Sunday, 7 October 2018

மூன்று புத்தகங்களும் முடிவில்லா ஓட்டமும்



வெள்ளிக்கிழமை மாலை

இருட்ட ஆரம்பித்திருந்தது.

வேலை முடிந்து அலுவளக கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தேன்.

சில கட்டிடங்கள் தள்ளி ஒரே கூட்டமாக இருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே எதோ கார்பரேட் சந்தை என தெரிந்தது. எப்படியும் பத்துக்கு ஒன்பது கடை பெண்களுக்கானதாக தான் இருக்கும், நமக்கு அங்கே ஒரு வேலையும் இல்லை என நடக்க ஆரம்பித்தேன்.

சரி நாம் அப்படி வேக வேகமாக ரூமுக்கு போய் மட்டும் என்ன கிழித்துவிட போகிறோம் என யோசித்தேன். கிழிக்க ஒன்னும் இல்லை என்பதால் அந்த சந்தையை நோக்கி நடந்து சென்று சேர்ந்தேன். நான் நினைத்தபடி தான் எல்லாம் பெண்களுக்கு.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆண்களுக்கு இரண்டு ஜீன்ஸ் கடைகள். அது அவர்கள் தவறு ஒன்றுமில்லை. வாங்க ஆள் இல்லாமல் கடை போட்டு என்ன செய்வார்கள். இப்பொழுது கூட அந்த இரண்டு கடைகளை தவிற மற்ற கடைகளில் கூட்டம் அள்ளுது.

காதனி கடை, செருப்பு கடை, குர்தி கடை, என ஒவ்வொன்றாக தாண்டி நடந்தேன். ஒரு கடையில் ஹேங்கரில் தொங்கவிட பட்ட துனியை ஒரு பெண் கையில் பிடித்துக்கொண்டு பக்கத்திலிருந்த பையனிடம் காட்டி “இது எப்படி இருக்கு?” என்றாள். அது மிக லேசான துணியில் அந்த பக்கம் இருப்பவர்களின் முகம் தெரியுமளவு இருந்தது. பார்க ஷார்ட் ஸ்கர்ட் போல இருக்க, இவ்வளவு லேசான உடையை எப்படி?... என நினைக்கும் முன்னரே அந்த பெண் அதை எடுத்து கழுத்து அருகிள் வைத்து அளவு பார்த்தது.

‘மிஸ்டர். பிரபு மித்ரன்.. உங்களுக்கு இதில் அறிவு அவ்வளவு தான்’

கடைசி கடையாக ஒரு மூலையில் புத்தக கடை இருந்தது. ஓடி ஓடி எல்லோரும் புத்தகங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அங்கு ஒரு கிலோ புத்தகம் 200 ரூபாய் என எழுதியிருந்தது. நானும் ஜோதியில் அயிக்கியமாகி தேடி மூன்று புத்தகங்களை எடுத்து எடை போட்டேன். ஒரு கிலோவுக்கு கொஞ்சம் கம்மியாக இருந்தது. 180 ரூபாய் கொடுத்துவிட்டு மூன்று புத்தகங்களை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

அந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை கடந்து மெயின் ரோட்டுக்கு வர ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும். தினமும நடப்பது தான் என்பதால் ஹெட் செட்டில் பாட்டுடன் நடந்து போய்கொண்டிருந்தேன். அங்கு இருக்கும் அத்தனை அலுவளக கட்டிடங்களிலிருந்தும் வீக் என்டு பார்ட்டி மோடில் நூற்றூக்கனக்கான பேர் எனக்கு முன்னாலும் பின்னாலும் இந்த அலங்கார உலகத்திலிருந்து நிஜ உலகத்தை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தனர்.

யாரோ பின்னாலிருந்து என் கையை தொட்டு கூப்பிடவும் நடந்து கொண்டே திரும்பிப் பார்த்தேன். ஒரு நடுத்தர வயது மனிதர் எனது வேகத்துக்கு நடந்தவாரே

“சார்.. சாப்பாடு வாங்கி..” என அவர் முடிக்கும் முன்னரே நான் கையையும் தலையையும் ஒரு சேர முடியாது என ஆட்டிவிட்டு அதே வேகத்தில் நடந்தேன்.

ஒரு பத்து பதினைந்து அடி நடந்திருப்பேன். அவர் என்ன என்னிடம் கேட்டார் என்பதே அப்பொழுது தான் என் மூளைக்கே எட்டுகிறது. அதற்குள் முடியாது என்பது என்னையும் மீறி பதிலாக வந்துவிட்டது. சட்டென நின்று திரும்பி பார்த்தேன். அவர் நான் வந்த திசையில் வேகமாக போய்க் கொண்டிருந்தார்.

இதே போல நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு இரவு வேளையில் நான் அலுவலகம் விட்டு ரூமிற்கு வேகமாக சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதானவர் என் கையை தொட்டு கூப்பிட்டு “தம்பி பஸ்ஸுக்கு காசு பத்தலே...” என முடிக்கும் முன்னறே முடியாது என தலையை ஆட்டிவிட்டு நடந்து கொஞ்ச தூரம் சென்று விட்டேன். ஒரு வேளை அவர் சொன்னது உண்மையாக இருந்து நான் காசு கொடுத்தால் அவர் வீட்டுக்கு சென்றிருப்பாரே!! கொடுத்திருக்கலாமோ என யோசித்து திரும்பி போய் ரொம்ப நேரம் அவரை தேடி அலைந்து அவர் கிடைக்கவேயில்லை. எப்பவாவது அது ஞாபகத்திற்கு வந்து உறுத்தும்.

இப்பொழுதும் அதே போல நடக்கிறது. இந்த முறை பசி என ஒருவர் என்னிடம் சாப்பாடு கேட்டு முடியாது என சொல்லிவிட்டேன். ஒரு வேலை அவர் சொன்னது உண்மையாக இருந்து பசியுடன் என்னிடம் கேட்டிருப்பாரேயானால் நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். இந்த முறை அது நடக்காது. உடனே திரும்பி அவர் போய் கொண்டிருந்த திசையை நோக்கி நடந்தேன். அந்த கூட்டத்தில் அவர் போட்டிருந்த ரெயின் கோட்டும் கையில் பச்சை நிற காகித பையும் அவரை என் கண் பார்வையிலிருந்து நீங்காமல் பின் தொடர உதவியது.

ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று அவரை தொட்டு அழைத்து

“என்ன கேட்டீங்க?” என்றேன்.

ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்துவிட்டு சொன்னார்

“என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டனும் சார்.. ஒருத்தர் ஹெல்ப் பன்றேன்னு சொல்லி இங்க வர சொன்னாரு. நான் நேத்து நைட்டே ஊருல இருந்து வந்துட்டேன் சார்.. ரயில்வே ஸ்டேஷன்ல படுத்து எந்திருச்சு இங்க காலைல இருந்து வெயிட் பன்றேன்.. அவருக்கு ஃபோன் பன்னுனா போக மாட்டிங்குது.. காலைல இருந்து இங்கயே நிக்குறேன்.. ரொம்ப பசிக்குது சார்”

“சரி வாங்க.. முதல்ல சாப்பிடுங்க” என சொல்லி அங்கு உள்ளேயே ஒரு வேனில் வைத்து நடத்தப்படும் தோசை கடை இருக்கும். அங்கு அழைத்துச் சென்றேன்.

“ரெண்டு மசால் தோசை சொல்லட்டுமா?” என்றேன்

“சார் ரைஸ் இருக்குமா” என தயங்கியவாரு கேட்டார்

“இங்க தோசை மட்டும் தான் இருக்கும்.. ரைஸ் இருக்காதே”

“இல்லே சார்.. தப்பா நெனைக்காதீங்க.. தோசை சாப்பிட்ட நெஞ்சு எரியும்” என்றார்.

சரி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாதவர் இப்படி சொல்லும் பொழுது நான் என்ன சொல்ல முடியும். பக்கத்தில் ஃபுட் கோர்ட் இருக்கும், அங்கு அழைத்துச் செல்லலாம் என நடந்தேன். எப்படியும் அங்கு பயங்கற விலையாக இருக்கும். அதற்கு பதில் பணம் கொடுத்துவிடலாம். அதை வைத்து வெளியே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என தோன்றியது. அதே சமையம் என் மூளையின் ஒரு ஓரத்தில் இவர் பொய் சொல்கிறாரோ எனவும் சந்தேகமிருந்தது. இருந்தாலும் அதையும் மீறி சாப்பிட தானே கேட்கிறார் என நினைத்து

“இங்க இவ்வளவு விலை குடுத்து அவங்க குடுக்குற கொஞ்ச ரைஸ் சாப்பிடுறதுக்கு நீங்க வெளியவே சாப்பிட்டுக்கோங்க.. நான் பணம் குடுக்குறேன்” என சொல்லிவிட்டு நூறு ரூபாயை எடுத்து கொடுத்தேன்.

