பேப்பர் படிப்பது.
எனக்கு ரொம்ப நாளாக இருக்கும் பழக்கம்.
ஆரம்பத்தில் சிறுவர் மலர் படிக்க ஆரம்பித்தது அப்படியே சினிமாவுக்கு வந்து பிறகு கிரைம்..அரசியல்...உலக செய்தி இப்படி என்னுடன் சேர்ந்து அந்த பழக்கமும் வளர்ந்தது.
சில சமயம் காலையில் பேப்பர்காரன் வர தாமதம் ஆனால் கோபம் வரும் அளவுக்கு அது தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது.
இப்பொழுது தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டதல்லவா!!
மொபைலிலேயே அத்தனை செய்தி வலைதளங்களையும் மணிக்கு ஒரு முறை பார்த்துவிடுவேன்.
அது என்னமோ அந்த பழக்கம்தான் இந்த சமூகத்தில் நாமும் இருக்கிறோம் என ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
அன்று மணி காலை 7.50 இருக்கும்.
எப்பொழுதும் போகும் நம்ம நாயர் பேக்கரியில் டீ சொல்லிவிட்டு வெளியே வந்து ரோட்டை பார்த்தவாரு அமர்ந்தேன்.
மாலை இந்த கடையில் நல்ல கூட்டமாக இருக்கும். காலை என்பதால் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது.
இந்த பேக்கரியை ஒட்டியபடி வலது பக்கம் செல்லும் ஒரு குட்டி கிளை ரோட்டில் மகளிர் விடுதிகள் இருக்கிறது. மாலை வேலை முடிந்து இந்த பக்கமாக தான் நடந்து செல்வார்கள். அதனால் கூட இருக்கலாம்.
என்னுடன் வந்த நண்பர் வழக்கம் போல் அவர் வண்டியை துடைத்துக்கொண்டிருந்தார்.
நான் ஒரு கையில் டீயுடனும் இன்னொரு கையில் போனில் செய்திகளையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
அந்த பகுதியில் கல்லூரிகளும் ஐடி கம்பெனிகளும் அதிகம் என்பதால் 8 மணிக்கு மேல் ரொம்ப ட்ராஃபிக்காக இருக்கும்.
ஆனால் 8 மணிவரை யாரும் வரமாட்டார்கள்.
வெறிச்சோடியிருக்கும்.
அன்றும் அப்படித்தான் இருந்தது.
அமைதியாக.
தூரத்தில் ஒரு லாரி மெதுவாக வந்து கொண்டிருந்தது.
ஒரு ஸ்கூட்டியில் ஒரு ஐம்பது வயது மதிக்க தக்கவரும் அந்த லாரியை ஒட்டியபடி ரோட்டோரம் வந்து கொண்டிருந்தார்.
இரண்டும் மெதுவாக ஒரே சீராக வந்துகொண்டிருந்தது.
நான் அமர்ந்திருந்த இடத்தை அவை கடக்கும் அந்த நொடி....
இந்த பேக்கரிக்கு பக்கவாட்டிலிருந்த கிளை ரோட்டிலிருந்து ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண் ‘சரக்’கென மெயின் ரோட்டில் திரும்பி வேகமெடுத்தாள்.
மெதுவாக வந்து கொண்டிருந்த அந்த பெரியவர் அந்த பெண் மீது மோதிவிடக்கூடாதென நினைத்தோ என்னவோ வண்டியை ஒதுக்கியவர் லாரியின் பக்கவாட்டில் இடித்தி அதன் பின் சக்கரத்திற்க்குள் விழுந்துவிட்டார்.
ஒரு சத்தமும் இல்லை.
அந்த லாரி பொறுமையாக ஏரி இரங்கி கொஞ்ச தூரம் சென்று ரோட்டோரம் அமைதியாக நின்றது.
அனைத்தும் ஒரு நொடியில் என் கண்முன் நடந்தது.
எழுந்து ஓடினேன்.
ஒரு அசைவும் இல்லை.
ஸ்கூட்டி கீழேகிடக்கிறது. மாட்டியிருந்த செருப்பு கூட கலடாமல் அவரின் ஒர் கால் அதன் மேலே. இன்னொன்று தரையில்.
இடுப்பிலிருந்து உடல் திரும்பியவாரு தன் ஒரு கையை தலைக்கு மேலே தூக்கியபடி அப்படியே இருக்கிறார்.
கட்டியிருந்த அந்த வெள்ளை வேஷ்டி கூட அப்படியே இருக்கிறது.
என் செல் போனை எடுத்து 108 க்கு அழைத்தேன்.
இது தான் முதல் முறை. நான் 108க்கு அழைப்பது.
பேசியவர்கள் பக்கத்தில் தான் இருக்கிறோம் என்றார்கள். உடனே வந்துவிடுகிறொம் என சொல்லி என் பெயர் கேட்டுவிட்டு வைத்துவிட்டார்கள்.
என் நண்பர் லாரி நம்பரை நோட் செய்துகொண்டார்.
லாரி டிரைவர் யாரிடமோ போன் பேசிகொண்டு நின்றிருந்தார். என்ன சொன்னார்களோ என்னவோ எதிர் திசையில் வேக வேகமாக நடந்தார்.
போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் தான் இருக்கிறது. என் நண்பரை போன் செய்ய சொன்னேன்.
பேக்கரிகாரரிடம் நம்பர் கேட்டபொழுது தெரியாது என சொல்லிவிட்டான்.
அப்பொழுது தான் கவனித்தேன்.
தன் கடை வாசலில் நடந்திருக்கிறது. அவன் அந்த கல்லாபெட்டியைவிட்டு வெளியே வராமல் அப்படியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் கையால் சாப்பிட்ட டீயின் கசப்பு அப்பொழுது தான் லேசாக நாக்கில் தெரிந்தது.
இன்னொருத்தரிடம் கேட்டு அவரே போலிஸுக்கு போன் செய்து தகவல் சொன்னார்.
8 மணி ஆகியிருந்தது.
எத்தனையோ வண்டிகள் கடந்து சென்றது.
ஒருவரும் வரவில்லை.
தனியாக நானும் என் நண்பரும் மட்டும் நின்றிருந்தோம்.
அவருக்கு 55 வயதுக்கு மேல் இருக்கும்.
அவர் அணிந்திருந்த வெள்ளை வேஷ்டி சட்டைக்கும் பெரிய மனிதராகவே தெரிந்தது.
அவரின் கோல்டு ஃப்ரேம் மூக்கு கண்ணாடி நசுங்கி போய் ஒரு ஓரத்தில் இரத்தத்துடன் கிடந்தது.
தோள்பட்டை எழும்பு தசை எல்லாம் கிழித்துக்கொண்டு இரத்ததுடன் கழுத்துக்கு கீழ் வெளியே வந்திருந்தது.
கை எழும்பு உடைந்து மேலே தெரிந்தது
வாயிலிருந்து லேசாக இரத்தம் வடிந்தவாரு அப்படியே விழுந்தது விழுந்தவாரு இருந்தார்.
சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்திருந்த பல ஐநூறு ரூபாய் நோட்டுகள் அந்த வெள்ளை துணிக்கு வெளியே தெரிந்தது.
அவரின் போன் எடுத்து அவர் வீட்டுக்கு சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் எடுக்கலாமா என தெரியாமல் நின்றிருந்தேன்.
இரத்தம்..சதை..எழும்பு இதெல்லாம் என்னை எதோ செய்தது.
வாந்தி வந்துவிட கூடாது என கண்ணை மூடிக்கொண்டேன். இருக்கமாக.
ஒருவரையே ஒரு நொடிக்கு முன்னால் உயிருடனும்
ஒரு நொடிக்கு பின்னால் இப்படியும் பார்க்கிறேன்.
பைக்கில் செல்பவர்களெல்லாம் ஒதுங்கி சென்று திரும்பி பார்த்தனர்.
கார் சொல்லவே வேனாம். அவர்கள் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
ஒவ்வொரு அரசு பஸ்ஸும் கடக்கும் பொழுதும் முன்னால் இருக்கும் பெண்கள் கூட்டமெல்லாம் கண்ணை சுருக்கி முகத்தை திருப்பிக்கொண்டது.
பின்னால் தொங்கி கொண்டிருக்கும் பசங்க கூட்டமெல்லாம் எட்டி எட்டி பார்த்து போனது.
பள்ளி வேன் செல்லும் பொழுது சிறுவர் சிறுமி பேதமின்றி அனைவரும் ஜன்னல் வழியாக கம்பியை பற்றி எட்டிபார்த்துகொண்டிருந்தனர்.
இப்படி நிறைய கடந்து சென்றது
யாரும் நிற்கவில்லை.
சில நிமிடங்கள் கழித்து ஒரு மோட்டார் சைக்கில் எங்களை கடந்து சென்று நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் எங்களை நோக்கி வந்தார்.
“யார் பார்த்தது?” என்றார்.
என் நண்பர் பார்க்கவில்லை என தலையாட்டினார்.
அப்பொழுது தான் தெரியும் நான் மட்டும் தான் பார்திருக்கிறேனென.
“நான் பார்த்தேன்” என்றேன்
“யாரு?” என்றார்
“அந்த லாரி” என்று தூரத்தில் நின்றிருந்த லாரியை கைகாட்டினேன்.
“என்ன ஓவர் டேக் பன்னும்போது அடிச்சுட்டானா? வேகமா வந்திருப்பான்” என்றார் ஆர்வமாக.
“இல்லை.. மெதுவா தான் வந்துச்சு. இவர் பேலன்ஸ் மிஸ்ஸாகி உள்ள விழுந்துட்டாரு” என்றேன்.
அவர் ஒன்றும் பேசாமல் திரும்பினார். அவர் எதிர்பார்த்தது இந்த கதை இல்லை போல.
அவரின் மௌனம் “இதில் நியூஸ் வேல்யுவே இல்லையே” என ஒரு சினிமா பட வசனத்தை சொல்வது போல இருந்தது.
கிளம்பி சென்றுவிட்டார்.
8:15
கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடியது. எல்லாரும் அவரை சுற்றி சுற்றி பார்த்தனர்.
அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த நாங்கள் கூட்டத்தின் கடைசியில் நிறுத்தப்பட்டோம்.
யாரோ ஒருவர் ரோட்டோரத்திலிருந்த பெரிய பெரிய கல்லை எடுத்து அவரை சுற்றி போட்டார்.
ஒழுங்காக ஒதுங்கி சென்ற வண்டிகளை ஒழுங்கு செய்கிறேன் என கையை ஆட்டி ஆட்டி மேலும் டிராபிக் அதிக படுத்திகொண்டிருந்தார்.
நாங்கள் அழைத்த ஆம்புலன்ஸும் போலீஸும் இன்னும் வரவில்லை.
கூட்டத்தில் பலவாறு பேசிகொண்டனர்.
“லாரிகாரன் ஸ்பீடா வந்திருப்பான். ஓவர் டேக் பண்ணும் போது அடிச்சுருப்பான்”
“இவர் ஸ்பீடாக வந்திருப்பார்” என்றும்
“இவர் சந்திலிருந்து திருப்பும் போது நேராக விட்டிருப்பார்” என்றும் பல கதைகள்.
அந்த கற்பனை கதைகளுக்கு ஆதாரம் சேர்பதற்காக வண்டி விழுந்து ரோட்டில் இழுத்துவந்த அடையாளத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.
உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும் என்பதால் போலீஸ் வந்ததும் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றிருந்தோம்.
புதிதாக அந்த கூட்டதில் சேருபவர்களுக்கு அந்த கற்பனை கதைகளை உண்மை போல சொல்லிகொண்டிருந்தார்கள்.
ஆரடி உயரத்திற்க்கு ஒருவன் வந்து அந்த கூட்டத்தை விலக்கி எட்டி பார்த்தான்.
“யாராவது துணி எடுத்துட்டு வந்து போர்த்திவிடுங்கப்பா” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து பெரிய செல்போனை எடுத்து போட்டோ பிடித்துகொண்டிருந்தான்.
அவன் ஆரம்பித்தது எங்கிருந்த எல்லோரும் தன் செல் கேமாரவுடன் படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். படத்துக்கு பிறந்த பயல்கள்.
நாளை இவன் அப்பன் ஆத்தா இப்படி தலை சிதைந்து செத்தாலும் இதே போல் படம் பிடித்து ஜோப்பில் வைத்துகொள்வார்களா!!
பத்திரிக்கைகாரன் எடுப்பதற்கும் ஒரு சாமானியன் இதை எடுப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது.
இதை எடுத்து “இன்னைக்கு நான் ஒரு ஏக்ஸிடென்ட் பார்த்தேன்.. ஆள் ஸ்பாட் அவுட்” என போட்டக்களை வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிழும் போடுவார்கள். இதை தவிற என்ன செய்துவிட முடியும்.
போலிஸ் வந்தது.
அரை மணி நேரம் கழித்து.
வந்தவர்கள் யார் பார்த்தார்கள் என விசாரிபார் என நினைத்தேன். எதுவும் இல்லை.
அவரின் சட்டையிலிருந்து போனை எடுத்து அவர் வீட்டுக்கு சொல்லுவார் என நினைத்தேன். இல்லை
தனது வாக்கிடாக்கியில் “யாரோ அடிபட்டு இறந்துட்டாங்க...யாருனு அடையாளம் தெரியல” என சொல்லி பதிவு செய்துகொண்டார்.
ஓரமாக சென்று தெரிந்தவரிடம் சிரித்து பேசியவாரு நின்றிருந்தார்.
ஆம்புலென்ஸ் வந்தது.
அதிலிருந்து ஒரு பெண் இறங்கி வந்து அவர் அருகில் முட்டிபோட்டு அமர்ந்து சோதனை செய்து பார்த்தார்.
அவரின் கையை பிடித்தார்.
அவர் நெத்தியில் சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்திருந்தது கை விளகும் போது தான் தெரிந்தது.
ஓடி சென்று ஆம்புலென்ஸிலிருந்து எதையோ எடுத்து வந்து அவரின் விரலில் மாட்டி பார்த்தார்.
போலிஸை பார்த்து தலையை அசைத்துவிட்டு ஆம்புளன்ஸ் விடைபெற்றது.
வேலைக்கு போபவர்களெல்லாம் கடந்து சென்றுவிட்டனர்.
அப்படியொன்றும் அவசரமான வேலை இல்லாதவர்கள் நின்று நிதானமாக கதை பேசிகொண்டிருந்தனர்.
அந்த கூட்டதிலிருந்த ஒருவர் இன்னொருவரிடம் “தலை ஒன்னத்துக்கும் ஆகாது” என எதோ பழைய வண்டியை சொல்வது போல சொல்லிச்சென்றார்.
“மூளை வெளியே வந்துவிட்டது” என எதையோ ரோட்டில் ஒரு கூட்டம் தேடிக் கொண்டிருந்தது.
தான் ஊகித்த கதையை போலிஸிடம் வாண்டடாக சென்று சொல்லிகொண்டிருந்தனர்.
திரும்பி பார்தேன்.
அந்த டீ கடைகாரர் அந்த இடத்தைவிட்டு நகராமல் நின்றிருந்தார்.
ப்து...
எங்களுக்கு அந்த இடத்தில் இனி எந்த வேலையும் இல்லை என அமைதியாக கிளம்பினோம்.
உயிர் என்பது அவ்வளவு தானா என்ற உண்மை உருத்தியது.
அவர் பாக்கெட்டிலிருந்து வெளியே தெரிந்த பணமும் உபயோகபடவில்லை.
நெத்தியிலிருந்த சந்தன குங்குமமும் காப்பாற்றவில்லை.
அவர்... இல்லை அந்த லாரி... இல்லை அந்த ஸ்கூட்டி பெண் இந்த மூன்று பேரில் யாராவது ஒருவர் 10 நொடி தாமதமாக வீட்டிலிருந்து கிளம்பியிருந்தாலும் இது நடந்திருக்காது.
இதை விதி என சொல்வதா!!?
விபத்து என சொல்வதா?
வேலைக்கு சென்ற பொழுது “எதோ ஏக்ஸிடென்டாமா. காலைல நாலு மணிக்கே நடந்துடுச்சாம” என செய்தி வந்ததாக என் தோழி சொன்னாள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை படிக்கும் செய்திகளை அதற்கு பிறகு படிக்க ஆர்வம் குறைந்துவிட்டது.
எப்படியும் உண்மை எங்கோ ஒளிந்திருக்க
கதை பேசிகளின் கதைகள் உண்மை போல அலங்காரமாக இப்படி திரிந்து கொண்டிருக்கும்.
இங்கு எவனுக்கும் உண்மையை பற்றி கவலையில்லை
அவனுக்கு பிடித்தது போல கதையை உருவாக்கி உண்மையாக காட்டவே விரும்புகிறார்கள்.
கடவுளில் ஆரம்பித்து சினிமா கிசு கிசுவரை அத்தனையிலும் இது தான் நடக்கிறது.
லாரிக்காரன் வேகமாக வந்து இடித்தான் என சொன்னால் தான் அந்த விபத்திலும் இறப்பிலும் சுவாரஸ்யம்.
ஒரு தற்கொலைக்கும் கொலைக்கும் பின்னால் ஒரு கள்ளக்காதல் இருந்தால் தான் அது கேட்க திரில்லாக இருக்கும்.
இதனால்தான் இப்படி பட்ட செய்திகளை மட்டுமே பத்திரிக்கைகள் கொடுக்கிறது.
அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றாலும் சுற்றி இருப்பவர்கள் அவர்களாகவே கதையை உருவாக்கி கொடுக்கிறார்கள்.
செய்திகளை இப்பொழுதும் படிக்கிறேன். பழக்கமாகிவிட்டதே!!
ஆனால், நம்பதான் முடிவதில்லை.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment