Monday, 27 March 2017

நாங்கள் பேசிக்கொள்வதில்லை

பிறந்தநாளன்று கோவிலில் சாமி கும்பிட வரிசையில் நின்றிருந்தேன்.

எனக்கு முன்னால் ஒரு பெண் கையில் குழந்தையுடன் நின்றிருந்தார். குழந்தை அவள் பிடியிலிருந்து குதிக்க கைகளை  வைத்து அவளை தள்ளி தள்ளி உந்தியது. அவள் இறுக்கமாக பிடித்திருந்தாள். அது சினுங்கியது.   சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகவும் சுற்றி இருந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். அந்த பெண் சமாதான படுத்த "இங்க பாரு எப்படி விளக்கு எரியுதுனு"
"இங்க பாரு சாமி சிலை. தொட்டுப் பாரு"
"மேல பாரு.. பெல் அடிக்கலாமா?" என காட்டவும் அந்தக் குழந்தையுடன் சேர்ந்து நானும் ஒவ்வொன்றாக தலையை சுற்றி சுற்றி பார்த்தேன். இதெல்லாம் நான் பல தடவை பார்த்திருக்கிறேன், இருந்தும் இப்படி யாராவது நமக்கு காட்டி அதை வேடிக்கை பார்க்க நன்றாக இருந்தது. குழந்தையோ ஒவ்வொன்றையும் பார்த்ததும் இரண்டு நொடிக்கு அழுகையை மறந்து திரும்பவும் கத்தியது. உடனே வேறு ஒரு பொருளை காட்ட வேண்டும். திரும்பவும் அழுகை. வேறு பொருள்.

இப்படியே போய்க் கொண்டிருக்கையில் அது    எதேர்ச்சையாக பின்னால் நின்றிருந்த என்னை பார்த்தது. நான் உடனே கண்களை அகல விரித்துக் காட்டினேன். அது உடனே அழுகையை நிறுத்திவிட்டு  என்னை விநோத பொருளை பார்ப்பது போல அசையாமல் பார்த்தது. நான் 'அன்பே வா' சரோஜாதேவி போல கண்களை பட படவென அடித்துக் காட்டினேன்.  அது எந்த அசைவும் காட்டாமல் என்னையே பார்த்தது.

வரிசை சாமிக்கு கொஞ்சம் பக்கத்தில் சென்றதும் சிவ லிங்கம் தெரிய ஆரம்பித்தது. அந்தப் பெண் தன் குழந்தையை தூக்கி பிடித்து "சாமி தெரியுது பாரு.. கும்பிடு.." என்றதும் அது தன் சின்ன கரங்களை தலைக்கு மேல் தூக்கி அப்படியே தலையை என் பக்கம் திருப்பி என்னை கும்பிட்டது. அந்த இடம் முழுவதும் கோவில் மணி சத்தம் நிறைந்திருக்க அது என்னை கும்பிடவும் நான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் அவள் குழந்தை என்னை கும்பிடுவதை கவனித்த உடன் அதன் தலையை வலுக்கட்டாயமாக சாமி பக்கம்  திருப்பி "சாமி இங்க தெரியுது பாரு" என்றாள். சில நொடிகளில் அது மறுபடியும் என் பக்கம் திரும்பிக்கொண்டது.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
'ஒருவேளை நாம் தெய்வப் பிறவியோ!! அவதாரம் எடுத்து வந்திருக்கேனா!! நான் வந்த வேலையை ஞாபகப் படுத்த தான் இந்த குழந்தை அனுப்ப பட்டதோ!!' இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் என் தோளில் யாரோ தட்டி "யோவ்.. சாமி கும்பிட்டா தள்ளி போய்யா.. பின்னால நிக்குறவன் எல்லாம் கும்பிட வேண்டாமா? கோவில்ல வந்து கனவு கண்டுட்டு" என்று கத்தினார். 'என்னது கனவா!!' நான் அந்தக் குழந்தையை தேடினேன். அவர்கள் சென்று விட்டனர்.

மனிதர்கள் தாங்கள் பயப்படும் பாம்பு, சிங்கம், புலி , யானை என எல்லாத்தையும் சாமி ஆக்கிவிட்டதை போல இந்த குழந்தையிடம் நான் கண்களை அகல விரித்து பயப்படுத்தி சாமியாகிக்கொண்டேனோ!!
இருக்கும்.
அதற்குள் அவதாரம்..தெய்வ பிறவினு..அட போப்பா.

அதன் பிறகு வீட்டுக்கு செல்ல பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன்.
பேருந்து எடுக்க பத்து நிமிடம் ஆகும்.
நான் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அமர்ந்திருந்த ஜன்னலுக்கு நேராக வெளியே ஒரு பெண் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
பார்க்க மன நலம் பாதிக்கப் பட்டவர் போல தெரிந்தது.
சந்தன நிற முழுக்கை சட்டையும் அதன் மீது அதே சந்தன நிறத்தில் ஜரிகை போன பழைய பட்டு சேலையும் கட்டியிருந்தாள்.
கை நிறையா வளையல். நெற்றியில் குங்குமத்தை பெரிதாக அப்பியிருந்தாள். முடியை விரித்து போட்டு அதில் மல்லிகை பூ தொங்கிக் கொண்டிருந்தது.
தரையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில நிமிடம் கழித்து கண்களை மேல பார்த்தவள் நான் அவளை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்ததும் அவளும் பார்த்தாள். சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு நான் அவளை தான் பார்க்கிறேன் என்பது உறுதியானதும் தலையை நேராக நிமிர்த்தி தன் இரண்டு கண்களையும் பெரிதாக விரித்துக் காட்டினாள். நான் எப்படி கோவிலில் அந்த குழந்தைக்குக் காட்டினேனோ அப்படியே இவள் எனக்கு காட்டினாள்.
நான் விடுவேனா!!
நானும் பார்த்தேன்.
இருவரும் கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் அடுத்ததாக செய்தது என்னை மிரட்டிவிட்டது.

விரித்த கண்களின் புருவங்களை இரண்டு முறை மேலே ஆட்டி விட்டு அவள் நாக்கை வெளியே நீட்டி தலையை சாய்த்து இன்னும் உக்கிரமாக பார்த்தாள்.
ஆடிப்போய்விட்டேன்.
விரித்த கூந்தல்.. நெற்றி நிறைய குங்குமம்.. கை நிறைய வளையல்.. கண்கள்.. வெளியே தொங்கும் நாக்கு.. அப்படியே பத்திரகாளி போல் இருந்தாள்.
அங்கு நின்றிருந்தவர்கள் எல்லோரும் அவளையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்கள்.

பேருந்து நகர்ந்தது.

சில அடிகள் தள்ளி நிறுத்தினார் ஓட்டுனர்.
ஜன்னல் வழியே திரும்பி பார்த்தேன். பக்கத்தில் இருந்த சுவர் அவளை என் பார்வையில் இருந்து மறைத்திருந்தது.
பேருந்து எடுத்த பொழுது மறுபடியும் ஒரு முறை திரும்பி பார்த்தேன்.
அவள் தன் தலையை சாய்த்து சுவரை தாண்டி என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.
நாக்கு இன்னும் நீட்டிக்கொண்டு தான் இருந்தது.
அதை மீறி உதட்டோரத்தில் அளவாக புன்னகைத்தாள்.
நானும் அவளை பார்த்து சிரித்து விடை பெற்றேன்.
பேருந்து நகர்ந்து ரொம்ப தூரம் வந்து விட்டது.

எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கோவிலில் பார்த்த குழந்தைக்கும் எதோ ஒரு ஒற்றுமையை உணர முடிந்தது.
நாங்கள் இவ்வுலகையும் இம்மனிதர்களையும் வேடிக்கை பார்க்கவும் வேடிக்கை காட்டவும் மட்டுமே வாழ முயல்கிறோம்.

Related Articles