ரொம்ப சின்ன
சம்பவம்.
ஊருக்கு
வந்திருந்தேன்.
என் நண்பனும்
விடுமுறைக்கு கோவை வந்திருப்பதாக சொல்லி வீட்டுக்கு அழைத்திருந்தான். எப்பொழுதும்
அவன் வந்தால் நான் இங்கிருந்து அவன் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம்
இருந்துவிட்டு பிறகு இருவரும் சேர்ந்து வெளியே செல்வோம். ஒரு நாள் அப்படியே
போய்விடும்.
என்
வீட்டிலிருந்து அவன் வீட்டிற்க்கு பைக்கில் சென்றால் அரை மணி நேரம் தான்
பிடிக்கும். நான் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் பல முறை யோசிப்பேன்.
காரணம் பல இடங்களில் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே ஒரு வித அசௌகரியத்தை
உணர்ந்துவிடுவேன். உடனே அங்கிருந்து கிளம்ப எழுந்து அவர்களையும் சங்கடப்படுத்த
வேண்டியதாகிவிடும். ஆனால் இவன் வீட்டில் அது அப்படி இருக்காது. எதோ என் வீட்டை போல
நினைப்பேன். அது அவனும் அவனது அம்மா அப்பாவும் அப்படி நினைக்குமளவு
மாற்றியிருந்தார்கள்.
பல நேரங்களில்
ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அது சினிமாக்களிலும் சிறுகதைகளிலும் வரும் எளிமையான
வீட்டிற்கான லட்சணங்கள் அனைத்தையும் நகலெடுத்து அமைத்தது போல இருக்கும். ரோட்டிலிருந்து
இரண்டடி தாண்டியவுடன் இருக்கும் மரக் கதவை தட்டினால் சின்னதாக அடுத்தடுத்து நீண்டு
இருக்கும் நான்கு அறைகள். உள்ளே நுழைந்தவுடன் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும்
இரண்டு படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்றில் அம்மாவும் அப்பாவும்
இருப்பார்கள், என் நண்பன் ரொம்பச் சின்ன பையானாக அவர்களின் தோளில் கை
போட்டுக்கொண்டு பின்னால் நிற்ப்பான். இன்னொன்று அதே போல திரும்பவும் இருபது
வருடங்கள் கழித்து இப்பொழுது அவன் வேலைக்கு சென்ற பிறகு எடுத்தது. அதை ஒவ்வொரு
முறை பார்க்கும் பொழுதும் அந்த இரண்டு படங்களுக்குள்ளும் தெரியும் சின்ன சின்ன
வித்தியாசங்கள் கூட அந்த குடும்பம் கடந்துவந்த தூரத்தின் கதையைச் அவ்வளவு அழகாக
சொல்லும்.
நாங்கள்
கல்லூரியில் படித்த பொழுது, அதன் பிறகு வேலை இல்லாமல் இருந்த பொழுது, வேலைக்கு போன
பிறகு, இவனுக்கு திருமணமான பொழுது என பல சூழ்னிலைகளில் நான் அந்த வீட்டிற்கு
சென்றிருக்கிறேன். அவனின் திருமண வரவேற்பு அன்று மதிய வெயிலில் மொட்டை மாடியில்
அமர்ந்து அவன் வேஷ்டியுடன் வாழை மரம் வரவில்லை என டென்ஷனாக என்னிடம் பேசிய பொழுது
நான் அதை கண்டுகொள்ளாமல் லெமன் ஜூசை உருஞ்சி குடித்துவிட்டு ‘இன்னொன்னு எடுத்துட்டு
வா’ என அங்கிருந்த ஒரு சிறுமியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
கடுப்பானவன் அதே
கடுப்புடன் ‘எனக்கும் ஒன்னு எடுத்துட்டு வா’ என்றான்.
நினைத்துக்கொண்டிருக்கும்
பொழுதே அவன் வீடு வந்துவிட்டது. நான் வண்டியை நிறுத்தும் பொழுது அம்மா என்னை
பார்த்து சிரித்தவாறு கடந்து பக்கத்து வீட்டிற்குச் சென்றார். வண்டி சத்தம் கேட்டு
நண்பன் வெளியே வந்தான்.
நான் அவனிடம்
சத்தமாக அம்மாவின் காதில் விழும்படியாக “என்னடா ‘அய்யோ வந்துட்டான்’ ங்கர மாதிரி
அம்மா போறாங்க” என்றேன் விளையாட்டாக.
அம்மா
சிரித்துக்கொண்டே “நான் எப்பவும் அப்படி சொல்ல மாட்டேன்” என்றார்.
உள்ளே
நுழைந்ததும் அப்பா “வா பிரபுமித்ரா” என்றார். நண்பனின் மனைவி “வா பிரபு.. எப்படி
இருக்கே?”
“நல்லா
இருக்கேன். நல்லா இருக்கியா?”
எனக்கு அவரையும்
அவர்கள் காதலிக்கும் பொழுதிருந்தே தெரியும்.
இப்பொழுது அந்த
வீட்டில் அந்த நாலு நபர்களைத் தவிர இன்னொருவரும் இருந்தார். ஆக்ச்சுவலி அவர்
கட்டிலில் படுத்திருந்தார்.
என் நன்பனின்
மகன். பிறந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும்
இந்த வீட்டில் வைத்து இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்.
எல்லோரும் என்னை
அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்கள்.
“இது பாரு பிரபு
மாமா.. உன் அப்பாவோட ஃப்ரெண்டு”
“டேய் இவன நல்லா
பார்த்து வச்சுக்கோ.. இவன் கூட பெரியவனானா சேர்ந்துடாதே”
“இந்த மாமா
உங்கிட்ட அப்பா வீட்டுல இருக்காரானு கேட்டா.. இருந்தாலும் இல்லேனு சொல்லனும்..
சரியா..!!”
என்பது போல
பிரமாதமான அறிமுகம். அந்த குழந்தை புதிதாக இருந்ததால் என்னை பார்த்துக்கொண்டிருந்தது.
என் மனதில் “தயவு
செஞ்சு இப்போ அழுதுடாதே டா... அப்பறம் உன் அப்பன் என்னை பார்த்து தான் நீ பயந்து
அழுகுறனு சொல்லிடுவான்” என்பது தான் ஓடிக்கொண்டிருந்தது.
திடீரென வேறு யாரோ
ஒருவரின் வீட்டில் இருப்பது போல ஒருவித அசௌகரியத்தை உள்ளுக்குள் உணர ஆரம்பித்தேன்.
அடுத்த நொடியே சரியாகிவிட்டது.
எல்லோரும் அந்த
ரூமில் என்னையும் அந்த பாப்பாவையும் மட்டும் விட்டுவிட்டு சாப்பிட சென்று
விட்டனர்.
ஒரு
நிபந்தனையுடன்.
அதாவது அந்த
குழந்தையுடன் யாரவது எதாவது பேசிக்கொண்டே இருந்தால் அது சமத்தாக வேடிக்கை
பார்த்துகொண்டு இருக்குமாம்.. யாரும் பேசவில்லை என்றால் அழுக ஆரம்பித்துவிடுமாம்.
அதனால் அவர்கள் சாப்பிட்டுவிட்டு வரும் வரை நான் எதாவது பேசிக்கொண்டே இருக்க
வேண்டும்.
நான் எப்பவும்
போல “உங்க பேரு என்ன?” என பிறந்து இரண்டு மாதம் மட்டுமே ஆன குழந்தையிடம் ஈவு
இரக்கமற்ற ஒரு கேள்வியை கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்த்து நின்றேன். அது என்னை
அதிசயமாகவோ இல்லை விசித்திரமாகவோ என சரியாய் சொல்ல முடியாதபடி
பார்த்துக்கொண்டிருந்தது.
அவ்வளவு நேரம்
ஒரே சத்தமாக இருந்த அறை என்னை தனியாக விட்டுச்சென்ற பிறகு இப்பொழுது ஒரு சத்தமும்
இல்லாமல் கம்மென இருந்தது. எனக்கு தங்கம்.... செல்லம்... மயிலு.. சுச்சூசூஊஊஊஊ
என்றெல்லாம் சொல்லத் தெரியாது. வேறு என்ன சொல்ல!!!
“உங்க பேரு
என்ன?”
என்றேன்
மறுபடியும். கொஞ்சம் இடைவேளை விட்டு
“உங்க பேரு
என்ன?”
அவன் அழ
ஆரம்பிக்க போகிறான் என தோன்றியது. என்ன ஆனாலும் என்னை பார்த்து பயந்து ஒரு குழந்தை
அழுததாக இருக்கக் கூடாது.. அதுவும் இவன் அழுதுவிட்டால் என் நண்பன் பூச்சாண்டி மாமா
என பெயர் வைத்து வாழ்வுக்கும் கூப்பிட வைத்துவிட காத்துக்கொண்டிருக்கிறான். அதனால்
என்னை பற்றி தெரிந்து எதற்கோ வச்சுக்கோ என கொடுத்துவிட்டு போன கிலுகிலுப்பையை
எடுத்து ஆட்ட ஆரம்பித்தேன். அது அந்த சத்தத்தை கவனிக்க ஆரம்பித்து அதுவும்
பதிலுக்கு சத்தங்களை எழுப்பியது.
