காகிதமொன்று வைத்திருந்தேன்
என் பெரும் கனவை அதில் நீல நிற மையில் எழுதியிருந்தேன்.
என்னைச் சுற்றி இருப்பவர்களிடமெல்லாம் அதை காட்டி காட்டி மகிழ்ந்திருக்கின்றேன்.
பலரும் அதை கையில் வாங்கி பார்ப்பார்கள்
சிலர் கனவை படித்துவிட்டு சிரிப்பார்கள்
சிலர் சிலிர்த்துப்போய் கைக் கொடுப்பார்கள்
சிலர் முன்னொன்றும் புறமொன்றும் பேசுவார்கள்
அதனால் எனக்கு என்ன?
நான் தினமும் தூங்குவதற்கு முன் அந்த கனவை எடுத்துப்பார்த்துவிட்டு தலையணைக்கடியில் வைத்துக்கொள்வேன்
அது நாட்கள் நகர நகர காகித ஓரமெல்லாம் கிழியத் தொடங்கியது
சில வருடங்களில் எழுத்துகள் நிறம் மங்கியது.
நான் இந்த முறை பளிச்சென்று சிவப்பு நிறத்தில் மங்கிய எழுத்துக்களின் மீது புதுக் கனவொன்றை எழுதினேன்.
எல்லோரும் என்னை பழைய கனவைக் கைவிட்டவன் என பரிகாசம் செய்தனர்.
இந்த முறை காகிதத்தை பத்திரமாக சட்டை பையிலேயே வைத்துக்கொண்டு சுற்றினேன்.
ஒரு நாள் இரவில் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் பொழுது செருப்பு அறுந்துவிட்டது.
ஒரு கையில் எடுத்துக்கொண்டேன்.
பேரிடியுடன் பெரும்மழை பெய்யத் தொடங்கியது
ஒருக்கையில் செருப்புடன் இன்னொரு கையில் சட்டைப்பையிலிருந்த காகிதத்தை மழையில் நனையாமல் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு ஓடினேன்..
கட்டியிருந்த வேஷ்டி அவிழ்ந்தது. சட்டைப்பையை அழுத்தியிருந்த கை தன்னிச்சையாக எடுத்து வேட்டியை இடுப்போடு பிடித்துக்கொண்டு ஓடினேன்
வீடு வந்து சேர்ந்து பையிலிருந்து காகிதத்தை எடுத்தேன்
எழுத்துகள் அழிந்துவிட்டன.
அதன் பிறகு யாரிடம் இதை சொன்னாலும் எப்பொழுதும் போல கனவை காப்பாற்றத் தெரியாதவன் சாக்கு போக்கு சொல்கிறான் என சொல்லிவிட்டு சிரிக்கிறார்கள்.
எனக்கு என்ன?
இப்பொழுதும் என் தலையணைக்கடியில் அன்று நனைந்து போன காகிததை காய வைத்து எடுத்து மடித்து வைத்திருக்கிறேன்.
தூங்குவதற்கு முன் எடுத்துப் பார்பேன்.
இப்பொழுது கருப்பு நிறத்தில் வேறு ஒரு கனவை எழுதி வைத்திருக்கிறேன்.
மற்ற கண்களுக்கு அது அப்படி தான் தெரியும்.
எனக்கு மட்டும் தான் அந்த கருப்பு எழுத்துக்களுக்கு பின்னால் மழையில் நனைந்து காகிதம் முழுவதும் பரவிக்கிடக்கும் சிவப்பும் நீலமும் நிறமாக அல்லாமல் என் கனவாக இன்றும் தெரியும்.
நான் பத்திரமாக தான் வைத்திருக்கிறேன்.
என் காகிதத்தையும். என் கனவையும்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment