Saturday, 14 February 2015

நம்ம சொன்னா எங்க கேட்குறாங்க?


மாலை
கொஞ்சம் இருட்டி விட்டது
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்.
எனக்கு எப்பொழுதும் இந்த பேருந்து நிலையம் வந்து விட்டால் ஒரு வித சந்தோஷம் தொற்றிக்கொள்ளும்
அதுவும் கூட தனியாக வந்தால் மட்டும்.
ஒவ்வொரு முறையும் வித விதமான மனிதர்கள். வேறு வேறு முக பாவங்கள்.
புதிய புதிய சம்பவங்கள்.
ஒவ்வொரு முறை இங்கு வரும் போதும் ஒவ்வொரு காரணம் சொல்லி காசு கேட்கும் பிச்சைகாரர்கள்.
இந்த கூட்டத்தில் எல்லாரையும் பார்த்து சிரிக்கும் மன நலம் பாதிக்கபட்ட ஒருவன் மட்டும் எப்பவும் மாறாதவன்.
ஒரு முறை அவனுக்கு காசு கொடுத்து பார்த்தேன்.
அவன் அதை வாங்காமல் சிரித்துகொண்டே கடந்து போனான்.
அப்பொழுது ஒன்று தோன்றியது.
ஒருவேளை காசை அடையாளம் கண்டிருந்தால் அவன் சிரிப்பு போயிருக்கலாம். நல்லவேளை அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
அப்பறம் அந்த மஞ்சள் சோடியம் லைட்.
பஸ்களின் ஹாரன் சத்தம்.
இப்படி திருவிழாவை வேடிக்கை பார்க்கும் குழந்தை போல நானும் ஒரு இடம் பிடித்து நின்று கொண்டு வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தேன்.



நான் நிற்கும் இடத்துக்கு நேர் பின்னாடி தான் பஸ் ஸ்டேண்டில் இருந்து வெளியே செல்ல ஒரு உபரி வழி இருக்கும்.
அந்த வழியில் தான் நான் சொன்ன மன நலம் பாதிக்க பட்டவர் உட்கார்ந்திருப்பார்.
வேடிக்கை பார்க்க எதுவும் கிடைக்கவில்லை என்றால் இவரை பார்த்துகொண்டிருக்கலாம் என்ற முன் யோசனையில்(!) அங்கு நின்றேன்.
இன்று ஏனோ அவரை காணவில்லை.
வருவாரா என திரும்பி திரும்பி பார்த்து கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்தேன்.

அப்பொழுது தான் கவனித்தேன்.
அங்கு இரண்டு பெண்கள் தள்ளி தள்ளி இடைவெளிவிட்டு நின்று கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் என்னை பார்த்து சிரித்தவாறே கையில் எதோ சைகை காமித்தார்.
அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்ததது இவர்கள் ‘அவர்களென’.
வழக்கமாக பார்க்கும் காட்சி தான் இதெல்லாம்.
நல்ல வேளை அவர் எனக்கு சைகை காட்டவில்லை. எனக்கு அருகில் உள்ள தூண் அருகே நின்றிருந்த ஒருத்தனுக்கு தான்.
அவன் பார்க்க ஹிந்திகாரன் போல தெரிந்தது. வயது இருபதுகளில் இருக்கும்.
கூப்பிட்ட பெண்ணுக்கு 50 க்கு மேல் வயது இருக்கும்.
‘இதற்கு’ தான் வயது வித்யாசம்...மொழி...மதம்... என்று எதுவும் இருப்பதில்லை.
அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
அட நல்லவன் தான். (என்னை போல:))

எங்க ஊருக்கு பஸ் வந்து விட்டது.
ஆனால் என்ன பிரயோஜனம். ஏறுவதற்கு செம கூட்டம்.
சரி அடுத்த பஸ்ஸில் போகலாமென நின்று விட்டேன்.
திரும்பினால் என் பக்கத்தில் நின்றிருந்த நல்லவனை காணவில்லை.
கொஞ்ச தூரத்தில் நின்றிருந்த அந்த இரண்டில் இன்னொரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். அந்த பெண்ணுக்கு வயது 30 களின் கடைசி இருக்கும்.
பேரம் பேசுகிறான் என நினைக்கிறேன்.
அடப்பாவி! இவனையா கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஹிந்தி ராமன் என நினைத்தோம்.
இதில் என்னை போல என்று வேறு சொல்லிவிட்டேன்.
அப்படி சொன்னதை மறந்து விடுவோம்.:)

அவர்கள் பேசும் சத்தம் கேட்கவில்லை.
அவ்வளவு இரகசிய ஒப்பந்தமோ.!
அந்த பெண் சத்தமாக எனக்கு சில அடி தூரத்தில் இருந்த அந்த 50 வயது பெண்னை கூப்பிட்டாள்.
“அம்மோ”
அம்மாவா!!!!!!!
“ஒரு மணி நேரம்னு சொன்னா இவன் பத்து மணிக்கு தான் போவேன்னு சொல்றான்... இங்க வா மா”
நான் மணி பார்த்தேன். 7.30.
அந்த பெண் போட்ட சத்ததில் அங்கு இருந்த அத்தனை பேரும் அவர்களை தான் பார்த்து கொண்டிருந்தனர்.
இதெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை.அவர்கள் ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

மறந்து ரொம்ப நேரம் கண்ணெடுக்காமல் பார்த்துவிட்டேனோ என நினைத்தவாறே திரும்பினேன்.
திரும்பினால் டீ-சர்ட் போட்ட ஒருவர் எனக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தார்.
அவரும் என்னை போலவே அங்கு தான் பார்த்து கொண்டிருந்தார்.
சக பார்வையாளர் போல!
அவரும் பார்த்துவிட்டு திரும்பியவர் என்னை பார்த்து லேசாக புண்ணகைத்தார்
எதற்கோ இருக்கட்டுமே என நானும் சிரித்து வைத்தேன்.
மெதுவாக பேச ஆரம்பித்தார்.
“எல்லாம் ஃப்ராடுக. இப்போ எல்லாம் நல்லா பேசுவாளுக.”
எனக்கு புரியவில்லை.
திரும்பி பார்த்தார். நானும் பார்த்தேன். ஒப்பந்தம் முடிந்து மூவரும் கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ஹிந்திகாரனின் பாக்கெட்டில் இருந்து சில நோட்டுகள் இடம் மாறியது.
பார்த்துகொண்டிருந்தவர் திரும்பி என்னை பார்த்தார்.
இப்பொழுது புரிந்து விட்டது யாரை சொல்கிறார் என.
“நல்லா பேசுவாங்க.. நம்பி போனா எல்லா காசையும் புடுங்கிட்டு விட்டுடுவாளுக.
மோசமான ஆளுக. பஸ்ஸுக்கு கூட காசு தர மாட்டாளுக..
சம்பளம் வாங்கிட்டு வந்திருந்தா மொத்தத்தையும் ஏமாற வேண்டியது தான்.”
இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும். ஒரு வேளை சும்மா சொல்கிறாறோ!! என நினைத்துகொண்டு சிரித்தேன்.
மறுபடியும் பேச ஆரம்பித்தார்.
“என்ன.. வேலைக்கு போறீங்களா??”
“ஆமாம்” என்றேன்
“தம்பி... இங்க இருந்து பக்கத்துல இருக்குற ஒரு இருட்டான சந்துக்கு கூட்டிட்டு போவாங்க... அங்க போனா இன்னும் நாலஞ்சு பொம்பளைங்க சேந்துடுவாங்க.
மிரட்டி காச வாங்கிட்டு ஓடிடுவாளுக... இல்லனா கா**டம் வாங்க கடைக்கு போக சொல்லிட்டு இந்த பக்கம் ஆளு எஸ் ஆயிடுவாங்க”
இந்த மனுஷன் ஏன் இப்படி விளா வாரியா எங்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்காரு. அய்யயோ நான் அவங்களை பார்த்துட்டு இருந்தத வச்சு என்ன தப்பா நெனச்சுட்டாறோ.!
“கம்பெனிலயா வேலை செய்யுறீங்க?”
எதுக்கு இதெல்லாம் கேட்கிறார். எரிச்சலை மறைத்து சிரித்தவாறே பதில் சொன்னேன்
“ஆமா”
“தம்பி பணம் போனாலும் போகட்டும். ரூம் போட்டு ‘எல்லாம்’ நல்லா முடிச்சுட்டு வந்தா கூட திருப்தியா இருக்கும். ஆனா போற வழிலயே ஏமாத்திடுவாளுக.” பரிதாபமாக சொன்னார்.
இவருக்கு இவர் கவலை. அப்போ இவரும் போய் அனுபவ பட்டிருப்பார் போல!!
எனக்கு இப்போ சிரிப்பதா இல்லை தலை ஆட்டுவதா என தெரியவில்லை.
இவர் அப்படி பின்னால் போவது தவறு இல்லை என்றால் அந்த பெண்கள் செய்வதும் தவறு இல்லையே!!
அவங்க பன்றது தப்புனா இவங்க மாதிரி ஆளுக போறதும் தப்பு தானே!!
தப்புக்கு தப்பு சரியா போய்டுச்சு!!
“இப்படி போறவனுங்க கிட்ட நானும் போய் சொல்லி பார்த்துட்டேன். போகாதீங்கடானு... ஆனா எவனும் நம்மள நம்ப மாட்டிங்குறான்...அவளுகள நம்பி போறானுங்க.. அப்பறம் காச பறிகுடுத்துட்டு பஸ்ஸுக்கு காசில்லாம நைட் இங்க தான் படுத்து கிடப்பானுங்க.”
இதில் சமூக சேவை வேறு!!!!
“நம்ம சொன்னா எவன் கேட்குறான்!!!  நல்லதுக்கு காலமே இல்லை தம்பி... யாரையும் நம்ப கூடாது இந்த காலத்துல”
இப்படி கூப்பிடும் பெண் பின்னால் போகும் இவர் இப்படி நம்பிக்கையை பத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

எனக்கு பஸ் இன்னும் வர வில்லை.
திரும்பி பார்த்தேன்.
அந்த மன நலம் பாதிக்க பட்டவர் இன்னும் வரவில்லை. என்ன ஆனதோ!
கவலையுடன் திரும்பினேன்.
இந்த டீ-சர்ட் மனிதர் என் முன் பாக்கெட்டை பார்த்து கொண்டிருந்தார்.
நான் பாக்கெட்டில் கை விட்டுகொண்டு தான் ஆரம்பத்திலிருந்து நின்று கொண்டிருந்தேன்.
நான் பார்ப்பதை பார்த்தவுடன் அவர் தலையை திருப்பிகொண்டார்.
எதோ சந்தேகத்துடன் வேறு எங்கயோ பார்த்துவிட்டு மறுபடியும் இவரை பார்த்தேன்.
இந்த முறையும் அவர் கண்கள் என் பாக்கெட்டில் தான்.
என் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
“என்ன.. வேலைக்கு போறீங்களா??”
“கம்பெனிலயா வேலை செய்யுறீங்க?”
“சம்பளம் வாங்கிட்டு வந்திருந்தா மொத்தத்தையும் ஏமாற வேண்டியது தான்”
அவர் பேசியதெல்லாம் திரும்பவும் கேட்கிறது.
நான் என் பர்ஸை முன் பாக்கெட்டில் தான் வைத்திருந்தேன்.
இவ்வளவு நேரம் ஒரு திருடன் கூடவா சவகாசம் வைத்திருந்தேன்!!!
எவ்வளவு நேக்கா எங்கிட்ட பேச்சு குடுத்துட்டான் ராஸ்கல்.
அந்த ஹிந்திகாரன் மாதிரியே இவனையும் நம்பிட்டேன். ச்சே.
கொஞ்சம் நகர்ந்து நின்றேன்.


சில நிமிடங்கள் கரைந்திருக்கும். மெதுவாக அவர் எனக்கு வலது பக்கம் இருந்த தூண் அருகே போய் நின்று கொண்டார்.
ஒரு வேளை நான் தான் தப்பாக நினைத்து விட்டேனோ!!
சில வினாடிகள் கழித்து திருபவும் அவரை பார்த்தேன். இப்பொழுதும் அந்த பார்வை என் பாக்கெட்டில் தான்.
நான் கையை வெளியே எடுப்பதாக இல்லை.
நினைத்தவாறே எனக்கு இடது பக்கம் பார்த்தேன்.
வேட்டி சட்டை போட்டவர் ஒருவர் நின்றிருந்தார்.
வலது பக்கம் பார்த்தேன்.
டீ-சர்ட் ஆள். அவன் கண்கள் மட்டும் ஒரு இடத்தில் நிற்க மாட்டேன் என்கிறது.
இடது பக்கம் பார்த்தேன். வேட்டி சட்டை அனிந்தவர்.
இந்த முறை அதிர்ந்தேன்.
அவரும் என் பாக்கெட்டை தான் பார்க்கிறார்.
ஒரு வேளை எனக்கு தான் இப்படி தோன்றுகிறதோ என்றும் தெரியவில்லை.
பயம் லேசாக உடல் முழுவதும் படர்கிறது.
பாக்கெட்டுக்குள் இருக்கும் என் பர்ஸை இன்னும் அழுத்து பிடித்துகொண்டேன்.
திடீரென என் வலது பக்கம் இருப்பவன் ஓடி வந்து என் இரண்டு கைகளையும் பிடித்து பின்னால் இழுத்துவிட்டால் என் இடது பக்கம் இருப்பவன் என் பாக்கெட்டில் இருந்து பர்ஸை சுலபமாக எடுத்து கொண்டு ஓடி விடலாம்.
அதற்கு வசதியாக பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்ல இருக்கும் குறுக்கு வழி கிட்டயே நின்றிருக்கிறேன்.
வேடிக்கை பார்க்க நின்றது ஒரு குத்தமா!!:(
பர்ஸில் பணம் என்று பார்த்தால் கம்மிதான். ஆனால் ஏ.டி.எம் கார்டு...கிரெடிட் கார்டு...இப்படி பல கார்டுகள்.
இதெல்லாம் போனால் அப்பறம் ஒரு மாதத்துக்கு புதிது வாங்க அலைய வேண்டும்.
அப்பறம் என் பாஸ் போர்ட் சைஸ் போட்டோக்கள் இருக்கிறது.
அதிசயமாக அதில் தான் பார்ப்பதற்கு தேவலாம் போல இருந்தேன்.
அதுவும் போய் விடும் என நினைத்தால் தான் திக்கென இருக்கிறது.
விடமாட்டேன்.
உடனே அவர்களை விட்டு ஒரு பத்து அடி தாண்டி வந்து நின்று கொண்டேன்.

ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும்.
தூரத்தில் அந்த ஹிந்திகாரன் யாரையோ தேடி சுத்தி கொண்டிருந்தான்.
பணம் போய்விட்டது போல! திருடன் உண்மையை தான் சொல்லியிருக்கிறான்.
எட்டி நான் முதலில் நின்றிருந்த இடத்தை பார்த்தேன். அவர்களை காணவில்லை.
நிம்மதியாக இருந்தது.
பேசாமல் கூட்டத்துடன் கூட்டமாக அந்த பஸ்ஸிலயே போயிருக்கலாம்.
யாரோ பின்னால் நிற்பது போல இருந்தது.
திரும்பினேன்.
இப்பொழுதும் அனை கட்டி விட்டார்கள்.
என் இரண்டு பக்கமும் இரண்டு பேர்.
டேய் பணம் 100 ரூபாய் தாண்டா இருக்கு.
இது தெரியாம இப்படி பண்றானுங்களே!!


ஹப்பா... தூரத்தில் பஸ் வருது.
இங்கு வருவதற்க்கு முன்பே ஓடி ஏறி விடலாமென ஓடினேன்.
என் வலது கையை மட்டும் பாக்கெட்டில் இருந்து எடுக்கவே இல்லை.
ஓடினேன்.
ஓடினேன்.
பஸ் கம்பியை பிடிக்க என் கையை பாக்கெட்டில் இருந்து எடுக்கும் கேப்பில் பர்ஸை அடித்துவிட்டால்!!
எடுக்காமயே தாவி இடது கையில் பிடித்து ஏறிவிட்டேன்.
ஜன்னல் ஓரம் சீட் பிடித்து நான் நின்ற இடத்தில் பார்த்தேன்.
அந்த இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துகொண்டு என்னை பார்க்கிறார்கள்.
நான் ஜெயித்துவிட்டேன்.
அவர்கள் நிற்கும் இடத்திற்க்கு சில அடி தூரம் அந்த மன நலம் பாதிக்கபட்ட அண்ணா உட்காந்திருக்கிறார்.
அவர் இடத்தை மாற்றிவிட்டார் என நினைக்கிறேன்.
இப்பொழுதும் அவர் முகத்தில் அதே சிரிப்பு.
போபவர்கள் வருபவர்களை பார்த்து.
அந்த டீ-சர்ட் திருடன் சொன்னது எனக்கு இப்போது தான் தெளிவாக கேட்கிறது.
“நம்ம சொன்னா எவன் கேட்குறான்!!!  நல்லதுக்கு காலமே இல்லை தம்பி... யாரையும் நம்ப கூடாது.. இந்த காலத்துல”

பிரபு மித்ரன்


No comments:

Post a Comment

Related Articles