.

பேருந்தை விட்டு இறங்கி என் வீட்டுக்கு நடக்கிறேன்.
என் ஊருக்குள் நுழையும் பொழுது தான் தெரிந்தது.
அடுத்த நாள் பொங்கல் விழாவிற்கு ஊரு முழுவதும் குலாய் ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள்.
என் வீட்டுக்கு அருகில் மாட்டியிருக்க கூடாது என சாமியை வேண்டி கொண்டே வீட்டுக்கு போனேன்.
படுபாவி!!!!
இரண்டு ஸ்பீக்கர் மாட்டி இருக்கான்.
அதிலும் ஒன்று இன்னொரு ஸ்பீக்கரை விட இரண்டு மடங்கு நீளமாக.
சரி 
எப்படியும் நாளைக்கு தான் பொங்கல்.
நாளை தான் ஆரம்பிப்பார்கள். இன்று நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவாரே வீட்டுகுள் நுழைந்தேன்.
சாப்பிட்டு முடித்து கொஞ்சம் படுக்கலாம் என நினைத்து படுத்தேன்.
கண் சொக்க ஆரம்பித்து விட்டது.
..................................................................
.............”த்தடார்”..........................
குரங்கன்... இப்பொழுதே பாட்டு போட்டு விட்டான்.
எதோ ஆக்க்ஷன் ஹீரோவின் அறிமுக பாடல்.
தூங்க வேண்டிய நேரத்துல கேட்குற பாட்டாடா இது.!!!
இன்னும் இரண்டு நாட்களுக்கு எவனை பற்றியும் கவலை படாமல் அவனுக்கு பிடித்த பாடலை மட்டுமே போடுவான்.
அது பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் நாம் கேட்டே ஆக வேண்டும்.



எத்தனை குழந்தைகள் படிப்பார்கள்??
அப்படியே படிக்கவில்லை என்றாலும் அன்று டீ.வி யில் போடும் புது படங்களை பார்க்க எவ்வளவு நாள் காத்திருப்பார்கள்.
இந்த சத்தத்தில் எப்படி பார்ப்பார்கள்.
எவ்வளவு வயதானவர்கள் படுத்த படுக்கையாக இருப்பார்கள்.!!!
எவன் எக்கேடு கெட்டாலும் இதை நிறுத்த மாட்டார்கள்.
யார் வைத்த சட்டம் இது.??
உடனே  "திருவிழா என்றால் இப்படி பாட்டு போடுவது நம் நாட்டின் தொன்றுதொட்ட கலாச்சாரம்.. உன்னை போல சிலருக்காக அதை மாற்றி கொள்ள முடியாது." என பொங்கி எழுவார்கள் நாம் வைக்கும் பொங்கலை விட.
இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன்,
கரண்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் கலாச்சாரம் கண்டுபிடித்தாகிவிட்டது.
பின்பு எங்கு இருந்து வந்தது இந்த பழக்கம்???

அன்று இசையுடன் நடந்த திருவிழாக்கள் இன்று இரைச்சலுடன் நடக்கிறது.


அனைவருக்கும் பாட்டு கேட்க பிடிக்கும்.
நம் மன நிலையை பிரதிபலிக்கும் பாடல்கள் நமக்கு சுகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு சோகமாக இருக்கும் பொழுது குத்து பாட்டு கேட்க தோன்றாது.
சந்தோஷமாக இருக்கும் பொழுது அழுது வழியும் பாடல்கள் கேட்க தோன்றாது.
காதலில் தோற்றவனுக்கு காதலின் புனிதத்தை சொல்லும் பாடல் கோபத்தை கொடுக்கும்.
இப்படி நம் மன நிலைக்கு ஏற்ற பாடல்களை நாமே தேர்ந்தெடுத்து கேட்போம்.
ஆனால் இந்த சமூகம் நமக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது!!??
சமூகம் என சொல்வது நீங்களும் நானும் தான்.
நம்மில் பல பேர் இப்படி நமக்கு பிடித்த பாடலை சத்தமாக வைத்து கேட்போம்.
அடுத்தவரை பற்றி கவலை படாத கேவலவாதிகள்.
இது பத்தாது என்று பொது இடங்களிலும் தனக்கு பிடித்த ஹீரோவின் பாடல்கள், தனக்கு பிடித்த மியூசிக் டைரக்டரின் பாடல்கள் என அடுத்தவரை வற்புறுத்தி போட சொல்வார்கள்.
அதை அவர்களே மெய்மறந்து ரசிப்பார்கள் பாருங்கள்... அப்படியே காதோடு சேத்து “ச்சப்” என்று அறைய தோன்றும்.

