Thursday, 3 October 2019

மனித மந்தைகளின் மேய்ப்பர்கள்

மனிதன் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம். எந்த நிலத்தில் வேண்டுமானாலும் குட்டிகள் போட்டு கூட்டமாக வாழ்ந்திருக்கலாம்.
எந்த குரங்கிலிருந்தோ, தோட்டத்திலிருந்தோ, இடுப்பிலிருந்தோ, தலையிலிருந்தோ இல்லை இப்பொழுது போல் அப்பொழுதும் எதன் யோனியிலிருந்தோ வெளிப்பட்டிருக்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் பரதேசிகளாக திரிந்து இம் மா நிலம் வந்து சேர்ந்திருக்கலாம்.

எதை வேண்டுமானாலும் தின்று செரித்து யாரை வேண்டுமானாலும் கொன்று கிழித்து, மிருக வேகத்தில் ஜன தொகை பரப்பி இந்த உலகத்தை நிறப்பிக்கொண்டிருந்த வேளையில்
அதே மனித கூட்டத்திலிருந்து அதிசயமாக என்றாவது ஒரு நாள் பிறக்கும் சில அறிய சிந்தனையாளர்கள் தான் இவ்வுலகையும் இம்மக்களையும் தங்களை பண்படுத்தி கொள்ளவும், சமூகமாக வாழும் பொழுது எழும் சிக்கல்களை தீர்க்க வழிகளையும் படைத்துக் கொண்டிருந்தனர்.

உணவையும் இணையையும் தவிர எதுவுமே பிரச்சனையாக தெரியாமல் நாயை போல வாழ்ந்த மனிதர்களையும்

சண்டையிட்டு கொன்று குவித்து எல்லை பரப்பிய கோமாளிகளையும்

வர்ணம் பூசி அடக்கி மிதித்த சூழ்ச்சிகாரர்களையும்

முட்டாள்களையும்
கோழைகளையும்
மதிகெட்டவர்களையும் கேள்விகலாலும் தர்கத்தாலும் வென்று எழுந்த மகா மேதைகளை பற்றி எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

எனக்கு அவர்களின் வழியே இந்த உலகம் கடந்து வந்த கதையை தெரிந்துகொள்ள  வேண்டும் என நினைக்கிறேன்.

நீங்கள் பல வழியிலும் இவ்வுலகை படிக்கலாம். எந்த எந்த ராஜாக்கள் எப்பொழுதெல்லாம் ஆண்டார்கள்.. எப்படி அவர்கள் தோற்கடிக்க பட்டார்கள், எந்த எந்த நிலத்தை ஆண்டார்கள் என தெரிந்துகொள்வதன் மூலம் வரலாறு தெரியும்.

எந்த எந்த கடவுளை எந்த காலக்கட்டத்தில் எப்படி வழிபட்டார்கள். அதற்கான சான்றுகள். அதன் கதைகள். அதன் நிலங்கள் இதன் மூலமும் அதை தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு இந்த மனிதர்களை தேடி படித்து இவ்வுலகை தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களை தேடி காலத்தின் பின்னோக்கி இந்த பரந்த உலகின் மூலை முடுக்கெங்கும் பயணிக்க போகிறேன்.

பிரபு மித்ரன்

Sunday, 21 July 2019

பறவைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை

‘நடு ரோட்டில் நிற்கிறேன்’ என பேச்சுக்கு சொல்வார்கள். சரியாக சொல்லவேண்டுமென்றால் அப்படி சொல்பவர்கள் எல்லாம் எதோ ஒரு பிரச்சனையில் ரோட்டோரத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் இது அப்படியல்ல.

நான் உண்மையாகவே நடுரோட்டில் நின்றிருந்தேன்.
கொட்டி தீர்த்த மழையில் அதன் சேரும் சகதியும் நிறைந்துகிடக்க இருபுறமும் பறந்துகொண்டிருக்கும் இரவு நேர வாகனங்களுக்கு நடுவே நான் ஒரு பெட்டியும் மூன்று பைகளுடன் நடுரோட்டில் நின்றிருந்தேன்.

பெங்களூரு
ஒரு வருடத்திற்கு முன் கொஞ்ச நாட்கள் கோவையிலிருந்து வேரெதாவது ஊருக்கு சென்றுவிடலாம் என நினைத்த பொழுது எனக்கு எப்பொழுதும் போல சென்னை தான் முதலில் வந்து நின்றது. எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. இலையில் பத்து பதார்த்தம் இருந்து, அதில் ஒரே ஒரு பதார்த்தம் மட்டும் பிடித்தது இருந்தால் நான் அதை முதலில் தொட மாட்டேன். எனக்கு பிடிக்காத மத்த ஒன்பதையும் சாப்பிட்டுவிட்டு கடைசியாக தான் எனக்கு பிடித்த அந்த ஒன்றை தொடுவேன். பிடித்த ஒன்றை தள்ளி போட்டுக்கொண்டே செல்வது அதன் மீதுள்ள ஈர்ப்பை அதிகமாக்கும் என நினைக்கிறேன். அப்படிதான் முதலில் தோன்றிய சென்னை யோசனையை பதினாறாவது முறையாக தள்ளிவைத்துவிட்டு பெங்களூரு சென்றேன்.

அது என்னமோ என்னால் அவ்வளவாக அந்த ஊருடன் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. எங்கும் பச்சை பசேலென மரங்கள். வேர்த்துவிடாத அளவு வெய்யில். எப்போதாவது ஆலங்கட்டி மழை. எங்கு பார்த்தாலும் பூங்காக்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் தமிழ் தெரிகிறது. இருந்தும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை.
இங்கு எல்லோரும் அளவுக்கு கொஞ்சம் அதிகமான வேகத்துடன் இருப்பது போல இருக்கிறது. தேவைக்கு அதிகமாக பணம் புலங்க, கொஞ்சம் செயற்கை தனம் கூடிய மனிதர்களை பார்த்துகொண்டிருக்க எனக்கு எதுவுமில்லை. அது தவறெல்லாம் கிடையாது. சந்தை அதை தான் தன் பண்டங்களிடம் எதிர்பார்க்கிறது.

ஒரு வருடம் கடந்து என்னால் அங்கு இருக்க முடியவில்லை. மே மாதம் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என முடிவெடுத்த அன்றிருந்து சென்னையை பற்றி வந்த பஞ்ச செய்திகள் கொஞ்சம் தயங்க வைத்தன. பெங்களூரிலேயே இருந்து விடலாமா என நினைக்கவும் எனக்கு சில காரணங்கள் இருந்தன.

ஆனால் பறவைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை!! நான் அடுத்த இடம் தேடி செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்ய கடைசியாக சென்னையை நோக்கி என்னால் பறக்க முடியாததால் ஒரு தனியார் பேருந்தில் சென்னைக்கு 1300 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தேன்.

1300 ரூபாயா? என கேட்பவர்களுக்கு நான் தயாராக ஒரு விடை வைத்திருந்தேன். அதாவது பெரும்பாலான  பேருந்துகளில் ஏறுவதற்கு நான் மடிவாலா செல்ல வேண்டும். நான் இருக்கும் இடத்திலிருந்து பெட்டிகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல டாக்ஸி எடுத்தால் 500 ரூபாய் வரும். அதே போல பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் கடைசியாக கோயம்பேட்டில் இறக்கி விடுவார்கள். அங்கிருந்து மேடவாக்கத்திற்கு செல்ல திரும்பவும் டாக்ஸி எடுக்க வேண்டும். ஆனால் இந்த 1300 ரூபாய் பஸ் என்னை நான் இருக்கும் இடத்தில் ஏற்றிக்கொண்டு சென்னையில் மேடவாக்கத்திலேயே விட்டுவிடும். கூட்டி கழித்து பெருக்கி வகுத்து அந்த பஸ்ஸை பெருமையுடன் புக் செய்தேன்.

வெள்ளிகிழமை இரவு 8.30 வரை பயங்கரமான மழை. எனக்கு 9 மணிக்கு பஸ். நான் விடுதியை காலி செய்துவிட்டு மழை நின்றதும் உதவிக்கு பக்கத்து ரூம் பையனை அழைத்துக்கொண்டு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். சரியாக எந்த இடத்தில் பஸ் நிக்கும் என தெரியாததால் நான் சர்வீஸ் ரோட்டுக்கும் மெயின் ரோட்டுக்கும் நடுவில் இருக்கும் தடுப்பு பக்கத்தில் எல்லா பைகளுடன் நின்றுகொண்டேன். என்னுடன் உதவிக்கு வந்த பையன் விடை பெற்றுக்கொண்டான். மழை பெய்ததால் ஒரே சேராக இருந்தது.

9 மணி ஆனதும் நான் டிக்கெட்டில் இருந்த நம்பருக்கு அழைத்தேன். எடுக்கவேயில்லை.

9.30 க்கு ஒருவர் எடுத்து டிரைவர் நம்பரை கொடுத்தார். அவருக்கு அழைத்தால் “சார் நான் பஸ் டிரைவரு. உங்க ஏரியாவுக்கு வேன் பிக்கப் பண்ணும். வெயிட் பண்ணுங்க” என கோவமாக சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

9.45 க்கு மறுபடியும் அழைத்தேன் “சார் சொன்னா புரியாதா? வேன் டிரைவர் உங்க நம்பருக்கு கூப்பிடுவாரு. வெயிட் பண்ணுங்க. விட்டுட்டுட்டு எல்லாம் போயிட மாட்டாங்க” என கத்திவிட்டு வைத்துவிட்டான்.

பத்து மணிக்கு மேல் இரண்டு எண்களும் போனை எடுக்கவேயில்லை. லேசாக தூரல் ஆரம்பித்து விட்டது. நான் பெட்டி பைகளுடன் நின்றுகொண்டிருக்கிறேன். 10.40 வரைக்கும் தொடர்ந்து அழைத்ததில் முதலில் பேசியவன் எடுத்து எனக்கு வேன் டிரைவர் நம்பரை கொடுத்தான்.
நான் அழைத்து அந்த இடத்தின் பெயரை சொல்லி ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்.
அவன் “சார் அதெல்லாம் எப்பவோ தாண்டி இப்போ மடிவாலாவுக்கு அந்த பக்கம் இருக்கோம். இப்போ போய் கால் பண்றீங்கோ!” என்றான்
“என்ன சொல்றீங்க. அதெப்படி எனக்கு கூப்பிடாம போவீங்க. ரெண்டு மணி நேரமா நிக்கிறேன்”
“அதெல்லாம் நீங்க ஆபீஸ்ல பேசிக்கோங்க. நான் ஒன்னும் பண்ண முடியாது” என டக்கென ஃபோனை வைத்துவிட்டான். எனக்கு ஒரு நொடி எதுவுமே வேலை செய்யவில்லை.
நான் உடனே மற்ற நம்பர்களுக்கு அழைத்தேன். இப்பொழுது எவனும் அழைப்பை எடுக்கவில்லை.
நடு ரோட்டில் என்னுடைய மொத்த உடமைகளுடன் தூரும் மழைக்கு நடுவே நிற்க்கிறேன். இருந்த விடுதியை காலி செய்துவிட்டு கிளம்பும் பொழுது அந்த ரூமிற்கு இன்னொருத்தர் சென்றது எனக்கு தெரியும். இனிமேல் நான் செல்ல எங்கும் அந்த ஊரில் இடமில்லை. எனக்கு தெரிந்த ஒரே ஒருவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். எல்லா பைகளையும் என் ஒருவனால் மட்டும் தூக்கிக்கொண்டு எங்கும் செல்ல முடியாது.

“Fight or Flight” என்பார்கள். இக்கட்டான சூழ்நிலையில் ஒரு மனிதன் இரண்டு முடிவுகளை தான் எடுப்பான். ஒன்று எதிர்த்து போராடுவது. இன்னொன்று அந்த சூழ்நிலையை விட்டு ஓடி விடுவது. நான் இந்த இரண்டையும் தவிற மூன்றாவதாக ஒன்று செய்வேன். படுத்து தூங்கிவிடுவேன்.

பேசாமல் பக்கத்தில் எதாவது நல்ல லாட்ஜில் ரூம் எடுத்து நன்றாக படுத்து தூங்கிவிட்டு நாளை காலை பார்த்துகொள்ளலாமா என தோன்றியது.

அப்பொழுது ஒரு நகர பேருந்து காலியாக வந்து என் முன்னால் நின்றது. எல்லா பைகளையும் கதவின் வழியே உள்ளே தூக்கி வீசிவிட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு ஏறி கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டேன். இப்பொழுதும் அடுத்தது என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை. இரண்டு மணி நேரமாக அவ்வளவு முறை அவர்களை அழைத்ததில் என் மொபைலில் சார்ஜ் கொஞ்சமாக தான் இருந்தது.
நான் என் தோழிக்கு அழைத்து விஷயத்தை சொன்னேன். அவளுக்கு நன்றாக தெரியும் எனக்கு அப்போதைக்கு எந்த யோசனைகளும் இல்லையென. வேறு எதாவது பஸ்ஸில் டிக்கெட் இருக்கா என பார்க்கிறேன் என அழைப்பை துண்டித்துக்கொண்டார்.
நான் அமைதியாக அந்த பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். வழியில் தென்படும் லாட்ஜ்களையெல்லாம் பார்த்தவாரே வந்தேன். அப்பொழுதும் தூங்கி எழுந்து காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றே தோன்றியது.

ஒரு மணி நேரம் கழித்து அந்த பேருந்து தன் கடைசி நிறுத்தத்தில் நின்றது. என் தோழி ஒவ்வொரு இடைவேளிக்கும் அழைத்து பேருந்துகளையும் அதன் விவரங்களையும் சொல்லி புக் செய்யவா என கேட்டுக்கொண்டிருந்தாள்.

பேருந்தை விட்டு எல்லா பைகளையும் இறக்கி வைத்தவுடன் எப்படி அத்தனையும் தூக்குவேன் என யோசிக்க கூட இல்லை. பெரிய பையை இரண்டு தோள்களில் மாட்டிக்கொண்டேன். லேப்டாப் பையை முன் பக்கம் விட்டு தோள்களில் மாட்டிக்கொண்டேன். நம் ஊரில் பெட்ஷீட் விற்கும் ஹிந்திகாரன் மாட்டியிருப்பானே அப்படி. ஒரு கையில் இன்னொரு பையையும் அடுத்த கையில் பெட்டியை இழுத்துக்கொண்டும் நடந்தேன். நம்மிடம் எதுவுமே இல்லை எங்கிற பொழுது நம்மால் எதெல்லாம் அதற்கு முன்பு முடியாது என நினைத்தோமோ அதெல்லாம் சுலபமானதாக தெரிய ஆரம்பிக்கும். அப்படி தான் என்னுடைய அந்த நேரத்தின் நிலைமைக்கு அவ்வளவையும் தூக்கிக்கொண்டு போவது ஒன்றும் பெரிய காரியமாக தெரியவில்லை.
மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் சரியான கூட்டம். ரோட்டோரத்தில் சில பெண்கள் பூ கட்டிக்கொண்டிருந்தனர். அதன் வாசம் முழுவதும் பரவியிருந்தது. அவர்களின் அருகில் பலர் போர்வையை போர்த்தி படுத்திருந்தனர்.

என் தோழி அழைத்து பன்னிரண்டு மணியை கடந்ததால் எந்த பேருந்தையும் புக் செய்ய முடியவில்லை என்றாள். இருந்து முயற்சி செய்வதாக நம்பிக்கையாக சொல்லிவிட்டு வைத்தாள்.

பூ கட்டிக்கொண்டிருந்த சிலரும் அப்படியே வைத்துவிட்டு தாங்கள் வைத்திருந்த போர்வையை போர்த்திக்கொண்டு படுத்தனர். விடியகாலை எழுந்து விற்பதற்காக இரவிலேயே வந்து இங்கயே பூ கட்டிவிட்டு படுத்துக்கொள்வார்கள் போல. எனக்கு திடிரென இந்த யோசனையும் வந்தது. என் பெட்டியிலும் போர்வை வைத்திருக்கிறேன். அங்கயே நாமும் போர்த்தி படுத்து தூங்கி எழுந்து காலையில் பார்த்துக்கொண்டால் என்ன என்று. ஆனால் நம்மை இவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லையென்றால்!!

அப்பொழுது என் தோழி போனில் சொன்ன பேருந்து வந்தது. நான் ரோட்டில் இருந்த படியே கத்தி “சென்னை போகுமா ண்ணா?” என்றேன்
“சென்னை பஸ் தான். 1200” என்றார்
பேருந்து நின்றது.
கிளீனரும் நானும் சேர்ந்து எல்லா பைகளையும் உள்ளே எடுத்து சென்றோம். படிக்கட்டு ஏறும் பொழுது தான் யோசித்தேன்.. என்னிடம் 1200 ரூபாய் இருக்குமா என்று. எல்லாமே இணையத்தில் செய்வதால் பணமாக பெரும்பாலும் இருக்காது.சரி பார்த்துக்கொள்ளலாம் என ஏறி சென்று கடைசியில் இருந்த இருவர் உறங்கும் படுக்கையை காட்டினார். இரண்டுமே காலியாக இருந்தது. நல்லவேளை என்னிடம் பணம் இருந்தது. கொடுத்துவிட்டு என் தோழிக்கு அழைத்து பேருந்து கிடைத்ததை சொல்லிவிட்டு சாய்ந்து படுத்தேன்.

கொஞ்ச நேரத்தில் இரண்டாம் டிரைவர் அருகில் வந்து படுத்துக்கொண்டார்.
படுத்ததும் அங்கு இருந்த போர்வையை போர்த்திக்கொண்டு
“என்ன இருந்தாலும் பெங்களூரு பெங்களூர் தான் சார். ஜில்லுனு இருக்கு. க்ளைமேட்ட அடிச்சுக்க முடியாது” என்றார்.

நான் அடுத்த இடம் தேடி பறந்து கொண்டிருந்தேன்.

பிரபு மித்ரன்

Tuesday, 29 January 2019

மலர்ந்தும் மலராத

இன்று காலையில் எழுந்ததிலிருந்து ஏனோ இந்த பாட்டு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது

"..மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே.."

ச்சே என்னா தமிழ் என வியந்து நினைக்கும் பொழுதே  என்னை ஒரு ஜோசியக்காரன் "இவன் 1930-ல பொறக்க வேண்டியவன்.. மாத்தி இந்த காலத்துல பொறந்துட்டான்"னு சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.

வெளியே பாதி தான் விடிந்திருந்தது. அப்படியே ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

"..வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே.."

எப்பொழுதும் நடக்கும் ரோட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தன

நமக்கு எதுக்கு வம்பு என திரும்பி நடக்க ஒரு ஏரியை ஒட்டி போகும் பாதையில் அந்த பாடலை முணுமுணுத்தவாறு ஏதோ யோசனையுடன் போய்க்கொண்டே இருந்தேன்.

போதும் திரும்பலாம் என்று பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து வந்துவிட்டேன் போல. சரி என மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

ஏரியில் வாத்து ஒன்று என்னுடன் மிதந்து வந்து கொண்டிருந்தது.  நொடியில் படக்கென்று தண்ணீரில் மூழ்கி சில அடி தூரம் தள்ளி மேலே வந்தது. மறுபடியும் சில அடிக்கு மிதந்து சென்றது. திரும்பவும் மூழ்கி அதே போல மேலே வந்தது. நானும் அதனுடன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தேன்.

"..நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே.."

ரூமிற்கு வந்ததும் தாடியை எடுத்துவிட்டால் என்ன என தோன்றியது. ட்ரிம்மரை எடுத்து ஆரம்பித்தேன்.

"..வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே.."

பாதி எடுத்ததும்

"..மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.."
"..பாதி மலர் போல.."
"..போல.."
"..."

சார்ஜ் இல்லாமல் நின்றுவிட்டது.

காலையில் இருந்து
"....மலர்ந்தும் மலராத..."
"....விடிந்தும் விடியாத..."
என தொடர்ந்து வாயில் வந்து கொண்டிருந்த பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்.

அப்பறம் என்ன 'எடுத்தும் எடுக்காத பாதி' தாடியுடன்  குளித்து சாப்பிட்டு ஷூ எல்லாம் மாட்டிக்கொண்டு சலூன் சென்று அந்த ஹிந்திகாரனிடம் முகத்தை கொடுத்துவிட்டு சாய்ந்து கண்கள் மூடினேன்.

"..யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா.."

ச்சை.. இது வேற வாயில இருந்து போய் தொலைய மாட்டீங்குது.

பிரபு மித்ரன்

Related Articles