சொந்தக்காரனை திட்டாதவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை
அப்படி என்னய்யா கோபம்?!!
அவங்களை எல்லாம் பேச விட்டு அழகு பாக்கனும்யா...
பாக்கனும்... அவ்வளவு தான்...
ஆனா தலைல எல்லாம் ஏத்திக்க கூடாது.
நமக்கு நல்லது நினைக்குறவனும் இருக்க தான் செய்யுறான்..ஆனா அங்க ஒன்னு இங்க ஒன்னா இருக்காய்ங்க!
ஆனா முக்கால்வாசி பயலுவோ
கிழவி எப்போ திரும்புவா வடைய எப்போ தூக்கலாம்னு தான் பார்பானுவோ.
கீழ மட்டும் விழுந்துட்டோம்னா அவ்வளவுதான்
வடை மாதிரி கவ்விடுவானுவோ..
ஒரு மேடையில் முனைவர் பர்வீன் சுல்தானா சொன்ன குட்டி கதை ஞாபகம் வந்தது.
ஒரு காட்டில் பூனையும் எலியும் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்து வந்ததாம்
தினமும் ஒன்றாக சுற்றிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தது.
ஒரு நாள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் பூனையை காணவில்லை.
காத்திருந்தது எலி.
மதியமாகியும் பூனை வரவில்லை.
பயந்து போன எலி காடு முழுவதும் பூனையை தேடி அலைந்தது.
மாலையாகிவிட்டது....
தேடி அலைந்து பூனை கிடைக்காத விரக்தியில் சோர்ந்து போய் எலி வந்து கொண்டிருந்தது
தூரத்தில் எலியின் குழந்தையான குட்டி எலி ஓடி வருவது தெரிந்தது
"ஏன் இப்படி ஓடி வர்ர?"
"அப்பா.... நம்ம பூனை மாமா இருக்கார்ல.! அவர் வேட்டைக்காரன் வலைல மாட்டிக்கிட்டாரு!!" என மூச்சு வாங்க சொன்னது குட்டி எலி
இருவரும் பூனை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார்கள்
அங்கு ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக்கிடந்தது பூனை
எலியை பார்த்ததும் நம்பிக்கை வந்ததாய்
"நண்பா... நல்ல வேலை வந்தாய்... வேடன் வரும் நேரமாச்சு...சீக்கிரம் இந்த வலையை கடித்து கத்தரித்து என்னை காப்பாற்று"என பரிதாபமாக கெஞ்சியது
"பயப்படாதே நண்பா.... நான் வலையை அறுத்து உன்னை வெளியே கொண்டு வருகிறேன்" என சொல்லிவிட்டு வலையை கொறிக்க ஆரம்பித்தது
அதை பார்த்துவிட்டு குட்டி எலியும் கொறித்தது...
பெரிய எலி மெதுவாக கடித்துக்கொண்டிருந்தது..
அதனால் குட்டி எலியும் மெதுவாக கடித்தது
பூனைக்கு பொறுமையிழந்துவிட்டது
அரை மணி நேரம் ஆகியிருக்கும்
இப்பொழுதும் பெரிய எலி மெதுவாகவும்... குட்டி எலி அதை பார்த்து இன்னும் மெதுவாகவும் கொறித்து கொண்டிருந்தன
அந்த நேரம் பார்த்து வேடன் வந்தான்
அதை பார்த்ததும் பூனை அலரியது
"அய்யோ வேடன் வந்து விட்டான்... நண்பா ஏதாவது செய்"
அவ்வளவு நேரம் பொறுமையாக கொறித்துக்கொண்டிருந்த எலி சில நொடிகளில் கடித்து வலையை அறுக்கவும்
வேடன் கண் முன்னே பூனை தப்பித்து ஓடவும் நேரம் சரியாக இருந்தது.
எலிகள் இரண்டும் மூச்சு வாங்க ஓடி வந்து பேசிக்கொண்டன
குட்டி எலி கேட்டது
"ஏன் அப்பா...நான் தான் சின்னதா இருக்கேன்...வேகமா கடிக்க முடியல.. உன்னால தான் சீக்கிரம் கடிக்க முடியும்ல...? அப்பரம் ஏன் மெதுவா கொறிச்ச? பாவம் பூனை மாமா.. எப்படி பயந்து வாடி போயிடிச்சு தெரியுமா? போ ப்பா..." என கோவித்துக் கொண்டது
பெரிய எலி நிதானமாக பதில் சொன்னது
"பூனை என் நண்பன் தான்.. இல்லை என சொல்லவில்லை.. காலையில் இருந்து சாப்பிடாமல் பசியுடன் இருந்தான்.. நீ வேறு கொலு கொலு என இருக்கிறாய்.. அவனை விடுவித்தவுடன் முதலில் நம்மேல் தான் பாயுவான்.. எனக்கு என் நண்பனை காப்பாற்ற வேண்டும். ஆனால் அதற்காக நம்மை இழந்துவிட கூடாது" என்றது
வெறும் கதையாக பார்த்தால் ஒன்றும் இல்லை தான்.
அந்த எலி இடத்தில் நம்மை வைத்து பார்த்தால் புரியும்
நாம் பல நேரங்களில் உறவுகளை காப்பாற்றிக்கொள்ள நம்மை நாமே பலி கொடுத்துக்கொள்கிறோம்
எவனோ சொன்ன படிப்பை படித்து
எவனுடைய கேள்விக்கோ பயந்து பிடிக்காத வேலைக்கு போய்
எவன் பார்த்தவரயோ கல்யாணம் முடித்து
ஊர் வாய்க்கு பயந்து குழந்தைகளை வளர்த்து..
எவனோ சொன்ன வாழ்க்கையை வாழ்ந்து..
நம்ம வாழ்க்கைக்கே நாம் எவனோ ஒருவனாக இருந்து மடிந்து
நம்மை நாமே அவர்களுக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நமக்கு முக்கியம் தான்...
ஆனால் நம்மை இழந்து அவர்களை மகிழ்விப்பது என்பது
போண்டா துன்ன கொதிக்குற எண்ணை சட்டிக்குள்ள தலைய உட்ட மாதிரி தான்.
போண்டா எல்லாம் கிடைக்காது குமாரு 😂😂😂
No comments:
Post a Comment