Saturday, 12 December 2015

எளியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்



அன்று காலை இரண்டாவது முறையாக கடைசி தளத்திலிருக்கும் என் வாடகை ரூமுக்கு படிக்கட்டில் தாவிக்கொண்டிருந்தேன்.
ஏன் இப்படி ஆனேன்.
மறதி....

அலுவலகம் செல்ல கிளம்பி என் தெருவை தாண்டும் பொழுது தான் ஞாபகம் வந்தது என் செல் போனை எடுக்கவில்லை என்று
உடனே ஓடி வந்து இதே போல மூன்று மாடி ஏறி சென்று எடுத்து வந்தேன்.
அதன் பிறகு என் தெருவை தாண்டி மெயின் ரோட்டை தொடும் பொழுது இன்னொன்று ஞாபகம் வந்தது.
பெல்ட் கட்டவில்லை என்று.
திரும்பவும் ஓடினேன்.

பெல்ட் கட்டிகொண்டு புப்படும் பொழுது எல்லாத்தையும் சரி பார்க்க ஒரு முறை எனக்கு நானே சொல்லி சரி பார்த்துகொண்டேன்.
பெல்ட்
பர்ஸ்
வாட்ச்
செல் போன்
ஹெட் செட்
ஐடி கார்டு
சார்ஜர்
கர்சீப்
பேனா
அவ்ளோ தான்.
எல்லாத்தையும் எடுத்தாகிவிட்டது.
இவை எல்லாம் என் உடம்புடன் சுத்தும் பொருட்கள்.
இப்படி ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடம்போடு ஒட்டிகொண்டு நாள் முழுக்க சுற்றும் எதாவது இருக்கிறது.



ஒரு வழியாக பஸ் நிறுத்தம் வந்து சேர்ந்தேன்.
எனக்கு என்னமோ தெரியாது... இந்த பஸ் நிறுத்தங்கள் எனக்கு எப்பொழுதுமே சலித்ததில்லை.
எப்பொழுதும் புதிதாகவே தோன்றும்.
ஒரு நாள் நாம் இங்கு பார்க்கும் காட்சிகளோ மனிதர்களோ மறு நாளும் அப்படியே இருக்காது.


ஒரு பெரிய மரத்திற்கு கீழே தான் அந்த பஸ் நிறுத்தம் தகர கூரையுடன் வீற்றிருந்தது.
அது என்ன மரம் என இதை எழுதும் பொழுது தான் யோசிக்கிறேன்.
அட நான் அதை தெரிந்து கொள்ளவே நினைக்கவில்லையே... சரி திங்கட்கிழமை தெரிந்துகொள்ளவேண்டும்.


பஸ் ஸ்டாண்டின் இடது புறத்தில் ஒரு பூக்கடை இருக்கும்.
ஒரு 15.. 16.. வயது பையன் தான் அந்த பூ கடையை வைத்திருந்தான்.
அவனுக்கு பள்ளிக்கு போகும் காதலி உண்டு...
ஒட்டு கேட்டதிலும்.. எட்டி நின்று கவனித்ததிலும் அவள் அவனின் சொந்த அத்தை பெண் என பட்டது.
அவளுக்கு பஸ் வரும் வரை அவனுடன் நின்றுதான் பேசி கொண்டிருப்பாள்.
அவர்கள் பேசிக்கொள்ளும் போது அந்த பெண்ணின் முகத்தில் தெரியும் ஒரு வித ஒலியை என்னால் சமீபத்தில் எங்கும் பார்க்க முடிந்ததில்லை.
அவ்வளவு சந்தோஷம்... வெட்கம்.... அன்பு...
ச்சே இல்லை இல்லை...
எதோட கலவை என தெரியாது. ஆனால் அவளுக்கு அவனை அவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை சொல்லிகொண்டிருந்தது அந்த முகத்தின் மலர்ச்சி.
அந்த காதல் அவ்வளவு எளிமையானதாக இருந்தது. அதுவே அதற்கு அழகும் சேர்த்திருந்தது. பாரதிராஜா படம் போல.

இன்று ஏனோ அந்த பையன் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு வயதான பாட்டி இருந்தாள்.
அவளுக்கு ஒரு 80 வயதுக்கு மேல் இருக்கும் என்பது அவரின் வலைந்த முதுகுத்தண்டு சொல்லியது.
அந்த பையனின் பாட்டிக்கும் அம்மாவாக இருக்ககூடும்.



அந்த பஸ் நிருத்தத்தை ஒட்டியபடி தரையில் ஒரு வயதான வெந்தாடிக்காரர் செருப்பு தைத்துகொண்டிருப்பார்.
பல நாட்கள் அவரை வேடிக்கை பார்த்துகொண்டு உட்காந்திருக்கிறேன்.
யாராவது ஒருத்தருடன் பேசிக்கொண்டிருப்பார்.
இல்லையேல் ஒரு அரசன் போல தன் செருப்பு மூட்டையின் மீது சாய்ந்து கொண்டு தலையை அன்னாந்து வைத்தவாரு பீடி புகையை ஆகாயத்திற்கு விட்டுகொண்டிருப்பார்.
அது ஒரு வகையில் அவருக்கு கம்பீரமாகவே இருக்கும்.
எப்பொழுதாவது பக்கத்து இஸ்த்திரி கடையில் வாங்கிய காப்பி மிச்சமானால் இவரை அழைத்து கொடுப்பார்கள்.
அதை வாங்கும் பொழுதே இன்னொரு பிளாஸ்டிக் டம்ரும் கேட்டு வாங்கி தன்னுடன் பேசுபவர் யாருக்காவது பகிர்ந்து கொள்வார்.
அப்படி ஒரு சமயத்திலிருந்து தான் நான் அவரை கவனிக்க ஆரம்பிதேன் என ஞாபகம்.
ஒரு முறை அவராக என்னை கை நீட்டி அழைத்தார்.
பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
என்னை உற்று ஒரு நிமிடம் பார்த்தவர் தன் கண் புருவங்கள் உயர்த்தி அவரின் குரலின் உச்ச சுருதியில் “பத்தாவது வரைக்கும் படிச்சுருக்கேன்... வேலை இல்லைனாலும் பிச்சை எடுக்க மாட்டேன். இப்படி உழச்சு சாப்பிடுவேன்” என சொன்னார்.
எதற்கு என்னிடம் சொன்னாரென தெரியாது.
நான் ‘ உங்க பெயரென்ன?” என்று கேட்டேன்.
அவரின் அதே பார்வை. பிறகு பேச்சு “நாகராஜன்” என அழுத்தி சொல்லிவிட்டு தன் கழுத்திலிருந்த ருத்ராட்சத்தை பிடித்து எனக்கு தூக்கி காமித்து “என்னை யாராலும் அழிக்க முடியாது... அந்த சிவனே என்னுடன் இருக்கிறார்” என்றார்.
அன்று அவ்வளவு தான் பேசினோம்.
அடுத்த நாள் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
இன்று அவரையும் காணோம்.
அவரின் செருப்பு மூட்டையும்.... செருப்பு தைக்க உதவும் கருவிகள் அடங்கிய மூட்டைகளும் மட்டும் ஓரமாக வைக்கபட்டிருந்தது.
அது எப்பொழுதும் அங்கு தான் இருக்கும். அது தான் அவரின் அலுவகம். பூட்டாத அலுவலகம்.


எண்ணெயே பார்க்காமல் முடி எல்லாம் செம்மையேரி சிக்கு விழுந்து பரட்டை முடியுடன் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
எதோ பெயருக்கு அந்த அழுக்கான சேலையை உடம்பு சுற்றியிருந்தது.
பக்கத்தில் அவளின் ஏழு வயதுக்கும் தாண்டாத பையன் நின்று கொண்டும்.. ஒரு காலை வைத்து இன்னொரு காலால் சுற்றி உடம்பை வலைத்து விளையாட்டு போல எதோ செய்து கொண்டும் இருந்தான். பச்சை நிறத்தில் உடம்புக்கு பத்தாத ஒரு சின்ன பனியனும்.. முட்டிக்கு கீழே கொஞ்சமாக வளர்ந்திருந்த முழு கால் பேண்டும்.. அதை இடுப்பில் நிறுத்த அரைஞான் கயிறும்தான் அவனின் தோற்றம். அவன் தலை முடியும் அப்படிதான் செம்பட்டையாக இருந்தது.
தன் முடியை பற்றி எந்த பற்றும் இல்லாத அந்த பெண் தன் மகனின் தலை முடியை ஒரு கையால் கோதி சீர் செய்து கொண்டிருந்தாள். அதற்கு இடைஞ்சலாக அவன் சுற்றல் விளையாட்டு இருந்தது. அவன் தலையை பின்னால் இழுத்து அவன் அம்மாவுடன் விளையாடுகிறான். அவன் அம்மாவும் அதட்டாமல் அவனுடன் விளையாடுவது போல சிரிக்கிறாள். இருவரும் சிரித்து கொண்டிருக்கிறார்கள்.
இதே பஸ் ஸ்டேண்டில் ஷூ லேஸ் சரியாக கட்டவில்லை என்று பையனை அடிக்கும் அம்மாக்களை பார்த்திருக்கிறேன். இது பார்க்க நன்றாக இருந்தது.
 
அப்பொழுது ஒரு பஸ் வந்து நின்றது
.எப்பொழுதுமே பயங்கர கூட்டத்துடன் தான் அந்த பஸ் வரும்.
எப்பொழுதும் போல அந்த பஸ் உள்ளே இருந்து பேஸ்ட் போல பயனிகளை வெளியே பிதுக்கி தள்ளியது.
அப்பொழுது வெளியே இறங்கிய ஒரு பெண் அவரின் கைப்பையில் கையை விட்டு எதோ துலாவிகொண்டிருந்தார்.
பக்கத்தில் அவருடன் வந்த பெண்களெல்லாம் பதற்றமாக எதோ கேட்டு கொண்டிருந்தார்கள்.
துலாவிகொண்டிருந்த பெண் இப்பொழுது அழுகிறாள்.
அவர்களின் பேச்சில் சத்தமாக சிதறிய வார்தைகளிலிருந்து அவரின் செல்போனை காணவில்லை என தெரிந்துகொண்டேன்.
அவர்களின் பதற்றம் பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு சிலரை ஈர்த்துவிட்டது. அவர்களை சுற்றி என்னவோ கேட்டு கொண்டிருந்தார்கள்.
இது எதுவும் தெரியாமல் அந்த பஸ் அவர்களுக்கு டாட்டா காட்டிச் சென்றது.
கொஞ்ச நேரத்தில் அழுது கொண்டிருந்த பெண்ணும் அவருடன் வந்தவர்களும் நகர்ந்து சென்றார்கள்.
பாக்கெட்டில் இருந்த என் செல் போனை ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டேன். நானும் பஸ்ஸில் இப்படி பறி கொடுத்திருக்கிறேன்.

அந்த பூக்கடையில் அமர்ந்திருந்த பாட்டி தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருந்தாள்.
கால்களிலும் கைகளிலும் மட்டுமல்ல அவர் தலையும் நடுக்கம் கண்டுவிட்டது.
பக்கத்தில் இருந்த அவர் கைத்தடியை எடுத்து ஊன்றிக்கொண்டு நடக்க அடி எடுத்து வைத்தாள்.
எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு எழுந்திருக்கிறார் என்ற யோசனையில் அவரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
மெது மெதுவாக அடிமேல் அடிவைத்து அந்த கம்பை ஊன்றி நடந்தாள்.
இதற்கு முன் செல்போனை பறிகொடுத்த கூட்டம் இருந்த இடத்தில் அவள் வந்ததும் அங்கு நின்றிருந்த பெண்ணிடம் எதோ கேட்டார்.
எனக்கு சரியாக கேட்கவில்லை என்று அவருக்கு கொஞ்சம் பக்கத்தில் சென்றேன்.
அட...
அந்த பெண்ணிடமிருந்து என்ன காணாமல் போனது என்று விசாரிக்க தான் இவ்வளவு கஷ்டபட்டு எழுந்து வந்திருக்கிறாள்.
கேட்டுவிட்டு ஜாக்கிரதையாக இருப்பதை பற்றியும்.. அவருக்கு தெரிந்தவர் போன வாரம் எதையோ துலைத்துவிட்டதை பற்றியும் சொல்லிவிட்டு அதே போல மெதுவாக தள்ளாடியபடி சென்று அவள் சேரில் அமர்ந்துகொண்டாள்.
எந்த வயதானாலும் மனிதனுக்கு மற்றவர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் மட்டும் குறைவதில்லை.
எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கும் ஒரு நாள் வயதாகும்.

அந்த பரட்டை முடியுடன் இருந்த அம்மாவும் மகனும்  தாங்கள் வைத்திருந்த மூட்டையை அப்படியே ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு நகர்ந்தார்கள்.
ஒரு மூட்டையில் அதன் தோற்றதை பார்த்தாலே சமையல் செய்ய பாத்திரங்கள் என சொல்லிவிடலாம்.
இன்னொன்று துணி மூட்டை. அப்பறம் ஒரு மூங்கிலில் சதுரமாக செய்த ஒன்று இருந்தது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை வைத்து தான் அவர்களின் வாழ்வாதாரம் என்று நினைக்கிறேன்.
சிறிது தூரம் சென்ற அந்த பெண் திரும்ப வந்து அவள் பையனின் கையிலிருந்த கோலி குண்டுகளை வாங்கி அந்த துணி மூட்டைகளுக்குள் துனித்தாள்.
அவளும் அவள் மகனும் நடந்து எங்கோ சென்று கொண்டிருந்தார்கள்.
இந்த இரண்டு மூட்டைகள் தான் அவர்களின் உடமைகள். வேறு எதுவுமே இல்லை.
ஆனால் அதை கூட ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு எங்கோ செல்கிறார்கள்.
அவர்களுக்கு அதை பற்றி கவலையில்லை.
தன்னிடம் உள்ள பொருட்கள் மற்றவர்களுக்கு தேவைப்படாது என்ற தைரியமோ.!!!


நம்மிடம் உள்ளது எப்பொழுது இந்த உலகத்துக்கு தேவைப்படாமல் போகிறதோ அப்பொழுது நாமும் தேவைப்படாதவர்களாகிறோம்.

நாம் வீட்டுக்கு போட்டு பூட்டும் பூட்டை நாலு தடவை இழுத்து சரி பார்க்கிறோம்.
மழை வந்தால் நம்மை அறியாமல் நம்முடைய செல்போனை பாதுகாக்க கைகள் சென்றுவிடுகிறன.
கூட்டதிற்குள் சென்றால் கழுத்திலும் கைகளிலும் இருக்கும் தங்க நகைகளை பாதுகாக்க மூளை வேலை செய்கிறது.
சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு போக கூட வீட்டில் சேத்தி வைத்த பொருட்கள் நம்மை அனுமதிப்பதில்லை.
நாம் இரவு பகலாக உழைத்து சேர்த்தவையெல்லாம் நம்மை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொண்டிருக்கிறது.

நாம் வெளியே செல்லும் பொழுது ஒரு நிமிடம் நாம் எத்தனையை சுமந்து செல்கிறோம் என யோசித்தால் தான் தெரியும்.
ஒரு முறை விளையாட்டாக என் நன்பரிடம் அவருடன் எப்பொழுதும் இருக்கும் பொருட்களுக்கு விலை பட்டியல் போட்டோம்.
அவரின் பைக்..வாட்ச்..செயின்..ஷூ என...
மொத்தம் மூன்றரை லட்சம்.
இவை எல்லாம் நமக்கு மதிப்பாக இருக்கிறதா!! இல்லை பாரமாக இருக்கிறதா?

அந்த அம்மா மகன் போல சுதந்திரமாக நம்மால் செல்ல முடியுமா என்ன!!
அந்த பெரியவர் அவரின் செருப்பு தைக்கும் இயந்திரங்களையும்...செருப்புகளையும் இப்படி இங்கயே ஓரமாக விட்டு செல்கிறாரே!! நம்மால் முடியுமா!!
நம்மால் முடியாது,
எளியவர்களின் வாழ்கையில் செல்வமும் சொத்துக்களும் எளிமையாகவே இருக்கிறது.
அத்துடன் அவர்களின் பாரமும் எளிதானவையே!!

காலையில் மறந்து விட்டதை எடுக்க ஓடியதில் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
எளியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!!


பிரபு மித்ரன்



No comments:

Post a Comment

Related Articles