இசை
மனிதன் கண்டுபிடித்ததுலயே மிக அற்புதமான ஒன்று.
சர்வாதிகாரிகளையும் தன் அடிமையாக்கும் சக்தி படைத்தது.

அதன் டெசிபல் மிக கம்மியாக இருக்கும் பொழுது தாலாட்டாகிறது.
கொஞ்சம் அதிக படுத்தும் பொழுது கேட்பவர்களுக்கு சுகமாக இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் அதிகமாக வைக்கும் பொழுது அது உற்சாக படுத்தும் இசையாக மாறுகிறது.
இன்னும் அதிகமாகும் பொழுது இசை என்பது மறைந்து வெறும் சத்தமாக உருவாகிறது
அதைவிட அதிக படுத்தும் பொழுது அது இரைச்சலாக மாறுகிறது.

எந்த சத்தம் மெல்லிசான இசையாக இதயத்தை வருடியதோ அதே சத்தம் இப்பொழுது இரைச்சலாக மாறி எரிச்சலை தருகிறது.
எப்பேர்பட்ட உலகின் சிறந்த இசை கலைஞர்களின் இசையும் அதன் சத்தம் அதிகமாகும் பொழுது அது கண்டிப்பாக கேட்பவர்களுக்கு எரிச்சலை தான் தரும்.
அதற்கு எந்த பாட்டும் விதி விலக்கு கிடையாது.

சந்தேகம் இருந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை உங்களால் கேட்க முடியாத அளவுக்கு சத்தமாக வைத்து கேட்டு பாருங்கள்.
அந்த பாட்டு முடியும் பொழுது அந்த பாட்டு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடும்.
ஒரு நாள் முழுவதும் அப்படி கேட்டு பாருங்கள்.
கண்டிப்பாக கொஞ்ச நேரத்திற்காவது கிறுக்கு பிடித்த மாதிரி திரிவீர்கள்.

சத்தத்திற்கு அப்படி ஒரு வலிமை இருக்கிறது.
கருத்து சொல்வது போல சொல்ல வேண்டும் என்றால் இப்படி வேண்டுமானால் சொல்லலாம்.

சத்தத்தோடு பிறக்கிறோம்.
சத்தமே இல்லாமல் செத்துப்போகிறோம்.
இடையிலாவது அளவான சத்தத்துடன் வாழ்வோமே!!
அடடே!!

கடைசியாக இரவு 11 மணிக்கு பாட்டை நிறுத்தினான்.
இனி தூங்கலாம் ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது.
என் மொபைலை சைலன்டில் போட வேண்டும்.
நம்மை அமைதி இழந்து வாழவைத்த தெய்வங்களில் முதல் தெய்வம் இந்த செல்போன் தான்.
சரி
எதற்கோ சொல்லிவிடலாம்!
இதற்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்ககூடும்.

இப்பொழுதும் நான் பாடலுக்கோ இசைக்கோ எதிராக பேசவில்லை.
அதன் சத்தத்தின் அளவை பற்றி தான் சொல்கிறேன்.
எல்லோரும் ஓரே மன நிலையுடன் இருப்பதில்லை.
பல பிரச்சனைகளுடன் சில பேர் நம்மை சுற்றி இருக்கக்கூடும்.
சத்தம் அவர்களை இன்னும் பாதிக்கலாம்.
நமக்கு பிடிக்கும் என்பதற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்தகூடாது அல்லவா!!

நல்ல பாடகர்களின் இனிமையான குரல் கூட சத்தம் அதிகரிக்கும் பொழுது கழுதை கத்தலாக ஆகிவிடுகிறது.

ஒரு நிமிடம் காதை திறந்து நம்மை சுற்றி கவணியுங்கள்.
எவ்வளவு இரைச்சலுக்கு நடுவில் நாம் வாழ்கிறோம் என.

அதிக சத்தத்தால் மன உளைச்சல் அதிகரிக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.
மன உளைச்சல் ஆயுளை குறைத்துவிடும்.
அதே சமயம் நல்ல இசை நம் ஆயுளை அதிகரிக்கவும் வல்லது.

ஒரு இசை நமக்கு எமனாகவும் மாறும்.
எமன் நம் ஹெட் செட்டிலும் இருக்கலாம்.

இசையுடன் வாழ்வோம்.


சத்தத்துடன் அல்ல.




பிரபு மித்ரன்

Related Articles