Saturday, 12 December 2015

எளியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்



அன்று காலை இரண்டாவது முறையாக கடைசி தளத்திலிருக்கும் என் வாடகை ரூமுக்கு படிக்கட்டில் தாவிக்கொண்டிருந்தேன்.
ஏன் இப்படி ஆனேன்.
மறதி....

அலுவலகம் செல்ல கிளம்பி என் தெருவை தாண்டும் பொழுது தான் ஞாபகம் வந்தது என் செல் போனை எடுக்கவில்லை என்று
உடனே ஓடி வந்து இதே போல மூன்று மாடி ஏறி சென்று எடுத்து வந்தேன்.
அதன் பிறகு என் தெருவை தாண்டி மெயின் ரோட்டை தொடும் பொழுது இன்னொன்று ஞாபகம் வந்தது.
பெல்ட் கட்டவில்லை என்று.
திரும்பவும் ஓடினேன்.

பெல்ட் கட்டிகொண்டு புப்படும் பொழுது எல்லாத்தையும் சரி பார்க்க ஒரு முறை எனக்கு நானே சொல்லி சரி பார்த்துகொண்டேன்.
பெல்ட்
பர்ஸ்
வாட்ச்
செல் போன்
ஹெட் செட்
ஐடி கார்டு
சார்ஜர்
கர்சீப்
பேனா
அவ்ளோ தான்.
எல்லாத்தையும் எடுத்தாகிவிட்டது.
இவை எல்லாம் என் உடம்புடன் சுத்தும் பொருட்கள்.
இப்படி ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடம்போடு ஒட்டிகொண்டு நாள் முழுக்க சுற்றும் எதாவது இருக்கிறது.



ஒரு வழியாக பஸ் நிறுத்தம் வந்து சேர்ந்தேன்.
எனக்கு என்னமோ தெரியாது... இந்த பஸ் நிறுத்தங்கள் எனக்கு எப்பொழுதுமே சலித்ததில்லை.
எப்பொழுதும் புதிதாகவே தோன்றும்.
ஒரு நாள் நாம் இங்கு பார்க்கும் காட்சிகளோ மனிதர்களோ மறு நாளும் அப்படியே இருக்காது.


ஒரு பெரிய மரத்திற்கு கீழே தான் அந்த பஸ் நிறுத்தம் தகர கூரையுடன் வீற்றிருந்தது.
அது என்ன மரம் என இதை எழுதும் பொழுது தான் யோசிக்கிறேன்.
அட நான் அதை தெரிந்து கொள்ளவே நினைக்கவில்லையே... சரி திங்கட்கிழமை தெரிந்துகொள்ளவேண்டும்.


பஸ் ஸ்டாண்டின் இடது புறத்தில் ஒரு பூக்கடை இருக்கும்.
ஒரு 15.. 16.. வயது பையன் தான் அந்த பூ கடையை வைத்திருந்தான்.
அவனுக்கு பள்ளிக்கு போகும் காதலி உண்டு...
ஒட்டு கேட்டதிலும்.. எட்டி நின்று கவனித்ததிலும் அவள் அவனின் சொந்த அத்தை பெண் என பட்டது.
அவளுக்கு பஸ் வரும் வரை அவனுடன் நின்றுதான் பேசி கொண்டிருப்பாள்.
அவர்கள் பேசிக்கொள்ளும் போது அந்த பெண்ணின் முகத்தில் தெரியும் ஒரு வித ஒலியை என்னால் சமீபத்தில் எங்கும் பார்க்க முடிந்ததில்லை.
அவ்வளவு சந்தோஷம்... வெட்கம்.... அன்பு...
ச்சே இல்லை இல்லை...
எதோட கலவை என தெரியாது. ஆனால் அவளுக்கு அவனை அவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை சொல்லிகொண்டிருந்தது அந்த முகத்தின் மலர்ச்சி.
அந்த காதல் அவ்வளவு எளிமையானதாக இருந்தது. அதுவே அதற்கு அழகும் சேர்த்திருந்தது. பாரதிராஜா படம் போல.

இன்று ஏனோ அந்த பையன் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு வயதான பாட்டி இருந்தாள்.
அவளுக்கு ஒரு 80 வயதுக்கு மேல் இருக்கும் என்பது அவரின் வலைந்த முதுகுத்தண்டு சொல்லியது.
அந்த பையனின் பாட்டிக்கும் அம்மாவாக இருக்ககூடும்.



அந்த பஸ் நிருத்தத்தை ஒட்டியபடி தரையில் ஒரு வயதான வெந்தாடிக்காரர் செருப்பு தைத்துகொண்டிருப்பார்.
பல நாட்கள் அவரை வேடிக்கை பார்த்துகொண்டு உட்காந்திருக்கிறேன்.
யாராவது ஒருத்தருடன் பேசிக்கொண்டிருப்பார்.
இல்லையேல் ஒரு அரசன் போல தன் செருப்பு மூட்டையின் மீது சாய்ந்து கொண்டு தலையை அன்னாந்து வைத்தவாரு பீடி புகையை ஆகாயத்திற்கு விட்டுகொண்டிருப்பார்.
அது ஒரு வகையில் அவருக்கு கம்பீரமாகவே இருக்கும்.
எப்பொழுதாவது பக்கத்து இஸ்த்திரி கடையில் வாங்கிய காப்பி மிச்சமானால் இவரை அழைத்து கொடுப்பார்கள்.
அதை வாங்கும் பொழுதே இன்னொரு பிளாஸ்டிக் டம்ரும் கேட்டு வாங்கி தன்னுடன் பேசுபவர் யாருக்காவது பகிர்ந்து கொள்வார்.
அப்படி ஒரு சமயத்திலிருந்து தான் நான் அவரை கவனிக்க ஆரம்பிதேன் என ஞாபகம்.
ஒரு முறை அவராக என்னை கை நீட்டி அழைத்தார்.
பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
என்னை உற்று ஒரு நிமிடம் பார்த்தவர் தன் கண் புருவங்கள் உயர்த்தி அவரின் குரலின் உச்ச சுருதியில் “பத்தாவது வரைக்கும் படிச்சுருக்கேன்... வேலை இல்லைனாலும் பிச்சை எடுக்க மாட்டேன். இப்படி உழச்சு சாப்பிடுவேன்” என சொன்னார்.
எதற்கு என்னிடம் சொன்னாரென தெரியாது.
நான் ‘ உங்க பெயரென்ன?” என்று கேட்டேன்.
அவரின் அதே பார்வை. பிறகு பேச்சு “நாகராஜன்” என அழுத்தி சொல்லிவிட்டு தன் கழுத்திலிருந்த ருத்ராட்சத்தை பிடித்து எனக்கு தூக்கி காமித்து “என்னை யாராலும் அழிக்க முடியாது... அந்த சிவனே என்னுடன் இருக்கிறார்” என்றார்.
அன்று அவ்வளவு தான் பேசினோம்.
அடுத்த நாள் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
இன்று அவரையும் காணோம்.
அவரின் செருப்பு மூட்டையும்.... செருப்பு தைக்க உதவும் கருவிகள் அடங்கிய மூட்டைகளும் மட்டும் ஓரமாக வைக்கபட்டிருந்தது.
அது எப்பொழுதும் அங்கு தான் இருக்கும். அது தான் அவரின் அலுவகம். பூட்டாத அலுவலகம்.


எண்ணெயே பார்க்காமல் முடி எல்லாம் செம்மையேரி சிக்கு விழுந்து பரட்டை முடியுடன் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
எதோ பெயருக்கு அந்த அழுக்கான சேலையை உடம்பு சுற்றியிருந்தது.
பக்கத்தில் அவளின் ஏழு வயதுக்கும் தாண்டாத பையன் நின்று கொண்டும்.. ஒரு காலை வைத்து இன்னொரு காலால் சுற்றி உடம்பை வலைத்து விளையாட்டு போல எதோ செய்து கொண்டும் இருந்தான். பச்சை நிறத்தில் உடம்புக்கு பத்தாத ஒரு சின்ன பனியனும்.. முட்டிக்கு கீழே கொஞ்சமாக வளர்ந்திருந்த முழு கால் பேண்டும்.. அதை இடுப்பில் நிறுத்த அரைஞான் கயிறும்தான் அவனின் தோற்றம். அவன் தலை முடியும் அப்படிதான் செம்பட்டையாக இருந்தது.
தன் முடியை பற்றி எந்த பற்றும் இல்லாத அந்த பெண் தன் மகனின் தலை முடியை ஒரு கையால் கோதி சீர் செய்து கொண்டிருந்தாள். அதற்கு இடைஞ்சலாக அவன் சுற்றல் விளையாட்டு இருந்தது. அவன் தலையை பின்னால் இழுத்து அவன் அம்மாவுடன் விளையாடுகிறான். அவன் அம்மாவும் அதட்டாமல் அவனுடன் விளையாடுவது போல சிரிக்கிறாள். இருவரும் சிரித்து கொண்டிருக்கிறார்கள்.
இதே பஸ் ஸ்டேண்டில் ஷூ லேஸ் சரியாக கட்டவில்லை என்று பையனை அடிக்கும் அம்மாக்களை பார்த்திருக்கிறேன். இது பார்க்க நன்றாக இருந்தது.
 
அப்பொழுது ஒரு பஸ் வந்து நின்றது
.எப்பொழுதுமே பயங்கர கூட்டத்துடன் தான் அந்த பஸ் வரும்.
எப்பொழுதும் போல அந்த பஸ் உள்ளே இருந்து பேஸ்ட் போல பயனிகளை வெளியே பிதுக்கி தள்ளியது.
அப்பொழுது வெளியே இறங்கிய ஒரு பெண் அவரின் கைப்பையில் கையை விட்டு எதோ துலாவிகொண்டிருந்தார்.
பக்கத்தில் அவருடன் வந்த பெண்களெல்லாம் பதற்றமாக எதோ கேட்டு கொண்டிருந்தார்கள்.
துலாவிகொண்டிருந்த பெண் இப்பொழுது அழுகிறாள்.
அவர்களின் பேச்சில் சத்தமாக சிதறிய வார்தைகளிலிருந்து அவரின் செல்போனை காணவில்லை என தெரிந்துகொண்டேன்.
அவர்களின் பதற்றம் பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு சிலரை ஈர்த்துவிட்டது. அவர்களை சுற்றி என்னவோ கேட்டு கொண்டிருந்தார்கள்.
இது எதுவும் தெரியாமல் அந்த பஸ் அவர்களுக்கு டாட்டா காட்டிச் சென்றது.
கொஞ்ச நேரத்தில் அழுது கொண்டிருந்த பெண்ணும் அவருடன் வந்தவர்களும் நகர்ந்து சென்றார்கள்.
பாக்கெட்டில் இருந்த என் செல் போனை ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டேன். நானும் பஸ்ஸில் இப்படி பறி கொடுத்திருக்கிறேன்.

அந்த பூக்கடையில் அமர்ந்திருந்த பாட்டி தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருந்தாள்.
கால்களிலும் கைகளிலும் மட்டுமல்ல அவர் தலையும் நடுக்கம் கண்டுவிட்டது.
பக்கத்தில் இருந்த அவர் கைத்தடியை எடுத்து ஊன்றிக்கொண்டு நடக்க அடி எடுத்து வைத்தாள்.
எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு எழுந்திருக்கிறார் என்ற யோசனையில் அவரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
மெது மெதுவாக அடிமேல் அடிவைத்து அந்த கம்பை ஊன்றி நடந்தாள்.
இதற்கு முன் செல்போனை பறிகொடுத்த கூட்டம் இருந்த இடத்தில் அவள் வந்ததும் அங்கு நின்றிருந்த பெண்ணிடம் எதோ கேட்டார்.
எனக்கு சரியாக கேட்கவில்லை என்று அவருக்கு கொஞ்சம் பக்கத்தில் சென்றேன்.
அட...
அந்த பெண்ணிடமிருந்து என்ன காணாமல் போனது என்று விசாரிக்க தான் இவ்வளவு கஷ்டபட்டு எழுந்து வந்திருக்கிறாள்.
கேட்டுவிட்டு ஜாக்கிரதையாக இருப்பதை பற்றியும்.. அவருக்கு தெரிந்தவர் போன வாரம் எதையோ துலைத்துவிட்டதை பற்றியும் சொல்லிவிட்டு அதே போல மெதுவாக தள்ளாடியபடி சென்று அவள் சேரில் அமர்ந்துகொண்டாள்.
எந்த வயதானாலும் மனிதனுக்கு மற்றவர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் மட்டும் குறைவதில்லை.
எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கும் ஒரு நாள் வயதாகும்.

அந்த பரட்டை முடியுடன் இருந்த அம்மாவும் மகனும்  தாங்கள் வைத்திருந்த மூட்டையை அப்படியே ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு நகர்ந்தார்கள்.
ஒரு மூட்டையில் அதன் தோற்றதை பார்த்தாலே சமையல் செய்ய பாத்திரங்கள் என சொல்லிவிடலாம்.
இன்னொன்று துணி மூட்டை. அப்பறம் ஒரு மூங்கிலில் சதுரமாக செய்த ஒன்று இருந்தது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை வைத்து தான் அவர்களின் வாழ்வாதாரம் என்று நினைக்கிறேன்.
சிறிது தூரம் சென்ற அந்த பெண் திரும்ப வந்து அவள் பையனின் கையிலிருந்த கோலி குண்டுகளை வாங்கி அந்த துணி மூட்டைகளுக்குள் துனித்தாள்.
அவளும் அவள் மகனும் நடந்து எங்கோ சென்று கொண்டிருந்தார்கள்.
இந்த இரண்டு மூட்டைகள் தான் அவர்களின் உடமைகள். வேறு எதுவுமே இல்லை.
ஆனால் அதை கூட ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு எங்கோ செல்கிறார்கள்.
அவர்களுக்கு அதை பற்றி கவலையில்லை.
தன்னிடம் உள்ள பொருட்கள் மற்றவர்களுக்கு தேவைப்படாது என்ற தைரியமோ.!!!


நம்மிடம் உள்ளது எப்பொழுது இந்த உலகத்துக்கு தேவைப்படாமல் போகிறதோ அப்பொழுது நாமும் தேவைப்படாதவர்களாகிறோம்.

நாம் வீட்டுக்கு போட்டு பூட்டும் பூட்டை நாலு தடவை இழுத்து சரி பார்க்கிறோம்.
மழை வந்தால் நம்மை அறியாமல் நம்முடைய செல்போனை பாதுகாக்க கைகள் சென்றுவிடுகிறன.
கூட்டதிற்குள் சென்றால் கழுத்திலும் கைகளிலும் இருக்கும் தங்க நகைகளை பாதுகாக்க மூளை வேலை செய்கிறது.
சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு போக கூட வீட்டில் சேத்தி வைத்த பொருட்கள் நம்மை அனுமதிப்பதில்லை.
நாம் இரவு பகலாக உழைத்து சேர்த்தவையெல்லாம் நம்மை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொண்டிருக்கிறது.

நாம் வெளியே செல்லும் பொழுது ஒரு நிமிடம் நாம் எத்தனையை சுமந்து செல்கிறோம் என யோசித்தால் தான் தெரியும்.
ஒரு முறை விளையாட்டாக என் நன்பரிடம் அவருடன் எப்பொழுதும் இருக்கும் பொருட்களுக்கு விலை பட்டியல் போட்டோம்.
அவரின் பைக்..வாட்ச்..செயின்..ஷூ என...
மொத்தம் மூன்றரை லட்சம்.
இவை எல்லாம் நமக்கு மதிப்பாக இருக்கிறதா!! இல்லை பாரமாக இருக்கிறதா?

அந்த அம்மா மகன் போல சுதந்திரமாக நம்மால் செல்ல முடியுமா என்ன!!
அந்த பெரியவர் அவரின் செருப்பு தைக்கும் இயந்திரங்களையும்...செருப்புகளையும் இப்படி இங்கயே ஓரமாக விட்டு செல்கிறாரே!! நம்மால் முடியுமா!!
நம்மால் முடியாது,
எளியவர்களின் வாழ்கையில் செல்வமும் சொத்துக்களும் எளிமையாகவே இருக்கிறது.
அத்துடன் அவர்களின் பாரமும் எளிதானவையே!!

காலையில் மறந்து விட்டதை எடுக்க ஓடியதில் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
எளியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!!


பிரபு மித்ரன்



Saturday, 7 November 2015

கனவுகளின் காதலன்- பிரபு மித்ரன்

கனவு
எல்லோருக்கும் எல்லா நாளும் கனவுகள் வருவதில்லை
சில சமயம் சில நேரங்களில் வரும் கனவுகளும் தூக்கம் கலைந்து எழுந்ததும் மறந்துவிடுகின்ற.

எனக்கும் அப்படிதான்
கனவுகள் எப்பொழுதுமே ஆச்சர்யமானவை 
என்றோ முகம் மறந்த என் ஒன்றாம் வகுப்பு தோழியும்,
அன்று காலையில் ஒரு நொடிப்பொழுதில் கடந்து போன ஆட்டோ டிரைவரும் கனவுகளில் மிக சாதாரணமாக வந்து போவார்கள்.
அந்த வாரம் முழுவதும் நாம் தேவை இல்லாததாக நினைத்தவை ஒன்று சேர்ந்து ஒரு கலவையான கதையாக நம் முன் ஓடும்.
நான் நினைத்ததுண்டு
இவ்வளவு அருமையான கதைகளெல்லாம் நமக்குள்ளிருந்து தான் வருகிறது. அப்பொழுது நமக்குள் தானே அந்த ஆசாத்தியமான திறமையும் இருக்கிறதென்று.



ஒரு சமயம் கவில் மிக சரமாக ஆங்கிம் பேசுவதாக வந்தது.
வில் நான் உபயோக படுத்திய வார்த்தைகளெல்லாம் நான் விழித்திருக்கும்போது பயன்படுத்த சாத்தியமே இல்லை
அந்த வார்த்தைகளெல்லாம் எனக்கு தெரியும் என்பது கூட எனக்கு தெரியாது.
இருந்தும் கவில் பேசுகிறேன். சந்தேகம் கொண்டு காலையில் டிக்ஸெனெரியில் புரட்டிப்பார்த்து சரியாக தான் பேசிருக்கிறோம் என பிம்மித்தேன்.
அப்படியானால் நமக்கு வெளியே தெரியாது என நினைப்பவை எல்லாம் நமக்குள்ளேயே எங்கேயோ தேங்கி இருப்பதாக தானே அர்த்தம்.


கனவுகளுக்கும் எனக்குமான தொடர்பு ஆரம்பித்தது என் சிறு வயதில் தான்.
எனக்கு கணக்கு பாடம் மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்.
அது எனக்கு வாய்த்த ஆசிரியர்களால்தான் வந்தது என்பது என் பின்னாள் கண்டுபிடிப்பு.
பல சமயங்களில் சில கணக்குகளுக்கு விடை கிடைக்காமல் குழம்பியதுண்டு.
அப்படி தான் ஒரு முறை ஒரு கணக்கை போட்டு பாடாய் படுத்திகொண்டிருந்தேன்.
இரவு ரொம்ப நேரம் என்னென்னமோ செய்து அதற்கு விடையே தெரியவில்லை.
சரி என்று தூங்க போய்விட்டேன்.
கனவில் அதே கணக்கு.
அவ்வளவு சுலபமான வழியில் அந்த கணக்கை முடிக்கலாம் என நினைத்துகூட பார்க்கவில்லை. சந்தோஷத்தில் குதிக்கையில் தூக்கம் கலைந்து எழுந்தேன்.
நடு ராத்திரி.
திரும்பவும் தூங்கினால் மறந்து விடுவேன்.
எழுந்து லைட் போட்டால் அம்மாவிடம் திட்டு வாங்க வேணும்.
சரி என்று பக்கதிலிருந்த சுண்ணாம்பு சுவற்றில் என் நகத்தை வைத்து கீரி கீரி கணக்கை எழுதி வைத்துவிட்டு தூங்கினேன்.
அடுத்த பொங்கல் வரைக்கும் அந்த சுவற்றில் அது அப்படியே பதிந்து போய் அடிக்கடி எனக்கு திட்டு வாங்கி கொடுத்ததுண்டு.


அதன் பிறகு அப்போ அப்போ இப்படி எதாவது கனவு வந்து ஆச்சரியம் கொடுக்கும்.
சில நேரங்களில் உண்மையை விட கனவுகளுடனே வாழ்ந்துவிடலாமென தோன்றும்.
பல சமயங்களில் கனவே வர வேண்டாமே என நினைக்கவும் தோன்றும்.


அப்படியும் சில கனவுகளுண்டு...
எனக்கு நாய் என்றால் ரொம்ப பயம்.
நிஜத்தை விட கனவில் தான் என்னை அதிகமாக நாய் துரத்தியிருக்கிறது.
நான் தூக்கதிலேயே பயந்து கத்தியதில் அதிக அளவில் கனவு நாய்களுக்கு பங்கு உண்டு.
ஆரம்பத்தில் என் கத்தலால் என்னவோ எதோ என பதறிய என் வீட்டார்கள் கூட நாளடைவில் ‘நாய் துரத்தியிருக்கும்’ என நினைக்கும் அளவுக்கு என் கனவு அவ்வளவு பிரபலம்.

சில கனவுகள் திரும்ப திரும்ப வருவதுண்டு...
அதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும்.
எப்படி இப்படி அடிக்கடி ஒரே மாதிரி கனவுகள் வருகிறதென.



சிறு வயது முதலே எனக்கு காய்ச்சல் வரும்பொழுதெல்லாம் ஒரு கனவு வரும்.
அந்த கனவுக்கு என்னால் உருவகம் கொடுக்க முடியவில்லை.
எதோ பெரிய பெரிய ரோலர் கியர்கள்.
இந்த கரும்பு ஜூஸ் இயந்திரத்தில் இருக்குமே.
அது போல.
அதற்குள் எதோ மெத்தை போல ஒன்று உருண்டு கொண்டிருக்கும். அதில் சின்ன பூச்சி அளவுள்ள நானும் அதனுடன் அந்த இயந்திரத்துக்குள் பூந்து பூந்து வெளியே வருவேன்.
வயிறெல்லாம் என்னமோ செய்யும். பயம்..சந்தோஷம்,....துக்கம்... அசதி... என எல்லமே அதில் தெரியும்.
நான் எப்பொழுதெல்லாம் காய்ச்சலால் படுத்திருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் கண்டிப்பாக இந்த கனவு வரும்.
ஆனால் ஒன்று. அந்த கனவு வந்ததும் காய்ச்சல் சரியாகிவிடும் என அப்பொழுது நம்பியிருந்தேன்.
பதினைந்து பதினான்கு வயதில் அந்த கனவு வருவது நின்றுவிட்டது.
இப்பொழுதும் காய்ச்சல் வந்தால் அந்த கனவை நினைத்துகொள்வதை தவிர்க்கமுடிவதில்லை.



அதன் பிறகு அடிக்கடி வரும் கனவென்றால் நான் பறப்பது போல வரும்.
பலருக்கு இப்படி வரும் என கேள்விபட்டிருக்கிறேன்.
ஆனால் நான் பறப்பது என்பது கொஞ்சம் வித்யாசமாக தான் வரும்.
அந்த கனவுகளிலெல்லாம் நான் சாதாரனாமாக தான் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பேன்.
திடிரென்று என் கால் மேலே எழும்பும். அப்படியே வானத்தை நோக்கி மேலே போய்விடுவேன்.
இதுவே நான் எதாவது அறையில் இருந்தால் அந்த அறையின் கூரை வரை மேலே போய் அப்படியே கூரையில் லேசாக முட்டி முட்டி எப்படியோ ஓடி கொண்டிருக்கும் மின் விசிறியில் எல்லாம் படாமல் வாயில் வழியாக வெளியே வெற்றிடத்துக்கு வந்துவிடுவேன்.
காத்து அடிக்கும் திசையில் அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருப்பேன். என்னால் நான் எங்கு செல்ல வேண்டும் என கட்டுபடுத்த முடியாது.
அப்படியே கொஞ்ச நேரம் காற்றில் ஆடிகொண்டிருக்கையில் திடிரென்று காற்று போன பலூன் போல புஸ்ஸென கீழே இறக்கப்படுவேன். அதுவும் நான் நினைத்த இடத்தில் இறங்க முடியாது.
பல சமயங்களில் வேறு யாரோ வீட்டு மொட்டை மாடியில் தரையிறங்கி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்துவருவேன்.
தப்பிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கவே இருக்கிறது ஒரு வழி..
பயந்து கண்விழித்து விடுவேன்.  



நான் கல்லூரி எல்லாம் முடித்து ச்சும்மா வீட்டில் இருந்த சமயம்
எனக்கு இருந்த ஒரே வேலை நாள் முழுவதும் தூங்குவது தான்.
என்னை கேட்டால் நான் பதினெட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்கியிருப்பேன்.
ஆனால் அதற்கு நான் கூச்சமோ வெட்கமோ படவே இல்லை.
என்னை பொருத்த வரைக்கும் தூங்குவது வரம். பல பேருக்கு அது கிடைப்பதில்லை.
அது கிடைத்தவர்களும் வேகாத இந்த சமுதாயத்திற்காக பயந்து அனுபவிப்பதில்லை.
குழந்தையாக இருக்கும் போது மட்டுமே அப்படி இருந்திருக்க முடியும்.
என் பாக்கியம் எனக்கு அந்த காலக்கட்டதில் கிடைத்தது.
இப்படி தூங்கி தூங்கி எனக்கு ஒன்று நடந்தது.
நான் பல சமயம் எனக்கு சக்தி வந்துவிட்டதோ என பயந்திருக்கிறேன்.
எனக்கு வந்த கனவுகள் தொடர்ந்து பழித்தது.
அதற்காக எதோ புதையல் கனவு என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்.

ஒரு முறை என் நன்பனுடன் எங்கோ போகும் பொழுது பேண்ட் கிழிந்து விடுவதாக கனவு வந்தது.
அதே போல அவனுடன் போன பொழுது நடந்தது.
அப்பறம் ஒரு நாள் மதியம் தூங்கும் பொழுது கனவில் பருப்பு குலம்பும் கீரை பொறியலும் வந்தது. தூங்கி எழுந்த பொழுது என்ன ஆச்சரியம். எங்கள் வீட்டில் எனக்கு மத்திய சாப்பாட்டிற்கு அதை தான் கொடுத்தார்கள்.
இப்படி தான் சில கனவுகள் பழித்தது. நான் சக்தி வாய்ந்தவனாக அலைந்த நேரம் அது. ஆனால் அது சீக்கிரமே காணாமல் போய்விட்டது.


எந்த கனவிலும் ஒரு கொடூரமானவனாக வந்ததே இல்லை.
எப்பொழுதும் பயமும் கோபமும் கலந்த என் இயல்புடனே வருவேன்.
பயம் என்பது மனிதனின் இயல்பு.
சிங்கம் என்பதற்காக அதற்கு பயமே இருக்காது என எண்ண முடியுமோ!!
அப்படி யாராவது இருந்தால் அவன் நடிக்கிறான் என்று தானே அர்த்தம்.

ஆனால்
இப்பொழுதெல்லாம் என் இயல்புக்கு மீறியும் கனவு வருகிறது.
போன வாரம் ஒரு கனவு
நான் ஒரு கும்பலுடன் ஒரு கட்டிடத்தில் இருக்கிறேன். யார் அவர்கள் என்றெல்லாம் தெரியாது.
புதிய ஒரு கும்பல் அந்த கட்டிடத்திற்குள் நுழைகிறது.
சுட்டுகொள்கிறார்கள்.
வெட்டுகிறார்கள்.
அவர்களும் இவர்களும் சரிந்து சரிந்து விழுகிறார்கள்.
என் கையில் ஒருவர் சிக்குகிறார். அவரை கீழே தள்ளி
அவரின் கழுத்தில் எதோ வேகத்தில் என் கையில் இருந்த கத்தரிகோலால் வெட்டிவிடுகிறேன்.
கத்தரிக்கோல் என்றால் பெரியதெல்லாம் இல்லை.
குட்டியாக... இந்த செல்லோடேப் எல்லாம் வெட்டுவோமே அது.
அவர் சாக வில்லை.
பேசமுடியாமல் கத்துகிறார்.
என்னால் அதை பார்க்க முடியவில்லை. அந்த குட்டி கத்தரிகோலில் கழுத்தை இன்னும் கொஞ்சம் வெட்டுகிறேன்.
அவர் கத்துகிறார். துடிக்கிறார்.
சாக மாட்டேங்குறார்.
என்னால் தாங்க முடியவில்லை. “தெரியாமல் பண்ணிட்டேன்..மண்ணிச்சுடுங்க மண்ணிச்சுடிங்க” என்ற படியே வெட்டுகிறேன்.
அவர் அழுகிறார்.
நானும் அழுகிறேன்.
அவர் சாக மாட்டேங்குறார்.
இன்னும் ஒரு நரம்பு.. வெட்டுகிறேன்... அவர் கண்கள் என்னை முறைத்து பார்க்கிறது...
நான் கதறி அழுகிறேன்...
அவரின் காக்கி பேண்ட்டும் போலீஸ் ஷூவும் வேகமாக உதருகிறது...
நான் என் தலையை நிலத்தில் மோதி அந்த இரத்த கத்தரியுடன் அழுகிறேன்...
அவர் சாக மாட்டேங்குறார்..
நான் விழித்தெழுந்துவிட்டேன்.


ச்சீ நான் இவ்வளவு கொடூரமாக இருக்கிறேனே என முதலில் நினைத்தேன். ஆனால்  எனக்கும் தானே அழுகை வந்தது... நான் அவ்வளவு கெட்டவன் இல்லை என சமாதானம் செய்துகொண்டேன். ஆனால் எனக்கு ஏன் இப்படி கனவு வந்தது என தெரியவில்லையே!!.
அந்த கத்தரி இரத்ததின் ஈரம் காய்வதுக்குள் அடுத்த இரத்தம்


இந்த வாரமும் இதே போல ஒரு கனவு..
நான் வீட்டிலிருந்து ஒரு பெரிய பயனத்திற்கு புறப்படுகிறேன்.
நான்... என் நண்பர்கள் விக்னேஷ்... அப்பறம் மோகன் என்பவர்..(அவன் ஜெர்மெனியில் இருக்கிறான்... எப்படி இங்கு வந்தானோ!!)
நாங்கள் கிளம்புகிறோம்.
கடைசி நேரத்தில் எங்களுடன் என் இன்னொரு நண்பர் வந்து சேர்கிறார். அவர் பெயர் சுஜிந்தன்.
“உன்னால் முடியுமா?” என நான் கேட்க
அதற்கு அவர் “நான் ஏற்கனவே நிறைய ட்ரெக்கிங் போயிருக்கிறேன்... உனக்கு தான் தெரியுமே” எங்கிறார்.
இவர்களெல்லாம் என் கல்லூரி நண்பர்கள்.
நான்கு பேரும் கிளம்புகிறோம்.
போய் சேர்ந்த இடம்...
எங்கள் வீட்டுக்கு கிழக்கு பக்கம் கொஞ்சம் காலி இடம் இருக்கிறது. அது ஒரு குட்டியான வெற்றிடம்.
கொஞ்சம் செடிகள் இருக்கும்.
அந்த இடம் தான்...
(வீட்டுகுள்ளேயே இருக்கும் இடத்திற்கு எதற்கு அவ்வளவு ஏற்பாடுகள்... கனவுகள் அப்படிதான்)
அந்த இடத்தில் பெரிய யானை...
எல்லோரும் சேர்ந்து தாக்குகிறோம்..
மோகன் எப்படியோ அந்த யானைக்கு மேல் ஏறிவிடுகிறான்.
அவன் கையில் அந்த அவெஞ்செர்ஸ் படத்தில் ஒரு சுத்தியல் வருமே. அதை வைத்து யானையின் தலையில் அடிக்கிறான்.
அதற்கு ஒன்னும் ஆக மாட்டேங்குது.
நான் வாங்கி அதன் நெத்தியில் அடிக்கிறேன்.
நான் எப்படி அதன் நெத்தி வரை வளர்ந்தேன் என தெரியாது.
அடிக்கிறேன்.
ஒவ்வொரு அடிக்கும் அதன் தலை சிதைந்து இரத்தம் தெரிக்கிறது.
ஓங்கி ஓங்கி அடிக்கிறேன்.
அப்படியே சாய்ந்து விழுகிறது.
தலை முழுவதும் சிதைந்துவிட்டது... பாவம்.
அதன் தந்தங்களை எடுத்துகொள்கிறேன்.
ஒரு தந்தம் பாதி உடைந்துவிட்டது.
இன்னொன்று ரொம்ப குட்டியாக இருக்கிறது.
என் நண்பர்களிடம் திரும்பி “இது நெஜமாவே ஆம்பள யானை தானா டா..?” என கேட்கிறேன்.


சரி இந்த யானையின் உடலை என்ன செய்வது என தெரியவில்லை..
வீட்டுக்குள் போய் நாசூக்காக சொல்ல வேண்டும்
“யானை செத்து போய்டுச்சு... இங்கயே புதைச்சுடட்டுமா” என்று சொல்லிவிட்டு
திட்டாமல் இருப்பதற்காக
“புதைச்சுட்டு அதுக்கு மேல விநாயகர் சிலை வைச்சுடுறேன்” என்றேன்.
உடனே சம்மதித்துவிட்டார்கள்.
போய் அதை புதைக்கும் பொழுது அந்த யானை ஒரு நாயின் அளவு குட்டியாக இருந்தது.
எப்படி அப்படி சுருங்கியதோ!!
கனவு கலைந்து எழுந்த பொழுது அது என்னவோ செய்தது.
யானையை போய் கொல்லமுடியுமா!!
அதுவும் நாய்க்கு பயப்படும் நான்!!
அந்த யானைக்கு ஒரு தந்தம் உடைந்தது எனக்கு விநாயகரை ஞாபக படுத்தியது.
அவருக்கும் ஒரு தந்தம் உடைந்து தான் இருக்கும்.
அப்போ விநாயகரின் தந்தத்தை நான் தான் உடைத்தேனோ!!
கனவுகள் எப்பொழுதும் ஆச்சரியமானவை தான்.

நான் காணும் கனவுகளை எல்லாம் எழுத வேண்டும் என நினைக்கிறேன்...
அதற்கு முன்னுரையாகவே இந்த பதிவு..

கனவுகள் தொடரும்


பிரபு மித்ரன்

Related Articles