Saturday, 4 April 2015

18+ மட்டும் படிக்கவும்

என் சைக்கிள் சுவரோரமாக சாய்த்து வைக்க பட்டிருந்தது
பல வருடங்களாக காதலிக்க ஆள் இல்லாமல் மழையிலும் வெயிலிலும் எனக்காக காத்திருந்து துருப்பிடித்து போய்விட்டது
இரண்டு வீலில் ஒன்றை காணவில்லை
நான் இத்தனை நாள் அதை கவனிக்க மறந்துவிட்டேன்.
பல வருடங்களாகிவிட்டது.!
இப்படி என் சைக்கிளுக்கு இவ்வளவு பக்கத்தில் நின்று.

“ம்ம்ம்ம் காலம் மாறிடுச்சு”
அப்படி சொல்லலாம்.. ஆனால்
காலம் மாறுவதில்லை
நாம் தான் மாறிவிடுகிறோம்.






இது ஏப்ரல் மாதம்
25 வயதிற்கு மேலானவர்களுக்கு இது 12 மாதத்தில் ஒன்று
அவ்வளவு தான்
ஆனால் இதே மாதம் தான் நமக்கெல்லாம் ஒரு காலத்தில் சொர்க காலமாக இருந்திருக்கும்
மறந்து கூட போயிருப்போம்
நானும் தான்...

எட்டாவது வரை ஸ்கூல் லீவ் விடுவதற்கு கொஞ்ச நாளுக்கு முன்னால் இருந்தே நாட்களை எண்ணி கொண்டிருப்பேன்.
இன்னும் எவ்வளவு நாள் இருக்கிறது என..
சில மாதங்களுக்கு முன்னாலிருந்தே லிஸ்ட் போட்டு வைத்து விடுவேன்.
என்ன எல்லாம் விளையாட வேண்டும்...
யாருடைய வீட்டுக்கெல்லாம் போக வேண்டும்... என அத்தனையும் திரும்ப திரும்ப யோசித்துகொண்டு உட்காந்திருப்பேன்.
இப்படி யோசித்துகொண்டு எத்தனை மாதம் வேனாலும் இருக்கலாம்
ஆனால் அந்த கடைசி நாள் பரிட்சை இருக்கிறதே!!
அந்த இரண்டு மணி நேரத்தை ஓட்டுவது தான் மிக கடினமானது
நமக்குள் இருப்பவன் துள்ளி குதித்து கொண்டிருப்பான் வெளியே நம்மால் தான் அமைதியாக உட்காரமுடியாது
அந்த அவஸ்த்தையை சொல்லி புரியவைக்க முடியாது
எழுதவே தோனாது
எப்படா விடுவார்கள் என பேப்பரில் எதோ பேருக்கு கிறுக்கி கொண்டிருப்பேன்.

பரிட்சை முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வந்து ஸ்கூல் பேகை தூக்கி எறியும் பொழுது நமக்குள் ஒன்று வருமே!!! அட அட...
அந்த சந்தோஷத்தை எத்தனை இன்செண்டிவ்களும் கொடுத்து விட முடியாது



அந்த வயதில் நமக்கு தோழர்களோ இல்லை வேறு யாரோ தேவைபட்டிருக்க மாட்டார்கள்.
கூட யாராவது இருந்தால் அவர்களுடன் விளையாடுவோம்.
இல்லை என்றால் நாமே தனியாக விளையாடுவோம்.
ஒரு எரும்பை கூட விளையாட கம்பெனி சேர்த்துகொள்ளும் அருமையான வயது!!!
லைனாக எரும்புகள் போகும் போது இடையில் விரல் வைத்து தேய்த்து விட்டால் அதன் பின்னால் வரும் எரும்புகளெல்லாம் வேறு திசையில் போக ஆரம்பித்து விடும்.
அப்பறம் பத்து அரிசியை கலர் அடித்து எரும்பு புற்றுக்கு பக்கத்தில் வைத்து பார்த்திருக்கிறேன்.
வைத்த ஒரே நாளில் அது காணாமல் போய்விடும்.
அதன் பிறகு இரண்டு நாள் கழித்து அந்த எரும்பு புற்றை கிளரினால் கூட அந்த கலர் அரிசி பத்தும் அப்படியே இருக்கும்.
அது அந்த அளவிற்கு வெயில் காலத்தில் சேத்தி வைக்கும்.

ராஜா பட்டாம்பூச்சி உடம்பில் நூல் கட்டிவிட்டு அதில் பலூன் மாட்டி விட்டால் அது பறக்கும் பொழுது பலூனும் சேர்ந்து பறக்கும். பார்க்க அழகாக இருக்கும்.
ஐம்பது ராஜா பட்டாம்பூச்சிகளை பிடித்து நூல் கட்டி நானும் பறக்கலாம் என கனவு கண்டிருக்கிறேன்.
அதை  ஏன் ராஜா என்று சொல்லிகொண்டிருந்தேன் என ஞாபகம் இல்லை.
இப்பொழுதும் கருப்பும் சிவப்பும் கலந்த நிறமுடைய அதை பார்க்கும் பொழுதெல்லாம் நூல் விளையாட்டு கண் முன்னால் வந்துவிடும்.
ஓடி பிடிக்க தான் நேரமில்லை.

என் வீட்டில் அங்கங்கு முளைத்திருக்கும் சின்ன சின்ன செடிகளை எல்லாம் பிடுங்கி ஒரே இடத்தில் நட்டு விவசாயம் பார்த்திருக்கிறேன்.
எத்தனை தண்ணி ஊற்றினாலும் மாலைக்குள் இலை எல்லாம் காய்ந்து செத்துவிடும். ஏன் என்று என்னால் அந்த வயதில் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை.


மண், கல், செங்கல், மணல் என அத்தனையும் பொறுக்கி எடுத்து சின்னதாக வீடு கட்டி ,முன்னால் கோலம் எல்லாம் போட்டு கிரகபிரவேசம் செய்துவிட்டு வீட்டில் எனக்கு சாப்பாடு போட்டால் உடனே சாப்பாட்டு தட்டுடன் வெளியே கட்டியிருக்கும் என் புது வீட்டுக்கு ஓடி போய் சாப்பிட உட்காந்துவிடுவேன்.

இதெல்லாம் எட்டாவது போகும் வரை தான்.
அதன் பிறகு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.
சைக்கிள் வந்ததும் அது தான் உலகமாகி போனது.
அதுக்கு தான் எத்தனை மரியாதைகள்.
எதை எதயோ மாட்டி வைத்திருந்தேன் அந்த சைக்கிளில். அழகுக்காக என நினைத்து..
பிஸ்கெட்டுக்கு ஃப்ரியா கிடைக்கும் ஸ்டிக்கர் எல்லாம் அதற்கு தான்.
அது பஞ்சராகி விட்டால் அதை விட நான் தான் ஒடிந்து போய்விடுவேன். எதோ வீட்டிலுள்ளவருக்கு உடம்பு முடியாமல் படுத்திருப்பதை போல.
எட்டாவது லீவ் எல்லாம் சைக்கிளுடன் தான்.
காலை எழுந்தவுடன் ஒரு முறை ஓட்டிவிடுவேன். அப்புறம் குளித்தவுடன்...சாப்பிட்டவுடன்..
இப்படி ஒரு நாளைக்கே அதை படாத பாடு படுத்திவிடுவேன்.
அது போர் அடித்தால் டீ.வி இருக்கும்.
கார்டூன் நெட்வொர்க் பிரபலமாக இருந்த சமயம். டாம் அண்ட் ஜெர்ரி.... பாப்பாய் ஷோ... ஸ்கூபி டூபி டூ... இப்படி டைம் டேபில் போட்டு பார்க்கலாம்.
அது என்னவென்றே தெரியவில்லை இந்த டாம் அண்ட் ஜெர்ரியில் எனக்கு டாமை தான் ரொம்ப பிடிக்கும்.
அதி புத்திசாலிகளை விட கொஞ்சம் முட்டாள்கள் தான் நம்மை சீக்கிரம் கவர்ந்துவிடுகிறார்கள்.


ஒன்பதாவது லீவ் சொல்லவே வேணாம்.
என் விளையாட்டு உலகம் இன்னும் சுருங்கி  விட்டது.
கடைசி நாள் பரிச்சை முடிந்து பிரமாதமாக இங்க்கெல்லாம் யுனிபார்மில் தெளித்து வீட்டுக்கு வந்தால்...
பத்தாவது புக் கொடுத்து படிக்க வைத்து விட்டார்கள்.
புக்கிலும் மனது நிற்காது.
கிரிக்கெட்டை தவிற எது விளையாடினாலும் சின்ன பசங்க விளையாட்டு என்று சொல்லிவிடும் வயது.
அது புக்கும்  கையுமாக தான் போனது

பத்தாவது லீவ் உண்மையிலேயே நான் எதிர்பார்க்கவில்லை.
16 வயது.
ஒரு சிலரை பார்க்க முடியாதோ என சோகம் சூழ்ந்து தான் அது ஆரம்பித்தது.
வயது நம்மை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது.
ஒவ்வொரு நாளும் மாலை சைக்கிளை எடுத்து கொண்டு நான் பார்க்க வேண்டியவர்கள் இருக்கும் இடத்திற்கு பறந்து விடுவேன்.
தூரத்தில் இருந்து பார்த்து விட்டு பாட்டு பாடி கொண்டே எங்காவது சுத்திவிட்டு வீட்டுக்கு திரும்பி விடுவேன்.
அப்பறம் யாராவது ஆற்றுக்கு குளிக்க போனால் நானும் கூட போவேன்.
என் ஊரில் ஆறு இருக்கு என்றே எனக்கு அப்போ தான் தெரியும்.
நீச்சல் தெரியாமல் பாசமேரிய பாறைகளுடைய அந்த ஆற்றில் பயந்து பயந்து இறங்கும் திரில் நல்லா இருக்கும்.

பன்னிரண்டாவது முடித்தவுடன் விளையாட விளையாட்டே இல்லாமல் போனது.
என்ன காலேஜ் எடுக்க போறோம்..
என்ன மார்க் வரும்,,, என்ற குழப்பம் மட்டும் தான் இருந்தது.
நடக்கும் கல்வி கண்காட்சிகெல்லாம் நண்பர்களுடன் போய் விடுவேன்.
வேறு எதுவுமில்லை
கம்யூட்டரில் கேம் விளையாடுவேன் இல்லை என்றால் படம் பார்ப்பேன்.

கல்லூரியில் செமஸ்ட்டர் லீவ் வரும்.. முதல் வருடம் மட்டும் வீட்டில் சமத்தாக இருந்தேன்.
அடுத்த நாங்கு வருடமும் நண்பர்களுடன் தான்.
வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
எதாவது சினிமா... அரட்டை... என குடியும் கூத்துமாக தான் போகும்.
விளையாட்டு என்று பார்த்தால் சீட்டு...கேரம்...என பெரிய பசங்க விளையாட்டுகள் தான்.

அதுவும் முடிந்த பிறகு வேலை தேடி அலைந்ததில் லீவ் எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
வெயிலை திட்டிகொண்டு தான் இருந்திருக்கிறேன். ரசிக்க பொறுமை இல்லை.

வேலை வந்தவுடன் லீவும்  இல்லாமல் போய் விட்டது.
இனி வாழ்க்கையில் பெரிய லீவை நினைத்து பார்க்கவேகூடாதோ என்று நினைக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் உள்ளுக்குள் அலறுகிறேன்.
அப்படியே லீவ் இருந்தாலும் என்ன செய்துவிட போகிறோம்.
அடுத்த அதிக சம்பலத்துடன் எந்த வேலையை தேடுவது...
எதிலெல்லாம் முதலீடு செய்வது...
எப்படி எல்லாம் சேமித்து வைப்பது..
இதை தான் யோசித்து கொண்டிருப்போம்.
மீறி போனால் ஷாப்பிங்க் போவோம்.

உண்மையாகவே காலம் தான் மாறிவிட்டதா??
சைக்கிள் அப்படியே தான் இருக்கிறது...
எரும்பும் பட்டாம்பூச்சியும் தினமும் தான் என் கண்ணில் படுகிறது...
டி.வி யில் இன்னமும் கார்ட்டூன் நெட்வோர்க்..போகோ.... எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கிறது..

நாம் நம் வயதை காரணம் காட்டி நாமே நம் உலகத்தை சுருக்கி கொள்கிறோமோ என்று தான் தோன்றுகிறது!!
எந்த விளையாட்டுகளும் நம்மை வேண்டாம் என ஒதுக்கிவிடவில்லை.
18+ என்பது போல
18- என்று எதுவும் இருப்பதில்லை
ஒரு காலத்தில் நம் சந்தோஷமும் நம் உலகமும் நம்மை சுற்றியே இயங்கி கொண்டிருந்தது
ஆனால் இப்பொழுது அது அடுத்தவர்களை சார்ந்தே இருக்கிறது.

என்றோ நான் தொலைத்த என் சின்ன சந்தோஷமான உலகத்தை மீட்க ஆசை படுகிறேன்.
அதில் நான் மட்டும் தான் இருந்தேன்.
இயற்கையுடன் ஒன்றி நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
நிலா..மரம்...நாய்...பூனை என அனைத்துடனும் பேசி சிரித்து காதலுடன் திரிந்தேன்.
தொலைத்ததை தேட வேண்டும்.
தொலைந்த இடத்திலிருந்தே!!!

என் சைக்கிளை ரெடி பண்ணனும். 




பிரபு மித்ரன்

Related Articles