விடியற்காலையிலேயே வெளியே கிளம்ப குளித்து தயாரான பிறகு போக முடியாமல் போனது.
கிளம்பியது கிளம்பியாகிவிட்டது பக்கத்தில் எங்காவது போவோம் என நினைத்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஏரிக்கு போலாம் என வழியிலேயே முடிவு செய்து அங்கு சென்றேன். ஏரியில் ஒரு பழைய செயல்படாத படகுத்துறை இருக்கிறது. உடைந்த படகுகள் எல்லாம் ஓரமாக கிடக்க பக்கத்தில் தகர கூரையும் கீழே உட்கார சிமெண்ட் பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கும்.
நான் எப்பொழுது அங்கு போனாலும் ஆளே இருக்க மாட்டார்கள். நான் படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்த பொழுது இங்கு வந்து மணிக்கணக்கில் அமர்ந்து ஏரியில் கல்லெறிந்து கொண்டிருப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் கூட்டமாக இருந்தது. படகுத்துறை ஓரத்தில் சைக்கிள்கள், பைக்குகள், கார்கள் என ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
ஹெல்மெட்டை கழற்றிவிட்டு இன்னொரு முறை அந்த கூட்டத்தை பார்த்தேன். அதில் இரண்டு பிரிவுகள் இருந்தது. ஒன்று இளைஞர்கள் கூட்டம். பதினைந்து இருபது பேர் இருப்பார்கள். அவர்கள் அணிந்திருந்த கையில்லாத பனியனும் கால்-கால் சட்டையும் வைத்து அவர்கள் எல்லாம் சைக்கிளிங் வந்திருக்கிறார்கள் என சொல்லிவிடலாம். அதில் ஒரு இளிச்சவாய் பையன் மட்டும் dslr கேமரா வைத்திருக்க மற்றவர்கள் எல்லாம் ஏரி முன்னால் நின்று கை விரல்களை வித விதமாக வலிப்பு வந்தது போல் காட்டி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இன்னொரு கூட்டம் வயதானவர்கள். எல்லோரும் டி-சர்ட்டும் ட்ராக் பேண்ட்டும் போட்டிருந்தார்கள். காரிலும் பைக்கிலும் இங்கு வந்து வாக்கிங் செல்பவர்கள். நான் வண்டியை விட்டு இறங்கும் பொழுது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு குல்லா போட்ட பெரியவர் எல்லோரையும் எழுந்து நிற்க சொன்னார். எல்லோரும் தட்டுத் தடுமாறி எழுந்தனர். "அருட்காப்பு" என சொல்லிவிட்டு அவர் எதையோ சொல்லவும் மற்ற பெரியவர்கள் எல்லோரும் அதையே திருப்பி சொன்னார்கள். முடிந்த பிறகு ஆளாளுக்கு கை கொடுத்து விடை பெற்றுக்கொண்டு கார்களை கிளப்பினர். ஒரு சிலர் மட்டும் அங்கேயே அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அந்த பசங்க இன்னும் போட்டோ தான் எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் கண்ணாடியை கழற்றுவது போல பாதி தூக்கிய கையுடன் சிலை மாதிரி நின்றிருந்தான்.
இதெல்லாம் பார்க்க வேண்டுமா என நினைத்து பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்றேன். பராமரிக்கப்படாமல் ஒரே குப்பையாக கிடந்தது. அங்கிருந்த பழைய துருப்பிடித்த ஊஞ்சலை பார்த்ததும் அதில் ஆட வேண்டும் போல இருந்தது. அமர்ந்து லேசாக முதலில் ஆட்டினேன். கீச் கீச் என சத்தத்துடன் ஆடியது. காலை நன்றாக ஊண்றி பின்னால் தள்ள அது வீசி ஆடியது. ஆடிக்கொண்டிருக்கையில் தலையை அன்னாந்து வானத்தை பார்த்தேன். தியானம் செய்வது போல இருந்தது அது. என்றாவது சொந்தமாக ஊஞ்சல் ஒன்று வாங்க வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து படகுத்துறைக்கு வந்தேன். ஒரு பையன் ரோட்டில் கைப்பிடியை பிடிக்காமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வர அந்த கேமரா பையன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். நான் ஏரியை பார்த்தவாறு இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
நைந்துபோன லுங்கியும் சட்டையும் அணிந்து மொட்டைத் தலையுடன் ஒடிசலான ஒருவர் என்னை பார்த்து வந்தார். அவரின் கன்னம் எல்லாம் உள்வாங்கி ஒடுங்கிப் போயிருந்தது. நாற்பது வயது இருக்கும்.
"சார், அந்த வண்டி உங்களோடதா?" என்றார்.
"ஆமா. ஏன்?"
"ஹெல்மெட்டை வண்டில வைக்காதீங்க. தூக்கிட்டு போயிடுவாங்க"
"ஓ அப்டியா ண்ணா.. நான் எடுத்துட்டு வந்திடுறேன்" என சொல்லிவிட்டு ஓடிச் சென்று ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
அவர் நின்று கொண்டிருந்தார். சரி பேச்சு கொடுப்போம் என
"எந்த ஊரு நீங்க?"
"எனக்கு கல்யாணம் இல்லை. இங்க தான் தங்கியிருக்கேன்" என அங்கிருந்த பழைய தகர பொட்டிக்கடையை காட்டினார். அது பல வருடங்களுக்கு முன்னாள் இங்கு படகு சவாரிக்கு வருபவர்களுக்கு தீனி விற்ற கடை. இப்பொழுது சும்மா கிடக்கிறது.
"உங்களுக்கு எந்த ஊருனு கேட்டேன்"
"அது செங்காட்டுக்கு அந்த பக்கம்"
"சொந்தம் எல்லாம் யாரும் இல்லையா? ஏன் இங்க வந்து இருக்கீங்க?"
"அதெல்லாம் நிறையா இருக்காங்க. நான் போறது இல்லே"
"ஏன்?"
"என்னை யாரு சேர்த்துப்பா.! கல்யாணம் எதுவும் இல்லே. சும்மா சுத்துரவன யாரு 'வா'னு கேக்குறா?"
"அப்பா அம்மா எல்லாம்?"
"அவங்க போய் ரொம்ப வருஷம் ஆச்சு. இங்க தான் கிழக்காலே தோட்டத்துல தூங்குறாங்க"
எனக்கு பாவமாக இருந்தது.
"என்ன வேலை பாக்குறீங்க?" சாப்பாடு எல்லாம்!?"
"பக்கத்து தோட்டத்துல தண்ணி விடுவேன். மட்டை எடுத்து போடுவேன். பகல் எல்லாம் அங்க வேலை. இராத்திரி இங்க வந்திடுவேன். சாப்பாடு கடைல எப்பவாவது துண்ணுக்குவேன்"
என்னைக்காவது சாப்பாடு வாங்கிட்டு வந்து குடுக்கணும் என நினைத்துக் கொண்டேன்.
"இந்த ஏரில பரிசல்ல மீன் பிடிப்பாங்கல்லே!! இன்னைக்கு ஏன் யாரையும் காணோம்?"
"ஞாயித்துக்கிழமை வர மாட்டாங்க"
"ஓ அப்டியா.. சரி.. அவங்க கிட்ட கேட்டா என்னை அவங்க கூட ஏத்திட்டு போவாங்களா?"
"தெரியாது"
"ஏன்? இங்க தானே இருக்கீங்க. அவங்க கூட பேச மாட்டீங்களா?"
"நான் அவங்க கூட பேசி என்ன ஆக போகுது?"
என்ன இந்த மனிதன்! வீடு வாசல் இல்லை. சொந்தம் கொண்டாட யாரும் இல்லை. பேச்சு துணைக்கு கூட யாரும் அவருக்கு இல்லை. அவர் பேசியதில் அதீத விரக்தி தான் தெரிந்தது. இருந்தும் கிடைக்கும் வேலை செய்து சாப்பிட்டு எப்படியாவது வாழ நினைக்கிறார். அப்படி எந்த பிடிப்பும் இல்லாமல் இந்த வாழ்வில் இருந்து எதை எதிர்பார்த்து இவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!!!
நான் அவர் தங்கியிருந்த தகர கொட்டகையை ஒரு முறை திரும்பி பார்த்து அவரிடம் "தனியாவா இருக்கீங்க?" என்றேன்.
"ஆமா தனியா தான்.." சொல்லிவிட்டு இரண்டு நொடி இடைவெளி விட்டு "ஏன் நீ வந்து இருக்க போறியா?"
'சார்' என்பது 'நீ' என்றானதை நான் கவனிக்காமல் இல்லை.
நான் "அதுக்கு என்ன? வந்து தங்கிட்டா போச்சு" என்று சொல்லி சிரித்தேன்.
"வா.. எப்போ வேணா வந்து தங்கிக்கோ. உள்ள போய் எப்படி இருக்குனு பாக்குறியா? போ.. போய் பார்த்துட்டு வா" என்றார்.
நான் தயங்கி அந்த கொட்டகையை திரும்பி பார்த்துவிட்டு "இல்லை வேண்டாம்" என்றேன்
"சும்மா போய்பாரு" என்று திரும்பவும் சொன்னார்.
"இல்ல வேண்டாம்.. இன்னொரு நாள் வர்றேன்"
எனக்கும் போய் எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும் போல் இருந்தது. சரி இங்கிருந்து கிளம்பும் பொழுது பார்த்துக்கொள்வோம் என மறுத்துவிட்டேன்.
"இங்க போய் தங்குறீங்களே! நைட் போலீஸ் எல்லாம் வந்து கேட்க மாட்டாங்களா?"
"என்னை யாரு கேட்பா.. போலீஸுக்கும் எனக்கும் என்ன இருக்கு? எதுக்கு கேட்குறே?!"
"சும்மா தான்"
"ஏன் ஏதாவது பண்ண போறியா? பண்றதுனா பண்ணு, போலீஸ் எல்லாம் வராது"
"நான் என்ன பண்ண போறேன். உங்களுக்கு ஏதாவது தொல்லை குடுப்பாங்களோனு கேட்டேன்."
அவர் அவரின் அந்த கொட்டகையை நோக்கி நகர்ந்து கொண்டே திரும்பவும் "நீ வா.. யாரும் கேட்க மாட்டாங்க." என்றார்.
எனக்கு ஒரு மாதிரி இருந்தது அவர் அப்படி பேசுவது. பேச்சை மாத்தலாம் என்பதற்குள் அவர் உள்ளே சென்று விட்டார்.
உள்ளுக்குள் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது. வெளியே வந்தவர் கையில் ஒரு நோட்டீஸ் வைத்திருந்தார்.
"உங்களுக்கு படிக்க தெரியுமா?"
"எனக்கு எங்க தெரியும்? எனக்கு படிப்பு மண்டையிலே ஏறலை. நான் எல்லாம் படிச்சிருந்தா எங்கயோ இருந்திருப்பேன். எதுக்கு இப்டி சாமியார் மாதிரி அலையனும்!"
நான் அமைதியாக இருந்தேன்.
அவர் சொல்லிவிட்டு அவரின் வலது கையை என்னை நோக்கி நீட்டி உள்ளங்கையை விரித்தார். அதில் பச்சை நிறத்தில் குட்டி குட்டியாக நாலு பாக்கெட் இருந்தது.
"வச்சுக்கோ" என்றார்.
எனக்கு அது என்னவென்று தெரியவில்லை. பார்க்க எங்கள் அலுவலகத்தில் காப்பிக்கு கொடுக்கும் சக்கரை பாக்கெட் போல இருந்தது.
"என்னது இது?"
"பல்பு"
"அப்படினா?" என்று நான் கேட்கும் பொழுதே புரிந்துவிட்டது. ச்சை.. எனக்கு எல்லாமே லேட்டாதான் புரியுது. அவை ஆணுறை பாக்கெட்டுகள்.
எனக்கு 'பக்'கென இருந்தது. பதற்றத்தில் கத்திவிட்டேன்.
"எனக்கு எதுக்குண்ணா இதெல்லாம்? வேண்டாம் போங்க"
"பரவால்லை வச்சுக்கோ"
"வேண்டாம்னு சொல்றேன்லே.
நீங்க எதுக்கு இதெல்லாம் வச்சுருக்கீங்க?"
"உன்ன மாதிரி ஒரு பையன் குடுத்தான். ஒரு பை நிறைய இருக்கு. பாக்குறியா? அதுக்குள்ள போய் பாரு...போ.."
"எதுக்கு குடுத்தான்?"
"இங்க அப்படி நிறைய பசங்க வருவானுங்க?"
"என்ன சொல்றீங்க!! நைட் இங்க கூட்டிட்டு எல்லாம் வருவாங்களா?"
"கூட்டிட்டு எல்லாம் வர மாட்டானுங்க"
"அப்புறம் எதுக்கு இது"
"அவனுங்களே பண்ணிப்பாங்க... இல்ல எங்கூட பண்ணுவாங்க.. இந்தா நீ ரெண்டு எடுத்துக்கோ" என மறுபடியும் கையை நீட்டினார்.
அடப்பாவி மனுஷா... இதுக்கு தான் என்ன அவ்ளோ தடவை உள்ளே கூப்பிட்டியா? எவ்ளோ நேக்கா ஏமாற பார்த்தேன்.
"அய்யோ நான் அந்த மாதிரி பையன் இல்லண்ணா"
"எல்லாரும் அந்த மாதிரி பையன் தான். எடுத்துட்டு போ"
"எனக்கு வேண்டாம். நான் கிளம்புறேன் ண்ணா" என அவசரமாக சொல்லிவிட்டு ஓடி வந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது பார்த்தேன்.
ஒரு பையன் கையையும் காலையும் விரித்துக்கொண்டு மேலே குதிக்க அந்த கேமரா பையன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். இங்க என்ன நடந்துட்டு இருக்கு! இவனுங்க வேற!! அட போங்கடா.
ஊஞ்சல் எல்லாம் ஆடி ரிலாக்ஸாக இருந்த மனசு இப்போ அரண்டு போய் அலறிக்கிடக்கிறது.
சில இயற்கையான தேவைகள் மறுக்கப்படும் பொழுது மனிதன் இயற்கைக்கு மாறான வேறொருவாழ்கைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கின்றான். அதையும் இயற்கையின் ஒரு அங்கமாக அன்றி வேறு எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.
எல்லாம் சரி. என்ன இருந்தாலும் என்னை பார்த்து அவரு அப்படி கேட்டுருக்க கூடாது.
பிரபு மித்ரன்