Thursday, 3 October 2019

மனித மந்தைகளின் மேய்ப்பர்கள்

மனிதன் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம். எந்த நிலத்தில் வேண்டுமானாலும் குட்டிகள் போட்டு கூட்டமாக வாழ்ந்திருக்கலாம்.
எந்த குரங்கிலிருந்தோ, தோட்டத்திலிருந்தோ, இடுப்பிலிருந்தோ, தலையிலிருந்தோ இல்லை இப்பொழுது போல் அப்பொழுதும் எதன் யோனியிலிருந்தோ வெளிப்பட்டிருக்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் பரதேசிகளாக திரிந்து இம் மா நிலம் வந்து சேர்ந்திருக்கலாம்.

எதை வேண்டுமானாலும் தின்று செரித்து யாரை வேண்டுமானாலும் கொன்று கிழித்து, மிருக வேகத்தில் ஜன தொகை பரப்பி இந்த உலகத்தை நிறப்பிக்கொண்டிருந்த வேளையில்
அதே மனித கூட்டத்திலிருந்து அதிசயமாக என்றாவது ஒரு நாள் பிறக்கும் சில அறிய சிந்தனையாளர்கள் தான் இவ்வுலகையும் இம்மக்களையும் தங்களை பண்படுத்தி கொள்ளவும், சமூகமாக வாழும் பொழுது எழும் சிக்கல்களை தீர்க்க வழிகளையும் படைத்துக் கொண்டிருந்தனர்.

உணவையும் இணையையும் தவிர எதுவுமே பிரச்சனையாக தெரியாமல் நாயை போல வாழ்ந்த மனிதர்களையும்

சண்டையிட்டு கொன்று குவித்து எல்லை பரப்பிய கோமாளிகளையும்

வர்ணம் பூசி அடக்கி மிதித்த சூழ்ச்சிகாரர்களையும்

முட்டாள்களையும்
கோழைகளையும்
மதிகெட்டவர்களையும் கேள்விகலாலும் தர்கத்தாலும் வென்று எழுந்த மகா மேதைகளை பற்றி எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

எனக்கு அவர்களின் வழியே இந்த உலகம் கடந்து வந்த கதையை தெரிந்துகொள்ள  வேண்டும் என நினைக்கிறேன்.

நீங்கள் பல வழியிலும் இவ்வுலகை படிக்கலாம். எந்த எந்த ராஜாக்கள் எப்பொழுதெல்லாம் ஆண்டார்கள்.. எப்படி அவர்கள் தோற்கடிக்க பட்டார்கள், எந்த எந்த நிலத்தை ஆண்டார்கள் என தெரிந்துகொள்வதன் மூலம் வரலாறு தெரியும்.

எந்த எந்த கடவுளை எந்த காலக்கட்டத்தில் எப்படி வழிபட்டார்கள். அதற்கான சான்றுகள். அதன் கதைகள். அதன் நிலங்கள் இதன் மூலமும் அதை தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு இந்த மனிதர்களை தேடி படித்து இவ்வுலகை தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களை தேடி காலத்தின் பின்னோக்கி இந்த பரந்த உலகின் மூலை முடுக்கெங்கும் பயணிக்க போகிறேன்.

பிரபு மித்ரன்

Related Articles