Wednesday, 6 December 2017

வயசாயிடுச்சு

                முதல் முறை அதை கேட்கும் பொழுது பேரதிர்ச்சியாக தான் இருந்தது. இன்றும் நன்றாக ஞாபகமுள்ளது
கல்லூரி முடித்து சில நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை கோவிலுக்குச் சென்று எப்பொழுதும் போல ‘தேமே’வென அங்கிருந்த கருங்கல் சுவற்றை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு சிறுமி ஓடி வந்து என்னை கடந்து சர்ரென ஓடினாள். அவளை துரத்திக்கொண்டு ஒரு சிருவன் ஓடி வந்தவன் என்னை இடிப்பதுபோல வந்து
“அங்கிள் தள்ளிக்கோங்க” என சொல்லிக்கொண்டே இடித்துக்கொண்டு ஓடினான்.
அடிங்க.... என்பதற்குள் ஓடி மறைந்துவிட்டான்.
அன்று வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கண்ணாடியை பார்த்தேன். எந்த கோணத்தில் அவனுக்கு நாம் அங்கிளாக தெரிந்தோம்? எப்படி அவன் அப்படி அழைக்கலாம்.? என்னை விட அவன் பத்து அல்லது பண்ணிரண்டு வயது தான் சிறியவனாக இருப்பான். நியாயமாக அண்ணா என்று தானே அழைத்திருக்க வேண்டும். அதற்கு முன்பு வரை எல்லா குழந்தைகளும் அப்படி தானே அழைத்துக்கொண்டிருந்தனர். அந்த நொடி தோன்றியது
‘எனக்கு வயதாகிவிட்டது’

அதன் பிறகு ஒரு நாள் என் வீட்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் பெண் ஒருத்தி  அவளின் குழந்தையை மடியில் அமரவைத்துவிட்டு சோறூட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் வாயை இறுக்க மூடிக்கொண்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தது.
நான் அதை பார்த்தவாறே சிரித்த முகத்துடன் கடந்து செல்லும் பொழுது அந்த பெண் தன் குழந்தையிடம்
“அங்க பாரு அங்கிள் பாரு.. சாப்பிடலேனா அவர் கிட்ட பிடிச்சு குடுத்திடுவேன்” என்றாள்.
‘அடிப்பாவி..’
அந்த பொண்ணுக்கு என் வயசு தான் இருக்கும். அவ தான் சீக்கிரம் கல்யாணம்பண்ணி அம்மாவாகிட்டா..!! சரி.. அதுக்குனு ரோட்டுலே சிவனேனு போயிட்டு இருக்குற என்னை எதுக்குடி அங்கிளாக்குனே!!

அதெல்லாம் முதலிரண்டு முறை தான்.
அதன் பிறகு போற வர்ர வாண்டுகளெல்லாம் அப்படி அழைத்து அழைத்து இதற்குமேல் அதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை என்ற நிலைமைக்கு வந்திருந்தேன்.
என்ன சொல்வது
‘எனக்கு வயதாகிவிட்டது’

ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். என்னை அப்படி அழைத்தவர்களெல்லாம் எனக்கு சம்பந்தமில்லாத எதோவொரு குழந்தைகள். நிஜ பிரச்சனையே அதன் பிறகு தான் வந்தது.
இப்பொழுதெல்லாம் சொந்தத்தில் பிறக்கும் குழந்தைகளெல்லாம் ‘மாமா’ அல்லது ‘டேய் சித்தப்பா’ என்ற முறையுடன் அழைத்துக்கொண்டே பிறக்கிறது. ஆரம்பத்தில் அதற்கு டேய்னே கூப்பிடுங்களேண்டா என்றே நினைத்தேன். பிறகு அதுவே பழகி இப்பொழுது அப்படி கூப்பிடும் பொழுது அதை எதோ பொறுப்புள்ள பதவியை போல நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.
‘எனக்கு வயதாகிவிட்டது’

நேற்று அதிகாலையில் அலுவலக காரில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். முன் இருக்கையில் ஓட்டுனர் அருகிள் தான் அமர்ந்திருந்தேன்.
அவர் கொஞ்சம் வயதானவர். நான் அதிகமாக அவரிடம் பேசியதில்லை. என்றாவது அவர் எதாவது கேட்பார் நான் அதற்கு பதில் மட்டுமே சொல்லுவேன். மற்றபடி எங்களுக்குள் எந்த உரையாடலும் நடக்காது.
நேற்று கொஞ்ச தூரம் சென்றதும் என்னிடம் எதோ கேட்டார். எனக்கு காற்றின் சத்ததில் சரியாக புரியவில்லை
“கேட்கலே ண்ணா.. என்ன கேட்டீங்க?”
“நமக்கு எத்தன கொழந்தீங்க சார்?”
உறைந்து போய்விட்டேன்.
கடல் அலைகள்... பறவைகள்... புயலில் சிக்கிய தென்னைமரம்... என சகலமும் அப்படியே ஃப்ரீஸ்ஸாகி நிற்கிறது.
அந்த மனுஷன் “கல்யாணமாகிடுச்சா?”னு கேட்டிருந்தா கூட பரவாயில்லை! இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டார்.
நமக்கு அவ்வளவு வயசாகிடுச்சா? என யோசித்தால் ஆம் இப்பொழுதெல்லாம் டீவி பார்ப்பதில்லை... முக்கியமாக நான் போன வருடம் வரை பார்த்துக்கொண்டிருந்த கார்ட்டூன் எல்லாம் பார்ப்பதில்லை. நான் தவராமல் வெள்ளிக்கிழமை தினத்தந்தியின் சிறுவர் மலரை வாசிப்பேன். இப்பொழுது யோசித்தால் நான் அதை வாசித்தும் ஒரு வருடம் இருக்கும். பெரியவர்கள் பேசும் பணம் சம்பந்தபட்ட பேச்சுகள் என்னிடமும் தொற்றிக் கொண்டிருக்கிறது. சொந்தகாரர்கள் வீட்டுக்கு போகும் பொழுது எதையாவது சாப்பிட வாங்கிக்கொண்டு போக என்னை நானே நிற்பந்தப் படுத்திக்கொள்கின்றேன். யாரையும் அண்ணா அல்லது அக்கா என கூப்பிட தயக்கமாக இருக்கிறது.. காரணம் யார் நம்மைவிட பெரியவர்கள்? யார் நம்மை விட சின்னவர்கள்? என முகத்தை பார்த்து வித்யாசம் காண முடிவதில்லை. எல்லோறையும் பொத்தாம் பொதுவாக ‘ங்க’ போட்டு பேசிக்கொள்கிறேன்.
‘ஆம் எனக்கு வயசாகிவிட்டது’

இன்று அதிகாலை 4.30 மணி.
நான் எனது அம்மாவின் வீட்டிலிருந்து பாட்டி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு ஆறு மணிக்கே அலுவலகம் என்பதால் 4.30 மணிக்கெல்லாம் அழைத்துச் செல்ல கார் வந்துவிடும். பாட்டி வீட்டிற்கு தான் வரச் சொல்லியிருந்தேன்.
அந்த நேரத்தில் ரோட்டில் யாருமே இல்லை. நான் பாட்டி வீடு இருக்கும் தெருவில் நுழைந்தவுடன் அங்கு ஒரு வீட்டின் வாசலில் படுத்திருந்த கருப்பு நாய் ஒன்று அலரியடித்து எழுந்து என்னை பார்த்து குரைத்தது.

இந்த உலகத்தில் நான் பயப்படும் விஷயங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதச் சொன்னால் அதில் முதல் இடத்தில் நாய் தான் இருக்கும். சொன்னால் நம்புவீர்களா என தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன். நான் பத்தாவது படிக்கும் பொழுது காலை நேரத்திலேயே சிறப்பு வகுப்புக்கு செல்ல குறுக்கு வழி பிடித்து செல்லும் பொழுது ஒரு நாள் எனக்கு எதிரில் ஒரு வெள்ளை நாய் பொசு பொசு என மறித்து நின்றது. பெரிய நாய் எல்லாம் கிடையாது. குட்டி தான். நான் ஆடாமல் அசையாமல் அரை மணி நேரம் அப்படியே ஆணி அடித்த மாதிரி நின்றிருந்தேன். அந்த நாயே டயர்டாகி உட்கார்ந்து விட்டது. கடைசியாக அங்கு என்னை ரொம்ப நேரமாக கவணித்த ஒரு நல்லவர் அந்த நாயை ‘ச்சூ’ என ஒரே வார்த்தையில் துரத்திவிட்டார். அது என்னமோ எனக்கு அந்த ‘ச்சூ’ மட்டும் சொல்ல வரவே வராது.

அப்படியொரு மாவீரனை இன்று ஒரு நாய் அதுவும் யாருமே இல்லாத தெருவில் எதிர்த்து நிற்கிறது. ஆனால் இந்த முறை நான் பயந்து நிற்கவில்லை. பயத்தை உள்ளே புதைத்துவிட்டு துணிந்து நடந்தேன்.
நாய் தெருவிளக்கு வெளிச்சத்தில் நடு ரோட்டில் வந்து நின்று என்னை பார்த்து சத்தமாக குரைத்தது. அந்த சத்தம் காலியான அந்த தெரு முழுவதும் எதிரொலித்து ஒரு அமானுஷ்யமான பயத்தை கொடுத்தது.
நான் நடுரோட்டில் நெஞ்சை நிமிர்த்தி அந்த நாயை நேருக்கு நேர் எதிர்கொண்டு நடந்தேன்.
அது என்னை விட்டு ஒரு பத்தடி ஓடி அடுத்த தெருவிளக்கு வெளிச்சத்திற்கு நின்று திரும்பி என்னை பார்த்து குரைத்தது.
நான் பாக்கெட்டிலிருந்து என்னுடைய அடையாள அட்டையை எடுத்து அதன் கயிரை சாட்டை போல பிடித்து கொண்டவாறே நடந்தேன்.
நான் அருகிள் வரவும் அது மருபடியும் என்னை விட்டு கொஞ்சம் ஓடி அடுத்த மின் விளக்குக்கு இருக்கும் இடம் சென்று திரும்பி நின்று குரைத்தது.
இப்படியே ஐந்து மின் கம்பம் வரை ஓடி குரைத்தது. அதன் பிறகு எந்த மின் விளக்கும் எரியவில்லை. இருட்டாக இருக்கவும் கொஞ்சம் பக்கென இருந்தது.
இன்னும் கொஞ்ச தூரம் தான். என் பாட்டி வீடு பக்கத்தில் வந்து விட்டது. இன்னும் நாலு வீடு தான். தாண்டி விட்டால் தப்பித்தேன் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே தூரத்தில் எரிந்து கொண்டிருந்த ஒரு மின் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்த காட்சி இடியென இறங்கியது..
மொத்தம் ஆறு அல்லது ஏழு நாய்கள் இருக்கும். ஓடி வந்து கொண்டிருந்தன.
நான் அப்படியே உரைந்துபோய் நின்றுகொண்டிருந்தேன். அத்தனை நாய்களும் ஏற்கனவே இருந்த கருப்பு நாயுடன் சேர்ந்து பயங்கரமாக குரைத்தது.
அவ்வளவு தான்.
எனக்கு சகலமும் அடங்கி விட்டது.
வெக்கமே படவில்லை. போனை எடுத்து பாட்டி வீட்டுக்கு அழைத்தேன். விஷயத்தை சொன்னேன்.
பாட்டி வீட்டில் லைட் எரிவது எனக்கு தெரிந்தது.
என் எழுபது வயது பாட்டியும் என் மாமாவும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து ‘ச்சூ’ என்றார்கள். எல்லா நாயும் ஆளுக்கொரு திசையில் ஓடி விட்டது.
நான் பல் எல்லாம் தெரிய சிரித்துக்கொண்டே வந்தேன். அவர்களும் சிரித்தார்கள்.
ஹா ஹா.
‘எவன் சொன்னது எனக்கு வயசாயிடுச்சுன்னு?’

நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம்மை அப்படி நினைக்க நிர்பந்தப் படுத்துகிறார்கள். நாமும் நம்மை நாமே பெரியவர்கள்  என கேனத்தனமாக நினைத்துக்கொண்டு நடிக்க ஆரம்பித்து பிறகு அதுவே இயல்பாக மாறி உண்மையாகவே ஒரு நாள் நம்மை முழுவதும் அந்த பிம்பத்தில் தொலைத்துவிடுகிறோம்.

Tuesday, 9 May 2017

சொல்வதற்க்கு எதுவுமில்லை

விடியற்காலையிலேயே வெளியே கிளம்ப குளித்து தயாரான பிறகு போக முடியாமல் போனது.

கிளம்பியது கிளம்பியாகிவிட்டது பக்கத்தில் எங்காவது போவோம் என நினைத்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஏரிக்கு போலாம் என வழியிலேயே முடிவு செய்து அங்கு சென்றேன். ஏரியில் ஒரு பழைய செயல்படாத  படகுத்துறை இருக்கிறது. உடைந்த படகுகள் எல்லாம் ஓரமாக கிடக்க பக்கத்தில் தகர கூரையும் கீழே உட்கார சிமெண்ட் பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கும்.

நான் எப்பொழுது அங்கு போனாலும் ஆளே இருக்க மாட்டார்கள். நான் படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்த பொழுது இங்கு வந்து மணிக்கணக்கில் அமர்ந்து ஏரியில் கல்லெறிந்து கொண்டிருப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் கூட்டமாக இருந்தது. படகுத்துறை ஓரத்தில் சைக்கிள்கள், பைக்குகள், கார்கள் என ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

ஹெல்மெட்டை கழற்றிவிட்டு இன்னொரு முறை அந்த கூட்டத்தை பார்த்தேன். அதில் இரண்டு பிரிவுகள் இருந்தது. ஒன்று இளைஞர்கள் கூட்டம். பதினைந்து இருபது பேர் இருப்பார்கள். அவர்கள் அணிந்திருந்த கையில்லாத பனியனும் கால்-கால் சட்டையும்  வைத்து அவர்கள் எல்லாம் சைக்கிளிங் வந்திருக்கிறார்கள் என சொல்லிவிடலாம். அதில் ஒரு இளிச்சவாய் பையன் மட்டும் dslr கேமரா வைத்திருக்க மற்றவர்கள் எல்லாம் ஏரி முன்னால் நின்று கை விரல்களை வித விதமாக வலிப்பு வந்தது போல் காட்டி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

இன்னொரு கூட்டம் வயதானவர்கள். எல்லோரும் டி-சர்ட்டும் ட்ராக் பேண்ட்டும் போட்டிருந்தார்கள். காரிலும் பைக்கிலும்  இங்கு வந்து வாக்கிங் செல்பவர்கள். நான் வண்டியை விட்டு இறங்கும் பொழுது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு குல்லா போட்ட பெரியவர் எல்லோரையும் எழுந்து நிற்க சொன்னார். எல்லோரும் தட்டுத் தடுமாறி எழுந்தனர்.  "அருட்காப்பு" என சொல்லிவிட்டு அவர் எதையோ சொல்லவும் மற்ற பெரியவர்கள் எல்லோரும் அதையே திருப்பி சொன்னார்கள்.  முடிந்த பிறகு ஆளாளுக்கு கை கொடுத்து விடை பெற்றுக்கொண்டு கார்களை கிளப்பினர். ஒரு சிலர் மட்டும் அங்கேயே அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

அந்த பசங்க இன்னும் போட்டோ தான் எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் கண்ணாடியை கழற்றுவது போல பாதி தூக்கிய கையுடன் சிலை மாதிரி நின்றிருந்தான்.

இதெல்லாம் பார்க்க வேண்டுமா என நினைத்து பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்றேன்.  பராமரிக்கப்படாமல் ஒரே  குப்பையாக கிடந்தது. அங்கிருந்த பழைய துருப்பிடித்த ஊஞ்சலை பார்த்ததும் அதில் ஆட வேண்டும் போல இருந்தது. அமர்ந்து  லேசாக முதலில் ஆட்டினேன். கீச் கீச் என சத்தத்துடன் ஆடியது. காலை நன்றாக ஊண்றி பின்னால் தள்ள அது வீசி ஆடியது. ஆடிக்கொண்டிருக்கையில் தலையை அன்னாந்து வானத்தை பார்த்தேன். தியானம் செய்வது போல இருந்தது அது. என்றாவது சொந்தமாக ஊஞ்சல் ஒன்று வாங்க வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து படகுத்துறைக்கு வந்தேன். ஒரு பையன் ரோட்டில் கைப்பிடியை பிடிக்காமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வர அந்த கேமரா பையன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். நான் ஏரியை பார்த்தவாறு இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.

நைந்துபோன லுங்கியும் சட்டையும் அணிந்து மொட்டைத் தலையுடன் ஒடிசலான ஒருவர் என்னை பார்த்து வந்தார். அவரின்  கன்னம் எல்லாம் உள்வாங்கி ஒடுங்கிப் போயிருந்தது. நாற்பது வயது இருக்கும்.

"சார், அந்த வண்டி உங்களோடதா?" என்றார்.
"ஆமா. ஏன்?"

"ஹெல்மெட்டை வண்டில வைக்காதீங்க. தூக்கிட்டு போயிடுவாங்க"

"ஓ அப்டியா ண்ணா.. நான் எடுத்துட்டு வந்திடுறேன்" என சொல்லிவிட்டு ஓடிச் சென்று ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

அவர் நின்று கொண்டிருந்தார். சரி பேச்சு கொடுப்போம் என
"எந்த ஊரு நீங்க?"

"எனக்கு கல்யாணம் இல்லை. இங்க தான் தங்கியிருக்கேன்" என அங்கிருந்த பழைய தகர பொட்டிக்கடையை காட்டினார். அது பல வருடங்களுக்கு முன்னாள் இங்கு படகு சவாரிக்கு வருபவர்களுக்கு தீனி விற்ற கடை. இப்பொழுது சும்மா கிடக்கிறது.

"உங்களுக்கு எந்த ஊருனு கேட்டேன்"

"அது செங்காட்டுக்கு அந்த பக்கம்"

"சொந்தம் எல்லாம் யாரும் இல்லையா? ஏன் இங்க வந்து இருக்கீங்க?"

"அதெல்லாம் நிறையா இருக்காங்க. நான் போறது இல்லே"

"ஏன்?"

"என்னை யாரு சேர்த்துப்பா.! கல்யாணம் எதுவும் இல்லே. சும்மா சுத்துரவன யாரு 'வா'னு கேக்குறா?"

"அப்பா அம்மா எல்லாம்?"

"அவங்க போய் ரொம்ப வருஷம் ஆச்சு. இங்க தான் கிழக்காலே தோட்டத்துல தூங்குறாங்க"

எனக்கு பாவமாக இருந்தது.

"என்ன வேலை பாக்குறீங்க?" சாப்பாடு எல்லாம்!?"

"பக்கத்து தோட்டத்துல தண்ணி விடுவேன். மட்டை எடுத்து போடுவேன். பகல் எல்லாம் அங்க வேலை. இராத்திரி இங்க வந்திடுவேன். சாப்பாடு கடைல எப்பவாவது துண்ணுக்குவேன்"

என்னைக்காவது சாப்பாடு வாங்கிட்டு வந்து குடுக்கணும் என நினைத்துக் கொண்டேன்.

"இந்த ஏரில பரிசல்ல மீன் பிடிப்பாங்கல்லே!! இன்னைக்கு ஏன் யாரையும் காணோம்?"

"ஞாயித்துக்கிழமை வர மாட்டாங்க"

"ஓ அப்டியா.. சரி.. அவங்க கிட்ட கேட்டா என்னை அவங்க கூட ஏத்திட்டு போவாங்களா?"

"தெரியாது"
"ஏன்? இங்க தானே இருக்கீங்க. அவங்க கூட பேச மாட்டீங்களா?"

"நான் அவங்க கூட பேசி என்ன ஆக போகுது?"

என்ன இந்த மனிதன்! வீடு வாசல் இல்லை. சொந்தம் கொண்டாட யாரும் இல்லை. பேச்சு துணைக்கு கூட யாரும் அவருக்கு இல்லை. அவர் பேசியதில் அதீத விரக்தி தான் தெரிந்தது. இருந்தும் கிடைக்கும் வேலை செய்து  சாப்பிட்டு எப்படியாவது வாழ நினைக்கிறார். அப்படி எந்த பிடிப்பும் இல்லாமல் இந்த வாழ்வில் இருந்து எதை எதிர்பார்த்து இவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!!!

நான் அவர் தங்கியிருந்த தகர கொட்டகையை ஒரு முறை திரும்பி பார்த்து அவரிடம் "தனியாவா இருக்கீங்க?" என்றேன்.

"ஆமா தனியா தான்.." சொல்லிவிட்டு இரண்டு நொடி இடைவெளி விட்டு "ஏன் நீ வந்து இருக்க போறியா?"

'சார்' என்பது 'நீ' என்றானதை நான் கவனிக்காமல் இல்லை.

நான் "அதுக்கு என்ன? வந்து தங்கிட்டா போச்சு" என்று சொல்லி சிரித்தேன்.

"வா.. எப்போ வேணா வந்து தங்கிக்கோ. உள்ள போய் எப்படி இருக்குனு பாக்குறியா? போ.. போய் பார்த்துட்டு வா" என்றார்.

நான் தயங்கி அந்த கொட்டகையை திரும்பி பார்த்துவிட்டு "இல்லை வேண்டாம்" என்றேன்

"சும்மா போய்பாரு" என்று திரும்பவும் சொன்னார்.

"இல்ல வேண்டாம்.. இன்னொரு நாள் வர்றேன்"

எனக்கும் போய் எப்படி இருக்கிறது  என பார்க்க வேண்டும் போல் இருந்தது. சரி இங்கிருந்து கிளம்பும் பொழுது பார்த்துக்கொள்வோம் என மறுத்துவிட்டேன்.

"இங்க போய் தங்குறீங்களே! நைட் போலீஸ் எல்லாம் வந்து கேட்க மாட்டாங்களா?"

"என்னை யாரு கேட்பா.. போலீஸுக்கும் எனக்கும் என்ன இருக்கு? எதுக்கு கேட்குறே?!"

"சும்மா தான்"

"ஏன் ஏதாவது பண்ண போறியா? பண்றதுனா பண்ணு, போலீஸ் எல்லாம் வராது"

"நான் என்ன பண்ண போறேன். உங்களுக்கு ஏதாவது தொல்லை குடுப்பாங்களோனு கேட்டேன்."

அவர் அவரின் அந்த கொட்டகையை நோக்கி நகர்ந்து கொண்டே  திரும்பவும் "நீ வா.. யாரும் கேட்க மாட்டாங்க." என்றார்.
எனக்கு ஒரு மாதிரி இருந்தது அவர் அப்படி பேசுவது. பேச்சை மாத்தலாம் என்பதற்குள் அவர் உள்ளே சென்று விட்டார்.

உள்ளுக்குள் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது. வெளியே வந்தவர் கையில் ஒரு நோட்டீஸ் வைத்திருந்தார்.

"உங்களுக்கு படிக்க தெரியுமா?"

"எனக்கு எங்க தெரியும்? எனக்கு படிப்பு மண்டையிலே ஏறலை. நான் எல்லாம் படிச்சிருந்தா எங்கயோ இருந்திருப்பேன். எதுக்கு இப்டி சாமியார் மாதிரி அலையனும்!"

நான் அமைதியாக இருந்தேன்.
அவர் சொல்லிவிட்டு அவரின் வலது கையை என்னை நோக்கி நீட்டி உள்ளங்கையை விரித்தார். அதில் பச்சை நிறத்தில் குட்டி குட்டியாக நாலு பாக்கெட் இருந்தது.

"வச்சுக்கோ" என்றார்.

எனக்கு அது என்னவென்று தெரியவில்லை. பார்க்க எங்கள் அலுவலகத்தில் காப்பிக்கு கொடுக்கும் சக்கரை பாக்கெட் போல இருந்தது.

"என்னது இது?"

"பல்பு"

"அப்படினா?" என்று நான் கேட்கும் பொழுதே புரிந்துவிட்டது. ச்சை.. எனக்கு எல்லாமே லேட்டாதான் புரியுது. அவை ஆணுறை பாக்கெட்டுகள்.

எனக்கு 'பக்'கென இருந்தது. பதற்றத்தில் கத்திவிட்டேன்.
"எனக்கு எதுக்குண்ணா இதெல்லாம்? வேண்டாம் போங்க"
"பரவால்லை வச்சுக்கோ"

"வேண்டாம்னு சொல்றேன்லே.

நீங்க எதுக்கு இதெல்லாம் வச்சுருக்கீங்க?"

"உன்ன மாதிரி ஒரு பையன் குடுத்தான். ஒரு பை நிறைய இருக்கு. பாக்குறியா? அதுக்குள்ள போய் பாரு...போ.."

"எதுக்கு குடுத்தான்?"

"இங்க அப்படி நிறைய பசங்க வருவானுங்க?"

"என்ன சொல்றீங்க!! நைட் இங்க கூட்டிட்டு எல்லாம் வருவாங்களா?"

"கூட்டிட்டு எல்லாம் வர மாட்டானுங்க"

"அப்புறம் எதுக்கு இது"

"அவனுங்களே பண்ணிப்பாங்க... இல்ல எங்கூட பண்ணுவாங்க.. இந்தா நீ ரெண்டு எடுத்துக்கோ" என மறுபடியும் கையை நீட்டினார்.

அடப்பாவி மனுஷா... இதுக்கு தான் என்ன அவ்ளோ தடவை உள்ளே கூப்பிட்டியா? எவ்ளோ நேக்கா ஏமாற பார்த்தேன்.

"அய்யோ நான் அந்த மாதிரி பையன் இல்லண்ணா"

"எல்லாரும் அந்த மாதிரி பையன் தான். எடுத்துட்டு போ"
"எனக்கு வேண்டாம். நான் கிளம்புறேன் ண்ணா" என அவசரமாக சொல்லிவிட்டு ஓடி வந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது பார்த்தேன்.
ஒரு பையன் கையையும் காலையும் விரித்துக்கொண்டு மேலே குதிக்க அந்த கேமரா பையன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். இங்க என்ன நடந்துட்டு இருக்கு! இவனுங்க வேற!! அட போங்கடா.
ஊஞ்சல் எல்லாம் ஆடி ரிலாக்ஸாக இருந்த மனசு இப்போ அரண்டு போய் அலறிக்கிடக்கிறது.

சில இயற்கையான தேவைகள் மறுக்கப்படும் பொழுது மனிதன் இயற்கைக்கு மாறான வேறொருவாழ்கைக்கு  தன்னை  உட்படுத்திக் கொள்கின்றான். அதையும்  இயற்கையின் ஒரு அங்கமாக அன்றி வேறு எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.

எல்லாம் சரி. என்ன இருந்தாலும் என்னை பார்த்து அவரு அப்படி கேட்டுருக்க கூடாது.

பிரபு மித்ரன்

Monday, 27 March 2017

நாங்கள் பேசிக்கொள்வதில்லை

பிறந்தநாளன்று கோவிலில் சாமி கும்பிட வரிசையில் நின்றிருந்தேன்.

எனக்கு முன்னால் ஒரு பெண் கையில் குழந்தையுடன் நின்றிருந்தார். குழந்தை அவள் பிடியிலிருந்து குதிக்க கைகளை  வைத்து அவளை தள்ளி தள்ளி உந்தியது. அவள் இறுக்கமாக பிடித்திருந்தாள். அது சினுங்கியது.   சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகவும் சுற்றி இருந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். அந்த பெண் சமாதான படுத்த "இங்க பாரு எப்படி விளக்கு எரியுதுனு"
"இங்க பாரு சாமி சிலை. தொட்டுப் பாரு"
"மேல பாரு.. பெல் அடிக்கலாமா?" என காட்டவும் அந்தக் குழந்தையுடன் சேர்ந்து நானும் ஒவ்வொன்றாக தலையை சுற்றி சுற்றி பார்த்தேன். இதெல்லாம் நான் பல தடவை பார்த்திருக்கிறேன், இருந்தும் இப்படி யாராவது நமக்கு காட்டி அதை வேடிக்கை பார்க்க நன்றாக இருந்தது. குழந்தையோ ஒவ்வொன்றையும் பார்த்ததும் இரண்டு நொடிக்கு அழுகையை மறந்து திரும்பவும் கத்தியது. உடனே வேறு ஒரு பொருளை காட்ட வேண்டும். திரும்பவும் அழுகை. வேறு பொருள்.

இப்படியே போய்க் கொண்டிருக்கையில் அது    எதேர்ச்சையாக பின்னால் நின்றிருந்த என்னை பார்த்தது. நான் உடனே கண்களை அகல விரித்துக் காட்டினேன். அது உடனே அழுகையை நிறுத்திவிட்டு  என்னை விநோத பொருளை பார்ப்பது போல அசையாமல் பார்த்தது. நான் 'அன்பே வா' சரோஜாதேவி போல கண்களை பட படவென அடித்துக் காட்டினேன்.  அது எந்த அசைவும் காட்டாமல் என்னையே பார்த்தது.

வரிசை சாமிக்கு கொஞ்சம் பக்கத்தில் சென்றதும் சிவ லிங்கம் தெரிய ஆரம்பித்தது. அந்தப் பெண் தன் குழந்தையை தூக்கி பிடித்து "சாமி தெரியுது பாரு.. கும்பிடு.." என்றதும் அது தன் சின்ன கரங்களை தலைக்கு மேல் தூக்கி அப்படியே தலையை என் பக்கம் திருப்பி என்னை கும்பிட்டது. அந்த இடம் முழுவதும் கோவில் மணி சத்தம் நிறைந்திருக்க அது என்னை கும்பிடவும் நான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் அவள் குழந்தை என்னை கும்பிடுவதை கவனித்த உடன் அதன் தலையை வலுக்கட்டாயமாக சாமி பக்கம்  திருப்பி "சாமி இங்க தெரியுது பாரு" என்றாள். சில நொடிகளில் அது மறுபடியும் என் பக்கம் திரும்பிக்கொண்டது.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
'ஒருவேளை நாம் தெய்வப் பிறவியோ!! அவதாரம் எடுத்து வந்திருக்கேனா!! நான் வந்த வேலையை ஞாபகப் படுத்த தான் இந்த குழந்தை அனுப்ப பட்டதோ!!' இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் என் தோளில் யாரோ தட்டி "யோவ்.. சாமி கும்பிட்டா தள்ளி போய்யா.. பின்னால நிக்குறவன் எல்லாம் கும்பிட வேண்டாமா? கோவில்ல வந்து கனவு கண்டுட்டு" என்று கத்தினார். 'என்னது கனவா!!' நான் அந்தக் குழந்தையை தேடினேன். அவர்கள் சென்று விட்டனர்.

மனிதர்கள் தாங்கள் பயப்படும் பாம்பு, சிங்கம், புலி , யானை என எல்லாத்தையும் சாமி ஆக்கிவிட்டதை போல இந்த குழந்தையிடம் நான் கண்களை அகல விரித்து பயப்படுத்தி சாமியாகிக்கொண்டேனோ!!
இருக்கும்.
அதற்குள் அவதாரம்..தெய்வ பிறவினு..அட போப்பா.

அதன் பிறகு வீட்டுக்கு செல்ல பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன்.
பேருந்து எடுக்க பத்து நிமிடம் ஆகும்.
நான் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அமர்ந்திருந்த ஜன்னலுக்கு நேராக வெளியே ஒரு பெண் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
பார்க்க மன நலம் பாதிக்கப் பட்டவர் போல தெரிந்தது.
சந்தன நிற முழுக்கை சட்டையும் அதன் மீது அதே சந்தன நிறத்தில் ஜரிகை போன பழைய பட்டு சேலையும் கட்டியிருந்தாள்.
கை நிறையா வளையல். நெற்றியில் குங்குமத்தை பெரிதாக அப்பியிருந்தாள். முடியை விரித்து போட்டு அதில் மல்லிகை பூ தொங்கிக் கொண்டிருந்தது.
தரையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில நிமிடம் கழித்து கண்களை மேல பார்த்தவள் நான் அவளை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்ததும் அவளும் பார்த்தாள். சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு நான் அவளை தான் பார்க்கிறேன் என்பது உறுதியானதும் தலையை நேராக நிமிர்த்தி தன் இரண்டு கண்களையும் பெரிதாக விரித்துக் காட்டினாள். நான் எப்படி கோவிலில் அந்த குழந்தைக்குக் காட்டினேனோ அப்படியே இவள் எனக்கு காட்டினாள்.
நான் விடுவேனா!!
நானும் பார்த்தேன்.
இருவரும் கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் அடுத்ததாக செய்தது என்னை மிரட்டிவிட்டது.

விரித்த கண்களின் புருவங்களை இரண்டு முறை மேலே ஆட்டி விட்டு அவள் நாக்கை வெளியே நீட்டி தலையை சாய்த்து இன்னும் உக்கிரமாக பார்த்தாள்.
ஆடிப்போய்விட்டேன்.
விரித்த கூந்தல்.. நெற்றி நிறைய குங்குமம்.. கை நிறைய வளையல்.. கண்கள்.. வெளியே தொங்கும் நாக்கு.. அப்படியே பத்திரகாளி போல் இருந்தாள்.
அங்கு நின்றிருந்தவர்கள் எல்லோரும் அவளையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்கள்.

பேருந்து நகர்ந்தது.

சில அடிகள் தள்ளி நிறுத்தினார் ஓட்டுனர்.
ஜன்னல் வழியே திரும்பி பார்த்தேன். பக்கத்தில் இருந்த சுவர் அவளை என் பார்வையில் இருந்து மறைத்திருந்தது.
பேருந்து எடுத்த பொழுது மறுபடியும் ஒரு முறை திரும்பி பார்த்தேன்.
அவள் தன் தலையை சாய்த்து சுவரை தாண்டி என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.
நாக்கு இன்னும் நீட்டிக்கொண்டு தான் இருந்தது.
அதை மீறி உதட்டோரத்தில் அளவாக புன்னகைத்தாள்.
நானும் அவளை பார்த்து சிரித்து விடை பெற்றேன்.
பேருந்து நகர்ந்து ரொம்ப தூரம் வந்து விட்டது.

எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கோவிலில் பார்த்த குழந்தைக்கும் எதோ ஒரு ஒற்றுமையை உணர முடிந்தது.
நாங்கள் இவ்வுலகையும் இம்மனிதர்களையும் வேடிக்கை பார்க்கவும் வேடிக்கை காட்டவும் மட்டுமே வாழ முயல்கிறோம்.

Related Articles