Monday, 16 May 2016

தெரியாத தலைப்பு

ஓட்டு போட்ட விரலோடு என் நண்பரும் நானும் செருப்பு வாங்க டவுனுக்கு சென்றோம்.
ஒரு கடையும் திறக்கவில்லை.

சரி என முடிவை மாற்றி சினிமாவிற்கு போகலாம் என தியேட்டரை நோக்கி பாய்ந்தோம்.
அதுவும் மூடியிருந்தது.
இன்று மக்கள் வெளியே வந்தால் அது ஓட்டு போட மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதில் அவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறார்கள்.

இதில் இந்த மழை வேறு.
ஜொய்ய்ய்யென சோம்பேரித்தனமாக விட்டு விட்டு பெய்துகொண்டிருந்தது
மழையில் நனைந்து ஒதுங்க இடமில்லாமல் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

கடந்து சென்ற கோவிலை பார்த்தவுடன் ஒதுங்கி கொள்ளலாம் என நினைத்து வண்டியை திருப்பி கோபுர வாசலில் பைக்கை மட்டும் நனையவிட்டுவிட்டு நாங்கள் சுயநலமாய் கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தோம்.
நல்ல வேளை சாமிக்கு லீவ் விடவில்லை!!

'கோவை தண்டு மாரியம்மன் கோவில்'
இத்தனை வருடம் கோவையிலிருந்தும் நான் அங்கு சென்றதில்லை என்பதை ஆச்சரியமாக நண்பர் என்னிடம் விசாரித்துகொண்டிருந்தார்.
நுழைவு கோபுரத்திலிருந்து தண்ணீர் வடிந்து தரை எல்லாம் தண்ணீராக இருந்தது. அதை தாண்டி தாண்டி கோவில் பிரகாரத்தை அடைந்தோம்.

பூசாரியிடம் திருனீர்..குங்குமம்..மஞ்சள் ..ஒற்றை ரோஜா பூ என அனைத்தையும் பெற்றுக்கொண்டு மழை நிற்கும் வரை அந்த இடத்திலிருந்து நகர்வதில்லை என்பது போல் நண்பர் ஒரு பெருத்த தூணில் சாய்ந்து ஜம்மென அமர்ந்தார்.
அவருக்கு அருகில் நானும் சம்மனமிட்டு அமர்ந்து பேச ஆரம்பித்தேன். இருவரின் பேச்சும் அரசியல் பக்கம் சென்று ஒவ்வொரு கட்சியை பற்றிய பார்வையை விவாதித்துகொண்டும் விமர்சித்துக்கொண்டும் இருந்தோம்.

அரசியலை பற்றி விவாதிப்பதென்பது போதை போல எவ்வளவு பேசினாலும் கிலுகிலுப்பு அடங்காது....இன்னும் அதை பற்றி பேச எதாவது ஒன்று தொடுத்துக்கொண்டிருக்கும்.

ஒரு வயதான பாட்டி மெதுவாக அடி மேல் அடிவைத்து நுழைவு கோபுரத்திலிருந்து உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
பூசாரி சாமிக்கு திரை போட்டு மூடிக்கொண்டிருந்தார்.
இதை எதுவும் கவனித்தும் கண்டுகொள்ளாமல் எங்கள் பேச்சு சமூகத்தை பற்றி திரும்பியிருந்தது. பொக்கைவாயிலும் எதையாவது மென்று கொண்டே இருப்பது போல நாங்கள் மழை நிற்கும் வரை எதையாவது பேச வேண்டுமே.

அந்த பாட்டி எங்களை நோக்கி தான் மெதுவாக நகர்வதை ஓரக் கண்ணில் உணர முடிந்தது.
நாங்கள் எங்கள் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தோம்.

பக்கத்தில் வந்த பாட்டி எங்களை அழைத்து கோபுரத்தை கைகாட்டி என்னமோ சொன்னாள்.
எனக்கு சரியாக கேட்கவில்லை
எழுந்து பக்கத்தில் சென்று கேட்டேன்.

என் கையை பிடித்துக்கொண்டுவெளிய வரைக்கும் கூட்டிட்டு போய் விடுயா..கால் வழுக்குதுஎன்றார் நடுங்கும் குரலுடன்.
நானும் மெதுவாக கைபிடித்து கூட நடந்தேன்
மழை நின்னதுக்கப்பறம் போலாம்ல பாட்டிஎன்றேன்
பக்கத்துல தான்யா வீடு.. போய்க்குறேன்.. காலைல தான் வழுக்கி விழுந்துட்டேன்.. தண்ணீ இல்லனா நானே நடந்துக்குவேன்என்றார்.
வாசல் வரைக்கும் சென்ற பிறகு கையை எடுத்துகொண்டுரொம்ப நன்றியா..நான் இனி போய்க்குவேன்என சொல்லி கொண்டே மெதுவாக நகர்ந்தாள்.

திரும்ப வந்து என் நண்பர் அருகில் அமர்ந்தேன்.
என்ன சமூக சேவையா?” என்றார்.
இதற்கு தான் நம்மை இந்த மழை இங்கு அழைத்து வந்ததோ!” என்றேன்.
அவர் தலையை ஒரு கோனத்தில் வைத்து என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
இப்படி நான் பதில் சொல்லும் பொழுது எல்லாம் பார்வையாலயே துப்புவதில் என் நண்பர் கில்லாடி.
நான் சிரித்துக்கொண்டு தரையை கைவைத்து கிறுக்கிகொண்டிருந்தேன்.

சில நொடி மௌனத்திற்கு பிறகு நான் ஆரம்பித்தேன்.
இப்படிபட்ட மனிதர்களிடமிருந்து நாம் தள்ளியே இருக்க நினைக்கிறோமோ!!?” என்றேன்
நண்பர் புரியாமல் விழித்தார்.

அந்த பாட்டி நம்மை நோக்கி அவ்வளவு சிரமப்பட்டு மெதுவாக வரும்பொழுதுகாசுகேட்க தான் வருகிறதென நினைத்தேன். அவள் என் கை பிடித்து நடக்கும் பொழுதும் கடைசியாககாசுதான் கேட்பாள் என நினைத்தேன். அவள் கையை விடுவித்துகொண்டு சிரித்து நன்றி சொல்லி சென்றுவிட்டாள். ஒரு வேளை நான் அப்படி நினைக்காமல் இருந்திருந்தாள் அவள் உதவி கேட்க நடந்து நம்மருகிள் வரும்முன் நானே எழுந்து சென்றிருப்பேன்என்றேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நானும் அப்படிதான் நினைத்தேன். பர்ஸிலிருந்து காசு எடுக்கவும் தயாராக இருந்தேன்என்றார் நண்பர்.

நம்மைவிட ஏழ்மையில் இருப்பவர்களை நம்மிடம் வரவே நாம் அனுமதிப்பதில்லை என்றே எனக்கு தோன்றியது. அப்படி யாராவது வந்தால் கை நீட்ட மட்டுமே வருகிறார்கள் என நம்மையே அறியாமல் ஒரு அசிங்கமான உணர்வு நமக்கு தொற்றிவிடுகிறது. அவர்கள் நம்மிடம் பேச வரலாம். நமக்கு எதாவது செய்தி கொண்டு வரலாம். நம்மை சிரிக்க வைக்கலாம். எனக்கு இந்த பாட்டியும் ஒரு செய்தி கொண்டு வந்தாள்.

நீ எனக்கு பிச்சை கொடுக்கும் இடத்தில் இல்லை பேரனே!! நான் தரும் பிச்சையை வாங்கிக்கொள்என நன்றியை எனக்கு பிச்சையாக அழித்துச் சென்றிருக்கிறாள்.

நாம ஏன் இப்படியாய்ட்டோம்?” என்றேன்.

உதட்டை பிதுக்கினார் நண்பர்.
எனக்கும் பதில் தெரியவில்லை.

அவர் செல்போனை என்னிடம் காட்டினார். நான் அந்த பாட்டியை அழைத்து சென்றதை புகைபடம் எடுத்திருந்தார். ஏன் என தெரியாமல் அது பாக்க எனக்கு சந்தோஷமாக இருந்தது.

மதியம் மழை லேசாக நின்றதும் கிளம்பினோம்.
வாசல் அருகில் சென்ற பொழுது தான் பார்த்தோம்.
எங்களை உள்ளே வைத்து கோவிலின் நடைக்கதவு பூட்டப்பட்டிருந்தது.


பிரபு மித்ரன்

Related Articles