முதல் முறை அதை கேட்கும் பொழுது பேரதிர்ச்சியாக தான் இருந்தது. இன்றும் நன்றாக ஞாபகமுள்ளது
கல்லூரி முடித்து சில நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை கோவிலுக்குச் சென்று எப்பொழுதும் போல ‘தேமே’வென அங்கிருந்த கருங்கல் சுவற்றை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு சிறுமி ஓடி வந்து என்னை கடந்து சர்ரென ஓடினாள். அவளை துரத்திக்கொண்டு ஒரு சிருவன் ஓடி வந்தவன் என்னை இடிப்பதுபோல வந்து
“அங்கிள் தள்ளிக்கோங்க” என சொல்லிக்கொண்டே இடித்துக்கொண்டு ஓடினான்.
அடிங்க.... என்பதற்குள் ஓடி மறைந்துவிட்டான்.
அன்று வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கண்ணாடியை பார்த்தேன். எந்த கோணத்தில் அவனுக்கு நாம் அங்கிளாக தெரிந்தோம்? எப்படி அவன் அப்படி அழைக்கலாம்.? என்னை விட அவன் பத்து அல்லது பண்ணிரண்டு வயது தான் சிறியவனாக இருப்பான். நியாயமாக அண்ணா என்று தானே அழைத்திருக்க வேண்டும். அதற்கு முன்பு வரை எல்லா குழந்தைகளும் அப்படி தானே அழைத்துக்கொண்டிருந்தனர். அந்த நொடி தோன்றியது
‘எனக்கு வயதாகிவிட்டது’
அதன் பிறகு ஒரு நாள் என் வீட்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் பெண் ஒருத்தி அவளின் குழந்தையை மடியில் அமரவைத்துவிட்டு சோறூட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் வாயை இறுக்க மூடிக்கொண்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தது.
நான் அதை பார்த்தவாறே சிரித்த முகத்துடன் கடந்து செல்லும் பொழுது அந்த பெண் தன் குழந்தையிடம்
“அங்க பாரு அங்கிள் பாரு.. சாப்பிடலேனா அவர் கிட்ட பிடிச்சு குடுத்திடுவேன்” என்றாள்.
‘அடிப்பாவி..’
அந்த பொண்ணுக்கு என் வயசு தான் இருக்கும். அவ தான் சீக்கிரம் கல்யாணம்பண்ணி அம்மாவாகிட்டா..!! சரி.. அதுக்குனு ரோட்டுலே சிவனேனு போயிட்டு இருக்குற என்னை எதுக்குடி அங்கிளாக்குனே!!
அதெல்லாம் முதலிரண்டு முறை தான்.
அதன் பிறகு போற வர்ர வாண்டுகளெல்லாம் அப்படி அழைத்து அழைத்து இதற்குமேல் அதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை என்ற நிலைமைக்கு வந்திருந்தேன்.
என்ன சொல்வது
‘எனக்கு வயதாகிவிட்டது’
ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். என்னை அப்படி அழைத்தவர்களெல்லாம் எனக்கு சம்பந்தமில்லாத எதோவொரு குழந்தைகள். நிஜ பிரச்சனையே அதன் பிறகு தான் வந்தது.
இப்பொழுதெல்லாம் சொந்தத்தில் பிறக்கும் குழந்தைகளெல்லாம் ‘மாமா’ அல்லது ‘டேய் சித்தப்பா’ என்ற முறையுடன் அழைத்துக்கொண்டே பிறக்கிறது. ஆரம்பத்தில் அதற்கு டேய்னே கூப்பிடுங்களேண்டா என்றே நினைத்தேன். பிறகு அதுவே பழகி இப்பொழுது அப்படி கூப்பிடும் பொழுது அதை எதோ பொறுப்புள்ள பதவியை போல நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.
‘எனக்கு வயதாகிவிட்டது’
நேற்று அதிகாலையில் அலுவலக காரில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். முன் இருக்கையில் ஓட்டுனர் அருகிள் தான் அமர்ந்திருந்தேன்.
அவர் கொஞ்சம் வயதானவர். நான் அதிகமாக அவரிடம் பேசியதில்லை. என்றாவது அவர் எதாவது கேட்பார் நான் அதற்கு பதில் மட்டுமே சொல்லுவேன். மற்றபடி எங்களுக்குள் எந்த உரையாடலும் நடக்காது.
நேற்று கொஞ்ச தூரம் சென்றதும் என்னிடம் எதோ கேட்டார். எனக்கு காற்றின் சத்ததில் சரியாக புரியவில்லை
“கேட்கலே ண்ணா.. என்ன கேட்டீங்க?”
“நமக்கு எத்தன கொழந்தீங்க சார்?”
உறைந்து போய்விட்டேன்.
கடல் அலைகள்... பறவைகள்... புயலில் சிக்கிய தென்னைமரம்... என சகலமும் அப்படியே ஃப்ரீஸ்ஸாகி நிற்கிறது.
அந்த மனுஷன் “கல்யாணமாகிடுச்சா?”னு கேட்டிருந்தா கூட பரவாயில்லை! இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டார்.
நமக்கு அவ்வளவு வயசாகிடுச்சா? என யோசித்தால் ஆம் இப்பொழுதெல்லாம் டீவி பார்ப்பதில்லை... முக்கியமாக நான் போன வருடம் வரை பார்த்துக்கொண்டிருந்த கார்ட்டூன் எல்லாம் பார்ப்பதில்லை. நான் தவராமல் வெள்ளிக்கிழமை தினத்தந்தியின் சிறுவர் மலரை வாசிப்பேன். இப்பொழுது யோசித்தால் நான் அதை வாசித்தும் ஒரு வருடம் இருக்கும். பெரியவர்கள் பேசும் பணம் சம்பந்தபட்ட பேச்சுகள் என்னிடமும் தொற்றிக் கொண்டிருக்கிறது. சொந்தகாரர்கள் வீட்டுக்கு போகும் பொழுது எதையாவது சாப்பிட வாங்கிக்கொண்டு போக என்னை நானே நிற்பந்தப் படுத்திக்கொள்கின்றேன். யாரையும் அண்ணா அல்லது அக்கா என கூப்பிட தயக்கமாக இருக்கிறது.. காரணம் யார் நம்மைவிட பெரியவர்கள்? யார் நம்மை விட சின்னவர்கள்? என முகத்தை பார்த்து வித்யாசம் காண முடிவதில்லை. எல்லோறையும் பொத்தாம் பொதுவாக ‘ங்க’ போட்டு பேசிக்கொள்கிறேன்.
‘ஆம் எனக்கு வயசாகிவிட்டது’
இன்று அதிகாலை 4.30 மணி.
நான் எனது அம்மாவின் வீட்டிலிருந்து பாட்டி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு ஆறு மணிக்கே அலுவலகம் என்பதால் 4.30 மணிக்கெல்லாம் அழைத்துச் செல்ல கார் வந்துவிடும். பாட்டி வீட்டிற்கு தான் வரச் சொல்லியிருந்தேன்.
அந்த நேரத்தில் ரோட்டில் யாருமே இல்லை. நான் பாட்டி வீடு இருக்கும் தெருவில் நுழைந்தவுடன் அங்கு ஒரு வீட்டின் வாசலில் படுத்திருந்த கருப்பு நாய் ஒன்று அலரியடித்து எழுந்து என்னை பார்த்து குரைத்தது.
இந்த உலகத்தில் நான் பயப்படும் விஷயங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதச் சொன்னால் அதில் முதல் இடத்தில் நாய் தான் இருக்கும். சொன்னால் நம்புவீர்களா என தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன். நான் பத்தாவது படிக்கும் பொழுது காலை நேரத்திலேயே சிறப்பு வகுப்புக்கு செல்ல குறுக்கு வழி பிடித்து செல்லும் பொழுது ஒரு நாள் எனக்கு எதிரில் ஒரு வெள்ளை நாய் பொசு பொசு என மறித்து நின்றது. பெரிய நாய் எல்லாம் கிடையாது. குட்டி தான். நான் ஆடாமல் அசையாமல் அரை மணி நேரம் அப்படியே ஆணி அடித்த மாதிரி நின்றிருந்தேன். அந்த நாயே டயர்டாகி உட்கார்ந்து விட்டது. கடைசியாக அங்கு என்னை ரொம்ப நேரமாக கவணித்த ஒரு நல்லவர் அந்த நாயை ‘ச்சூ’ என ஒரே வார்த்தையில் துரத்திவிட்டார். அது என்னமோ எனக்கு அந்த ‘ச்சூ’ மட்டும் சொல்ல வரவே வராது.
அப்படியொரு மாவீரனை இன்று ஒரு நாய் அதுவும் யாருமே இல்லாத தெருவில் எதிர்த்து நிற்கிறது. ஆனால் இந்த முறை நான் பயந்து நிற்கவில்லை. பயத்தை உள்ளே புதைத்துவிட்டு துணிந்து நடந்தேன்.
நாய் தெருவிளக்கு வெளிச்சத்தில் நடு ரோட்டில் வந்து நின்று என்னை பார்த்து சத்தமாக குரைத்தது. அந்த சத்தம் காலியான அந்த தெரு முழுவதும் எதிரொலித்து ஒரு அமானுஷ்யமான பயத்தை கொடுத்தது.
நான் நடுரோட்டில் நெஞ்சை நிமிர்த்தி அந்த நாயை நேருக்கு நேர் எதிர்கொண்டு நடந்தேன்.
அது என்னை விட்டு ஒரு பத்தடி ஓடி அடுத்த தெருவிளக்கு வெளிச்சத்திற்கு நின்று திரும்பி என்னை பார்த்து குரைத்தது.
நான் பாக்கெட்டிலிருந்து என்னுடைய அடையாள அட்டையை எடுத்து அதன் கயிரை சாட்டை போல பிடித்து கொண்டவாறே நடந்தேன்.
நான் அருகிள் வரவும் அது மருபடியும் என்னை விட்டு கொஞ்சம் ஓடி அடுத்த மின் விளக்குக்கு இருக்கும் இடம் சென்று திரும்பி நின்று குரைத்தது.
இப்படியே ஐந்து மின் கம்பம் வரை ஓடி குரைத்தது. அதன் பிறகு எந்த மின் விளக்கும் எரியவில்லை. இருட்டாக இருக்கவும் கொஞ்சம் பக்கென இருந்தது.
இன்னும் கொஞ்ச தூரம் தான். என் பாட்டி வீடு பக்கத்தில் வந்து விட்டது. இன்னும் நாலு வீடு தான். தாண்டி விட்டால் தப்பித்தேன் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே தூரத்தில் எரிந்து கொண்டிருந்த ஒரு மின் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்த காட்சி இடியென இறங்கியது..
மொத்தம் ஆறு அல்லது ஏழு நாய்கள் இருக்கும். ஓடி வந்து கொண்டிருந்தன.
நான் அப்படியே உரைந்துபோய் நின்றுகொண்டிருந்தேன். அத்தனை நாய்களும் ஏற்கனவே இருந்த கருப்பு நாயுடன் சேர்ந்து பயங்கரமாக குரைத்தது.
அவ்வளவு தான்.
எனக்கு சகலமும் அடங்கி விட்டது.
வெக்கமே படவில்லை. போனை எடுத்து பாட்டி வீட்டுக்கு அழைத்தேன். விஷயத்தை சொன்னேன்.
பாட்டி வீட்டில் லைட் எரிவது எனக்கு தெரிந்தது.
என் எழுபது வயது பாட்டியும் என் மாமாவும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து ‘ச்சூ’ என்றார்கள். எல்லா நாயும் ஆளுக்கொரு திசையில் ஓடி விட்டது.
நான் பல் எல்லாம் தெரிய சிரித்துக்கொண்டே வந்தேன். அவர்களும் சிரித்தார்கள்.
ஹா ஹா.
‘எவன் சொன்னது எனக்கு வயசாயிடுச்சுன்னு?’
நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம்மை அப்படி நினைக்க நிர்பந்தப் படுத்துகிறார்கள். நாமும் நம்மை நாமே பெரியவர்கள் என கேனத்தனமாக நினைத்துக்கொண்டு நடிக்க ஆரம்பித்து பிறகு அதுவே இயல்பாக மாறி உண்மையாகவே ஒரு நாள் நம்மை முழுவதும் அந்த பிம்பத்தில் தொலைத்துவிடுகிறோம்.
No comments:
Post a Comment