Saturday, 15 November 2014

காதல் சொல்ல வந்தேன்- சிறுகதை




இன்று கண்டிப்பாக சொல்லிவிடுவேன்
அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.

ஒரு வேளை இப்பொழுது இருக்கும் நட்பும் கெட்டுவிட்டால் என்ன செய்ய??
எல்லாம் யோசித்தாகிவிட்டது.

அந்த நட்புக்காக தான் நான்கு வருடம் எனக்குள்ளயே வைத்திருந்தேன். இனி முடியாது.
ஒரு வேளை முடியாது என சொல்லிவிட்டால்??
சொன்னால் சொல்லிட்டு போகட்டும். அதனால் என்ன?
அதனால் என்னவா?

நான் காலை எழுந்ததும் முதல் நினைப்பதும் அவள் தான்.
அப்பொழுது ஆரம்பித்து இரவு தூங்குவதற்கு முன்புவரை அவளிடம் தான் பேசிகொண்டிருக்கிறேன்.
கனவிலும் அவள் தான்.
ஒரு வேளை அவள் இன்று முடியாது என சொல்லிவிட்டால் நாளை நான் என்ன செய்ய!! அவ இல்லைனா வாழ்கை போர் அடித்துவிடும்.
அப்பறம் நான் குடிப்பேன்.
தாடி வைப்பேன்.
இளையராஜா பாட்டுக்களாக கேட்பேன்.
அவள் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் நான் முகத்தை சோகமாக வைத்துக்கொள்வேன்.
தூங்கும் பொழுது யாருக்கும் தெரியாமல் அழுவேன்
பரவாயில்லை.
அவளுக்காகதானே!! 

என்ன தான் அவ்வளவு சோகங்கள் இருந்தாலும் ஆண்களுக்கு தன்னை “லவ் ஃபெய்லியர்” என சொல்லிகொள்வதில் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது.

அய்யய்யோ நான் இன்னும் லவ்வே சொல்லவில்லை அதற்குள் லவ் ஃபெய்லியருக்கு தயாராகிவிடேன்.

என்ன ஆனாலும் சொல்லிவிடுவேன்.
ஃப்ரெண்டாக இருந்தால் லவ் பண்ண கூடாதா.!!
அவள் அப்படிதான் சொல்லுவாள்
நான் விடுவதாக இல்லை.
எந்த ஃப்ரெண்டை நாம் தூரத்திலிருந்து பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம்.
நான் செய்திருக்கிறேன்
பனிமூட்டத்துக்கு நடுவே பளிங்குகல்லில் செய்யபட்ட தாஜ்மஹாலை பார்ப்பது போல அவளை பார்த்துகொண்டே இருந்திருக்கிறேன்.
அது பெயர் நட்பா??
அவள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒலியே இல்லாமல் பாலு மஹேந்திரா படம் பார்ப்பது போல அவளை கண் இமைக்காமல் பார்த்திருக்கிறேன்.
நான் கொஞ்சம் சினிமா பைத்தியம்.
அது அவளுக்கும் தெரியும்.
ஆனால் நான் இன்று என் காதலை சொல்லும் பொழுது அது எந்த சினிமாவிலும் வராத அளவுக்கு சொல்ல வேண்டும்.
இந்த நான்கு வருடத்தில் நாலாயிரம் தடவை சொல்லியிருப்பேன். பாத்ரூம் கண்ணாடி முன்னால்.

அத்தனை ஒத்திகைக்கும் இன்று தான் கடைசி நாள்.
என்னை பொறுத்த வரையில் தோழிக்கும் காதலிக்கும் பெயர் மட்டும் தான் வித்யாசம்.
அதை அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே.

வேண்டாம் என சொல்லிவிட்டால் என்னால் தாங்கிகொள்ள முடியாது.
என்னை கேவலமாக நினைத்துவிட்டால் நான் உயிரோடே இருக்க முடியாது.
ஒரு வேளை என்னை அசிங்கமாக திட்டிவிட்டால்.
கடவுளை வேண்டிகொண்டேன். அப்படி எதுவும் நடந்துவிட கூடாதென.
அவள் வருகிறாள்.
உள்ளுக்குள் லேசான..இல்லை இல்லை... பயங்கரமான நடுக்கம்.
பக்கத்தில் வந்து விட்டாள்.
அதே பாலு மஹேந்திரா படம் போல
ரசிக்க நேரமில்லை
சொல்கிறேன்
“இவ்வளவு நாளா....”
அய்யோ இப்போனு பார்த்து வர மாட்டிங்குதே...
இவ்வளவு நாளா எனக்கு நீ சந்தோஷத்தை மட்டும் தான் குடுத்திருக்க.
வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு....
இனிமேல் நான் அதை திருப்பி குடுக்கனும்னு ஆசை படுறேன்.
உன் வாழ்கை ஃபுல்லா..
என்னை....
என்னை லவ் பன்னுவியா????
ஹப்பா சொல்லிட்டேன்
நாலு வருஷம் வராத தைரியம் இன்னைக்கு வந்திடுச்சு
அவ லேசா சிரிக்குறா
ஐஐஐ........
இன்னும் நல்லா சிரிக்குறா..
ரொம்ப சிரிக்குறா...
எனக்கு ஏன்னு புரியல... இந்த ரியாக்சன நான் எதிர்பாக்கவே இல்லையே..
சிரிச்சுட்டே எதோ சொல்ரா..
“டேய் மொக்க.... ஏப்ரல் ஃபூல் பன்ன வேர ஐடியாவே கிடைக்கலயா??... லூசு.... போடாங்க...” சொல்லிவிட்டு சிரித்து கொண்டே என்னை கடந்து போகிறாள்.
ஆம் இன்று தேதி ஏப்ரல் 1
காதலே முட்டாள் தனம். அதை முட்டாள்கள் தினத்தன்று சொன்ன நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பேன்.
எனது நான்கு வருட உழைப்பு இப்படி வீணாகிவிட்டதே.
இதற்கு சிரிப்பதா இல்லை அழுவதா!!!!

இப்பொழுது
எனக்கு இளையராஜா இசை கேட்க வேண்டும் போல இருக்கிறது.


பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles