Sunday, 24 April 2016

திராவிடன் என்ற அசுரன்

“ஒருவனை கடவுளாக விளம்பரம் செய்
அவனை கடவுளின் அவதாரமாக மக்களை நம்ப செய்
அதன் பிறகு
அவன் செய்யும் அநியாயங்கள் அனைத்தும்
‘கடவுளின் திருவிளையாடல்’ என நம்பவைத்துவிடலாம்"

‘அசுரன்’ என்ற புத்தகத்தில் இராவணன் இராமனை பற்றி இப்படி நினைக்கிறான்.

ஆம் உண்மைதானே!!
அனுமனை அனுப்பி இலங்கைக்கு அதன் அப்பாவி மக்களுடன் சேர்த்து தீ வைத்ததாகட்டும்..
சீதையின் கற்பின் மீது சந்தேகம் கொண்டு எரியும் சிதையில் ஏற சொன்னதாகட்டும்
போர் முடிந்து அயோத்தியில் கர்பமாக இருந்த சீதையை தனியாக வனவாசம் அனுப்பியதாகட்டும்
இவை எதுவுமே நமக்கு தப்பு என சொல்லப்படவில்லை
ஏன் என்றால்
அதை செய்த மனிதனை கடவுளாக நம்மை நம்ப வைத்துவிட்டார்கள்.



இந்த ‘அசுரன்’ என்ற புத்தகம் ‘வீழ்த்தபட்டவர்களின் வீர காவியம்’ என்ற வாசகத்துடன் இடம் பெற்றிருக்கிறது.

போர் களத்தில் குடல் சரிந்து கிடக்கும் இராவணன் தனது வாழ்க்கையை பற்றி அவனே விவரிப்பதாக இந்த கதை ஆரம்பமாகிறது.
//இலங்கை செழிப்புடன் அமைதியாக இருந்தது.. அந்த குரங்கு மனிதன் எங்கள் நகரத்திற்கு தீ வைப்பதற்க்கு முன்//

இமையமலை வரை அசுரர்கள் ராஜ்ஜியம் நடந்திருக்கிறது.
சிவனை கடவுளாக கொண்டவர்கள்
கருப்பான தோல் உடையவர்கள்
இலக்கியம்..இசை..ஓவியம்..கட்டிடகலை..வானியல்..தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய அறிஞர்களை கொண்ட நாடாக திகழ்கிறது அசுர சாம்ராஜ்ஜியம்.
அப்பொழுது தான் ஒரு அந்நிய படை அசுரர்களின் மீது படையெடுத்து அனைவரையும் கொன்று குவித்தது
அவர்கள் வெள்ளை தோலுடன் பார்க்க வித்தியாசாமக இருந்தனர்
சமஸ்கிரதம் என்ற புரியாத மொழி பேசினர்
அவர்களுக்கு எந்த போர் நெறிகளும் இருக்கவில்லை
பொதுமக்களை கொள்ளையடித்தனர்
பெண்களை கற்பழித்தனர்
குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றனர்
கோவில்களை இடித்தனர்
சிவனை அவர்களின் கடவுளாக திருடிக்கொண்டனர்
அசுரர்களின் குருவான பிரம்மாவையும் கடவுளாக ஏற்றுக்கொள்ளுமாறு வர்புருத்தினார்கள்
பரந்து விரிந்திருந்த அசுர மக்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒடுங்கி ஆசியாவின் தென் பகுதிக்குள் அடைந்தனர்.
அசுரர்களை விரட்டியடித்து தங்கள் ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள்
தங்களை ‘தேவர்கள்’ என அழைத்துக்கொண்டனர்
அனைவரும் சரி சமம் என்ற அசுரர்களின் வழக்கங்களை ஒழித்து தொழில் அடிப்படையில் 4 சாதிகளாக வகுக்கின்றனர்.
அந்த நாங்கிளும் அடங்காதவர்கள் சூத்திரர்கள் என்ற தீண்டதகாதவர்களாக அறிவிக்கின்றனர்.
பெண்களை அடிமைகளாக நினைக்கும் தேவர்கள் தான் உடங்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகளை அறங்கேற்றியவர்கள்.
தேவர்களின் அரசனான் விஷ்னுவை தங்கள் கடவுளாக மாற்றிக்கொண்டு செல்லுமிடமெல்லாம் சிவன் கோவில்களை அழித்து விஷ்னு கோவில்களை நிறுவினர்.

இது நடந்து பல நூறு வருடங்கள் கடந்து
இந்த ஒடுங்கிய அசுர இனத்திலிருந்து வந்த ஏழை சிறுவன் தான் இராவணன்
பசியுடனும் வெறுப்புடனும் சுற்றித்திரிகிறவன்
தேவர்களின் சாதிய அமைப்பை எதிர்க்க துனிகிறான்
அசுரர்களை தலை நிமிர வைக்க தன் இளம் வயதில் தன் தம்பிகளுடன் இலங்கையை விட்டு இந்தியாவை நோக்கி செல்கிறான்
அங்கு ஆரம்பிக்கும் அவனது பயணம் மகாபலி என்ற அசுர அரசனால் பயிற்றுவிக்கபட்டு இந்தியாவை வென்று அசுர சாம்ராஜ்ஜியத்தை நிறுவி மகா சக்கிரவர்த்தியாக திகழ்கிறான்.
அவன் சென்ற இடமெல்லாம் வெற்றி கொடிதான்.
அழிந்து கொன்டிருந்த அசுர இனம் மீண்டும் மலர்ந்தது.
இப்படி யாராலும் அழிக்க முடியாதவனாக இருந்த இராவணன் பாசத்தாலும் துரோகத்தாலும் எப்படி வீழ்த்தப்பட்டான் என்பது தான் கதை.

போரில் வென்றவர்கள் தங்களை பற்றி தங்கள் அடிவருடிகளை வைத்தே எழுதப்படுவது தான் பின்னாளில் வரலாறாகிறது.
அப்படி எழுதப்படுவதில் அனைத்துமே உண்மையாக இருக்க எள் அளவும் சாத்தியமில்லை
அவர்கள் செய்த குற்றங்களை எல்லாம் மறைத்து
எதிரிகளின் சிறு குற்றத்தையும் மிகைபடுத்தி சொல்லி
வென்றது நன்மை எனவும்
தோற்றது தீமை எனவும்
பெயரிட்டு காவியங்கள் வடிக்கப்பட்டு விடுகின்றன.
அதையே திரும்ப திரும்ப சொல்லி நம் ஆழ்மனதில் பதித்துவிடுகிறது இலக்கியங்கள்.


உதாரணத்திற்க்கு இந்த புத்தகத்தில் ‘அசுரர்கள்’ தான் கதாநாயகர்கள்
அப்படியிருந்தும் ‘அசுரன்’ என்ற வார்த்தையே நமக்கு எதோ கெட்டவர்களாக காட்டுகிறது.
காரணம் நமக்கு அப்படிதான் சொல்லி விதைக்கபட்டிருக்கிறது.
இந்திரனும் கிருஷ்ணனும் எத்தனை பெண்களுடன் இருந்தாலும் நமக்கு தப்பாக தெரிவதில்லை
இராவணன் ஒரு பெண்ணை தூக்கிவந்து அவளை வந்தது போலவே திருப்பி இராமனிடம் கொடுத்தாலும் அவன் கெட்டவன்.

தோற்றவர்களை பற்றி இங்கு எழுத யாரும் இருப்பதில்லை
அவர்களிடமும் சொல்ல எதாவது கதையிருக்கும்
அதை கேட்பதற்கு இந்த உலகம் தயாரக இருந்ததில்லை
காலம் மாறிவிட்டது
இப்பொழுது உள்ளவர்கள் இந்த கதைகளை எல்லாம் கேட்கும் அளவுக்கு பக்குவபட்டுவிட்டார்கள்
அப்படி வீழ்த்தபட்டவர்களை பற்றி எழுதியதற்ககாகவே ஆசிரியர் ஆனந்த நீலகண்டன் அவர்களை பாராட்டலாம்.

மனிதர்களின் பத்து குணங்களை அடக்கி ஆளும்படி இராவணனுக்கு மகாபலி அரசன் அறிவுருத்துகிறார்
அதை மறுக்கும் இராவணன்
‘மனிதனாக பிறந்த நான் மனித குணங்களுடன் இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன்
அதை மறைத்து வெளி உலகத்திற்கு நடித்து கடவுளாவதை விட கடைசிவரை மனிதனாகவே வாழ்வேன்’ எங்கிறான்.
அவை தான் இராவணனின் பத்து தலைகளாக சொல்லப்படுவதாக கூறுகிறது ‘அசுரன்’
சாகும் போதும் கூட இந்த மனித வாழ்க்கையை பற்றிய அவன் பார்வை அசுரனை அன்னாந்து பார்க்கவைக்கிறது.

இராவணனின் ஆட்சியில் சமமாக வாழும் குடிமக்கள் இராமணின் ஆட்சியில் சாதிய கொடுமையில் சுருண்டு விழுவதும்
சிறுவனாக இருக்கும் பொழுதும் குதித்துவிளையாடிய ஆற்றில் ஆட்சி மாறியதும் அந்த ஆற்றுக்கு தீண்டதகாதவனாவதும்
மறுமணம் இயல்பாக இருந்த அசுர விதவைகள் வெள்ளை உடை உடுத்தி மொட்டையடிக்கப்படுவதும்
அந்த காலத்தில் ஆட்சி மாற்றம் சாமானியன் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை கண் முன் காட்சிபடுத்துகிறது.
எவனோ இரண்டு லட்சியவாத அரசர்களுக்காக தன் குடும்பத்தைவிட்டு வாள் ஏந்தி போரில் மடியும் கடைக்கோடி குடிமகனின் குரலும் இதில் பதிவு செய்யபட்டிருக்கிறது.

வீர காவியம் என சொல்லிவிட்டு புத்தகம் முழுவதும் எந்த வீர செயலும் இல்லாமல் அசுரர்களை குடிகாரர்களாகவும்
இராவணனை அமைச்சர்களின் கை பொம்மை போலவும் சித்தரித்தது முரண்.

சாதியை வளர்க்க துடிக்கும் பிராமணர்களை குற்றம் சொல்ல எடுத்துக்கொண்ட சிரத்தையை அசுரர்களின் வாழ்க்கை நெறிகளை விவரிக்க கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
வருணனை கடல் கொள்ளையனாகவும்
கும்பகர்னனை போதை அடிமையாகவும்
சித்தரித்ததில் நமது பழைய நம்பிக்கைக்கு எளிய வழியில் நியாயம் கற்பிக்க பார்த்திருக்கிறார் ஆசிரியர்.
ஆனால் இராவணன் உபயோகிக்கும் பறக்கும் இயந்திரம் எப்படி பறக்கிறது என்ற எந்த விளக்கம் இல்லை.
இந்தியாவிலிருந்து இலங்கை வரை எப்படி பாலம் அமைத்தார்கள் என்ற விவரமும் இல்லை.

3000 வருடம் பழைய கதையில் அடிக்கடி வரும் ‘வில்லன்’ ‘அபின்’ ‘இந்தியா’ போன்ற வார்த்தைகள் நமக்கு அந்த கதையின் பழமையின் மீது சந்தேகத்தை தொடுத்துக்கொண்டே இருக்கிறது.

அசுரர்களின் பார்வையில் இராமாயணம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் தாராளமாக ‘அசுரனை’ ஒரு முறை வாசித்துவிடலாம்.
இது தான் உண்மை என சொல்லமுடியாது.
அதே போல இராமயணத்தில் சொல்லபட்டதும் உண்மை என எவனாலும் சொல்லமுடியாது.
அது புனைவு என்றால் இதுவும் புனைவு
அதில் உண்மை இருக்கலாம் என்றால் இதிலும் எதாவது உண்மை இருக்கலாம்.

இந்த புத்தகம்
வாசிப்பவர்களை
தேவர்கள் ஆரியர்கள் எனவும்
அசுரர்கள் திராவிடன் எனவும் நினைக்கவைக்க முயல்கிறது. 

ஒவ்வொரு புத்தகத்திலும் எதாவது ஒன்று நமக்காக எழுதப்பட்டிருக்கும்,
அந்த வகையில் கடவுளை பற்றிய எனது பார்வையில் சில சிராய்ப்புகள் ஏற்பட்டது என்பது உண்மையே.

ஒரு வேளை இராவணன் அந்த போரில் ஜெயித்திருந்தால் இராவணாயனம் தோன்றியிருக்கலாம் 
அதில் இராவணன் கடவுளாகவும
இராமன் அரக்கணாகவும் இருந்திருப்பான் என சொல்கிறான் இந்த ‘அசுரன்’..

யார் வென்றார்களோ அவர்களின் பார்வையில் தானே இந்த உலகம் சுற்றுகிறது.

பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles