Sunday, 10 April 2016

சேலைகளின் கதை

பல ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது!
பழைய கதை!
சில பல பச்சை கிராமங்கள் சேர்ந்த ஒரு நகரம் அது.
அங்கு ஆள மன்னன் இல்லை..
சிரிக்க மனிதனுண்டு....
மிதிக்கும் முதலாளிகள் இல்லை..
மதிக்க சமத்துவமுண்டு..
மகிழ்ந்திருப்பது மட்டுமே வாழ்கையென வாழும் மக்கள் அவர்கள்.


எல்லாம் நல்லாதான் இருந்தது
இயற்கைக்கு பைத்தியம் பிடிப்பதற்கு முன்       
ஆம் பைத்தியம் தான்
மழையை அனுப்புவதற்கு பதில் மறந்து பஞ்சத்தை அனுப்பிவிட்டது
பச்சை எல்லாம் போய் ஊர் மொட்டையாகிப் போனது
வளர்த்த நாயை கூட அடித்து சாப்பிடும் நிலைமை
உடல் வற்றி... கண் புதைந்து அந்த மனிதர்கள் பிணமானார்கள்
சிரிப்பு மறைந்து அழுகையாயிற்று
அப்படியாகிப்போன
ஒரு நாள்
ஆம் அந்த நாள் தான் எல்லாம் மாறியது

ஒரு ஆடையற்ற சிறுமி ஊருக்குள் காலடி வைத்தாள்
வட்டமுகம்..
நீண்டு விரிந்த கூந்தல்..
கூர்மையான கண்கள்..
அன்பொழுகும் புன்னகை..
அவளிடம் பூர்வீகக் கதை எதுவும் இல்லை..
எதிர்கால நினைப்புமில்லை
எல்லா கேள்விகளுக்கும் சிரிப்பையே பதிலாக கொடுத்தாள்..
அவள் அங்கு வந்து மூன்றாவது நாள் வானம் வெடித்து மழை கொட்டியது
இல்லை...
மழை வருவதறகு மூன்று நாட்களுக்கு முன் அவள் வந்திருக்கலாம்
எது எப்படியானால் என்ன
அவளால் தான் மழை வந்தது என அங்கு எல்லோரும் நம்பினார்கள்
மனிதனின் கிறுக்குத்தனங்களில் அதுவும் ஒன்றாக சேர்ந்துவிட்டு போகட்டும்
ஆடையற்ற அவளுக்கு ஆடை அனிவித்தார்கள்
கூந்தல் முடிந்து அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள்
திரும்பவும் ஊர் முழுவதும் பச்சையாகிப்போனது
அவளுக்கு பொட்டு வைத்தார்கள்
முப்போகம் விளைந்து நகரம் செழிப்பானது
இங்கு மாலையிட்டு நகை சூட்டி ராணி போல அவளை சீராட்டினார்கள்

ஆசையாக அவள் ஒரு கிளி கேட்டாள்!
ஊரே சேர்ந்து கிளி பிடித்து அவள் விளையாட கொண்டுவந்தது
மான் கேட்டாள்!
அனைவரும்  மான் பிடிக்க ஓடினார்கள்
அவள் என்ன கேட்டாளும் கொடுத்தார்கள்
அவளை சிரிக்க வைக்க ஊரே கோமாளித்தனம் செய்தது
கீழே விழுந்து புரண்டார்கள்
தலைகீழ் நடந்தார்கள்
கரகம் எடுத்து ஆடினார்கள்
அவள் சிரித்தாள் தான் ஊர் நல்லா இருக்கும் என நம்பினார்கள்
ஊர் நடுவில் அவளுக்கென வீடு அமைத்து
அதில் ஊஞ்சல் கட்டி
அவளை அமர வைத்து ஆட்டினர்
அவள் குலுங்கி குலுங்கி சிரித்தால் குபீரென மழை வரும் என நினைப்பு அவர்களுக்கு
ஊருக்குள் அவள் வந்த தினத்தை வருடம் தவறாமல் திருவிழாவாக கொண்டாடினர்.

சிறுமி வளர்ந்தாள்
அவளை சுற்றும் கோமாளித்தனங்களும் வளர்ந்தது
விளையாட்டுக் குழந்தை குமரியானது
பக்கத்து ஊர் குமரன் ஒருவன் அவளை கவர்ந்தான்
பிடித்துப்போனது
இவள் அவன் கரம் பிடித்து நடந்தாள்
ஊர் தேவதையை எவனோ கடத்திக்கொண்டு போகிறான் என ஊரே பற்றி எரிந்தது
ஊர்காரர்கள் அவர்களை துரத்திச்சென்றனர்
அவனை கொன்றுவிட்டு அவளை அழைத்தனர்
வர மாட்டேன் என்றாள்
கெஞ்சினார்கள்
பிடிவாதமாக மறுத்தாள்
பொறுத்துப்பார்த்து முடியாமல்
அவள் கூந்தலை பற்றி தர தர வென வீதி எங்கும் இழுத்து வந்து ஊர் நடுவில் உள்ள வீட்டில் அடைத்தனர்
மற்றவர்களிடமிருந்து தேவதையை காப்பாற்ற காவலுக்கு வீட்டு வாசலில் ஆள் போட்டார்கள்
வாயில் காவலர்கள்!.
தேவதையை காப்பாற்றிவிட்டதாக இரவு முழுவதும் கோலாகலமாக கொண்டாடினர்.
அது நடந்து பல நூறு பௌர்ணமிகள் கடந்தது
வருடம் தவறாமல் திருவிழாவும் நடந்தது

நான்
இந்த கதை கேள்விப்பட்டு
அந்த நகரின் நடுவில் உள்ள வீட்டுக்கு போனேன்
துவாரபாலகர்களைக் கடந்து உள்ளே நுழைந்தேன்
நடு வீட்டில்
ஒரு நரைத்த குருட்டுக்கிழவி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள்
அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது!!
அங்கு வைத்திருந்த ஊதுபத்தி புகையால் வருகிறதென அங்கிருந்தவன் சொன்னான்
என்றோ ஒரு நாள் அவள் கேட்ட கிளியையும் மானையும் இன்றும் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
அவள் சிரிப்பாள் என!!
இவர்களுக்குத் தெரியுமா?
இன்று பூட்டிக்கிடக்கும் இதே கிழவிதான் அன்று ஆடையற்று சுதந்திரமாக ஊருக்குள் வந்தவளென!!
கிறுக்குச்சிறுக்கி
அன்று மழை பெய்த பிறகு வந்திருக்கக்கூடாதா!!


பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles