Sunday, 26 June 2016

சாரல் மனிதர்கள்

மழை வரவா வேணாமா என்பது போல வானம் மோடமாக இருந்தது

அந்த பேருந்து ஆடி ஆடி சாவகாசமாக அந்த சின்ன ரோடு வழியாக சீரான வேகத்தில் போய்கொண்டிருந்தது

பெண்கள் பக்கமாக இருந்த பஸ் கம்பியை பிடித்தபடி ஒரு பெண் நின்றுந்தாள்.
முன் பக்கமாக கூந்தலை போட்டு தலையை இடது பக்கமாக சாய்த்து அந்த ப்ரேம்லெஸ் கண்ணாடி வழியாக ஜன்னலை பார்த்தவாறே உதட்டில் சிறு புன்னகையுடன் நின்றிருந்தாள்.

“வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ..” எவனோ சிச்சுவேசன் சாங் போட இரண்டையும் ரசித்தபடியே அலுவலகம் நோக்கி போய்கொண்டிருந்த ஒரு ரம்மியமான காலை நேரம்.

நான் தங்கியிருந்த இடத்திற்கும் என் அலுவலகத்திற்கும் மூன்று கிலோ மீட்டர் தான் இருக்கும். அலுவளகம் இருக்கும் இடம் ஒரு பஸ் இல்லாத கிராமம். வழி நெடுக ஒரே முள் காடு தான்.

என் பாட்டி அடிக்கடி “ஒடக்கா கூட முட்டை வைக்காத ஊருயா அது” என சொல்லி கேட்டிருக்கேன்.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எதற்கு இப்படி ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள் என அடிக்கடி சந்தேகம் வரும். அந்த இடத்தை சுற்றியும் இப்பொழுது பல அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என எல்லாமே வந்துவிட்டது. அரசு பேருந்தை தவிற.

காலை 8.30 மணிக்கு ஒன்றும் 9 மணிக்கு ஒன்றும் மட்டும் இருக்கிறது. அதன் பிறகு மாலை ஒரு பேருந்து. அவ்வளவு தான்.

இருந்தாலும் இப்படி போவது தான் எனக்கு பிடித்திருக்கிறது.
அடுத்து நான் இறங்க வேண்டிய இடம் தான்.
பஸ்ஸின் நடுவில் நின்றிருந்த நான் திரும்பி பின் பக்கமாக நகர தொடங்கிய அந்த நொடி
‘டமால்’
என பயங்கரமான சத்தத்துடன் எதுலயோ மோதிய வேகத்தில் பேருந்து கட்டுபாட்டை இழந்து ரோட்டோர குழிக்குள் இறங்கி செடிகொடிகளுக்குள் சாய்வாக ஓட.

முன்னாலிருந்த பெண்கள் கூட்டமெல்லாம் பெரும்குரலெடுத்து அலறியது.

நான் இரு கைகளாலும் கம்பியை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். கண்டிப்பாக பஸ் கவுந்துவிடும் என உள்மனம் சொல்லவும் அப்படி கவிழ்ந்தால் எந்த பக்கம் கால் வைத்து எப்படி திரும்ப வேண்டும் என என் பாழாய் போன மூளை கணக்கு போட ஆரம்பித்துவிட்டது.

பேய் பிடித்தது போல பஸ் அங்கும் இங்கும் ஆடி ரோட்டின் மீது ஏற்றி ஒரு வழியாக நிறுத்தினார் டிரைவர்.

“செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா......”
தப்பான சிச்சுவேஷன் என்பதால் பாடல் நிறுத்தபட்டது.
பேருந்து முழுவதும் என்ன நடந்தது என்றே தெரியாத அமைதி. முன்னால் பார்த்தேன். அந்த பெண் கையை நெஞ்சின் மீதி அழுத்திப்பிடித்திருந்தாள். பயந்திருக்கிறாள்.

எதன் மீது இடித்தது என்பது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த பதட்டத்துடனே கீழே இறங்கினேன். என்னை இடித்துகொண்டு ஒரு சிவப்பு சட்டை போட்ட பெரியவர் சோற்று கூடையுடன் இறங்கினார். நான் என்னுடன் வந்த என் நண்பரை தேடினேன்.
கீழே நின்றிருந்தார். தூரத்தில் கூட்டமாக இருந்தது.  இருவரும் அங்கு நடந்து சென்றோம். நடக்கும் பொழுது தான் எதோ அசவுகரியமாக உணரவும் கால்களை பார்த்தேன்.
என்னுடைய வலது கால் ஷூ பிய்ந்து விட்டது எப்படி என தெரியவில்லை. சமாளித்துக் கொள்ளலாம் என நடந்தேன்.
அந்த சிவப்பு சட்டை காரர் “எங்க பஸ் சாஞ்சுட்டு வருது” “எங்க பஸ் சாஞ்சுட்டு வருது” என கையை தூக்கி ஆவேசமாக கத்திக்கொண்டே அந்த கூட்டத்தை நோக்கி சென்றார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவர் அந்த பேருந்துகுள் இருந்த ஒரே காரணத்திற்காக “எங்க பஸ்” என உரிமையாக சண்டை போட போய்கொண்டிருக்கிறார். அதற்கு சற்று முன் தான் கண்டக்டரிடம் சில்லரை கொடுக்காததுக்கு சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
மனிதனின் சுபாவம் சூழ்நிலைக்கு ஏற்ப சில நொடிகளில்  எப்படியெல்லாம் மாறுகிறது.
அது ஒரு கார். பக்கவாட்டில் லேசாக உரசி ஒடுங்கியிருந்தது. காரை ஓட்டி வந்தவன் கேஸ் போடுவேன் என எதையோ சொல்லிக்கொண்டிருந்தான்.
நல்ல வேளையாக யாருக்கும் எந்த அடியும் படவில்லை

பஸ்ஸில் வந்த பல ஆண்கள் தங்கள் பேருந்துக்கு சப்போர்ட்டாக கத்திக்கொண்டிருந்தனர். கூட்டம் ரோட்டை மறித்து நிற்கவும் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

‘ஒன்னு கவனிச்சியா?’ என என் நண்பர் கேட்டார்.
பதிலை எதிர்பார்க்காமல் அவரே தொடர்ந்தார் “என்ன நடந்தா நமக்கு என்னனு நம்மல தாண்டி போய்ட்டே இருக்கவங்க எல்லாரும் யாருனு பாத்தியா?” என்றார்.
ஆம் நானும் கவனித்தேன். எங்களை போலவே கழுத்தில் அடையாள அட்டை தொங்கவிட்டு மந்தை ஆடுகள் போல தலையை கவிழ்த்துகொண்டு பைக்கில் கூட்டதை கிழித்து போய்கொண்டே இருந்தனர்.

அவர்கள் பாவம். வாழ்வதற்காக சம்பாதிக்க அங்கு வந்தவர்கள் கடைசியில் வாழ்கையை தொலைத்து தன் சுயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பவர்கள். அவர்கள் போகட்டும்.

சில நிமிடங்கள் அங்கு வேடிக்கை பார்த்துகொண்டு நின்றிருந்தேன். என் நண்பர் பேருந்து அருகில் செல்கிறேன் என சென்றுவிட்டார்.

நானும் பேருந்துக்கு போகலாம் என சென்றேன். பெண்கள் கூட்டமெல்லாம் பேருந்து பக்கதிலேயே நின்றிருந்தனர். அவர்களுக்குள் வித விதமான வர்ணனையுடன் அந்த விபத்து காட்சியை அடுத்தவர்களுக்கு விவரித்துகொண்டிருந்தனர். சிலர் அங்கு சென்று திரும்பிய ஆண்களிடம் “யாருக்கும் ஒன்னும் ஆகலியே!” என கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் நடந்து போக தயாராகிகொண்டிருந்தனர்.
பேருந்தில் வந்த ஸ்கூல் பசங்களெல்லாம் ஒரு மினி ஆட்டோவில் தொற்றிக்கொண்டு “ஹே” என கத்திகொண்டு விடை பெற்றார்கள்.
ஒரு பெரியவர் “பஸ் கவுந்திருக்கும்லே... டிரைவர் தம்பி சூதானமா ரோட்டுல ஏத்திட்டாப்ல” என ஓட்டுனரை புகழ்ந்து கொண்டிருந்தார்.
என் நண்பர் என்னிடம் நடந்து போலாமா என்றார்.
ஷூ பிஞ்சது ஞாபகம் வரவும் “பிரச்சனை எல்லாம் முடிஞ்சுது...பஸ் இப்போ எடுத்துருவாங்க... உள்ள உட்காரலாம் வா...” என அவரை இழுத்தக்கொண்டு உள்ளே ஏறினேன்.
நான் இப்படி சொல்லவும் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெரியம்மா அதை கேட்டுவிட்டு சத்தமாக ‘எல்லாரும் பஸ்ஸுல ஏறுங்கபா... பஸ் எடுக்க போறாங்கலாம்” என கத்தியது. அவ்வளவு தான் நடக்க தயாராகிக்கொண்டிருந்த கூட்டமெல்லாம் பஸ்ஸுக்குள் பாய்ந்து வந்து ஏறினர். என் நண்பர் என்னை பார்த்தார். நான் ‘வேணும்னு பன்னல’ என்பது போல அவரை பார்தேன்.

பஸ் காலியாக இருக்கவும் ஒரு நல்ல ஜன்னலோர சீட்டாக பிடித்து அமர்ந்தோம். 5 நொடியில் பஸ் திரும்பவும் நிறைந்திருந்தது.
விபத்துக்கு முன் நின்றிருந்தவர்களெல்லாம் இப்பொழுது இடம் பிடித்து ஜம்மென அமர்ந்திருந்தோம்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும். பஸ் எடுக்கவேயில்லை. அந்த பெரியம்மா நாங்கள் அமர்ந்திருந்த இடத்தருகில் வந்து “டிரைவர் எங்க.. இன்னும் வரலையா” என யாரையோ பார்த்து கேட்டார்
என் நண்பர் சிரிப்பை அடக்கிக்கொண்டு என்னை கிள்ளவும் நான் வசவுக்கு பயந்து தலையை ஜன்னலுக்கு வெளியே விட்டு எதையோ தேடுவது போல பாசாங்கு செய்தேன்.
“அப்பறம் யாரு பஸ் எடுக்க போறாங்கனு சொன்னது” என அவரே முனங்கிகொண்டு சென்றுவிட்டார். நான் தப்பித்த நிம்மதியில் கழுத்தை உள்ளே இழுத்துகொண்டேன்.

எங்களை பஸ்ஸை விட்டு இறக்கி வேறு பஸ்ஸில் மாற்றி விட்டார்கள்.
இறங்கி நடந்து போகும் போது ஷூ பிஞ்சு விடவும் சமாளித்து ஒரு காலை இழுத்து இழுத்து நடந்தேன்.
கொஞ்ச தூரத்துக்கு பிறகு நடக்கமுடியாமல் ஷூவை கலட்டி வீசினேன். வெறுங்காலுடன் நடந்தேன். எதிரில் வருபவர்களெல்லாம் என் கால்களை ஒரு மாதிரி பார்த்துகொண்டு போனார்கள்.
என் சொந்த காலில் நான் நடக்கிறேன். அதை ஏன் விசித்திரமாக பார்க்கிறார்கள்.? என்ன செய்ய... இந்த இடத்தில் அப்படிதான்.
என்னை கடந்து சென்றவர்களின் பார்வை என்னை உறுத்த ஆரம்பித்தது. அலுவலகத்திற்குள் விடுவார்களா என்ற சந்தேகம். செருப்பே போட விட மாட்டார்கள். இதில் வெறும்காலுடன்.
சரி என என் நண்பரை அழைத்து ஷூ எடுத்துகொண்டு வர சொல்லிவிட்டு அங்கிருந்த பேக்கரியில் அமர்ந்தேன்.
கம்பியூட்டரில் வேலை பார்க போகிறேன். அங்கு குப்பை கீழே கிடப்பதே அரிது. முள்...கல் எல்லாம் காலில் ஏறுவதற்கு வாய்ப்பே கிடையாது.
பிறகு எதற்கு செருப்பும் ஷூவும்.
ஹா ஹா... புரிந்துவிட்டது.... எங்களை போல தான் அதுவும். எதற்காக படைக்கபட்டோமோ அதை விடுத்து பகட்டிற்காக வாழ்கிறது.

பேக்கரியில் பக்கத்து டேபிலில் மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் அவர் சமீபத்தில் பார்த்த விபத்தை விவரித்துகொண்டிருந்தார். இன்னொருவர் ஆர்வமாக கேட்டுகொண்டிருந்தார். மூன்றாமவர் அமைதியாக கவனித்துகோண்டிருந்தார்.
“ரெண்டு பேரும் ஸ்பாட் அவுட்... நெஞ்சுல கை வச்சு அழுத்தி எல்லாம் பாத்தேன்... ஒன்னுமே இல்ல..”

“எதுல இடிச்சாங்க... லாரியா?” இரண்டாமவர் கேட்டார்
“இல்ல கார். இவனுங்க முன்னாடி போன பைக்ல இடிச்சு எதிர்ல வந்த கார்ல விழுந்துட்டாங்க... தலைல அடி... காதுல இரத்தம் வந்திடுச்சு”
“ச்சு..ச்சு.. பாவம்... ஹெல்மெட் எதுவும் போடலையா?” என இரண்டாமவர் கேட்டார்
“போட்ருந்தாங்க... ஹெல்மெட் ரெண்டா பொலந்துடுச்சு” என கை இரண்டையும் வைத்து செய்துகாட்டினார்.
அதுவரை அமைதியாக இருந்த மூன்றாமவர்
“என்ன ஹெல்மெட் ஜி... பேரு பாத்தீங்களா.... இந்த வாரம் தான் வாங்களாம்னு இருந்தேன்” என அவன் கேட்கவும் என் நண்பர் ஷூ கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.
நடந்த எல்லா கதைகளையும் சொல்லியவாரே ஷூவை அணிந்து கொண்டிருந்த பொழுது என் நண்பர் “இதுக்கு நீ உன் பைக்லயே வரலாம்.. எதுக்கு இவ்வளவு சிரமம்” என்றார்.
“பைக்ல வந்திருந்தா இது எதுவும் தெரியாம நான் உள்ள போய் அந்த கண்ணாடி கட்டிடத்துகுள்ள நாள் பூரா டைப்படிச்சுட்டு இருப்பேன். அதை என்னால மாத்த முடியாது... எதோ என்னால முடிஞ்சது காலைல கொஞ்ச நேரமாவது இப்படி எனக்கு சம்பந்தமில்லாத மனுஷங்கலோட இருக்குறது.”
மழை தூர ஆரம்பித்தது
உள்ளே இருந்திருந்தால் இது கூட தெரியாது எங்களுக்கு.

பிரபு மித்ரன்

1 comment:

  1. //வாழ்வதற்காக சம்பாதிக்க அங்கு வந்தவர்கள் கடைசியில் வாழ்கையை தொலைத்து தன் சுயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பவர்கள்//

    exactly:(

    ReplyDelete

Related Articles