உண்மையில் அது
பதில் சத்தங்கள் அல்ல. அவன் அந்த சத்தங்களை மறு உருவாக்கம் செய்ய முயற்சி
செய்துகொண்டிருக்கிறான் என்பது சில நிமிடங்களுக்கு பிறகு புரிய ஆரம்பித்தது. என்
நண்பன் சாப்பிட்டு முடித்து வந்தவன் “ஏண்டா சின்ன குழந்தைகிட்ட போய் பேரு என்னனு
கேட்குறியே?? அது எப்படிடா சொல்லும்... அதுகிட்ட பேசனும்டா.. கேள்வி கேட்க கூடாது”
என்றான்.
சொல்லிவிட்டு
குழந்தையிடம் போய் “தங்கம் என்ன பண்றீங்க? பசிக்குதா செல்லத்துக்கு?” என கேள்விகளை
அடுக்கிக்கொண்டிருந்தான்.
இருந்தாலும் நம்ம
கேள்வி அளவுக்கு மோசம் இல்லைதான். ஒத்துக்கொண்டுதானாக வேண்டும்.
சிறிது நேரம்
பேசிக்கொண்டிருதோம்.
அவனது கேமராவில்
குழந்தையை சில புகைப்படங்கள் எடுத்தேன். பேசிக்கொண்டிருந்தோம். ஸ்கூலுக்கு
அட்மிஷன் வாங்கிடு என அவனை சீண்டிக்கொண்டும் வேறு என்னென்னவோ சம்பந்தமில்லாமல்
பேசிக்கொண்டிருந்தேன்.
எங்கிருந்தோ
திடீரென அந்த உணர்வு சட்டென மூளையில் பாய்ந்து கடந்தது.
நான் கொஞ்சம்
டியூப் லைட். லேட்டாகதான் எரியும்.
எனக்கு
ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி அங்கு இருப்பதை உள்ளுணர்வு சொல்லியது. அடுத்த நொடி
சொன்னேன்
“நான்
கிளம்புறேன்டா”
“சாப்பிட்டுட்டு
போடா”
“இல்லடா
கிளம்புறேன்”
இவ்வளவு
வருடங்கள் நண்பனைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்த அந்த வீடு இப்பொழுது அந்த
குழந்தையைச் சுற்றி இயங்குவதை கவனித்தேன்.
புது கதாநாயகன்
வந்துவிட்டதால்
இவ்வளவு நாட்கள்
கதாநாயக நாயகியாக இருந்தவர்களுக்கு குணச்சித்திர கதாப்பாத்திரங்களையும்
குணச்சித்திர
பாத்திரத்தில் இருந்தவர்களுக்கு கவுரவ தோற்றத்தையும் காலம் வழங்கியிருக்கிறது.
குடும்பம்
அப்படிதான் யாரவது ஒருவரைச் சுற்றி இயங்கும். அந்த ஒருவருக்கு எது பிடிக்கும்?,
யாரை பிடிக்கும்?, அவர் என்ன நினைப்பார்?, அவர் இதற்கு என்ன சொல்லுவார்?, அவருக்கு
இது பிடிக்குமா?, இப்படி மற்றவர்கள் எது செய்தாலும் அது அவரைச் சுற்றியே அந்த குடும்பம்
அமைத்துக்கொள்ளும். சில கால இடைவெளிக்கு பிறகு அது வேறு ஒருவரைச் சுற்ற
ஆரம்பிக்கும். பதவிகள் இடம்மாறும்.
தங்களின்
முக்கியதுவத்தை அங்கு நிலைநாட்ட எதோ ஒரு வகையில் அந்த முக்கிய நபருக்கு நெருக்கமாக
இருந்துவிட வேண்டும். அதானாலோ என்னவோ தாத்தா பாட்டிகள் எல்லாம் தன் மகன் மகளுக்கு
காட்டாத அன்பையும் சுதந்திரத்தையும் பேரன் பேத்தியிடம் கொடுத்து அந்த
குடும்பத்தில் தங்கள் பாத்திரத்தை உறுதி செய்து கொள்கிறார்கள்.
என்னைப் போன்ற
கவுரவ தோற்றத்தில் இருந்தவன் இந்த கதையிலிருந்து கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு
மதிய வெய்யிலில் வீட்டுக்குக் கிளம்பினேன்.
அது அப்படிதான்.
எப்பொழுதும்
அப்படிதான்.
குடும்பம்
தனக்கான கதாப்பாத்திரங்களை காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment