Saturday, 17 March 2018

எழுதமாட்டேன்

என்னிடம் சிலர் ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை என கேட்கும் பொழுது நான் அப்போதைக்கு ஒரு பதிலை சொல்லிவிடுவதுண்டு

“எழுதுவேன்.. ஆனா போஸ்ட் போடுறது இல்லே”
“வெளியே எங்கயும் போறது இல்லே.. அதனால எழுத ஒன்னும் இல்லே”
“இப்போ கொஞ்ச நாளா பஸ்ல போகல..”
“புதுசா யாரையும் பாக்கலே..”
இப்படி எதாவது ஒரு காரணம்.

ஆனால் உண்மை என்னவென்றால்
என்னிடம் எழுத ஒன்றுமே இல்லை.
அது தான் சத்தியம்.

என்னைச் சுற்றி இருப்பவற்றை கவனிப்பதால் தான் நான் எழுதுகின்றேன் என நினைத்துக்கொண்டிருந்தேன். நாம் நம்மைப்பற்றி புரிந்து வைத்திருப்பவை அனைத்தும் சரியாகிவிடாது தானே!!

நான் ஒன்றும் என்னைச் சுற்றி நடப்பவையை கவனிப்பதால் மட்டும் எழுதவில்லை. எனக்கு அனைத்தின் மீதும் தனிப்பட்ட பார்வை இருந்தது.. அபிப்பிராயமிருந்தது... அதை பற்றி பேச எனக்கு நிறைய இருந்தது.. எனக்குள் ஒருவன் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொன்றைப் பற்றியும் எனக்கு மட்டும் கேட்பது போல பேசிக்கொண்டே இருந்தான். அதை தான் எனக்கு தெரிந்த மொழியில் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அவன் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பான். நான் அதிகமாக வெளியே பேசாமலிருப்பதற்க்கு காரணம் கூட எனக்குள் இருப்பவன் அதற்கான நேரம் கூட கொடுக்காமல் பேசிக்கொண்டிருந்தது தான்.

தற்கொலைகளைப் பற்றி யாராவது பேசும் பொழுதோ.. இல்லை தற்கொலைச் செய்திகளை கேட்கும் பொழுதெல்லாம் நான் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்
“இந்த உலகத்தை வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கவாவது நான் உயிரோட இருப்பேன்” என்று. வேடிக்கை பார்க்கும் பொழுதும் நான் தனியாக இருக்கும் பொழுதும் என்னுடன் பேசிக்கொண்டிருக்க ஒருவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் தான்.
யார் என்னிடம் பேசினாலும் பேசாவிட்டாலும்

யார் என்னுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்

யாருக்கு என்னை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல நான் நடந்து கொள்வதற்கு காரணம்கூட அது கொடுத்த நம்பிக்கை தான்.
எல்லாமே ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

போன வருடம் என்னுடன் இருந்த கல்லூரி நண்பன் ஒருவன் மரணப்படுக்கையில் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்க்கச் சென்றிருந்தேன். அதைப்பற்றி விரிவாக எழுதுவதை அவன் விரும்பமாட்டான் என்பதால் என்னைப் பற்றி மட்டும் இதில் பேசுகிறேன். அவனை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு என்னுள் பேசிக்கொண்டிருந்த பரதேசி கொஞ்சம் கொஞ்சமாக அவன் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.
கண்ணுக்கு தெரிபவனாக இருந்திருந்தால் செருப்பெடுத்து அடித்திருப்பேன்.. பேசாமலிருப்பதற்காக.

என்னால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
காத்திருந்து காத்திருந்து கடைசியில் நான் தனியனாகிப்போனேன்.
அவன் கொடுத்திருந்த தைரியத்தில் நான் எனக்கு நானே திமிர் பிடித்தவனாக ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு விட்டேன். அதை உடைப்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. நாம் திமிராக நடக்கவேண்டுமென்றால் நம்மிடம் சரக்கு இருக்க வேண்டும். உள்ளுக்குள் சரக்கில்லாமல் வெறும் திமிரை மட்டும் வைத்திருந்தால் போகிற வருகிறவனெல்லாம் தலையில் தட்டி சிரித்துவிட்டு போவான். அது தான் நடந்தது.

எனக்கு இந்த ஒரு வருட கோமாளி வாழ்க்கை சலித்துவிட்டது. போதும் இதற்கு மேல் பழயதை கட்டிக்கொண்டு ஏங்குவதற்கு நான் தயாராகயில்லை. கடைசியாக இதை எழுதி முடித்துக்கொண்டால் இனி கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை பாருங்க.

எனக்கு சொல்ல எதுவுமில்லை
அதனால் எழுதவில்லை
அவ்ளோதான்.

அப்டினு எழுதி முடிக்கும் பொழுது திடீரென  திரும்பவும் உள்ளிருந்து அவன் பேசுவது போல தோன்றியது.
உற்று கவனித்தால் அந்த சத்தம் நின்றுவிடுகிறது.

திரும்பவும் கேக்குது.....

இல்லே நின்றுடுச்சு...

ம்ம்.. மறுபடியும்...

அட போய்யா!!
எனக்கென்னமோ இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்க்கலாம் போல இருக்கு.

பிரபு மித்ரன்

Related Articles