Sunday, 23 August 2015

கல்லறைகளைத் தேடி ஒரு பயணம்



கோயம்பத்தூரிலிருந்து ஊட்டி நோக்கி ஒரு நண்பருடன் டூ வீலரில் போய்க் கொண்டிருந்தேன்.
எங்களைப் போல கோயம்பத்தூர்காரங்களுக்கு அங்கு செல்வது ஒன்றும் பெரிய தூரம் அல்ல
நாங்கள் போவதற்கு காரணங்களும் தேவையில்லை
வீட்டின் கொல்லைப்பக்கம் போல கோவைக்காரர்களுக்கு ஊட்டி



ஆனால்-
இது ஒன்றும் எப்பொழுதும் போல எதோ ஜில்லென்று காற்று வாங்கவோ..
இல்லை அந்த குளிரில் நடுங்கியபடியே அங்கு கிடைக்கும் சூடான டீயும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிடவோ செல்லவில்லை.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதைக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கல்லறைகளைக் கொண்ட ஒரு கல்லறைத்தோட்டத்தை தேடிய ஒரு பயணம்.

இது எனக்கு புதிது.
நான் வீட்டிலிருந்து கிளம்பும் வரை எனக்கு இது தெரியாது. நண்பர் ஊட்டிக்கு போகலாமென்றார். சரி என்று கிளம்பினேன்.

குன்னூருக்கு முன்னால் ஒரு டீ கடையில் பஜ்ஜி சாப்பிடும் பொழுது அந்த டீக்கடைக்காரரிடம் வழி கேட்டார் நண்பர்
“இங்க டைகர் ஹில்ஸ் சிமெட்ரி எங்க இருக்கு?”
டீ கடைக்காரருக்கு அந்த இடத்தின் பெயரே வாயில் நுழையவில்லை.. இரண்டு மூன்று முறை சொல்லிப்பார்த்து முடியாமல்
“தெரியலையே தம்பி.. அது என்ன மாதிரி இடம்... டூரிஸ்ட் ஸ்பாட்டா?” என கேட்டார்

என் நண்பர் பதில் பேசாமல் என்னை பார்த்துவிட்டு அவரிடம் திரும்பி
“இல்லைங்னா... அது ஒரு கல்லரைத்தோட்டம்” என்றார்

இதை கேட்டவுடன் ஒரு நொடி அந்த டீ கடைக்காரரின் முகம் மாறியதை பார்க்க முடிந்தது... எனக்கும் எதோ செய்தது..

நான் இதுவரை சுடுகாட்டிற்க்கு சும்மா எல்லாம் போனதில்லை.
ஆனால் போக வேண்டும் என ஆசை பட்டிருக்கிறேன். இப்படி திடிரென்று நடக்குமென நினைக்கவில்லை. ஊட்டிக்கு போகும் போதெல்லாம் எதோ மனசு லேசாக உணரும். அந்த காற்றிற்க்கும்.. பச்சை பசேலென்று இருக்கும் மலைகளும்... எப்பொழுதும் பனியுடன்...அப்போ அப்போ லேசான தூரலுடனும் இதமாக இருக்கும். இன்று அப்படி இல்லை.
உள்ளுக்குள் இனம் புரியாத ஒரு இறுக்கம்.

பயணித்தோம்.

வழி எங்கும் இடம் பெயர் சொல்லி கேட்டுப்பார்த்தோம்.
யாருக்கும் இடத்தின் பெயர் கூட தெரியவில்லை.

எப்படியோ அங்கு இங்கு கேட்டு பார்த்ததில் ஒன்று தெரிந்தது
குன்னூரிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்குள் ‘டேன்டீ’ என்ற தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டீ தூள் ஃபேக்டரிக்கு பக்கத்தில் இருக்கிறது என்பது மட்டும் உறுதியானது.
கல்லறை என்று சொல்லி வழி கேட்டாலே பார்ப்பவர்களின் பார்வை மாறுவது தெரிகிறது.
எல்லோருக்குள்ளும் சுடுகாடு என்ற வார்தைகூட ஒரு திகில் ஏற்படுத்திவிடுகிறது. மனிதனுக்கு சாவு என்றாலே பயம் தானே.
என்னைப்போன்ற ஒரு சில கிருக்கன்கள் இப்படி உயிரோடிருக்கும் பொழுதே கல்லறை தேடி அலைவது மற்றவர்களுக்கு விசித்திரமாக படுவதில் வியப்பேதுமில்லை.


போய்கொண்டிருந்த ரோடு பிரிந்து ஒரு கிளை ரோடு சென்றது.
அந்த ரோடு போக போக வலைந்து நெளிந்து குறுகலாகி இடை இடையே மரக்கிளை விழுந்தும் மண் சிதறல்கலுடனும் கொஞ்சம் பயமூட்டவே செய்தது
இரண்டு டூ வீலர்கள் மட்டுமே போகும் அளவுக்கு தான் இருந்தது
.
கொஞ்ச தூரத்தில் அந்த பாதை முடியும் இடத்திற்கு அந்த பக்கம் பனிமூட்டமாக இருந்த்து. அது முடியுமிடம் அதளபாதாளம் என அந்த பனிமூட்டமே குறி சொன்னது.
அந்த ரோடு முடியுமிடத்திற்கு அருகில் வந்த பொழுது ஒரு பெண் உருவம் கைகட்டி நின்று எங்களை பார்த்துக்கொண்டிருப்பது அந்த பனிமூட்டத்திற்கு நடுவில் தெரிந்தது.
வண்டியை நிருத்தியதும் இரங்கிச்சென்றோம்.

அவர் இருந்த இடம் நகராமல் எங்களையே பார்த்திருந்தார்.
அவருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதே தெரியாமல் பனி மூடி வெள்ளையாக இருந்தது.

என் பாட்டி வயதிருக்கும். சீலைக்கு மேல் ரப்பர் சீட் கட்டியிருந்தார். டீ இலை பறிக்கும் பொழுது செடி கிழித்துவிடக்கூடாது என்பதற்காக இருக்கும்.
பக்கத்தில் போனவுடன் என் நண்பர் அவரிடம்
“இங்க டைகர் ஹில்ஸ் சிமெட்ரி எங்க இருக்கு” கேட்டார்
“இங்க தான்” என அவருக்கு பக்கவாட்டில் கை காட்டினார்.
அந்த பள்ளத்தை ஒட்டின மாதிரியே ஒரு குருகளான ரோடு சென்றது.
“இதுல போலாமா?” என அவரிடம் கேட்டார்

“போலாம்.. ஆனா ரோட்டவிட்டு கீழே எஸ்டேட்ல இரங்கிடாதீங்க.... மாடு..கரடி எல்லம் இருக்கும்.” என்று அவர் சொன்னது எனக்கு உள்ளுக்குள் கிலிகொண்டது
“கரடி வருமா?” என பயம் கொள்ளாமல் கேட்டுவிட்டேன்.
“வரும்.. நிறையா பேர் இருந்தா ஒன்னும் பன்னாது..பயந்துக்கும்... தனியா இருந்தா அடிச்சுடும்.” என சிரித்துகொண்டே சொன்னார்.
நானும் எதுவும் பேசாமல் பக்கத்தில் நின்றிருந்தவரை பார்தேன்.
சரி போய் பார்ப்போம் என்றார் நண்பர்.
நாங்கள் பார்க்க வந்தது பக்கத்திலிருகிறது. பிறகு எங்கே செல்கிறோம். நான் குழப்பதில் சரி என்றேன்.


கொஞ்ச தூரம் போயிருப்போம். அப்பொழுது அது என் கண்ணில் பட்டுத்தொலைத்துவிட்டது.
காட்டெருமை.
இரண்டு மாடுகள் ஒன்று சேர்ந்தது போல பெருசாக இருந்தது.
அதன் தடித்த கொம்பு வானத்தை நோக்கி நீண்டு கூராக இருந்தது.
கரு கருவென  இருந்த உடம்பில் காலுக்கு கீழ் வெள்ளையாக ஒரு குட்டி யானை உயரத்தில் கம்பீரமாக அந்த தேயிலையை மேய்ந்து கொண்டிருந்தது.
எங்களை சட்டையே செய்யவில்லை
எங்கள் வண்டியிடமிருந்து ஒரு பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருந்தது.
அமைதியாக வண்டியை திருப்பிகொண்டு அந்த அம்மா நின்றிருந்த இடத்துக்கே வந்துவிட்டோம்.

“ஏன் வந்துட்டீங்க?” என கேட்டார்.
“மாடு இருந்துச்சு.. திருப்பீட்டு வந்துட்டோம்” என்றேன்
“அது ஒன்னும் பன்னாது. அதை எதாவது பன்னுனாதான் முட்டிடும். நீங்க அமைதியா இருந்தா அதுவும் அமைதியா போயிடும்” என்றார்.
கொடூரமான காட்டு மிருகங்களின் சுபாவத்தை எல்லாம் புரிந்து கொள்ள இவர்கள் வாழும் இந்த வாழ்கை கற்றுக்கொடுக்கிறது.
நகரத்துக்காரர்களுக்கு நாய் பூனையை விரட்டகூட தெரிவதில்லை.


“சிமெட்ரிகுள்ள போலாமா? விடுவாங்களா?” என கேட்டோம்
“போலாம்... இங்க படமெல்லாம் எடுப்பாங்க... ரெண்டு மூனு தடவே ஷூட்டிங் நடந்திருக்கு... ரஜினி பொண்ண கல்யாணம் பன்ணுனான்ல ஒருத்தன்... அவர் பேரென்ன...”
என யோசித்தார்
“தனுஷ்” என்றேன்
“ஆ... அவரெ எல்லாம் பார்தோம். இங்க சிமெட்ரில தான் படம் எடுத்தாங்க” என்றார்.
அவரை பற்றி விசாரித்த்தில்
‘அவர் பிறந்தது மதுரையில்.. பதின்ம வயதில் திருமணம் முடிந்து கணவன் மற்றும் சொந்தங்கலோடு பிழைப்பு தேடி ஊட்டிவந்து கடைசியில் இதுவே சொந்த ஊராகிப்போனது.
ஆரம்ப காலங்களில் கைகளில் அந்த தேயிலை கொழுந்துகளை பறித்தவர் இப்பொழுது கத்தரியில் பரிக்கிறார். இருந்தும் கையில் பறிப்பது போல கத்தரியில் சரியான இலைகள் வருவதில்லை என்ற அங்கலாய்புடன் இருப்பவர். மதியம் எல்லோரும் சாப்பிட செல்லும் பொழுது காலையில் இருந்து எல்லோரும் பறித்த இலைகளுக்கு காவல் யாராவது நிற்க வேண்டும். வயசு பிள்ளைகளை தனியாக விட முடியாது என்பதால் இந்த அம்மாவே நின்று கொள்வாராம். அதற்கு பதிலாக எடை போடும் பொழுது இவருக்கு அதிகமாக எழுதுவார்களாம். 60 வருடங்களாக அந்த இலைதழைகளுடனே வாழ்ந்திருக்கிறார்.


எப்படி இலை பறிப்பீர்கள் என்று கேட்ட பொழுது தயங்காமல் அந்த கூடையை எடுத்து முதுகில் தொங்கவிட்டுகொண்டு வெடுக் வெடுக்கென அவ்வளவு வேகமாக அதை பறிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துகொண்டிருந்தோம்.
நாம் கணினியின் கீ போர்டு கீயை வேகமாக தட்டுவதெல்லாம் இவர்களின் கால் தூசிக்கு ஈடாகாது. இயற்கையுடன் இயற்கையாக சுத்தமான காற்று தண்ணீருடன் அவர்கள் வாழும் வாழ்கை கவிதையாக தெரிகிறது. இது என்னுடைய தனிப்பட்ட ஏக்கமாகக்கூட இருக்கலாம். என்றாவது ஒரு நாள் நான் வேலை பார்க்கும் கம்பெனியின் அடையாள அட்டையை தூக்கி வீசிவிட்டு இப்படி பச்சை பசேலென்று இருக்கும் இடத்தில் கரண்ட்.. கம்பியூட்டர்..செல்போன் எதுவுமில்லாமல் இவர்களை போல இருக்கவேண்டும். அந்த நிமிடம் அவர் மீது கொஞ்சம் பொறாமையும் கூட வந்தது. அவர் பெயர் கேட்டேன்.
“சீத்தாலட்சுமி” என்றார்
விடைபெற்று கிளம்பினோம் கல்லறைக்கு.


அந்த எஸ்டேட் பள்ளத்தை ஒட்டியபடியிருந்தது அந்த கல்லறைதோட்டம்.
வாசலே பயங்கரமாக இருந்தது
கருங்கர்கலால் ஆன ஒரு பழங்கால சர்ச் வாசல் போல பெரிதாக இருந்த்து. உச்சியில் கல்லாலான் சிலுவை.
கேட் போட்டு அதில் பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது.


அந்த அம்மா  சொன்னது போல பெரியவர் யாருமில்லை.
அதன் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளுகுள் நுழைந்தோம்.
எங்கும் கல்லரைகள்.
பெரிய பெரிய மரங்கள்.
இலை சருகுகள் நிரைந்து எதோ அமானுஸ்யமான இடம் போலிருந்தது.
அந்த தோட்ட்த்தின் நடுவில் ஒரு தொட்டி. அதில் ஒரு மாதா சிலை சாய்ந்தபடியிருந்தது
மூன்று இளைஞர்கள் தம்மடித்தபடி பேசிகொண்டிருந்தனர்.
என்னுடன் வந்த நண்பர் ஒவ்வொரு கல்லறையாக பார்த்து போட்டோ எடுத்துகொண்டிருந்தார். எதுக்கு என தெரியவில்லை.


நான் சரியாக அந்த வாசலிலிருந்து நடுவில் இருக்கும் தொட்டியை நோக்கி அடி மேல் அடி வைத்து எதோ யோசனையில் அந்த நிசப்தத்தை அனுபவித்தவாரு சென்று கொண்டிருந்தேன்.
அந்த மூவரும் அங்கிருந்து எழுந்து என்னை கடந்து வாசல் பக்கமிருக்கும் சுவர் ஏரி குதித்து வெளியே சென்றனர்.
பயங்கரமான அமைதி.

ஒரு கல்லறை என் கண்ணில் பட்டது
‘போல்ட்’
‘பிறந்தது 1878’
‘இறந்தது 1907’
‘வயது 29’
என பைபில் வசனத்துடன் ஆங்கிளத்தில் எழுதியிருந்தது.
அங்கு உள்ள எல்லா கல்லறைகளும் இந்தியாவை அடிமைபடுத்தி 400 ஆண்டுகளாக ஆண்டவர்களின் கல்லறைகள்.
வெள்ளையர்கள்.
இந்தியர்களை வஞ்சத்தால் வென்று அடிமைகளாக அராஜகம் செய்தவன் அதே இந்தியாவில் ஒரு இந்தியன் கட்டிய கல்லறைகுள் நிம்மதியாக உறங்குகிறான்.
ஒரு நிமிடம் உள்ளுகுள் எதோ ஒரு கோபம்.
முட்டாள் தனமான கோபம்.
சினிமேட்டிக்காக இருக்கலாம்.
இருந்தாலும் அப்பொழுது அப்படிதான் கோபம் வந்தது.
அடுத்த நிமிடமே தோன்றியது
நூறு வருடங்களுக்கு முன்னால் செத்தவனின் உடம்பு கூட அந்த கல்லறைகுள் இல்லாதபடி இந்திய மண் தின்றிருக்கும்.
இருப்பது வெறும் இந்தியனின் கையால் உருவாகிய கல்லறைதானே என உரைத்தது.

ஒவ்வொரு கல்லறைக்கு பின்னாலும் அவர் வாழ்ந்த கதைகளும் புதைந்திருக்குமல்லவா?
நான் நிற்கும் இதே இடத்தில் இவர்கள் உயிரோடு நடந்திருப்பார்கள்.
என் பக்கத்தில் உயரமாக நின்றுருந்த மரம் அவர்களை எல்லாம் உயிரோடு பார்த்திருக்குமல்லவா?
ஏன் என்று தெரியவில்லை.
அந்த இடத்தில் எனக்கு பாலாவின் ‘பரதேசி’ படம் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.
ஒவ்வொரு கல்லறையும் அதில் வரும் கதா பாத்திரங்களை கண்முன்னால் நிருத்தியது.


அதில் கவனித்ததில் பல கல்லறைகளில் இறந்தவர்களின் வயது 30க்கு கமியாக இருந்தது.
குழந்தைகளின் கல்லறைகளும் நிறையா இருந்தது.
மருத்துவம் அந்த அளவுக்குதான் அப்பொழுது இருந்திருக்கிறது.
நாட்டை ஆண்டவர்களுக்கே இப்படியென்றால் அந்த இடத்தில் கொத்தடிமைகளாக தேயிலை பறித்த ஜனத்தின் நிலைமை எப்படியிருந்திருக்கும்.
நினைவுகள் எங்கெங்கோ சென்றது.

எதோ ஒரு கல்லறையை பார்த்தபடி நின்றிருந்தேன். தூரத்தில் புதரும் மரமும் நிரைந்த இட்த்திலிருந்து ஒரு ஜோடி நடந்து வந்து கொண்டிருந்தது.
இவ்வளவு நேரம் அப்படி இரண்டு பேர் இருக்கிறார்களென்பதே தெரியவில்லை.
இங்கயும் கூடவா!! என்றிருந்தது எனக்கு
இருவருக்கும் 16 அல்லது 17 வயது தான் இருக்கும். என்னை கடந்து வாசல் நோக்கிச்சென்றார்கள்.
வாசலிடம் போய் இருவரும் அனைத்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்கள்.
கருமம்.. சுடுகாட்டில் என்னடா செல்பி??

என் நண்பரை தேடினேன். தூரத்தில் எதோ கல்லறையை போட்டோ எடுத்துகொண்டிருந்தார்.
ஏன் என்றுதான் தெரியவில்லை.

அமைதியாக அந்த தொட்டி மேல் அமர்ந்திருந்தேன்.
நிசப்தமாக இருந்தது.
எப்பொழுதும் என் வாயாடி மனசு எதையாவது பேசிக்கொண்டே இருக்கும். அந்த இடத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
எதோ ஆழமான தியானத்தில் இருப்பது போல.
திடிரென்று மேகம் கல்லறைகளுக்குள் புகுந்தது.
ஐந்தடிக்கு அந்தபக்க்கம் இருக்கும் எதுவும் தெரியாதபடி வெள்ளையாக இருந்தது.
குளிரும் லேசான மழையுடனும் அந்த கல்லறைகளும் அந்த அமைதியும் என்னமோ செய்தது.


வெளியே வந்துவிட்டேன்.
அப்படியே திரும்பி பார்க்காமல் நடந்து ரோட்டோரத்திலிருந்த ஒரு கல் மீது அமர்ந்து அந்த பள்ளத்தை வெறித்து உட்கார்ந்திருந்தேன்.

எவ்வளவு நேரமானது என்று தெரியவில்லை.

நன்பர் வந்ததும் கிளம்பி வந்துவிட்டோம்.
இருவரும் ரொம்ப நேரம் எதுவும் பேசிக்கவில்லை.
அந்த கல்லறைகளின் நிசப்தம் இருவரையும் பாதித்திருந்தது.

அந்த கதை பேசும் கல்லறைகள் எனக்கு வித்யாசமான அனுபவம் தான்.
அதற்கு முன்னால் சந்தித்த சீத்தாலட்சுமி பாட்டி இந்த பயணத்திற்கு உயிரூட்டிய கதாபாத்திரமாகிப் போனாள்.


அப்பறம்...
சுடுகாட்டிற்கு போனால் குளித்துவிட்டு தானே வீட்டுக்கு போக வேண்டும்.
உயிரற்ற உடல் இருக்கும் இட்த்திற்கு போனால் தானே குளிக்கவேனும்.
நூறு வருடம் பழசாகிப்போன சுடுகாட்டுக்குதானே போனோம்.
உடலெல்லாம் செல்லரித்திருக்கும்.
இருப்பது கதை சொல்லும் கல்லறைக்கட்டிடங்கள் தானே!



பிரபு மித்ரன


No comments:

Post a Comment

Related Articles