Monday, 28 March 2016

என்ற பரதேசி



சவரம் செய்யாத முகம்..
தலை கோதி நாளான கேசம்..
சுருக்கம் நிறைந்த சட்டை..
மேல் தோல் உரிந்த பழைய செருப்பு
சிரிப்பா இல்லை வெறுப்பா என சொல்லாத வெளிரிய புன்னகை...
இவை அனைத்தையும் தூக்கிக்கொண்டு தூரத்தில் ஒரு உடல் சென்று கொண்டிருந்தது..
ஜீவனற்ற உடல்!!!

நான் பின்னாலயே அதை துரத்திக்கொண்டு ஓடினேன்..
ஓடிச்சென்று அதன் தோளை பற்றி உலுக்கி முகம் திருப்பினேன்
அந்த கண்கள் என்னை ஊடுருவி பார்த்தது.
அது..
அந்த முகத்தை எங்கயோ பார்த்திருக்கிறேன்..!!
என்னையே அந்த கண்கள் பார்க்கிறது..
அது..
அது வந்து..
அது நான் தான்..!!!
அது என்னுடைய உடல் தான்!!!

அந்த உடல் என்னை அணைத்துகொண்டது
நான் அதனுள் சென்று அதன் கண்கள் வழி இவ்வுலகத்தை பார்த்தேன்
எங்கும் வெறுமை.
என்னை சுற்றி எதுவுமே இல்லை
கண்ணுக்கு எட்டிய இடம் வரை வெறுமை
அந்த சூனியத்திற்க்குள் நடந்தேன்
கால்கள் எங்கெங்கோ சென்றது
வலி இல்லை..
மகிழ்ச்சி இல்லை..
வருத்தமில்லை..
என் பார்வையில் அனைத்தும் ஒரே மாதிரியான உணர்வையே கொடுத்தது

அப்படி சூனியமான இடத்தில் ஒன்று என்னை உலுக்கியது
ஒரு குட்டி செடி!!
பார்த்தவுடன் புரியாத பந்தம்!
நான் அதன் அருகில் அமர்ந்தேன்
அதனுடன் பேசினேன்
அது தலையாட்டியது!

விளையாடினேன்
சிரித்தேன்
“உன்னுடனே இருந்து விடவா?” என கேட்டேன்
தலையாட்டியது1
வாழ்க்கையில் பற்று பிறந்தது

அதனுடனே வாழ்ந்தேன்
தினமும் அதன் வளர்ச்சியில் சிலிர்த்தேன்
ஒரு நாள் அது பூத்துகுலுங்கியது
நானோ அன்னையை போல மனசு நிறைந்தேன்
நான்...என் செடி...அதன் பூ... நாங்கள் மட்டும் இருந்தோம்

சில நாட்களில் வண்டுகள் தேனெடுக்க வந்தது
மகரந்தம் சேர்ந்து அந்த சூ்னியத்தை அழித்து கண்ணுக்கு எட்டும் இடம்வரை மலர்களாக நிறைந்தது
எங்கெங்கோ இருந்து மனிதர்கள் வந்தார்கள்
பார்த்து பரவசப்பட்டார்கள்..
என்னுடன் பேசி சிரித்தார்கள்..
சொந்தம் கொண்டாடினார்கள்..
பூக்களுடன் மனிதர்களும் சேர்ந்து வெறுமையே இல்லாமல் அடைந்து போனார்கள்
எங்கும் பூவாசம் நிறைந்திருந்தது

ஒரு நாள்..
ஒருவன் தெரியாமல் இன்னொருவனுடைய பூக்களை பறித்துவிட்டான்
சண்டையிட்டார்கள்
ஒருவர் இன்னொருவரிடம் பொய் சொன்னார்கள்
ஏமாற்றினார்கள்
திருடினார்கள்
சுயநலவாதிகளாகிப்போனார்கள்
பொறாமையால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டார்கள்
தினமும் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது.
அந்த மனித கூட்டத்தை தாண்டி தூரத்தில் தனியாக ஒரு உடல் நடந்து சென்று கொண்டிருந்தது..
நான் அதை துரத்திக்கொண்டு பின்னால் ஓடினேன்.

பிரபு மித்ரன்

Related Articles