Thursday, 1 January 2015

புல் தானாகவே வளருகிறது-ஓஷோ [அத்தியாயம்: 1]


[எச்சரிக்கை: இதை படிக்கும் பொழுது இடையில் குழப்பமாக இருந்தால் உடனே படிப்பதை நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் இதை படித்து முடித்துவிட்டு நீங்கள் புரிந்தும் புரியாமலும் திரு திருவென முழிப்பதை நான் விரும்பவில்லை. ஓஷோ-வை புரிந்துகொள்ள கொஞ்சம் தைரியம் வேண்டும். அதைவிட முக்கியம் கொஞ்சம் முட்டாள் தனமும் வேண்டும்.]


புத்தாண்டு தினத்தில் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது.
புத்தக கடைக்கு முன் நின்று அங்கு இருக்கும் புத்தகங்களை வேடிக்கை பார்ப்பதே அவ்வளவு சுகமான பொழுதுபோக்கு.
விண்டோ ஷாப்பிங்க் என்று கூட வைத்து கொள்ளலாம்
அப்படி பார்த்துக்கொண்டு இருந்த பொழுது தான் இந்த புத்தகமும் என்னை பார்த்தது.
“புல் தானாகவே வளருகிறது”

புத்தகத்தின் பெயரே எதையோ சொல்ல வருகிறது போல தெரிகிறது ஆனால் என்ன என புரியவில்லை.
புல் தானாக வளர்ந்தால் வளர்ந்துவிட்டு போகட்டும்.
அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய புத்தகம்?
என்ன தான் இருக்கும் அதில்...
அதை வாங்கவேண்டும் என நினைப்பதற்க்குள் அதை வாங்கிவிட்டேன்.

அப்பொழுது தான் தெரிந்தது அதை எழுதியது ஓஷோ என.



நம்மில் பலருக்கு ஓஷோ பரிட்ச்சியம் இல்லாதவர்.
பார்ப்பதற்க்கு சாமியார் போல தான் இருப்பார்.
ஆனால் அவரை சாமியார் என சாதாரணமாக அடக்கி விட முடியாது.
தத்துவ ஞானி என சொல்லலாம்.
அதுவும் பொருந்துமா என தெரியாது.
எதிலும் அடைபடாத  அடைத்துவிட முடியாத ஒரு பறவை இந்த ஓஷோ.
அவர் சொல்வது புரியாதவர்களுக்கு புதிர்.
புரிந்தவர்களுக்கு அவர் பதில்.
அதை புரிந்து கொள்ள ஆன்மீகம் தேவையில்லை...
ஆர்வம் இருந்தால் போதும் என நினைக்கிறேன்.

சரி
அதெல்லாம் இருக்கட்டும்.
இந்த புல் தானாக வளர்ந்தால் இவருக்கு என்ன என நினைத்தவாரே இந்த புத்தகத்தை திறக்கிறேன்.

இந்த ஆண்டை தொடங்க ஒரு நல்ல ஆரம்பமாக இந்த புத்தகம் இருக்கும் என நினைத்தவாரே......

ஜென்னின் முக்கியத்துவம்

ஜென் தத்துவத்தில் ஆரம்பிக்கிறது இந்த புத்தகம்.
ஜென் என்றால் என்ன என்பது இதை படிப்பதற்க்கு முன்பு எனக்கும் சுத்தமாக தெரியாது.
வெள்ளிக்கிழமைகளில் வரும் சிறுவர் மலரில் ஜென் கதைகள் படித்திருக்கிறேன். அவ்வளவு தான்.

இதில் சொல்லபட்ட ஜென்னின் வரலாறு அறிந்த பொழுது திகைத்தேன்.

அதாவது
இதை ஒரு கேள்வியில் ஆரம்பிக்கலாம்.
ஜென் என்பது கௌதம புத்தரால் இந்தியாவில் உருவாக்கபட்டது.
பிறகு ஏன் இந்தியாவில் அதனால் வாழ முடியவில்லை?

இந்தியாவில் புத்தரிடம் “தியான்” (தியானம்) ஆக பிறந்து

போதி தர்மரால் இங்கிருந்து தூக்கிசெல்லப்பட்டு  சீனாவில் “சான்” (chan) ஆக வளர்ந்து

பிறகு அங்கிருந்து ஜப்பானுக்கு தப்பித்து போய் “ஜென்” ஆக இன்று நின்றிருக்கிறது.

இதை ஓஷோ சாதாரணமாக நிகழ்ந்ததாக எடுத்துகொள்ளவில்லை.
இதன் பின்னால் ஒரு ஆழமான வரலாறை சொல்கிறார்.

இந்தியாவில் ஒரு மதத்தை உருவாக்க கூடிய ஒரு நல்ல சூழல் உள்ளது
ஆனால் அதை வளர்க்க இங்கு முடியாது.
இந்தியா ஒரு பெண்மை மிகுந்த நாடு.
புற உலகை பற்றி கவலைப்படாது.

ஒரு பெண் எப்பொழுதும் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே யோசிப்பாள்.
அவளுக்கு அடுத்த நாட்டில் நடக்கும் போர் பற்றிய கவலை இருப்பதில்லை.
அரசியல் பேசுவதை விட அவளுக்கு அவள் தலை வலி பற்றி பேசுவதற்க்கு தான் ஆர்வம் அதிகம்.
ஆண்கள் எப்பொழுதும் புற உலகை பற்றியே கவலை படுகிறார்கள்.
அவர்கள் நாளிதல் படித்துவிட்டு அதை பற்றி பேச ஆர்வம் கொள்கிறார்கள்.
இது பெண்களுக்கு விசித்திரமாக தெரியுமாம்.
அதை பற்றி பேசுவதற்க்கு இவனுக்கு என்ன இப்பொழுது அவசியம் என எண்ணுவார்களாம்.

அடிப்படையிலேயே இந்த இரண்டு ஜீவனும் இரு வேறு உலகத்தில் பிறந்தவர்கள்.
அதே போல தான் இந்தியாவும் ஜப்பானும்.
எதிர் எதிர் எண்ணங்களுடையது.

இந்திய சமுதாயம் எப்பொழுது உண்மையை தன்னுள்ளே தேடிக்கொள்ளும்.
தான் பிற்ந்ததே தன்னை அறிவதற்க்கு தான் என நினைக்கிறது.

அது எப்பொழுதும் இந்த உலகத்தை விட்டு எப்பொழுது விடுபடுவோம் என்பதை மட்டுமே யோசிக்கும்.
இந்த உலகம் மாயை எனவும் இது எல்லாமே கனவு எனவும் நம்முள் விதைக்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ள மதம் இந்த உலகத்திலிருந்து எவ்வாரு தப்பிக்கலாம் என்பதையே சொல்லித்தருகிறது.
இங்கு ஞானிகள் செய்த ஆன்மீக ஆராய்ச்சி எல்லாமே இதை பற்றி மட்டும் தான்.

இப்படி பட்ட ஒரு சூழலில் ஒரு மதத்திற்க்கான விதை தாராளமாக விழும்.
இந்தியாவின் அதி மேதாவித்தன்மை இப்படிபட்ட விதைகளை தருகிறது.
அப்படி எத்தனையோ விதைகள் இந்த மண்ணில் விழுந்திருக்கிறது.
ஆனால் எதுவுமே துளிர் விடுவதற்க்கு முன்பே புதைந்துவிட்டது.
அதை வளர்க்க இங்கு முடியாதது.

இங்கு அனைவரும் கண்களை இறுக்க மூடி பழமையையே நினைத்து உருகிக் கொண்டு இருக்கிறார்கள்.
கண்ணை திறந்து புதிய உலகத்தை பார்க்க பயப்படுகிறார்கள்.
அதையும் மாயை என நினைக்கிறார்கள்.
தான் பெற்ற குழந்தையை பேய் என நினைத்து ஓட்டுவதை போல தான்.

இந்த ஜென் விதையும் அப்படி அழிய வேண்டியது தான்.
ஆனால் அதை காப்பாற்றியவர் போதி தர்மர்.
அவர் இங்கு இருந்து அந்த விதையை தூக்கிக்கொண்டு சென்ற இடம் சீனா.
சீனா ஒரு சமனிலையான் நாடு.

அது இந்தியாவை போல தன்னை பற்றியும் சிந்திப்பதில்லை.
ஜப்பானைப்போல புற உலகத்தை பற்றியும் நினைப்பதில்லை
இரண்டுக்கும் நடுநிலையில் உள்ளது.

அதனால் தான் அதனால் எந்த புதிய மதத்தையும் உருவாக்க முடியவில்லை.
அங்கு இருக்கும் மதங்கள் எல்லாம் மற்ற நாட்டில் உருவாகி இடம் பெயர்ந்த மதங்கள்தாம்.
அங்கு அந்த விதை வளர்ந்து மரமானது. ஆனால் அதனால் மலரமுடியவில்லை.
அதற்கு இன்னொரு விதமான சூழ்நிலை தேவைபட்டது.

அது தான் ஜப்பான்.
ஜப்பான் மக்கள் எப்பொழுது உலகத்தை பற்றி வாழ்பவர்கள்.
அவர்கள் உடுத்தும் உடைகள் கூட வானவில் போல பல வண்ணங்களில் இருக்கும்.

குடிக்கும் தேனீரில் கூட சந்தோஷத்துடன் அனுபவித்து குடிக்க வேண்டும் என சொல்பவர்கள்.
இந்தியாவை போல தன்னை அறிவதை விட உலகை அறிவதில் அவர்களுக்கு நாட்டம் அதிகம்.
அந்த இடம் தான் ஜென் தேர்ந்து எடுத்து மலர்ந்து வாசம் வீசிய இடம்.
ஜென் மதம் கோட்பாடுகளை நம்பாமல் பல குட்டி குட்டி கதைகளாக பாடம் எடுத்தது.

சரி இந்த ஜென் எதை சொல்கிறது??

நான் சந்நியாசம் என நினைத்தேன்.

ஆனால் நம்மை பொறுத்தவரை சந்நியாசம் என்றால் உலக வாழ்கையை துரப்பது.
ஓஷோ அதை கோழைத்தனம் என சொல்கிறார்.

அவர் அதற்கு ஜென் தத்துவத்தை தான் போதிக்கிறார்.

ஜென் என்பது எதிலும் ஒரு முழுமையை அடைவது.

உதாரணமாக நாம் சாப்பிடும் பொழுது அதை முழுமையாக செய்ய வேண்டும்.
அதிகமாக சாப்பிட மனம் சொல்லும்.
ஆனால் அதை கேட்கக்கூடாது.
சில சமயம் கமியாக சாப்பிட சொல்லும்.
கண்டுகொள்ளவே கூடாது.

சாப்பிடும் வேலையை அதன் போக்கில் முழுமையாக எதனுடைய கட்டுபாட்டிலும் அல்லாமல் சுதந்திரமாக செய்ய விட வேண்டும்.
அது தான் ஜென் சொல்வது.

நாம் நடப்பது, பேசுவது, தியானம் செய்வது, சிரிப்பது, அழுவது என அனைத்தையும் முழுமையாக அனுபவித்து செய்ய வேண்டும்.

அது எப்பொழுது சாத்தியமாகும்??
அதற்கு ஓஷோ சொல்லும் வழி என்னை உலுக்கிவிட்டது.
அவர் நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்க கடந்த காலத்தை முழுவதும் மறக்கச் சொல்கிறார்.
மறப்பது என்றால் சாதரணமாக அல்ல
நேற்று பார்த்த பொருளின் பெயரை கூட மறக்க வேண்டுமாம்.

உதாரணமாக
ஒரு துறவி தன் சீடனிடம் ஒரு பூ வை காட்டினார்.
அதற்கு அந்த சீடன் “அடடே!! இந்த ரோஜா பூ மிகவும் அழகாக இருக்கிறது” என சொல்கிறான்.

எப்பொழுது அதை ரோஜா என்று சொன்னானோ அப்பொழுதே அது மாசு படுகிறதாம்.
எப்படி அதை அவன் ரோஜா என சொன்னான்? யோசியுங்கள்
அவன் எற்கணவே கண்ட ஒரு மலர் பெயர் ரோஜா.
அதை இப்பொழுது பார்த்த மலரோடு ஒப்பிட்டு பார்க்கிறான். அதை போலவே இருப்பதால் இதை ரோஜா என்கிறான்.
பிறகு அழகான ரோஜா என்று சொல்கிறான்.
இதுவும் கடந்த காலத்தில் தான் பார்த்த மலர்களை ஒப்பிட்டு இதை அழகானதாக தரம் பிரிக்கிறான்.

இப்படி பழைய ஞாபகத்திலேயே இருந்தோம் என்றால் நமக்கு புதியதில் கிடைக்கும் ஒரு சிலிர்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது.
இதனால் தான் சிலருக்கு எப்பொழுதும் ஒன்றையே செய்கிறோம் என் தோன்றுகிறது. அதனால் அதிலிருந்து விடுபட போராடுகிறோம்.
கடந்த காலத்தை மறக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடியையும் புதிதாக பார்க்க வேண்டும்.
இந்த உலகத்தில் எவ்வளவு முழுமையாக வாழ முடியுமோ அவ்வளவு முழுமையாக வாழுங்கள்.
இவ்வாரு ஓஷோ அதில் சொல்கிறார்.

இது எவ்வளவு ஆழமான கருத்து என சொல்லி ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

எப்பொழுதும் ஆழமாக இருக்கும் என நினைத்தால் அதை பிறகு பார்த்துகொள்ளலாம் என விட்டுவிடுவோம்.

இதை தினமும் நம் வாழ்வில் செய்து பார்க்க கூடிய எளிமையான ஒன்றுதான்.

தினமும் எழுந்தவுடன் செய்வதை அன்று தான் புதிதாக செய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் என்ன செய்தாலும் அதில் உங்களை முழுமையாக அதில் ஈடுபட அனுமதியுங்கள்.
அதை நேற்றுடன் ஒப்பிடவும் வேண்டாம். நாளை செய்ய திட்டமிடவும் வேண்டாம்.

குடிக்கும் தேனீரைகூட கொண்டாடுங்கள்.
அதை விடுத்து என்றோ எப்பொழுதோ குடித்த தேனீருடன் ஒப்பிட்டால் இதன் சுவை கசந்துவிடும்.

இந்த வாழ்கையை போன ஜென்ம பாவமாக பார்க்க தான் நம் நாடு சொல்லி கொடுத்திருக்கிறது.
அதனால் தான் எப்பொழுது நம் மக்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
சாவை நோக்கி தான் இந்த வாழ்கையை நகர்த்துகிறோம்.
சதா நேரமும் பலி..பாவம்.புண்ணியம்..சாவு..சொர்கம்...நரகம்.. என சுடுகாட்டு சிந்தனை தான்.

நாம் இப்பொழுது நினைத்துருக்கும் நல்லது கெட்டது அனைத்தும் நம்மை சுற்றியுள்ளவர்கள் நம் மீது திணித்தது தான்.

அது தான் உண்மை என நம்மை நம்ப வைக்கிறார்கள்.

ஒரு வேளை இப்பொழுது கெட்டது என சொல்லப்படுவது நல்லதாக நமக்கு போதிக்கப்பட்டிருந்தால் என்ன நடக்கும்?

இப்படி நாம் பார்த்தது கேட்டது பழகியது என அத்தனையும் மறந்து நாம் நாமாக

முழுமையாக

எந்த பழைய ஞாபகங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல்

இந்த உலகம் நம்முடைய சந்தோஷத்திற்க்காகவே படைக்கப்பட்டதை உணர்ந்து

ஒவ்வொன்றையும் புதிதாக
பார்த்து.. சிலிர்த்து.. மெய்மறந்து...ரசித்து..

இந்த வாழ்கையை வாழும் வரை முழுவதுமாக அனுபவிக்கவே நாம் இங்கு பிறந்துள்ளோம்.


Don't search reason behind everything
Don't think about it
Just feel it and enjoy it.

இதை தான் ஜென் தத்துவம் சொல்கிறது.
ஜென் தியானத்திற்கு மட்டுமல்ல நம் வாழ்கைக்கும் பொருந்தும்.

இதெல்லாம் இருக்கட்டும் புல் தானாகவே வளருகிறது என போட்டிருக்கிறதே!!!
அதனால் என்ன??

அத்யாயம்:2
தொடரும்.....


பிரபு மித்ரன்

1 comment:

Related Articles