சத்தியாமாக நூறு ரூபாய் எனக்கு ரொம்ப பெருசு தான். இரண்டு வாரத்திற்கு முன்பு முப்பது ரூபாய் செலவாகுமென மொட்டை வெயிலில் இரண்டரை கிலோ மீட்டர் நடந்தே சென்றேன். நான் இவருக்கு இங்கு வாங்கிக்கொடுப்பதாக சொன்ன இரண்டு தோசையின் விலை 100 ரூபாய். அதை சொல்லும் பொழுதே அது அவருக்கு ஒதுக்கபட்ட பணமாகி விடுகிறது. அதனால் எடுத்து கொடுத்தேன்.

அதை வாங்கிக்கொண்டவர்

“சார் இன்னும் அம்பது ரூபா குடுத்தீங்கன்னா நான் சாப்பிட்டு ஊருக்கே போயிடுவேன்” என்றார்.

எனக்கு கோபம் தான் வந்தது

“நீங்க பசிக்குதுனு சொன்னீங்க.. நான் சாப்பிட கூப்பிட்டு வந்தேன். என்னால உங்களுக்கு சாப்பிட என்ன குடுக்க முடியுமோ குடுத்துட்டேன். வர்ரேன்”

என கிளம்பினேன்

“சார்...சார்.. யாரு கிட்ட கேட்டும் குடுக்கல சார்.. கொஞ்சம் ஹெல்ப் பன்னுங்க...”

“நீங்க முதல்ல வெளியே போய் சாப்பிட்டு ஊருக்கு கிளம்புங்க.. வாங்க” என அழைத்துக்கொண்டு நடந்தேன்

“எந்த ஊரு?”

“‘கோலார்’ சார்.. இங்கிருந்து 90 கிலோமீட்டர்”

“யாருனே தெரியாத ஒருத்தர் கூப்பிட்டாங்கனு எப்படி கிளம்பி வந்தீங்க”

“என் பையன் செக்கெண்டு ஸ்டேண்டர்ட் படிக்குறான் சார்.. ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாம கஷ்ட படுறேன்னு என் ஃப்ரெண்டு ஒருத்தர் இந்த நம்பர குடுத்து ஃபோன் பண்ணி கேளு ஹெல்ப் பன்னுவாங்கனு சொன்னாரு.. போன் பன்னுனா அவரு பையனோட ஸ்கூல்ல இருந்து லெட்டர் வாங்கிட்டு இங்க வர சொன்னாரு.. வந்துட்டு ஃபோன் பன்னுனா போகவே மாட்டேங்குது சார்”

“என்ன லெட்டர்?”

அவர் கையிலிருந்த பச்சை நிற கவரிலிருந்து மடித்து வைத்த காகிதத்தை நீட்டினார்.

“இதான் சார்”

அது ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் லெட்டர் பேட். அதில் புத்தகம், சீருடை, டியூஷன் என வரிசையாக எழுதி கடைசியாக மொத்தம் என பதினெட்டாயிரத்துச் சில்லரை என கோடிட்டிருந்தது.

அவரை பார்த்தேன்.

மாதக் கணக்கான சிகை வலைந்து நெழிந்து காதுக்கு பின்னால் வரை நீண்டிருந்தது. ஒரு கருப்பு ஃப்ரேம் கண்ணாடி அணிந்திருந்தார். அளவில் பெரிய ரெயின் கோட் போட்டிருந்ததால் அதனுல் அவர் குட்டியாக தெரிந்தார்.

லெட்டரை திரும்பவும் பார்த்தேன்

அதில் தேதி என்ற இடத்தில் 6/1/2018 என இருந்தது.

“என்னங்க இப்போ வாங்குன லெட்டர்னு சொல்லிட்டு நாலு மாசத்துக்கு முன்னாடி வாங்குனதெ காட்டுறீங்க... இந்தாங்க புடிங்க.. நான் கிளம்புறேன். நீங்க சாப்பிட்டு போங்க”

உண்மையாகவே கோபத்துடன் தான் சொன்னேன். எனக்கு இவ்வளவு சந்தேகத்துக்கு காரணம் நான் ஏற்கனவே ஒருத்தருக்கு இப்படி பாவப்பட்டு பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறேன். அவன் டிப் டாப் உடையணிந்திருந்தான். பர்ஸ் தொலைந்துவிட்டது என கெஞ்சினான். அடுத்த நாள் அதே இடத்திற்கு வந்து பணத்தை திரும்ப கொடுகிறேன் என்று மொபைல் நம்பர் கொடுத்தான். அவனுடைய மொபைலில் ச்சார்ஜ் இல்லாமல் ஆஃப்பாகி விட்டது என சொல்லி அவன் நம்பரை என்னிடம் கொடுத்தான். நான் அடுத்த நாள் போன் செய்த பொழுதும் அது ஆஃபில் தான் இருந்தது. பணம் போனதை பற்றி கவலையில்லை. ஒருவரின் இரக்கத்தை பலவீணமாக நினைத்துவிட்டதில் தான் கோபம்.

நான் வேகமாக நடந்தேன்

அவரும் பதட்டத்துடன் பேசிக்கொண்டே பின்னால் வந்தார்

“சார் இவ்வளவு உதவி பண்றீங்க.. உங்க கிட ஏன் சார் பொய் சொல்லனும்.. அது ஸ்கூல்ல குடுத்தது சார்.. வேனும்னா ஐடி ப்ரூஃப் பாருங்க” என அவரோட வோட்டர் ஐடி, அவர் மனைவியின் ஆதார் அட்டை, பையனின் ஸ்கூல் ஐடி என ஒவ்வொன்றாக எடுத்து காட்டினார்.

6/1/2018 என்பது பள்ளி விடுமுரை விட்டு திறந்த தேதியாக இருக்கலாம் என்பது நினைவுக்கு வந்தது. நான் நடையின் வேகத்தை குறைத்தேன்

“என்ன வேலை செய்யுறீங்க?”

“கிலீனர் சார்.. வீடு, பாத்ரூம், ஃப்லோர் எல்லாமே பண்ணிகுடுக்குறேன்.. என் வைஃப் பூ கட்டி விக்குறாங்க”

“ஒரே பையனா?”

“இல்ல சார்.. ஒரு பொண்ணு ஒன்னு இருக்கு. அவ எல்.கே.ஜி படிக்குறா”

“எதுக்குங்க இவ்ளோ ஃபீஸ் கட்டி படிக்க வைக்குறீங்க?”

நான் எப்பொழுதும் இந்த கேள்வியை உயர் நடுத்தர குடும்பங்களின் பெற்றோரை பார்த்து கேட்டிருக்கிறேன். ஏனோ இந்த முறை இவரிடம் கேட்டவுடன் தப்பாக கேட்டுவிட்டோமோ என தோன்றியது.

“என் பையனுக்கு இந்த நிலைமை வந்திட கூடாதுனு தான் சார்” என நடந்துகொண்டே சொன்னார்.

படித்தவர்களின் நிலைமை மாறுவதில்லை. இடம் மட்டுமே மாறுகிறது. இவர் எந்த நம்பிக்கையில் யாரோ தெரியாதவரின் பின்னால் பணம் கிடைத்துவிடாதா என ரோட்டோரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாரோ அதே தான் இங்கு கண்ணாடி கட்டிடங்களில் ப்ராண்டட் துணிகளுடன் ப்ரமோஷனுக்காகவும், ரேட்டிங்குக்காகவும், ஹைக்குக்காகவும் அது கிடைத்தால் லோன், ஈ.எம்.ஐ அடைத்துவிடலாம் என நம்பி எவனுக்கோ கூலைக்கும்பிடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சாப்பிட கூட கையில் காசு இல்லாதவரிடம் இந்த வியாக்காணங்கள் பேசமளவு நான் இங்கிதமற்றவனில்லை. அவருக்கு அவரின் பொருளாதார நிலைமையிலிருந்து அடுத்த இடத்திற்கு முன்னேற ஓரே வழி அந்த குழந்தையின் படிப்பு மட்டும் தான் என நம்புகிறார். அது உண்மையும் கூட.

எனக்கு அதன் விலையின் மீது தான் அதிக விமர்சணம்.

சரி இன்னும் ஐம்பது ரூபாய் தானே. கொடுத்து விடலாம் என நினைத்துக்கொண்டேன்.

அவர் பஸ் ஏறுவதற்கு வெளியே செல்ல வேண்டும். நான் ரோட்டை கடந்து எதிர் பக்கம் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் நடை பாலத்தில் செல்ல வேண்டும்.

அதன் மேல் ஏறுவதற்கு நகரும் படிக்கட்டுகள் இருக்கிறது. அந்த இடம் வந்தவுடன் நான் நின்றேன். அவரும் நின்றார். நான் கொடுத்த நூறு ரூபாய் அவர் கையில் இருந்தது

“இன்னும் ஐம்பது ரூபாய் கேட்டீங்கள்ளே.. குடுக்குறேன்.. ஊருக்கு போங்க. இனி இப்படி தெரியாதவங்கள நம்பி எல்லாம் வராதீங்க.. வீட்டுல குடும்பம் இருக்குள்ளே.. இப்படி இங்க சுத்திக்கிட்டு இருகீங்க..”

என சொல்லிக்கொண்டே பர்ஸ்ஸை எடுத்தேன்

இந்த மாத வாடகை பணமிருந்தது. அது போக அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த பத்து ரூபாய் நோட்டுகளை பொறுக்கி ஐம்பது ரூபாயை நீட்டினேன். அதில் ஒன்று கிழிந்திருக்கவும் அதை பாக்கெட்டில் வைத்துகொண்டு மறுபடியும் தேடி ஒரு பத்துரூபாய் காசை அதனுடன் சேர்த்து கொடுத்தேன்.

“சார்.. இன்னொரு ஐம்பது ரூபாய் சேர்த்து நூறு ரூபாவா குடுத்தீங்கன்னா சாப்பிட்டு ஊருக்கு போயிடுவேன்.. இது பஸ்ஸுக்கு மட்டும் தான் பத்தும்” என்றார்.

இந்த முறை செம கடுப்பானது. பொய் தான் சொல்வது போல தோன்றியது. அதற்கு குடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாதே

“நீங்க அங்க ஐம்பது ரூபாய் இருந்தா சாப்பிட்டு ஊருக்கு போயிடுவேன்னு சொன்னதால தான் இப்போ குடுக்குறேன். இதுவே என்னால குடுக்க முடிஞ்சதுக்கும் மேல தான். புரிஞ்சுக்கோங்க”

“இல்லே சார் நான் நூறு ரூபாய் தான் சொன்னேன். இங்க வேற யார் கிட்டயும் கேட்க முடியல சார்.. ப்லீஸ் சார்”

“இங்க பாருங்க.. நீங்க பசினு சொன்னதால தான் கவனிக்காம போனவன் அவ்ளோ தூரம் திரும்ப வந்தேன். அப்பறம் பஸ்ஸுக்கும் கேட்டீங்கனு இப்போ குடுத்திருகிறேன். எங்கிட்ட இனி பணம் இல்லை. வாடகை பணம் தான் இருக்கு. ப்லீஸ் திரும்ப கேட்டு கஷ்ட படுத்தாதீங்க” என சொல்லிவிட்டு விருட்டென அந்த இடத்திலிருந்து நடந்து நகரும் படிக்கட்டில் ஏறினேன். அது மேல் நோக்கி என்னை நகர்த்தியது. பாதி தூரம் போனதும் திரும்பி கீழே பார்த்தேன்.

அந்த மனிதர் தனது கண்ணாடியை கலட்டி ஒரு கையில் பிடித்துக்கொண்டு தனது சட்டையை இழுத்து இரண்டு கண்களையும் மாறி மாறி துடைத்துக்கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தார்.

அந்த காட்சி பயங்கரமாக வலித்தது.

நான் முதல் முறை என்னை அழைத்து முடியாது என சொல்லிவிட்டு போன பொழுதே போயிருந்தால் கூட இவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது. இவ்வளவு தூரம் முயன்று கூட என்னால் கடைசியில் ஒருவரை கண்கலங்க வைத்துவிட்டு தான் வர முடிந்தது என்பதை நான் எப்படி எடுத்துக்கொள்வது.

நடந்ததை யோசித்து பார்க்கிறேன். நான் முதல் தடவை அவரை தேடி அவர் பின்னால் சென்றேனே.. அவர் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தார்.. அத்தனை பேர் அவரை சுற்றி நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒருத்தரிடம் கூட அவர் எதுவும் கேட்கவில்லை.

அந்த கூட்டத்தில் அவர் ஏன் என்னிடம் வர வேண்டும்.

சிலவற்றை ஏன்..எதற்கு..எப்படி என்ற கேள்விகளுக்குள் அடைக்க முடியாது. அது எப்படியோ நடந்துவிட்டு போகட்டும். நான் மேலே இருந்து அவர் அழுது கொண்டு போன காட்சி இன்னும் சில நாட்களுக்கு உறுத்தும்.

உறுத்தட்டும்.

அப்படி உறுத்தினால் தான் அடுத்து யாராவது கேட்டால் உடனே முடியாது என தலையை ஆட்டிச் சென்றுவிட்டு பிறகு அந்த மனிதரை தேடி ஓடவேண்டியதாய் இருக்கும்.

ஓடிவிட்டு போகிறேன்.

பிரபு மித்ரன்





Thursday, 4 October 2018

ரொம்ப சின்ன சம்பவம்

ரொம்ப சின்ன சம்பவம்.
ஊருக்கு வந்திருந்தேன்.
என் நண்பனும் விடுமுறைக்கு கோவை வந்திருப்பதாக சொல்லி வீட்டுக்கு அழைத்திருந்தான். எப்பொழுதும் அவன் வந்தால் நான் இங்கிருந்து அவன் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு இருவரும் சேர்ந்து வெளியே செல்வோம். ஒரு நாள் அப்படியே போய்விடும்.
என் வீட்டிலிருந்து அவன் வீட்டிற்க்கு பைக்கில் சென்றால் அரை மணி நேரம் தான் பிடிக்கும். நான் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் பல முறை யோசிப்பேன். காரணம் பல இடங்களில் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே ஒரு வித அசௌகரியத்தை உணர்ந்துவிடுவேன். உடனே அங்கிருந்து கிளம்ப எழுந்து அவர்களையும் சங்கடப்படுத்த வேண்டியதாகிவிடும். ஆனால் இவன் வீட்டில் அது அப்படி இருக்காது. எதோ என் வீட்டை போல நினைப்பேன். அது அவனும் அவனது அம்மா அப்பாவும் அப்படி நினைக்குமளவு மாற்றியிருந்தார்கள்.
பல நேரங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அது சினிமாக்களிலும் சிறுகதைகளிலும் வரும் எளிமையான வீட்டிற்கான லட்சணங்கள் அனைத்தையும் நகலெடுத்து அமைத்தது போல இருக்கும். ரோட்டிலிருந்து இரண்டடி தாண்டியவுடன் இருக்கும் மரக் கதவை தட்டினால் சின்னதாக அடுத்தடுத்து நீண்டு இருக்கும் நான்கு அறைகள். உள்ளே நுழைந்தவுடன் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் இரண்டு படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்றில் அம்மாவும் அப்பாவும் இருப்பார்கள், என் நண்பன் ரொம்பச் சின்ன பையானாக அவர்களின் தோளில் கை போட்டுக்கொண்டு பின்னால் நிற்ப்பான். இன்னொன்று அதே போல திரும்பவும் இருபது வருடங்கள் கழித்து இப்பொழுது அவன் வேலைக்கு சென்ற பிறகு எடுத்தது. அதை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் அந்த இரண்டு படங்களுக்குள்ளும் தெரியும் சின்ன சின்ன வித்தியாசங்கள் கூட அந்த குடும்பம் கடந்துவந்த தூரத்தின் கதையைச் அவ்வளவு அழகாக சொல்லும்.
நாங்கள் கல்லூரியில் படித்த பொழுது, அதன் பிறகு வேலை இல்லாமல் இருந்த பொழுது, வேலைக்கு போன பிறகு, இவனுக்கு திருமணமான பொழுது என பல சூழ்னிலைகளில் நான் அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அவனின் திருமண வரவேற்பு அன்று மதிய வெயிலில் மொட்டை மாடியில் அமர்ந்து அவன் வேஷ்டியுடன் வாழை மரம் வரவில்லை என டென்ஷனாக என்னிடம் பேசிய பொழுது நான் அதை கண்டுகொள்ளாமல் லெமன் ஜூசை உருஞ்சி குடித்துவிட்டு ‘இன்னொன்னு எடுத்துட்டு வா’ என அங்கிருந்த ஒரு சிறுமியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
கடுப்பானவன் அதே கடுப்புடன் ‘எனக்கும் ஒன்னு எடுத்துட்டு வா’ என்றான்.
நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் வீடு வந்துவிட்டது. நான் வண்டியை நிறுத்தும் பொழுது அம்மா என்னை பார்த்து சிரித்தவாறு கடந்து பக்கத்து வீட்டிற்குச் சென்றார். வண்டி சத்தம் கேட்டு நண்பன் வெளியே வந்தான்.
நான் அவனிடம் சத்தமாக அம்மாவின் காதில் விழும்படியாக “என்னடா ‘அய்யோ வந்துட்டான்’ ங்கர மாதிரி அம்மா போறாங்க” என்றேன் விளையாட்டாக.
அம்மா சிரித்துக்கொண்டே “நான் எப்பவும் அப்படி சொல்ல மாட்டேன்” என்றார்.
உள்ளே நுழைந்ததும் அப்பா “வா பிரபுமித்ரா” என்றார். நண்பனின் மனைவி “வா பிரபு.. எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன். நல்லா இருக்கியா?”
எனக்கு அவரையும் அவர்கள் காதலிக்கும் பொழுதிருந்தே தெரியும்.
இப்பொழுது அந்த வீட்டில் அந்த நாலு நபர்களைத் தவிர இன்னொருவரும் இருந்தார். ஆக்ச்சுவலி அவர் கட்டிலில் படுத்திருந்தார்.
என் நன்பனின் மகன். பிறந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்த வீட்டில் வைத்து இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்.
எல்லோரும் என்னை அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்கள்.
“இது பாரு பிரபு மாமா.. உன் அப்பாவோட ஃப்ரெண்டு”
“டேய் இவன நல்லா பார்த்து வச்சுக்கோ.. இவன் கூட பெரியவனானா சேர்ந்துடாதே”
“இந்த மாமா உங்கிட்ட அப்பா வீட்டுல இருக்காரானு கேட்டா.. இருந்தாலும் இல்லேனு சொல்லனும்.. சரியா..!!”
என்பது போல பிரமாதமான அறிமுகம். அந்த குழந்தை புதிதாக இருந்ததால் என்னை பார்த்துக்கொண்டிருந்தது.
என் மனதில் “தயவு செஞ்சு இப்போ அழுதுடாதே டா... அப்பறம் உன் அப்பன் என்னை பார்த்து தான் நீ பயந்து அழுகுறனு சொல்லிடுவான்” என்பது தான் ஓடிக்கொண்டிருந்தது.
திடீரென வேறு யாரோ ஒருவரின் வீட்டில் இருப்பது போல ஒருவித அசௌகரியத்தை உள்ளுக்குள் உணர ஆரம்பித்தேன். அடுத்த நொடியே சரியாகிவிட்டது.
எல்லோரும் அந்த ரூமில் என்னையும் அந்த பாப்பாவையும் மட்டும் விட்டுவிட்டு சாப்பிட சென்று விட்டனர்.
ஒரு நிபந்தனையுடன்.
அதாவது அந்த குழந்தையுடன் யாரவது எதாவது பேசிக்கொண்டே இருந்தால் அது சமத்தாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்குமாம்.. யாரும் பேசவில்லை என்றால் அழுக ஆரம்பித்துவிடுமாம். அதனால் அவர்கள் சாப்பிட்டுவிட்டு வரும் வரை நான் எதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
நான் எப்பவும் போல “உங்க பேரு என்ன?” என பிறந்து இரண்டு மாதம் மட்டுமே ஆன குழந்தையிடம் ஈவு இரக்கமற்ற ஒரு கேள்வியை கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்த்து நின்றேன். அது என்னை அதிசயமாகவோ இல்லை விசித்திரமாகவோ என சரியாய் சொல்ல முடியாதபடி பார்த்துக்கொண்டிருந்தது.
அவ்வளவு நேரம் ஒரே சத்தமாக இருந்த அறை என்னை தனியாக விட்டுச்சென்ற பிறகு இப்பொழுது ஒரு சத்தமும் இல்லாமல் கம்மென இருந்தது. எனக்கு தங்கம்.... செல்லம்... மயிலு.. சுச்சூசூஊஊஊஊ என்றெல்லாம் சொல்லத் தெரியாது. வேறு என்ன சொல்ல!!!
“உங்க பேரு என்ன?”
என்றேன் மறுபடியும். கொஞ்சம் இடைவேளை விட்டு
“உங்க பேரு என்ன?”
அவன் அழ ஆரம்பிக்க போகிறான் என தோன்றியது. என்ன ஆனாலும் என்னை பார்த்து பயந்து ஒரு குழந்தை அழுததாக இருக்கக் கூடாது.. அதுவும் இவன் அழுதுவிட்டால் என் நண்பன் பூச்சாண்டி மாமா என பெயர் வைத்து வாழ்வுக்கும் கூப்பிட வைத்துவிட காத்துக்கொண்டிருக்கிறான். அதனால் என்னை பற்றி தெரிந்து எதற்கோ வச்சுக்கோ என கொடுத்துவிட்டு போன கிலுகிலுப்பையை எடுத்து ஆட்ட ஆரம்பித்தேன். அது அந்த சத்தத்தை கவனிக்க ஆரம்பித்து அதுவும் பதிலுக்கு சத்தங்களை எழுப்பியது.
உண்மையில் அது பதில் சத்தங்கள் அல்ல. அவன் அந்த சத்தங்களை மறு உருவாக்கம் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறான் என்பது சில நிமிடங்களுக்கு பிறகு புரிய ஆரம்பித்தது. என் நண்பன் சாப்பிட்டு முடித்து வந்தவன் “ஏண்டா சின்ன குழந்தைகிட்ட போய் பேரு என்னனு கேட்குறியே?? அது எப்படிடா சொல்லும்... அதுகிட்ட பேசனும்டா.. கேள்வி கேட்க கூடாது” என்றான்.
சொல்லிவிட்டு குழந்தையிடம் போய் “தங்கம் என்ன பண்றீங்க? பசிக்குதா செல்லத்துக்கு?” என கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தான்.
இருந்தாலும் நம்ம கேள்வி அளவுக்கு மோசம் இல்லைதான். ஒத்துக்கொண்டுதானாக வேண்டும்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருதோம்.
அவனது கேமராவில் குழந்தையை சில புகைப்படங்கள் எடுத்தேன். பேசிக்கொண்டிருந்தோம். ஸ்கூலுக்கு அட்மிஷன் வாங்கிடு என அவனை சீண்டிக்கொண்டும் வேறு என்னென்னவோ சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தேன்.
எங்கிருந்தோ திடீரென அந்த உணர்வு சட்டென மூளையில் பாய்ந்து கடந்தது.
நான் கொஞ்சம் டியூப் லைட். லேட்டாகதான் எரியும்.
எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி அங்கு இருப்பதை உள்ளுணர்வு சொல்லியது. அடுத்த நொடி சொன்னேன்
“நான் கிளம்புறேன்டா”
“சாப்பிட்டுட்டு போடா”
“இல்லடா கிளம்புறேன்”
இவ்வளவு வருடங்கள் நண்பனைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்த அந்த வீடு இப்பொழுது அந்த குழந்தையைச் சுற்றி இயங்குவதை கவனித்தேன்.
புது கதாநாயகன் வந்துவிட்டதால்
இவ்வளவு நாட்கள் கதாநாயக நாயகியாக இருந்தவர்களுக்கு குணச்சித்திர கதாப்பாத்திரங்களையும்
குணச்சித்திர பாத்திரத்தில் இருந்தவர்களுக்கு கவுரவ தோற்றத்தையும் காலம் வழங்கியிருக்கிறது.
குடும்பம் அப்படிதான் யாரவது ஒருவரைச் சுற்றி இயங்கும். அந்த ஒருவருக்கு எது பிடிக்கும்?, யாரை பிடிக்கும்?, அவர் என்ன நினைப்பார்?, அவர் இதற்கு என்ன சொல்லுவார்?, அவருக்கு இது பிடிக்குமா?, இப்படி மற்றவர்கள் எது செய்தாலும் அது அவரைச் சுற்றியே அந்த குடும்பம் அமைத்துக்கொள்ளும். சில கால இடைவெளிக்கு பிறகு அது வேறு ஒருவரைச் சுற்ற ஆரம்பிக்கும். பதவிகள் இடம்மாறும்.
தங்களின் முக்கியதுவத்தை அங்கு நிலைநாட்ட எதோ ஒரு வகையில் அந்த முக்கிய நபருக்கு நெருக்கமாக இருந்துவிட வேண்டும். அதானாலோ என்னவோ தாத்தா பாட்டிகள் எல்லாம் தன் மகன் மகளுக்கு காட்டாத அன்பையும் சுதந்திரத்தையும் பேரன் பேத்தியிடம் கொடுத்து அந்த குடும்பத்தில் தங்கள் பாத்திரத்தை உறுதி செய்து கொள்கிறார்கள்.
என்னைப் போன்ற கவுரவ தோற்றத்தில் இருந்தவன் இந்த கதையிலிருந்து கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு மதிய வெய்யிலில் வீட்டுக்குக் கிளம்பினேன்.
அது அப்படிதான்.
எப்பொழுதும் அப்படிதான்.
குடும்பம் தனக்கான கதாப்பாத்திரங்களை காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும்.

பிரபு மித்ரன்









Related Articles