இன்று காலையில் எழுந்ததிலிருந்து ஏனோ இந்த பாட்டு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது
"..மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே.."
ச்சே என்னா தமிழ் என வியந்து நினைக்கும் பொழுதே என்னை ஒரு ஜோசியக்காரன் "இவன் 1930-ல பொறக்க வேண்டியவன்.. மாத்தி இந்த காலத்துல பொறந்துட்டான்"னு சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.
வெளியே பாதி தான் விடிந்திருந்தது. அப்படியே ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
"..வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே.."
எப்பொழுதும் நடக்கும் ரோட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தன
நமக்கு எதுக்கு வம்பு என திரும்பி நடக்க ஒரு ஏரியை ஒட்டி போகும் பாதையில் அந்த பாடலை முணுமுணுத்தவாறு ஏதோ யோசனையுடன் போய்க்கொண்டே இருந்தேன்.
போதும் திரும்பலாம் என்று பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து வந்துவிட்டேன் போல. சரி என மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
ஏரியில் வாத்து ஒன்று என்னுடன் மிதந்து வந்து கொண்டிருந்தது. நொடியில் படக்கென்று தண்ணீரில் மூழ்கி சில அடி தூரம் தள்ளி மேலே வந்தது. மறுபடியும் சில அடிக்கு மிதந்து சென்றது. திரும்பவும் மூழ்கி அதே போல மேலே வந்தது. நானும் அதனுடன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தேன்.
"..நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே.."
ரூமிற்கு வந்ததும் தாடியை எடுத்துவிட்டால் என்ன என தோன்றியது. ட்ரிம்மரை எடுத்து ஆரம்பித்தேன்.
"..வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே.."
பாதி எடுத்ததும்
"..மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.."
"..பாதி மலர் போல.."
"..போல.."
"..."
சார்ஜ் இல்லாமல் நின்றுவிட்டது.
காலையில் இருந்து
"....மலர்ந்தும் மலராத..."
"....விடிந்தும் விடியாத..."
என தொடர்ந்து வாயில் வந்து கொண்டிருந்த பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்.
அப்பறம் என்ன 'எடுத்தும் எடுக்காத பாதி' தாடியுடன் குளித்து சாப்பிட்டு ஷூ எல்லாம் மாட்டிக்கொண்டு சலூன் சென்று அந்த ஹிந்திகாரனிடம் முகத்தை கொடுத்துவிட்டு சாய்ந்து கண்கள் மூடினேன்.
"..யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா.."
ச்சை.. இது வேற வாயில இருந்து போய் தொலைய மாட்டீங்குது.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment