Monday, 5 November 2018

மாண்டேஜ் ஷாட்ஸ்

தீபாவளியை பற்றி நினைக்கும் பொழுது எல்லோருக்கும் நினைவுகளிலிருந்து ஒவ்வொரு நொடியை மட்டும் தேர்ந்தெடுத்து கோர்த்து ஓடவிட்டது போல குட்டியாக ஒரு மாண்டேஜ் ஷாட்ஸ் ஓடும்.

எனக்கு அப்படி ஓடுபவை

காலியான பிரில் இங்க் பாட்டிலில் ஊசிப் பட்டாசை வைத்து பற்ற வைத்துவிட்டு வெடித்து சிதறும் என ஓடி ஒளிந்துகொண்டோம். வெடித்ததும் பக்கத்தில் சென்று பார்த்தால் பாட்டில் அப்படியே இருக்க உள்ளேயிருந்து வெள்ளையாக புகை மட்டும் வந்துகொண்டிருக்கிறது.

வீட்டு வாசலில் மண்ணை தோண்டி பட்டாசை புதைத்து திரியை மட்டும் வெளியே விட்டு கொளுத்தவும் அது வெடித்து எதிர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மேல் எல்லாம் மண் வாரி அடித்தது.

அது தான் என் அப்பாவுடன் கடைசி தீபாவளி என நினைக்கிறேன். தீபாவளிக்கு முந்தின நாள் மதியம் இந்த வருடம் பட்டாசு வாங்கிக் கொடுப்பார்களா மாட்டார்களா என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது அதுவரை நாங்கள் வெடித்திராத பட்டாசுகளுடன் அப்பா வந்தார். அவற்றிலிருந்து நானும் என் தம்பியும் சுருள் கேப் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மாற்றி மாற்றி சுட்டபடி ஓடுகிறோம்.

ஊது பக்தி கொழுத்தவும் மத்தாப்பு பற்ற வைக்கவும் அம்மா காமாட்சி விளக்கை திண்ணையில் வைப்பார். அப்பா இறந்த பிறகு எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவிலும் எங்களுக்கு எப்பொழுதும் ஆளுக்கு இரண்டு செட் துணிகளும் பட்டாசுகளும் டான் என ஒரு வாரத்திற்கு முன்பே அம்மா வாங்கிக் கொடுத்துவிடுவார்.

பாம்பு பட்டாசுகளை மொத்தமாக கொளுத்திவிட அது கரும்புகையுடன் அகோரமாக நெருப்புக்கு நடுவிலிருந்து பூதம் போல வருகிறது
இருக்கும் கொஞ்ச பட்டாசுகளை காலை மாலை எதை வெடிப்பது மற்றும் அடுத்து வருகிற கார்த்திகை தீபத்திற்கு எவ்வளவு என பிரித்து வைத்துவிடுவோம்.

காலை விடிவதற்கு முன் எழுந்து முதல் பட்டாசை நானும் அடுத்ததை என் தம்பியும் வீட்டு முன் வைத்த பிறகு அடுத்த வேலையாக என் பாட்டியுடன் பிறந்த இரண்டு பாட்டிகள் வீட்டுக்கும் சென்று அவர்கள் வீட்டு வாசலில் பட்டாசு விட வேண்டும். அவர்கள் வீட்டில் பட்டாசு வைக்க யாரும் இல்லை என்பதால் என் அம்மாவும் பாட்டியும் எல்லா வருடமும் அனுப்பிவைப்பார்கள்.

லீவ் முடிந்து தீபாவளி துணியுடன் பள்ளிக்கு செல்கிறேன்.. அதில் ஒரு நீல நிற சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருக்கிறேன்.

ஊசிப்பட்டாசை கையில் பற்ற வைத்து வீசுவதற்கு முன் கையிலேயே வெடித்துவிட்டது. கை கொஞ்ச நேரத்திற்கு மரத்துப் போய் பிறகு சரியாகிவிட்டது.
மத்தாப்பு சட்டையில் தெரித்து சின்னதாக ஓட்டை போட்டுவிட்டதை அடுத்த நாள் துணி துவைக்கும் வரை மறைத்து வைத்திருந்தேன்.

ரொம்ப வேகமாக இந்த சம்பவங்களிலிருந்து தான் மாண்டேஜ் ஷாட்ஸ் பட படவென ஓடுகிறது.

எல்லாமும் அப்படியே இருந்துவிடாது போல.

ஐந்து வருடங்களுக்கு முன் கோபத்தில் வாங்கி வைத்த தீபாவளி துணியை போடாமல் பட்டாசையும் வெடிக்காமல் அழுக்கு லுங்கியுடன் கோபம் கொப்பளிக்க யார் அழுதும் கெஞ்சியும் கூட கேட்காமல் வீட்டில் ஓரமாக உட்கார்ந்தே தீபாவளி நாளை முடித்தேன்.

எந்த நேரத்தில் அதை செய்தேனோ அதற்கு பிறகு ஒரு தீபாவளிக்கு கூட என்னால் புது துணியை போட்டுக்கொள்ளவோ பட்டாசு வெடிக்கவோ முடியவில்லை. ஊரிலேயே இருந்தும் கூட தீபாவளியை எதோ பிடிவாதத்துடன் ஒதுக்கினேன்.
எங்கு வேண்டுமானாலும் இடம் தேடிக்கொள்ள எனக்கான வாய்பு கிடைக்கும் பொழுதெல்லாம் என் வீட்டை விட்டு தூரத்திலேயே தள்ளி நின்றிருக்கிறேன். எட்டு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வரும் பொழுதும் இனி ஒரு வருஷத்துக்கு இந்த ஊரு பக்கமே வர மாட்டேன் என சொல்லிவிட்டு தான் வந்தேன்.

இது நாள் வரை நான் பெரிதாக எந்த லட்சியத்திற்கும் சம்பாதிக்கவில்லை. பொருளாதார ரீதியில் நான் கொஞ்சம் பாதுகாப்பாக உணர மட்டுமே எனக்கு அது உபயோகப்பட்டது. அதில் ஒரு சுதந்திரமிருந்தது. எதையும் எப்பொழுதும் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடலாம். ஆனால் இந்த ஆறு மாதமாக அடிப்படை தேவைக்களுக்கே சம்பாதித்தாக வேண்டிய நிலைமை.

இப்பொழுது எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது.
ஒரு வருஷத்திற்கு வரவே மாட்டேன் என சொல்லிவிட்டு வந்தவன் இப்பொழுது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு ஓடுகிறேன்.
என் கண் முன்னால் இருந்த பண்டிகைகளையெல்லாம் நான் சட்டையே செய்யாமல் கடந்திருக்கிறேன். இப்பொழுது வருகிற பண்டிகைகளை ஒவ்வொன்றையும் ஏக்கத்துடன் வேற்று மாநிலத்தில் பேசக்கூட ஆள் இல்லாத ஊரில் உட்கார்ந்துகொண்டு அழுது அசை போட்டுக்கொண்டு திரிகிறேன்.

இந்த ஊரில் தீபாவளி வியாழக்கிழமையாம்.

இந்த வருடமும் தீபாவளிக்கு புதுத் துணி வீட்டில் வாங்கி வைத்திருக்கிறார்கள். எனக்கு இங்கு அலுவலகத்திற்கு போட்டுச் செல்ல போன வாரம் துவைத்து வைத்த நீலச் சட்டை இருக்கிறது.

ஹோம் சிக்காகிற வயசிலெல்லாம் கல்லாக இருந்துவிட்டு காலம் போன கடைசியில் தான் இதெல்லாம் வருகிறது.

இந்த வருடமும் எனக்கு தீபாவளி இல்லை.
நான் பரவாயில்லை தான்.

சம்பாதித்தாக வேண்டிய கட்டாயத்துடன் வெளிநாடுகளில் வேறு வழியே தெரியாமல் அங்கே இருப்பவர்களின் நிலைமை ரொம்ப பாவம்.

அவர்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துகள்.

பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles