இந்த 2014-ஐ
திரும்பவும் முதல் இருந்து ஓட விட்டு பார்கிறேன்.
இது எனக்கு கற்றுக்கொடுத்த
பாடங்கள் சொல்லிவிட முடியாத அளவிற்கு மிக பெரியது.
21 வருடங்களாக
நான் வீட்டிலும், பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக்கொண்ட அத்தனை விஷயங்களையும்
ஒன்னும் இல்லாததாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்து என்னை முட்டாளாக எனக்கே அடையாளம்
காட்டிய வருடம்.
டிசம்பர் 31,
2013
கோவை.
நான் ஒரு BPO வில் நைட் ஷிப்ட் வேலைக்கு 8000
ரூபாய் சம்பளத்திற்கு போய் கொண்டிருந்த நேரம்.
வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது.
தினம் தினம் ஒரே வேலை செய்வதில் எனக்கு எப்பொழுதுமே விருப்பம் இருந்ததில்லை.
ஆனால் காலம் எனக்கு கொடுத்த வேலையோ அதை விட கொடுமையானது.
தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை ஓரே வேலையை திரும்ப திரும்ப செய்ய
வேண்டும்.
என்ன வேலை என யோசிக்கிறீர்களா?
Ctrl+C
Ctrl+V
Ctrl+X
Alt+Tab
இந்த பட்டன்களை தொடர்ந்து அழுத்தி கொண்டே இருக்க வேண்டும்.
நான் நான்கு வருடம் படித்த இன்ஜினியரிங் இந்த நான்கு பட்டனுக்குள்
அடைபட்டுவிட்டது.
இரவு முழுவதும் இதைதான் செய்ய வேண்டும்.
யாரும் யாருடனும் பேசிகொள்ள மாட்டார்கள்.
குளிரில் நடுங்கும் தாத்தாவின் பற்க்களை போல எப்பொழுதும் அந்த டைப்பிங் சத்தம்
மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
விடியும் பொழுது சூரியன் மட்டும் அல்ல, எங்கள் கண்களும் தூக்கம் கெட்டு சிவப்பேரியிருக்கும்.
கைவிரல்கள் எல்லாம் வலியுடன் வீட்டுக்குபோய் தூங்கி கொண்டிருப்பவர்களை
கதவைதட்டி எழுப்பிவிட்டு நாங்கள் பிணம் போல் மெத்தையில் விழனும்.
விரல் வலி மட்டுமே உயிருடன் இருப்பதை உணர்த்திக் கொண்டிருக்கும்.
இப்படி பட்ட ஒரு இடத்தில் என் புது வருடம் பிறந்துவிட கூடாது என நினைத்தேன்.
அன்று வரமுடியாது என்பதற்கு எதோ பொய் சொன்னேன். மறந்துவிட்டது.
2013இல் நான் சொன்ன கடைசி பொய் அது தான்.
அது என்ன கடைசி பொய்??
அப்போ நிறயா பொய் சொல்வியா? என கேட்க தோன்றும்.
அதற்கு பதில் ஆம்.
இங்கு வாழ அது தேவைப்படுகிறது.
அதுவும் வேலை தேடுபவர்களுக்கு இந்த பொய் மிகவும் தேவை படும்.
HR இடம் உண்மையை
சொன்னால் சினிமாவில் மட்டுமே வேலையும் பாராட்டும் கிடைக்கும் நிஜத்தில் ஒரு
புன்னகை கூட கிடைக்காது.
எப்படியோ லீவ் கிடைத்து அன்று வீட்டில் தான் தூங்கினேன், புது வருடம் எனக்கும்
விடியும் என்ற நம்பிக்கையுடன்.
ஜனவரி 01, 2014
புது வருடம் பிறந்து விட்டது.
காலை எழுந்தவுடன் என்னுடைய மொபைலை எடுத்தேன்.
நான்கு வருடமாக புது வருடங்களை என்னுடன் சேர்ந்து(குடித்து) வரவேற்ற என் உயிர்(!)
நண்பர்கள் யாராவது எனக்கு விடிந்த இந்த புது வருடத்தை வரவேற்பார்கள் என நினைத்து
மொபைலை எடுத்தேன்.
ஒரே ஒரு குறுஞ்செய்தி.
கொஞ்சம் ஏமாற்றம் தான், இருந்தாலும் ஒன்னாவது வந்ததே என்ற சந்தோஷம்.
எடுத்து ஓப்பன் செய்தேன்.
“Tired of erratic & slow
internet? Choose airtel broadband & enjoy High Speed. Also get a free WiFi”
பாடம்:
“எவரும் நிரந்தரம் இல்லை
எதுவும் நிரந்தரம் இல்லை”
ஜனவரி 26, 2014
சென்னை.
நான் வேலைக்காக இப்படி ஃபைலை தூக்கி கொண்டு இப்படி சுத்துவேன் என கனவில் கூட
நினைத்ததே இல்லை.
ஆனால் சுத்துகிறேன்.
இதே சென்னையில்தான் என்னுடைய கல்லூரி நண்பர்கள் பல பேர் வேலை செய்கிறார்கள்.
ஆனால் யாரிடமும் நான் இங்கு வந்ததை சொல்ல தோன்றவில்லை.
திருவள்ளிகேணியில் ஒரு லாட்ஜில் 400 ரூபாய்க்கு ரூம் எடுத்தேன்.
அனாதையாகி விட்டோமோ என்ற எண்ணம் அடிக்கடி வரும்.
முதல் நாள் நடந்த டெஸ்ட்டில் நான் செலெக்ட்டாகி விட்டேன்.
இன்று Technical & HR round.
ஃபைலை எல்லாம் எடுத்து பேக்கில் போட்டுக்கொண்டு பேருந்து நிறுத்ததிற்கு
வந்தேன்.
ஜனவரி 26 குடியரசு தினம் என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.
எந்த பேருந்தும் அந்த வழியாக வரவில்லை.
யாரோ ஒருவர் என் சட்டையில் கொடி குத்தினார்.
எங்கெங்கோ பேருந்து நிறுத்தத்திற்கு வழிகேட்டு அலைந்தேன்.
வழி எங்கும் மக்கள் கூட்டம் கொடியேற்றத்தை பார்க்க.
எனக்கும் வேடிக்கை பார்க்க வேண்டும் போல இருந்தது.
இருந்தும் என் கால் மட்டும் நிற்காமல் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆட்டோவில் போகலாம்
ஆனால் அப்படி போனால் திரும்ப நான் கோவை செல்ல காசு இருக்காது.
ஒன்றரை மணி நேரம் நடந்திருப்பேன் எங்கே செல்கிறோம் என்பதே மறந்து மறந்து ஞாபகம்
வந்து கொண்டிருந்தது.
கண்களிளும் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.
அழுதேனா என தெரியாது.
ஆனாலும் வருகிறது.
எல்லாரும் இருந்தும் இப்படி யாருக்கும் தெரியாதவனாக எங்கோ சுற்றி
கொண்டிருக்கிறேன் என நினைத்தோ என்னவோ.
அந்த நடைபயணம் என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாததாகிவிட்டது.
அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது.
இல்லை ஏதோ வெறியை கொடுத்துவிட்டது.
எப்படியோ நான் இண்டர்வியூக்கு சென்று சேர்ந்தேன்.
தேர்வு நடக்க ஆரம்பித்தது
அங்கு போன பிறகு எனக்கான இடம் இதுவல்ல என்ற என்னம் மிக வேகமாக மூளையை
ஆக்கிரமித்தது.
அதன் பிறகு எனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை.
எழுந்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
கோயம்பேடிலிருந்து கோவையை நோக்கி.
பாடம்:
“நமக்கு பிடித்ததை கூட செய்யாமல் விட்டு விடலாம்
ஆனால் நமக்கு பிடிக்காததை எந்த நிலைமையிலும் செய்ய கூடாது”
பிப்ரவரி, 2014
Arena Animations
எனக்கு சின்ன வயதிலிருந்து அனிமேஷன், சினிமா, ஓவியம் இதில் எல்லாம் கொஞ்சம்
ஈடுபாடு அதிகம்.
அதன் வெளிப்பாடாக என்னை இந்த இன்ஷ்ட்யூட்க்கு எதுவோ இழுத்துப்போனது.
அங்கே ஒரு 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இருந்தார்.
அவர் தான் எங்கே சொல்லிகொடுக்கப்படும் கோர்ஸும் அதன் கட்டணமும் விவரமாக
விளக்கினார்.
எனக்கு அங்கு நிறைய கோர்ஸ் பிடித்திருந்தது.
ஆனால் அது மட்டும் போதுமா!!
பணம்?
நான் சொல்வதாக சொல்லிவிட்டு கிளம்பி வெளியே வந்துவிட்டேன்.
வெளியே வரும்பொழுது என் செல்போன் ஒலித்தது.
எடுத்து பார்த்தேன்.
Arena animation உடைய நம்பர்.
உள்ளே மறுபடியும் அழைத்தார்கள்.
போனவுடன் அவர் கேட்ட கேள்வி
“நீ 5 வருஷத்துக்கு முன்னாடி Animaster க்கு வந்திருந்தியா?”
Animaster என்பது இன்னொரு இன்ஷ்ட்யூட்.
நான் +2 முடித்தவுடன் அங்கு சேர வேண்டும் என நினைத்தேன்.
போய் விசாரித்தேன்.
ஆனால் வீட்டில் விடவில்லை.
அதெல்லாம் இருக்கட்டும் இவருக்கு எப்படி அது தெரியும்!!
குழப்பத்துடன் “ஆமாம்” என சொன்னேன்.
அதற்கு அவர் இன்னும் சந்தோஷத்துடன்
“நான் தான் அங்க உனக்கு டீட்டெயில் சொன்னேன் மறந்துட்டியா?? உன் நேம் மட்டும்
எனக்கு நல்லா நியாபகம் இருக்கு அதான் கேட்டேன்”
எனக்கு மறந்துவிட்டது. அசடுவழிந்தேன்.
“நீ இன்னுமா அனிமேஷன் படிக்கனும்னு சுத்துற???”
ஆம் சின்ன வயசில் விளையாட்டுத்தனமாக ஆசை படும் பொம்மைபோல இல்லை இந்த ஆசை
அதைவிட பெரியது.
நான் VFX சேர்ந்தேன்.
BPO இல் வாங்கும் சம்பளத்தை அப்படியே இங்கு கட்டினேன்.
மதியம் 2 மணியில் இருந்து மாலை 7.30 மணிவரை இங்கு படிபேன், கிரியேட்டராக.
பின் இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணிவரை office வேலை செய்வேன், மெஷினாக.
பின் வீட்டுக்கு போய் 5 மணி நேரம் தூங்குவேன், பிணமாக.
விடுமுறை நாட்களில் வேறுவேலை தேட வேண்டும்.
இப்படி ரொம்ப வேகமாக போய் கொண்டிருந்தது அந்த மாதம்.
இது எதுவும் என் வீட்டில் நான் சொல்லவே இல்லை.
சொல்ல தோன்றவில்லை.
எதோ வேலைக்கு போகிறான் என்பது மட்டும் தெரியும்.
ஒரே ஒரு வேளை மட்டும்தான் சாப்பிட முடியும் அதுவும் வீட்டிலிருந்து கிளம்பும்
பொழுது.
எனக்கு அது எதுவும் பெரிதாக நினைக்க தோன்றவில்லை
3 மாதங்களுக்கு முன்பு 72 கிலோ இருந்த நான் 59 கிலோவாக சுருங்கி போனேன்.
சென்னையில் என்னை பிடித்த வன்மம் என்னை ஆட்டிப்படைத்து கொண்டிருந்தது.
பேய் பிடித்ததை போல சுற்றி கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் அடுத்தது என்ன என்பது தான் என் எண்ணமாக இருந்தது.
நான் தூங்கும் அந்த 5 மணி நேரமும் குறைத்துகொண்டேன்.
யாரோ சொல்லி கேட்டிருக்கிறேன்.
தூங்கும் போது வருவது கனவல்ல தூங்க விடாமல் செய்வது தான் கனவு என.
அப்படியொரு கனவில் மிதந்த நேரம்.
பாடம்:
“எந்த காரணத்தை கொண்டும் ஓடுவதை நிறுத்திவிடகூடாது.
கவலை படுவதற்கு நேரம் கொடுத்து நின்றுவிட்டால்
பின்னால் வரும் காலம் நம்மை ஏறி மிதித்து
நம்மை கடந்த காலமாக்கிவிடும்”
மார்ச், 2014.
நான் BPO வை விட்டு நின்று விட்டேன்.
முழு நேரமும் VFX தான்.
அந்த சமயம் 15 ஆம் தேதி CTS இல் இருந்து இண்டர்வியூ க்கு கூப்பிட்டார்கள்.
போனேன்.
ஒரளவு நன்றாக தான் நடந்தது.
மார்ச் 18
எப்பொழுதோ நான் முயன்ற LMW வில் இருந்து அப்பாயின்மெண்ட் ஆர்டர்.
Purchase Department
கோவை.
மார்ச் 20
காலை 10 மணிக்கு
கல்லூரியில் செலெக்டாகி ஒரு வருடமாக கூப்பிடாமல் கடைசியாக இப்பொழுது வாருங்கள்
என மெயில் வந்தது.
WIPRO விடமிருந்து.
நொய்டா (சத்யமாக எங்க இருக்குனு கூட எனக்கு தெரியாது)
மதியம் 2 மணி
CTS இடமிருந்து மெயில்.
மார்ச் 28 யில் சென்னை யில் சேர்ந்துகொள்ள சொல்லி மெயில்.
இந்த முறை எந்த சந்தோஷமும் இல்லை
எவரிடமும் அபிப்ராயம் கேட்க தோன்றவில்லை
நிதானமாக யோசித்தேன்.
எதை எடுப்பது என.
LMW- தெரிந்தவரின் சிபாரிசுடன் வந்தது.
WIPRO- என்னை பற்றி கவலையே இல்லாமல் மிக பொறுமையாக ஒன்றரை வருடம் கழித்து
கூப்பிடுகிறார்கள்.
CTS- வெளியே சொந்த முயற்சியில் வந்தது அதுவும் ஒரே வாரத்தில்.
நான்கு மாதம் சம்பாதித்து சேத்ததை எடுத்துக்கொண்டு
மார்ச் 26, என் பிறந்த நாளில்
என் வன்மம் வளர்த்த சென்னைக்கு புறப்பட்டேன்.
கோவை டூ கோயம்பேடு
பாடம்:
“நல்லதோ கெட்டதோ அது நாமே சொந்தமாக எடுக்கும் முடிவால் வர வேண்டும்.
அடுத்தவர்கள் முடிவுக்கு விட்டு விட கூடாது.”
ஏப்ரல் 2014
நான் சென்னை வந்து வேலைக்கு சேர்ந்துவிட்டேன்.
எந்த இடத்தில் ஃபைலோடு பஸ்ஸுக்காக ரோடு ரோடாக அன்று சுற்றினேனோ அதே இடத்தில்
இன்று என் கம்பெனியின் அடையாள அட்டை கழுத்தில் தொங்க நடக்கிறேன்.
முதல் இரண்டு மாதம் பயிற்சி காலம்.
அதில் வைக்கப்படும் தேர்வில் பாஸ் ஆனால் தான் வேலை.
எங்கள் வகுப்பில் மொத்தம் ஐந்து பேர் தான் தமிழ்.
மற்றவர்கள் எல்லாம் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
மொத்தம் 8 மொழியை சேர்ந்தவர்கள் இருந்தனர்.
இந்த 22 வருடத்தில் நான் தமிழ் அல்லாத பிற மொழிக்காரர்களிடம் பேசியதே இல்லை.
எங்கள் ஐந்து பேரை தவிற மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு ஒற்றுமை இருந்தது.
அனைவரும் ஹிந்தி மொழி அறிந்தவர்கள்.
நான் யாரிடமும் எதயும் பேசும் ஆர்வம் அப்பொழுது இல்லை.
என்னுடைய வேலையை பார்த்துகொண்டிருப்பேன்.
எனக்கு அப்பொழுது வேண்டியதெல்லாம் அந்த டெஸ்ட்டில் பாஸாக வேண்டும் என்பது
மட்டுமே.
ஒரு நாள் பீஹார் காரன் ஒருத்தன் தமிழ்நாட்டை பற்றி தரகுறைவாக
பேசிகொண்டிருந்தான்.
அதாவது
யாருக்கும் ஹிந்தி தெரியவில்லையாம்.
ரொம்ப வெயிலாக இருக்கிறதாம்.
தோசை கேவலமாக சுடுகிறார்களாம்.
தமிழ் எழுத்துக்கள் ஜிலேபிமாதிரி இருக்கிறதாம்.
இதெல்லாம் தான் குற்றச்சாட்டு.
எனக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது என தெரியவில்லை.
ஆனால் வந்தது.
அவர்களிடம் போனேன்.
“உன் தாய் மொழி ஹிந்தியா?” என கேட்டேன்.
அவன் இல்லை என தலை ஆட்டினான்.
“பிறகு எதற்கு ஹிந்தி பேசுகிறாய்?”
“ஹிந்தி தேசிய மொழி அது இல்லாமல் இந்தியாவில் எங்கும் படிக்கவோ வேலைக்கோ போகமுடியாது”
என்றான்
“உனக்கு வேண்டுமானால் அது தேவை படலாம். ஆனால் எங்களுக்கு தேவை இல்லை.
எங்களுக்கு தேவையான படிப்பும் வேலையும் தமிழ்நாட்டிலேயே கிடைக்கும் பொழுது
நாங்கள் ஏன் வேறு ஊருக்கு போக வேண்டும். இப்பொழுதும் நீ தான் என் ஊருக்கு
வந்திருக்கிறாய்” என்றேன்.
தொடர்ந்தேன்
“ஹிமாலயாவில் போய் வெயில் வேண்டும் என எதிர் பார்பாயா?
ஒவ்வொரு ஊரின் தட்பவெட்ப நிலையை ஏற்றுக்கொள்ள உனக்கு அறிவு பத்தவில்லை என
நினைக்கிறேன்
இது சென்னையின் தட்பவெட்பம்.
தோசையை கண்டு பிடித்தவர்களே நாங்கள் தான் எங்களுக்கு தோசை சுட சொல்லிதர தேவை
இல்லை.
உங்கள் ஊரில் வந்து என் வீட்டு சாப்பாடு கேட்டால் கொடுக்க முடியுமா??
அப்படிதான்.
எங்கள் சுவைக்கு தான் இங்கு செய்வார்கள்.
தெரியாத மொழியின் எழுத்துக்கள் எல்லாம் மற்றவர்களுக்கு ஜிலேபிதான்” என
சொல்லிவிட்டு என் இடத்திற்கு வந்துவிட்டேன்.
ஒருத்தனும் எதுவுமே சொல்லவில்லை.
அன்றிலிருந்து என் முன் அவர்கள் தமிழ்நாட்டை பற்றி எதுவுமே சொல்லவில்லை.
அந்த சம்பவம் என்னை வேறு ஒரு தளத்திற்க்கு இழுத்துகொண்டு போனது.
நன்றாக தெரிந்த ஒன்றை என்னால் தெளிவாக உதாரணத்துடன் சொல்ல முடியும் என்பது
அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
எனக்கு தேவையான செய்திகளை அன்றிலிருந்து தேடி தேடி தெரிந்து கொள்கிறேன்.
இந்த மொழி பிரச்சனையை தாண்டி அவர்கள் நட்பாகிவிட்டனர்.
எப்படியோ படித்து டெஸ்டை பாஸ் பன்னியாகிவிட்டது.
இங்கு என்னால் என் வேலையை தவிர எதையும் செய்ய முடியவில்லை.
நேரம் இருந்தாலும் என்ன செய்வதென தெரியாமல் இருந்தேன்.
கம்ப்யூட்டருடன் வாழ்கையை முடித்துகொள்ள எனக்கு விருப்பமில்லை.
யாராரிடமோ கேட்டு கோவைக்கு மாற்றல் வாங்கிவிட்டேன்.
ஜுன் 01, 2014
வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 2 மணி நேரம்.
அதனால் பக்கத்திலேயே என் கல்லூரி நண்பனிடம் சேர்ந்து வீடு எடுத்துவிட்டேன்.
சொல்ல மறந்துவிட்டேன்.
வேலை கிடைத்து சென்னை போன பிறகு திரும்பவும் பழைய நண்பர்கள் புதுப்பித்துவிட்டார்கள்.
மறுபடியும் arena animation இல் க்லாஸ்.
அந்த விட்டுப்போன VFX ஐ முடித்துவிட்டேன்.
எதிலும் திருப்தி அடைய முடியவில்லை
அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு மட்டும் தான் இருந்தது.
நினைத்ததை வெளிப்படுத்த ஒரு மீடியம் தேவைபட்டது.
அப்பொழுது வந்தது தான்
இந்த
ப்ளாக்.
உன்மையில் இதை ஆரம்பிக்கும் பொழுது இது என்னை இப்படி மாற்றும் என நினைக்க
வில்லை.
எனக்கு நானே ஞாபக படுத்திக்கொள்ள மட்டும் தான் எழுதினேன்.
யாருக்காகவும் எழுதவில்லை.
முதல் 5 போஸ்ட் போடும் பொழுது என் எண்ணங்களை மட்டுமே எழுதினேன்.
அதன் பிறகு ஒரு வரி எழுதவே நான் நிறைய வாசிக்க வேண்டியிருந்தது.
அது எனக்கு பிடித்திருந்தது.
சென்னையில் அந்த ஹிந்தி பற்றி எதிர்த்து பேசும் பொழுது இருந்த அதே உணர்வு நான்
எழுதும் பொழுதும் கிடைத்தது.
இதை விடுவதாக இல்லை.
இது எனக்கு நிறைய கற்று கொடுத்தது.
நாம் பார்க்கும் விஷயத்திற்க்கு பல பரிமாணங்கள் இருக்கும் என்ற உண்மையை எனக்கு
புரிய வைத்தது.
நான் நினைத்திருந்ததெல்லாம் சரி என்றாகிவிடாது என என் தலையில் கொட்டி சொல்லி
கொடுத்தது.
என்னை சுற்றியுள்ளவர்களை மிக ஆழமாக பார்க்கவைத்தது.
அவை சொல்லிதந்த பாடம் இதன் பிறகு நான் வாழ போகும் வாழ்கையை எனக்கு அடையாளம்
காட்டிவிட்டது.
பாடம்:
இந்த ஒரு வருடம் முழுவதும் நான் என் மூளை சொன்னதை கேட்கவேயில்லை.
அது எப்பொழுதும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மட்டுமே யோசித்துகொண்டிருக்கும்.
என் மனதிற்கு எது சரி என படுவதை மட்டுமே செய்தேன்.
அதற்கு மட்டுமே நாம் என்ன நினைக்கிறோம் என தெரியும்.
அது தப்பாக போனாலும் ஆசைப்பட்டதை அடைய முயன்ற சந்தோஷம் இருக்கும்.
இது போக இந்த வருடம் நடந்தது
இந்த வருடம் எனக்கு புதிதாக சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
நான் கண்ணாடி அணிய ஆரம்பித்திருக்கிறேன்.
2014 முழுவதும் நான் அசைவம் சாப்பிடவேயில்லை.
புதிதாக Blog ஆரம்பித்தேன்.
என் முதல் article தினமலரில் வந்தது
Blog Posts: இருபத்திரெண்டு
படித்த புத்தகங்கள்: Immortals
of Meluha, Secrets of NAGA, The Secret, The Alchemist, If Tomorrow comes, The
mirror cracked from side to side, 1857 சிப்பாய் புரட்சி, சில
நேரங்களில் சில மனிதர்கள், Playing
it My way, நில் கவணி பேசு,Half Girl Friend.
இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக எனக்கு இனி யார் வேண்டும் யார் வேண்டாம் என தரம்
பிரித்து காட்டிவிட்டது இந்த 2014.
இதை பிரிய மனமில்லை
ஆனால் பிரிந்துவிடுவது கட்டாயமாகிவிட்டது.
பிரிகிறேன். ஆனால் மறப்பதற்கில்லை.
இதோ அடுத்த ஆண்டு வந்து விட்டது.
2015
இன்னொரு விடியல்.
புதிய பாடதிட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கும்
மாணவனாக
பிரபு மித்ரன்.