Thursday, 15 January 2015

ஹெட் செட் எமன்


வேலை முடிந்து மாலை பஸ்ஸில் வீட்டுக்கு கிளம்பினேன்.
இரண்டு பஸ் மாற வேண்டும்.

முதல் பஸ்ஸில் ஏறி இடம் கிடைச்சு உட்காந்தேன்.
அப்போ என் முன்னால் இருக்கையில் இருந்த ஒரு நடுத்தர வயது இளைஞன் அவன் செல்போனில் பாட்டு போட்டு விட்டுருந்தான்.
மெலடி சாங் தான்.
சீனா போன் என நினைக்கிறேன்.
பயங்கரமான சத்தம்.

அந்த பாட்டை கேட்கும் மூடில் நான் இல்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அது காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

இருப்பதிலேயே கொடுமையானது நமக்கு கேட்க விருப்பமில்லாத சத்தம் நம் காதில் விழும்பொழுது தலைகுள் ஒன்று நடக்குமே. அதுதான்.

கொஞ்ச நேரம் தான் கேட்டிருப்பேன் அதற்குள் தலை வலி உயிர் போகிறது.
அவனுக்கு அது பிடித்த பாடலாக இருந்தால் அதை அவன் மட்டும் மெதுவாக சத்தம் வைத்து கேட்கலாம்.
அதை விட்டு விட்டு இப்படி என்னையும் வாதிக்கிறானே.
யோசித்து கொண்டிருந்த பொழுதே நடத்துனர் அவனை பார்த்து கத்தினார்
“யோ..... அத ஆஃப் பன்றியா இல்ல பஸ்ஸே விட்டு கீழ இறங்குறியா??”
உடனே பாட்டு நின்றுவிட்டது
“பெரிய இவரு.. பாட்டு கேட்காம வர மாட்டாரு... அடுத்தவன சாவடிச்சுட்டு” என முனு முனுத்த வாரே நகர்ந்தார் புண்ணியவான்.
இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
மற்றவர்களும் நடத்துனரை ஆமோதித்து புன்னகித்தனர்.
என்னை போலவே இங்கு பல பேர் இந்த அவஸ்த்தையை அனுபவித்திருப்பார்கள் என அப்பொழுது தான் புரிந்தது.



அந்த பஸ்ஸை விட்டு இறங்கி அடுத்த பஸ்ஸில் ஏறினேன்.
ஏறின பிறகு தான் தெரிந்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேனென.
அங்காவது ஒருத்தன் தான் பாட்டு போட்டு விட்டான். காப்பாற்ற பேருந்து நட்த்துனர் இருந்தார்.
ஆனால் இங்கு பஸ்ஸிலேயே போட்டுவிட்டிருந்தனர்.
சும்மா இல்லை
காது ஜவ் கிழியும் அளவுக்கு சத்தமாக.
அந்த டிரைவருக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை ஓரே சோக பாடல்கள்.
அதுவும் சத்தமாக.
கேட்கும் எனக்கு அந்த பாடலில் உள்ள சோகம் தெரியவில்லை. சத்தம் மட்டும் தான் கேட்கிறது.
நானும் பார்த்து விட்டேன் இந்த டிரைவர்கள் காதல் மூடில் இருந்தால் பாடல்களும் அதை பிரதிபலிக்கும்.
பாடல்களை வைத்து அவர்களின் மூடை கனித்து விடலாம்.
சில சமயம் ஐட்டம் சாங்காகவே வேறு போட்டுகொண்டு பஸ்ஸை ஓட்டுவார்கள். எதை நினைத்து ஓட்டுவார்களோ!!
அங்கு விட்ட தலை வலி இங்கு எகிறிகொண்டிருந்தது. என்னை இங்கு காப்பாற்ற யாரும் இல்லை.

பேருந்தை விட்டு இறங்கி என் வீட்டுக்கு நடக்கிறேன்.
என் ஊருக்குள் நுழையும் பொழுது தான் தெரிந்தது.
அடுத்த நாள் பொங்கல் விழாவிற்கு ஊரு முழுவதும் குலாய் ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள்.
என் வீட்டுக்கு அருகில் மாட்டியிருக்க கூடாது என சாமியை வேண்டி கொண்டே வீட்டுக்கு போனேன்.
படுபாவி!!!!
இரண்டு ஸ்பீக்கர் மாட்டி இருக்கான்.
அதிலும் ஒன்று இன்னொரு ஸ்பீக்கரை விட இரண்டு மடங்கு நீளமாக.
சரி 
எப்படியும் நாளைக்கு தான் பொங்கல்.
நாளை தான் ஆரம்பிப்பார்கள். இன்று நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவாரே வீட்டுகுள் நுழைந்தேன்.
சாப்பிட்டு முடித்து கொஞ்சம் படுக்கலாம் என நினைத்து படுத்தேன்.
கண் சொக்க ஆரம்பித்து விட்டது.
..................................................................
.............”த்தடார்”..........................
குரங்கன்... இப்பொழுதே பாட்டு போட்டு விட்டான்.
எதோ ஆக்க்ஷன் ஹீரோவின் அறிமுக பாடல்.
தூங்க வேண்டிய நேரத்துல கேட்குற பாட்டாடா இது.!!!
இன்னும் இரண்டு நாட்களுக்கு எவனை பற்றியும் கவலை படாமல் அவனுக்கு பிடித்த பாடலை மட்டுமே போடுவான்.
அது பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் நாம் கேட்டே ஆக வேண்டும்.



எத்தனை குழந்தைகள் படிப்பார்கள்??
அப்படியே படிக்கவில்லை என்றாலும் அன்று டீ.வி யில் போடும் புது படங்களை பார்க்க எவ்வளவு நாள் காத்திருப்பார்கள்.
இந்த சத்தத்தில் எப்படி பார்ப்பார்கள்.
எவ்வளவு வயதானவர்கள் படுத்த படுக்கையாக இருப்பார்கள்.!!!
எவன் எக்கேடு கெட்டாலும் இதை நிறுத்த மாட்டார்கள்.
யார் வைத்த சட்டம் இது.??
உடனே  "திருவிழா என்றால் இப்படி பாட்டு போடுவது நம் நாட்டின் தொன்றுதொட்ட கலாச்சாரம்.. உன்னை போல சிலருக்காக அதை மாற்றி கொள்ள முடியாது." என பொங்கி எழுவார்கள் நாம் வைக்கும் பொங்கலை விட.
இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன்,
கரண்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் கலாச்சாரம் கண்டுபிடித்தாகிவிட்டது.
பின்பு எங்கு இருந்து வந்தது இந்த பழக்கம்???

அன்று இசையுடன் நடந்த திருவிழாக்கள் இன்று இரைச்சலுடன் நடக்கிறது.


அனைவருக்கும் பாட்டு கேட்க பிடிக்கும்.
நம் மன நிலையை பிரதிபலிக்கும் பாடல்கள் நமக்கு சுகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு சோகமாக இருக்கும் பொழுது குத்து பாட்டு கேட்க தோன்றாது.
சந்தோஷமாக இருக்கும் பொழுது அழுது வழியும் பாடல்கள் கேட்க தோன்றாது.
காதலில் தோற்றவனுக்கு காதலின் புனிதத்தை சொல்லும் பாடல் கோபத்தை கொடுக்கும்.
இப்படி நம் மன நிலைக்கு ஏற்ற பாடல்களை நாமே தேர்ந்தெடுத்து கேட்போம்.
ஆனால் இந்த சமூகம் நமக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது!!??
சமூகம் என சொல்வது நீங்களும் நானும் தான்.
நம்மில் பல பேர் இப்படி நமக்கு பிடித்த பாடலை சத்தமாக வைத்து கேட்போம்.
அடுத்தவரை பற்றி கவலை படாத கேவலவாதிகள்.
இது பத்தாது என்று பொது இடங்களிலும் தனக்கு பிடித்த ஹீரோவின் பாடல்கள், தனக்கு பிடித்த மியூசிக் டைரக்டரின் பாடல்கள் என அடுத்தவரை வற்புறுத்தி போட சொல்வார்கள்.
அதை அவர்களே மெய்மறந்து ரசிப்பார்கள் பாருங்கள்... அப்படியே காதோடு சேத்து “ச்சப்” என்று அறைய தோன்றும்.

இசை
மனிதன் கண்டுபிடித்ததுலயே மிக அற்புதமான ஒன்று.
சர்வாதிகாரிகளையும் தன் அடிமையாக்கும் சக்தி படைத்தது.

அதன் டெசிபல் மிக கம்மியாக இருக்கும் பொழுது தாலாட்டாகிறது.
கொஞ்சம் அதிக படுத்தும் பொழுது கேட்பவர்களுக்கு சுகமாக இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் அதிகமாக வைக்கும் பொழுது அது உற்சாக படுத்தும் இசையாக மாறுகிறது.
இன்னும் அதிகமாகும் பொழுது இசை என்பது மறைந்து வெறும் சத்தமாக உருவாகிறது
அதைவிட அதிக படுத்தும் பொழுது அது இரைச்சலாக மாறுகிறது.

எந்த சத்தம் மெல்லிசான இசையாக இதயத்தை வருடியதோ அதே சத்தம் இப்பொழுது இரைச்சலாக மாறி எரிச்சலை தருகிறது.
எப்பேர்பட்ட உலகின் சிறந்த இசை கலைஞர்களின் இசையும் அதன் சத்தம் அதிகமாகும் பொழுது அது கண்டிப்பாக கேட்பவர்களுக்கு எரிச்சலை தான் தரும்.
அதற்கு எந்த பாட்டும் விதி விலக்கு கிடையாது.

சந்தேகம் இருந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை உங்களால் கேட்க முடியாத அளவுக்கு சத்தமாக வைத்து கேட்டு பாருங்கள்.
அந்த பாட்டு முடியும் பொழுது அந்த பாட்டு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடும்.
ஒரு நாள் முழுவதும் அப்படி கேட்டு பாருங்கள்.
கண்டிப்பாக கொஞ்ச நேரத்திற்காவது கிறுக்கு பிடித்த மாதிரி திரிவீர்கள்.

சத்தத்திற்கு அப்படி ஒரு வலிமை இருக்கிறது.
கருத்து சொல்வது போல சொல்ல வேண்டும் என்றால் இப்படி வேண்டுமானால் சொல்லலாம்.

சத்தத்தோடு பிறக்கிறோம்.
சத்தமே இல்லாமல் செத்துப்போகிறோம்.
இடையிலாவது அளவான சத்தத்துடன் வாழ்வோமே!!
அடடே!!

கடைசியாக இரவு 11 மணிக்கு பாட்டை நிறுத்தினான்.
இனி தூங்கலாம் ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது.
என் மொபைலை சைலன்டில் போட வேண்டும்.
நம்மை அமைதி இழந்து வாழவைத்த தெய்வங்களில் முதல் தெய்வம் இந்த செல்போன் தான்.
சரி
எதற்கோ சொல்லிவிடலாம்!
இதற்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்ககூடும்.

இப்பொழுதும் நான் பாடலுக்கோ இசைக்கோ எதிராக பேசவில்லை.
அதன் சத்தத்தின் அளவை பற்றி தான் சொல்கிறேன்.
எல்லோரும் ஓரே மன நிலையுடன் இருப்பதில்லை.
பல பிரச்சனைகளுடன் சில பேர் நம்மை சுற்றி இருக்கக்கூடும்.
சத்தம் அவர்களை இன்னும் பாதிக்கலாம்.
நமக்கு பிடிக்கும் என்பதற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்தகூடாது அல்லவா!!

நல்ல பாடகர்களின் இனிமையான குரல் கூட சத்தம் அதிகரிக்கும் பொழுது கழுதை கத்தலாக ஆகிவிடுகிறது.

ஒரு நிமிடம் காதை திறந்து நம்மை சுற்றி கவணியுங்கள்.
எவ்வளவு இரைச்சலுக்கு நடுவில் நாம் வாழ்கிறோம் என.

அதிக சத்தத்தால் மன உளைச்சல் அதிகரிக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.
மன உளைச்சல் ஆயுளை குறைத்துவிடும்.
அதே சமயம் நல்ல இசை நம் ஆயுளை அதிகரிக்கவும் வல்லது.

ஒரு இசை நமக்கு எமனாகவும் மாறும்.
எமன் நம் ஹெட் செட்டிலும் இருக்கலாம்.

இசையுடன் வாழ்வோம்.


சத்தத்துடன் அல்ல.




பிரபு மித்ரன்

2 comments:

  1. கரண்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் கலாச்சாரம் கண்டுபிடித்தாகிவிட்டது............
    இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு
    மற்றவர்களையும் ஆபத்தில் மட்டிவிடுபார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது...
    இப்படி நீங்கள் ஏழுத காரணமாக இருந்த மைக் செட் போட்டவருக்கு நன்றி

    ReplyDelete

Related Articles