Saturday, 23 May 2015

சிகப்பு ஊசியில் வெள்ளை இரத்தம்


கோவை 2015 மே 22,

காலையில் எழுந்ததும் இது மற்றுமொரு வெள்ளிக்கிழமை என்று தான் நினைத்தேன்.
சனி... ஞாயிறு லீவு..
ஊருக்கு போய்விடலாம்.
வாரத்தில் அந்த இரண்டு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்.
சூரிய வெளிச்சம் முகத்தில் பட்டு சுட சுட தூங்கலாம்.
இன்னும் முடிக்காமல் வைத்திருக்கும் அந்த ஓஷோ புத்தகத்தை இந்த வாரமாவது முடித்துவிட வேண்டும்.
என்ன மனிதன் அவன்.
என் இத்தனை வருட வாசிப்பு பழக்கத்தில் என் பாடபுத்தகத்தை தவிர எந்த புத்தகத்தையும் ஒரு வாரத்திற்கு மேல் வாசித்து முடிக்காமல் விட்டதில்லை.
ஆனால் இந்த ஓஷோ எழுதிய புத்தகம் மட்டும் ஐந்து மாதமாக முரண்டு பிடிக்கிறது.
அந்த மனிதன் சொல்வது அவ்வளவு அழகாக இருக்கிறது.
வாசிக்க வாசிக்க ஒரு சிலிர்ப்பு. இதெல்லாம் வாசிக்கும் வரை தான்.
புத்தகத்தை மூடியதும் எல்லாம் தலைகீழாகிவிடும்
தூக்கதிலிருக்கும் பொழுது நம்மை திடீரென்று ஒரு அரை விட்டால் எழுந்து உட்காந்து பேந்த பேந்தவென முழிப்போமே!!
அதை படித்து புத்தகத்தை மூடியதும் அப்படிதான் இருக்கும்.
ரஜினிகாந்த் பேசும் பொழுதும் இந்த உணர்வு வரும். அருமையாக பேசுவார். கதை சொல்லுவார். சிரிக்க வைப்பார். ஆனால் பேசி முடித்ததும் என்ன பேசினார் என யோசித்தால் ஒன்றுமே புரியாது. அப்படிதான் இந்த ஓஷோவும் எனக்கு.
அதனால் தான் என்னவோ திரும்ப திரும்ப அந்த புத்தகதிடமே மனம் போகிறது!! விவகாரமானவர் தான்.
இப்படி என் பொழுதுகள் எப்பொழுதும் கனவிலும் கற்பனையிலும் கண்மூடிதனமாக கழிந்துவிடும்.
இதையும் மற்றுமொரு வெள்ளிக்கிழமை என்று தான் நினைத்தேன்.

குளித்து முடித்து தலையை துவட்டிக்கொண்டே என் செல் போனை தேடினேன்.
தலையனைகடியில் ஒளிந்திருந்த அதை கைது செய்து கிள்ளினேன்.
‘1 மிஸ்டு கால்’
எதோ புது எண்.
முன்பெல்லாம் இப்படி புது எண்களிலிருந்து மெஸேஜோ காலோ அடிக்கடி வரும்.
இப்பொழுதெல்லாம் இது அரிதாகிவிட்டது.
அப்படியே வந்தாலும் எதாவது விளம்பரமாகவோ... இல்லை எனக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்ததாகவோ வரும்.
அப்போதைக்கு கோடிஸ்வரனாகவே அதை டெலிட் செய்துவிடுவேன்.
காலைலயே இப்படி யார் கூப்பிட்டிருப்பார்கள் என யோசிக்க முடியவில்லை.
சரி அந்த எண்ணுக்கு கூப்பிட்டு பார்போம் என அழைத்தேன்.
ஆஹா!!! ஒரு பெண் குரல்
“உங்கள் இனைப்பு இனைக்கபடுகிறது. உங்கள் இருப்பு நிலை ஐந்து ரூபாயுக்கும் கீழ் உள்ளது. பெறவும் ரூபாய் 10 டாக் டைம் உடனடி லோன்..”
என எதையோ மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழில் சொல்லிவிட்டு அதையே ஆங்கிலத்திலும் சொல்லியது.
இதெல்லாம் அவரை பார்த்துதான் காப்பி அடித்தார்கலோ!!!
மூணு ரூபாய் இருந்தது.
அதற்கு மேலெல்லாம் பேசிவிட போவதில்லை என நம்பி கூப்பிட்டேன்.
ரிங் போனது. எடுத்தவர்
“சார் நான் கௌதம் ஃப்ரெண்டு”
கௌதமா!! அவன் கனடாவில் தானே இருக்கிறான்!! யோசித்தவாரே
“சொல்லுங்க” என்றேன்
“அர்ஜென்டா ஏ1 பாஸிடிவ் இரத்தம் வேணும்.. அதான்” என இழுத்தார்
எனக்கு யோசிக்கவே தோனவில்லை
“எங்க வரனும்” என்றேன்.
அவர் ஒரு ஹாஸ்பிடல் சொன்னார். எனக்கு எங்கு இருக்கிறது என தெரியவில்லை.
மாலை வந்தால் பரவாயில்லையா என கேட்டேன்.
சரி என சொன்னார். போனை வைத்துவிட்டேன்.

அப்பறம் தான் யோசித்தேன்.
எனக்கு ஊசி என்றால் பேயைவிட பயம்.
நாம் எப்படி!!?


இதுவரை யாரும் என் இரத்த குரூப் கேட்டதேயில்லை.
இது தான் முதல் முறை. அதுவும் என்னிடமே நேரடியாக கேட்டுவிட்டார்கள்.
எப்படி முடியாது என சொல்ல முடியும்.?
இந்த ஊசியை நினைத்தால் தான் கொஞ்சம் திக்கென இருக்கிறது.

அந்த ஹாஸ்பிடல் மருந்து வாசனை
வெள்ளை கலர் யுனிபார்ம் போட்ட நர்ஸ்கள்.
சத்தமே இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் அந்த ரிசெப்சன் டீவி
எல்லாம் தாண்டி அந்த பெட்டில் படுத்த பிறகு அந்த ஊசியை நர்ஸ் வெளியே எடுக்கும் பொழுது என்னமோ பன்னுமே. ஹப்பப்பா!
நினைக்கவே முடியலயே!!! நாம் எப்படி!!
இது மற்றுமொரு வெள்ளிக்கிழமை இல்லையோ!!?

நாள் முழுவதும் ஆபிஸில் உட்காரவே முடியவில்லை.
ஊசி பயம்.
வருகிறேன் என வாக்கு கொடுத்துவிட்டேன்.
போகனும்.
ஆனா போகவும் கூடாது.

சின்ன வயதில் ஊசியென்றால் அழுது ஹாஸ்பிடபிலேயே ரெண்டாக்கிவிடுவேன்.
இப்பொழுது அப்படி எதாவது செய்துவிட்டால் மானமே போய்விடுமே!!
எனக்கு என் மீதே இந்த விஷயத்தில் நம்பிக்கையில்லை.
“மனிதனுக்கு பயமோ கோபமோ வந்துவிட்டால் அவன் குழந்தையாகிவிடுகிறான்”
எனக்கு நானே உருவாக்கிகொண்ட புதுமொழி இது. இப்படி எதுக்காவது தேவைபடுமே என்று.

கொடுக்க மனமிருக்கிறது.
அந்த சின்ன ஊசிதான்.....


மதியமாகிவிட்டது.
முதல் முதல் இரத்தம் கொடுக்க போறேன்.
கொஞ்சம் சந்தோஷமாக தான் இருக்கிறது.
பயம் கலந்த சந்தோஷம்,
நான் கல்லூரியில் படித்த பொழுது ஒரு இரத்ததானதிற்காக குறும்படம் எடுத்தோம்.
அதன் ஒரு வரி கதை இது தான்.
“பிறருக்கு இரத்தம் கொடுக்க யோசிக்கும் ஒருவனின் இரத்தம் ரோட்டில் சிந்திக்கிடக்கிறது. அதை ஒரு நாய் நாக்கால் நக்கி ருசி பார்க்கிறது”
இது கற்பனையாக மட்டுமல்ல.
சாலை விபத்தில் பலியான ஒருவனின் இரத்ததை ஒரு நாய் இப்படிதான் நக்கிகொண்டிருந்தது.
யாருக்கும் உதவாமல் இப்படி போககூடிய இரத்தம் யாருக்காவது உதவிவிட்டு போனாலென்ன என்பதே அது எனக்கு சொல்லிய கதை.
எடுத்தது என்னமோ மொக்கையாக தான் வந்தது. அது தனி கதை.

அப்போதே இரத்ததானம் செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இந்த ஊசிப் பயல் தான் அப்பொழுதும் என்னை தடுத்துவிட்டான்.
இது கண்டிப்பாக மற்றுமொரு வெள்ளிக்கிழமை கிடையாது என்றே தோன்றியது.

பஸ் விட்டு இறங்கி ஹாஸ்பிட்டலுக்கு வழி கேட்டு அங்கு போய் சேர்ந்தேன்.
உள்ளே நுழையும் முன்பே அந்த மருந்து நெடி.
நீல நிற வாட்ச்மேனை கடந்து உள்ளே சென்றேன்.
ரிசெப்ஷனில் வரிசையாக போடபட்ட இரும்பு சேரில் அமர்ந்து என்னை காலையில் அழைத்த எண்ணை அழைத்தேன்.
அவர் எதோ வெளியே இருக்கிறாராம். பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறாராம். அவரின் அத்தை ஹாஸ்பிடலில் தான் இருக்கிறாராம். அவர் என்னை அழைத்து செல்வாரென கூறினார்.
ரிசெப்ஷன் டீ.வி மௌனமாக ஓடிகொண்டிருந்தது. சத்தம் கேட்கவில்லையெனிலும் அதை மெய்மறந்து ரசித்து பார்த்துகொண்டிருந்தனர்.

“நாங்க கரூர் பக்கம் தம்பி.. என் அம்மாக்கு தான் மூட்டு ஆப்பெரேஷன். 70 வயசுக்கு மேலாகிவிட்டது” என அந்த அம்மா சொன்னார்.
நான் ஊசி பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் நின்றிருந்தேன்.
“இரத்த வங்கியில் இருந்து இரத்தம் வாங்கிட்டோம். ஆனா அவங்க யாராவது டோனார் கொண்டுவாங்கனு சொல்லிட்டாங்க.. இங்க யார்கிட்ட கேட்குறதுனே தெரியல. என் சொந்தக்கார பையன் தான் நான் பாத்துகுறேன்னு சொல்லிடுச்சு”
அவர் தான் என்னை அழைத்தவர் என புரிந்தது. ஆனால் கனடாவில் உள்ள என் நண்பனை எப்படி தெரியும் என தெரியவில்லை.

நடுவிரல் நுனியில் சின்ன ஊசிவைத்து குத்தி  நாலு சொட்டு இரத்தத்தை அந்த கண்ணாடி தட்டில் வைத்தான்.
“என்ன பிளட் குரூப்?” என கேட்டான்.
அடப்பாவி.. எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லிருப்பனே. அதுக்கு ஏண்டா குத்தி இரத்தம் எடுத்தே!!
“ஏ1 பாஸிட்டிவ்”

வெள்ளைக்கலர் படுக்கை விரிப்புமேல் படுத்திருந்தேன்.
ஓர கண்ணில் அவன் என்ன செய்கிறான் என பார்த்துகொண்டே நடுங்கிகொண்டிருந்தேன்.
ஒரு கவரிலிருந்து ஊசியுடங்கூடிய ஒரு டியூபை எடுத்தான்.
அவ்வளவுதான் என் உயிரே போய்விட்டது.
கத்திக்கு கழுத்தைகூட கொடுத்துவிடலாம் போல இந்த ஊசிக்கு கையை கொடுக்க முடியாது
எழுந்துவிடலாமா என நினைப்பதற்குள் அவன் என்னருகிள் வந்துவிட்டான்.
என் வலது கையில் ஒரு பந்தை கொடுத்து அழுத்திபிடிக்க சொன்னான்.
கையிலிருக்கும் நரம்பை தேடுகிறான் என நினைக்கிறேன்.
வேனுமென்றே லேசாகதான் பந்தை பிடித்தேன்.
இரண்டுமுறை கையில் லேசாக தட்டினான் நரம்பு மேலே எழுமென.
பயத்தை அடக்க முடியாமல் பந்தை அழுத்தினேன்.
படுபாவி அந்த கேப்பில் நரம்பை கண்டுபிடித்துவிட்டான்.
பச்சை கலரை பார்த்தால் வலிக்காதாம். சின்ன வயதில் ஊசி போடும்போது யாரோ சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது.
தேடினேன்.
பச்சை கலரில் எதுவுமே இல்லை.
நான் தலையை இடது பக்கம் திருப்பி கண்ணை இறுக்க மூடிக்கொண்டேன்.
பஞ்சில் எதையோ தடவி கையில் தேய்த்து ஊசியை உள்ளே இறக்கினான்.
ஆஹா... அப்படி ஒன்னும் வலி இல்லைதான்.
இந்த வலியைவிட அதை நினைத்து பயந்த வலி அதிகம் போலும்.


கண்ணை மூடியவாரே படுத்துகொண்டேன். கை சிலு சிலுவென இருந்தது.
என் இரத்தமாச்சே. வேகமாக பாயுது போல. கண்ணை மட்டும் திறக்கவே இல்லை.
கையில் பிடித்திருந்த பந்தை விடலாமா வைத்திருக்கலாமா என தெரியவில்லை.
திடீரென கீங்.. கீங்.. கீங்..கீங்.. என சத்தம்.
தேவையான அளவு சேர்ந்த்தும் அதன் எடையை வைத்து சத்தம் வரும் போல.
கண்ணை மூடியே என் இஞ்சினியரை எழுப்பி இதை கண்டுபிடித்தேன்.
யாரோ கதவை திறந்து கொண்டு ஓடிவந்தார்கள்.
கையிலிருந்து ஊசியை உருவினான். இப்போ வலிதான்.

கண்களை திறந்து எழுந்தேன்.
அவன் கையில் என் சிவப்பு இரத்தம் அடைபட்டு கிடந்தது.
23 வருடமாக என் உடம்பிலேயே சுத்திகொண்டிருந்த என் உடன் பிறப்பு என்னைவிட்டு பிரிந்து செல்கிறது.
துக்கம் தொண்டை அடைக்க தலை லேசாக சுற்றியது..அய்யஹோ...
“சார்..கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க.. தலை சுத்தும்” என்றான் அவன்.
அட இரத்தம் குடுத்தா எல்லாருக்கும் தலை சுத்துமா. ச்சே இது தெரியாம என்னமோ நினைத்துவிட்டோமே!

ஜூஸ் குடுத்தார்கள்.
குடித்துவிட்டு வெளியே வந்தேன்.
“சர்ட்டிபிகேட் வேணுமா சார்?”
“எதுக்கு?” என்றேன்.
அவன் எதுவும் சொல்லவில்லை. சிரித்தான்.
ஓஹோ இரத்தம் கொடுத்தால் சான்றிதழ் தருவார்களா!! நமக்கு எதற்கு.
அதுவும் தானமாக கொடுத்த்தற்கு கூலி மாதிரியாகிவிடாதா!!!
“வேண்டாம்” என சொல்லிவிட்டு வீரமாக நடந்தேன். அதான் இரத்தம் குடுத்தாச்சே இனி எதற்க்கு ஊசி பயம்!

“தம்பி.. நாங்க பணம் வேணும்னாலும் இரத்தத்துக்கு குடுத்திடுறோம்னு சொன்னோம்.. ஆனா இரத்தம் தான் வேணும்னு சொல்லிட்டாங்க..ரொம்ப தேங்க்ஸ் தம்பி”
என அந்த அம்மா சொன்னார்.
அட இந்த உலகத்தில் பணத்தால் வாங்க முடியாதது கூட இருக்கிறதே!
அதுவும் நாம் கொடுத்திருக்கிறோம்.
“அட 70 வயது அம்மாக்காக கரூரிலிருந்து இங்க வந்து வைத்தியம் பார்கிறீர்கள். அதைவிடவா இது பெருசு?”
சொல்லி விடை பெற்று கிளம்பினேன்.
உள்ளுக்குள் எதோ சந்தோஷம்.. எதற்கு என தெரியவில்லை.
இனி என் இரத்தத்தை என் படத்தில் வந்த மாதிரி நாய் நக்கினாலும் பரவாயில்லை.

பயம் சுத்தமாக போய்விட்டது.
பயத்தை போக்க ஒரே வழி எதை கண்டு பயப்படுகிறோமோ அதை செய்வது தான் என எங்கோ படித்திருக்கிறேன்.
இது நிச்சயமாக வித்யாசமான வெள்ளிக்கிழமை தான்.
ஊருக்கு போய் அந்த ஒஷோ புத்தகத்தை இந்த வாரமாவது ஒரு கை பார்க்க வேண்டும்.
ஆமா அந்த 10 நிமிஷத்தில் வருகிறேன் என சொன்னவர் வரவில்லையே!!! மறந்தே விட்டேன்.



பிரபு மித்ரன்





Sunday, 17 May 2015

Half Boiled பிரம்மா B.E - இன்ஜினியரிங் படிக்கலாமா?


கடந்த நான்கு வருடமாக இந்த மே மாதம் வந்தால் என்னிடம் கண்டிப்பாக யாராவது ஒருத்தராவது கேட்ககூடிய கேள்வி
ன்ஜினியரிங்ல எந்த கோர்ஸ் படிக்கலாம்?”
“மெக்கட்ரானிக்ஸ் படிக்கலாமா?”(நான் அதை படித்தேனாம்..அதனால்)
“எந்த ன்ஜினியரிங் காலேஜ்ல சேர்க்கலாம்?”
இப்படி வேறு வேறு வடிவங்களில் ஒரே கேள்வி.

ஆனால் என்னிடமிருந்து ஒரே பதில் தான் வரும்
“உண்மையிலேயே இன்ஜினியரிங் மீது ஆர்வமிருந்தால் படிக்க வையுங்கள்”
ஏனென்றால் எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாதே!! பிறகு எப்படி சொல்வது?


நான் படித்தது மெக்கட்ரானிக்ஸ்
அதாவது ரோபோட் எல்லாம் செய்யும் படிப்பு.
அப்படிதான் எனக்கு அதை விளக்க தெரியும்.
வெளியே சொல்லும் பொழுது எதோ விஞ்ஞானி மாதிரிதான் பார்பார்கள்.
ஆனால் எனக்கு பேட்டரியில் ஓடும் விளையாட்டு பொம்மையின் செயல்பாடுகூட தெரியாது.
சாதாரண  குண்டு பல்பு எப்படி எரிகிறது என்பதே தெரியாத நானெல்லாம் ன்ஜினியர்.
நானே இந்த நாட்டின் கல்வி தரத்திற்கு நேரடி சாட்சி.
என்னை போல இப்படி பல லட்சம் பொறியாளர்கள் ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள்.

அதற்காக படிக்காதவன் என்று என்னை முத்திரை குத்திவிட முடியாது.
+2 வில் 92% மார்க் எடுத்தவன் தான்.
கல்லூரியில் மார்க் எடுக்க மட்டுமே படித்தேன். அதுவும் பரிட்சை அன்று காலை மட்டுமே படிப்பேன்.
படித்து பாஸ் செய்ய அந்த ஒரு மணி நேரமே போதுமானதாக தான் இருந்தது.
நான் மட்டுமில்லை.
இங்கு படிக்கும் 90% சதவீத மாணவர்கள் அதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு க்லாஸில் 60 பேர் இருந்தால் அதில் 5 பேர் தான் உண்மையான ஆர்வத்துடன் பொறியியலில் சேர்கிறார்கள்.
அதை பற்றி தெரிந்துகொள்ள படிக்கிறார்கள்.
மிச்சம் 55 பேரும் தன் பெயருக்கு பின்னால் கிடைக்கபோகும் டிகிரிக்காகவும்
சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைக்காகவும்
பெத்தவங்களின் ஆசைக்காகவும் தான் வந்து சேர்கின்றனர்.


அப்படி ஆர்வம் இல்லாமல் இந்த படிப்பில் சேர்பவர்கள் நான்கு வருடமும் கல்லூரியில் எதை படிக்கிறோம் என்றே தெரியாமல் திரு திருவென முழி பிதுங்கி திரிகிறார்கள்.
கடைசி வருடம் எதாவது ஒரு பிராஜெக்ட் சென்டரில் பிராஜக்டை காசுக்கு வாங்கி அதை வைத்து இன்ஜினியரிங்கை முடித்து விடுகிறார்கள்.
அப்படி பட்டவர்களுக்கு பொறியியல் என்பது எலிப்பொறி போல தான்.
உயிர் இருக்கும்.
வெளியே வர முடியாது.
வெளியே வரும்பொழுது இந்த உலகம் அடித்து வீசிவிடும்.
படிப்பை முடித்து வெளியே வருபவனுக்கு தான் படித்த படிப்புக்கு எங்கு சென்று வேலை தேட வேண்டும் என்றே தெரிவதில்லை.
தான் எதை பற்றி படித்தோம் என தெரிந்தால் தானே வேலை தேட வேண்டிய இடமும் தெரியும்.
இன்றைய நிலைமைக்கு ஒரு டிப்லமோ படித்தவனின் அறிவில் பாதி கூட அதே துறையில் இன்ஜினியரிங்க் படித்தவனிடம் இருப்பதில்லை
அதுவும் தமிழ்நாட்டில் உள்ள 95% கல்லூரிகள் இப்படி அரைவேக்காட்டு இன்ஜினியர்களை தான் உருவாக்குகிறது.

இப்படி எதுவுமே தெரியாமல் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் டிகிரியை மட்டுமே நம்பி வேலை தேடுவதால் தான் வேலை கிடைப்பதில்லை.
உடனே பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பம் உருவாகிவிடுகிறது.
20 வருடங்களுக்கு முன் ஒரு ஊருக்கு ஒரு இன்ஜினியர் இருப்பதே அரிது.
ஆனால் இப்பொழுது ஒரு வீட்டுக்கு ஒரு இன்ஜினியர் என்ற நிலைமை.
எந்த இடத்தில் கூட்டம் அதிகரிக்கிறதோ அதன் பிறகு அதன் தரம் குறைந்துவிடும்.


இப்படி வேலை தேடுபவர்கள் பலரின் ரெஸ்யூம் கம்பெனி கேட்டில் இருக்கும் வாட்ச்மேனையே தாண்டுவதில்லை
அதற்காக இன்ஜினியரிங் படிப்பை மோசம் என்று சொல்லவில்லை.
நம்மை சுற்றியுள்ள அத்தனை பொருட்களும் ஒரு இன்ஜினியரின் பங்கு இல்லாமல் உருவாகிவிடாது
செல்போன்...வீடு....கார்...டி.வி....ஆடை... ஏன் மருத்துவர்கள் வைத்திருக்கும் ஸ்டெத்தஸ்கோப் கூட ஒரு இன்ஜினியர் இருந்தால் தான் உருவாக்க முடியும்                                                 
ஒரு உண்மையான இன்ஜினியர் பிரம்மா போன்று.
அவன் படைக்க  கூடியவன்.
அவனுக்கு யாரும் வேலை தர தேவையில்லை.
அவனுக்கான வேலையையும் அவனே படைத்துக்கொள்கிறான்.

எந்த கல்லூரியும் ஒரு நல்ல பொறியாளனை உருவாக்குவதில்லை.
அந்த துறை மீது ஒருவனுக்கு இருக்கும் ஆர்வமே அவனை திறன் மிக்க பொறியாளனாக்குகிறது.
அதுவே அவனுக்கான வேலையையும் காட்டி விடுகிறது.

எல்லாவற்றிற்கும் ஆர்வம் மட்டுமே அவசியம்.
தன் பிள்ளைக்கு எதில் ஆர்வம் என்று தெரிந்துகொள்ளாமல் எதை படித்தால் வேலை கிடைக்கும் என்று பார்த்து ஒருவனின் படிப்பை முடிவு செய்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
‘ஸ்கோப்’ இருக்கா? என கேட்பார்கள்.
மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை தான் வசிக்க வீடு கட்டி கொண்டு தான் இருக்கிறான். அப்போ சிவில் இன்ஜினியருக்கு ‘ஸ்கோப்’ இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?
உணவு இல்லாமல் இங்கு யாராவது இருக்க முடியுமா?? அப்போ பி.எஸ்.ஸி அக்ரி க்கு ஸ்கோப் இல்லை என்று சொல்ல முடியுமா?
இப்படி எல்லா துறைகளிளும் வாய்ப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
வாய்ப்புக்கு தகுந்த தகுதியுடையவர்கள் தான் இருப்பதில்லை  

ஒருவனின் வாழ்கையையே முடிவு செய்யகூடிய கல்வியை அவனுடைய ஆர்வத்தை வைத்துதான் முடிவு செய்யவேண்டுமே தவிற வேலை வாய்பை வைத்து முடிவு செய்துவிட கூடாது.
ஒரு காலத்தில் அக்கவுண்ட்ஸ் படித்தால் ஸ்கோப் என்றார்கள்.
பிறகு பி.இ கம்யூட்டர் சைன்ஸ்.
அப்புறம் அதில் ஐ.டி
2 வருடம் கழித்து இ.சி.இ
இன்னும் 2 வருடத்திற்கு அப்புறம் மெக்கானிக்கல்.
அப்புறம் மருத்துவம் எம்.பி.பி.ஸ்.
நாளை என்ன என்று யாருக்கும் தெரியாது.
இப்படி 2 வருடத்திற்கு ஒரு முறை மாறும் ‘ஸ்கோப்’ என்பதை நம்பிதான் இந்த பெற்றோர்கள் இப்படி வேகாத இன்ஜினியர்ஸை உருவாக்கிவிடுகிறார்கள்.
எந்த படிப்பும் கீழ் தரமானதில்லை. எல்லா துறையிலும் வேலை காத்திருக்கிறது.
அந்த வேலைக்கு தகுந்த அறிவு மட்டுமே தேவை.
அதற்கான அறிவை வளர்க்க தான் கல்வி. அதில் பாகுபாடு எதற்கு?


இந்த இன்ஜினியரிங் படிப்பு என்பது ஒரு காலி முட்டை ஓடு மாதிரி தான்.
அதிலிருந்து அழகான ஒரு கோழி வரவேண்டுமா?
இல்லை
ஹாஃப் பாயில் வர வேண்டுமா என்பது படிப்பவனின் உண்மையான ஆர்வத்தில் தான் இருக்கிறது.
ஆர்வம் என்பது தான் விரும்பும் கல்வியின் மேல் தான் வரும்.
தனக்கு விருப்பமில்லாத கல்வியெனில் எத்தனை வருடமானாலும் அதில் ஆர்வம் வருவது கடினம்.
அதை விடுத்து எந்த கல்லூரியும் எந்த பெற்றோரும் இதை முடிவு செய்ய முடியாது.

எனக்கு இன்ஜினியரிங் படிப்பை பற்றி எதுவும் தெரியாது தான்
ஆனால் உண்மையான இன்ஜினியர்ஸை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்
அவர்கள் பிரம்மாக்கள்.
நான் Half Boiled பிரம்மா.



பிரபு மித்ரன்.

Related Articles