கடந்த நான்கு வருடமாக இந்த மே மாதம் வந்தால் என்னிடம்
கண்டிப்பாக யாராவது ஒருத்தராவது கேட்ககூடிய கேள்வி
“இன்ஜினியரிங்ல எந்த கோர்ஸ் படிக்கலாம்?”
“மெக்கட்ரானிக்ஸ் படிக்கலாமா?”(நான் அதை
படித்தேனாம்..அதனால்)
“எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்க்கலாம்?”
இப்படி வேறு வேறு வடிவங்களில் ஒரே கேள்வி.
ஆனால் என்னிடமிருந்து ஒரே பதில் தான் வரும்
“உண்மையிலேயே இன்ஜினியரிங் மீது ஆர்வமிருந்தால்
படிக்க வையுங்கள்”
ஏனென்றால் எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாதே!!
பிறகு எப்படி சொல்வது?
நான் படித்தது மெக்கட்ரானிக்ஸ்
அதாவது ரோபோட் எல்லாம் செய்யும் படிப்பு.
அப்படிதான் எனக்கு அதை விளக்க தெரியும்.
வெளியே சொல்லும் பொழுது எதோ விஞ்ஞானி
மாதிரிதான் பார்பார்கள்.
ஆனால் எனக்கு பேட்டரியில் ஓடும் விளையாட்டு
பொம்மையின் செயல்பாடுகூட தெரியாது.
சாதாரண குண்டு பல்பு எப்படி எரிகிறது என்பதே
தெரியாத நானெல்லாம் இன்ஜினியர்.
நானே இந்த நாட்டின் கல்வி தரத்திற்கு நேரடி
சாட்சி.
என்னை போல இப்படி பல லட்சம் பொறியாளர்கள்
ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள்.
அதற்காக படிக்காதவன் என்று என்னை முத்திரை
குத்திவிட முடியாது.
+2 வில் 92% மார்க் எடுத்தவன் தான்.
கல்லூரியில் மார்க் எடுக்க மட்டுமே படித்தேன்.
அதுவும் பரிட்சை அன்று காலை மட்டுமே படிப்பேன்.
படித்து பாஸ் செய்ய அந்த ஒரு மணி நேரமே
போதுமானதாக தான் இருந்தது.
நான் மட்டுமில்லை.
இங்கு படிக்கும் 90% சதவீத மாணவர்கள் அதை தான்
செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு க்லாஸில் 60 பேர் இருந்தால் அதில் 5 பேர்
தான் உண்மையான ஆர்வத்துடன் பொறியியலில் சேர்கிறார்கள்.
அதை பற்றி தெரிந்துகொள்ள படிக்கிறார்கள்.
மிச்சம் 55 பேரும் தன் பெயருக்கு பின்னால் கிடைக்கபோகும்
டிகிரிக்காகவும்
சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைக்காகவும்
பெத்தவங்களின் ஆசைக்காகவும் தான் வந்து
சேர்கின்றனர்.
அப்படி ஆர்வம் இல்லாமல் இந்த படிப்பில்
சேர்பவர்கள் நான்கு வருடமும் கல்லூரியில் எதை படிக்கிறோம் என்றே தெரியாமல் திரு
திருவென முழி பிதுங்கி திரிகிறார்கள்.
கடைசி வருடம் எதாவது ஒரு பிராஜெக்ட் சென்டரில்
பிராஜக்டை காசுக்கு வாங்கி அதை வைத்து இன்ஜினியரிங்கை முடித்து விடுகிறார்கள்.
அப்படி பட்டவர்களுக்கு பொறியியல் என்பது எலிப்பொறி போல
தான்.
உயிர் இருக்கும்.
வெளியே வர முடியாது.
வெளியே வரும்பொழுது இந்த உலகம் அடித்து
வீசிவிடும்.
படிப்பை முடித்து வெளியே வருபவனுக்கு தான்
படித்த படிப்புக்கு எங்கு சென்று வேலை தேட வேண்டும் என்றே தெரிவதில்லை.
தான் எதை பற்றி படித்தோம் என தெரிந்தால் தானே
வேலை தேட வேண்டிய இடமும் தெரியும்.
இன்றைய நிலைமைக்கு ஒரு டிப்லமோ படித்தவனின் அறிவில்
பாதி கூட அதே துறையில் இன்ஜினியரிங்க் படித்தவனிடம் இருப்பதில்லை
அதுவும் தமிழ்நாட்டில் உள்ள 95% கல்லூரிகள்
இப்படி அரைவேக்காட்டு இன்ஜினியர்களை தான் உருவாக்குகிறது.
இப்படி எதுவுமே தெரியாமல் தன் பெயருக்கு
பின்னால் இருக்கும் டிகிரியை மட்டுமே நம்பி வேலை தேடுவதால் தான் வேலை
கிடைப்பதில்லை.
உடனே பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பம் உருவாகிவிடுகிறது.
20 வருடங்களுக்கு முன் ஒரு ஊருக்கு ஒரு இன்ஜினியர்
இருப்பதே அரிது.
ஆனால் இப்பொழுது ஒரு வீட்டுக்கு ஒரு இன்ஜினியர்
என்ற நிலைமை.
எந்த இடத்தில் கூட்டம் அதிகரிக்கிறதோ அதன்
பிறகு அதன் தரம் குறைந்துவிடும்.
இப்படி வேலை தேடுபவர்கள் பலரின் ரெஸ்யூம் கம்பெனி
கேட்டில் இருக்கும் வாட்ச்மேனையே தாண்டுவதில்லை
அதற்காக இன்ஜினியரிங் படிப்பை மோசம் என்று
சொல்லவில்லை.
நம்மை சுற்றியுள்ள அத்தனை பொருட்களும் ஒரு இன்ஜினியரின்
பங்கு இல்லாமல் உருவாகிவிடாது
செல்போன்...வீடு....கார்...டி.வி....ஆடை...
ஏன் மருத்துவர்கள் வைத்திருக்கும் ஸ்டெத்தஸ்கோப் கூட ஒரு இன்ஜினியர் இருந்தால்
தான் உருவாக்க முடியும்
ஒரு உண்மையான இன்ஜினியர்
பிரம்மா போன்று.
அவன் படைக்க கூடியவன்.
அவனுக்கு யாரும் வேலை தர
தேவையில்லை.
அவனுக்கான வேலையையும்
அவனே படைத்துக்கொள்கிறான்.
எந்த கல்லூரியும் ஒரு நல்ல பொறியாளனை உருவாக்குவதில்லை.
அந்த துறை மீது ஒருவனுக்கு இருக்கும் ஆர்வமே
அவனை திறன் மிக்க பொறியாளனாக்குகிறது.
அதுவே அவனுக்கான வேலையையும் காட்டி விடுகிறது.
எல்லாவற்றிற்கும் ஆர்வம் மட்டுமே அவசியம்.
தன் பிள்ளைக்கு எதில் ஆர்வம் என்று தெரிந்துகொள்ளாமல் எதை படித்தால் வேலை கிடைக்கும் என்று பார்த்து ஒருவனின் படிப்பை முடிவு
செய்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
‘ஸ்கோப்’ இருக்கா? என கேட்பார்கள்.
மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை தான்
வசிக்க வீடு கட்டி கொண்டு தான் இருக்கிறான். அப்போ சிவில் இன்ஜினியருக்கு ‘ஸ்கோப்’
இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?
உணவு இல்லாமல் இங்கு யாராவது இருக்க முடியுமா??
அப்போ பி.எஸ்.ஸி அக்ரி க்கு ஸ்கோப் இல்லை என்று சொல்ல முடியுமா?
இப்படி எல்லா துறைகளிளும் வாய்ப்புகள் இருந்து
கொண்டே தான் இருக்கிறது.
வாய்ப்புக்கு தகுந்த தகுதியுடையவர்கள் தான்
இருப்பதில்லை
ஒருவனின் வாழ்கையையே முடிவு செய்யகூடிய கல்வியை
அவனுடைய ஆர்வத்தை வைத்துதான் முடிவு செய்யவேண்டுமே தவிற வேலை வாய்பை வைத்து முடிவு
செய்துவிட கூடாது.
ஒரு காலத்தில் அக்கவுண்ட்ஸ் படித்தால் ஸ்கோப்
என்றார்கள்.
பிறகு பி.இ கம்யூட்டர் சைன்ஸ்.
அப்புறம் அதில் ஐ.டி
2 வருடம் கழித்து இ.சி.இ
இன்னும் 2 வருடத்திற்கு அப்புறம்
மெக்கானிக்கல்.
அப்புறம் மருத்துவம் எம்.பி.பி.ஸ்.
நாளை என்ன என்று யாருக்கும் தெரியாது.
இப்படி 2 வருடத்திற்கு ஒரு முறை மாறும் ‘ஸ்கோப்’
என்பதை நம்பிதான் இந்த பெற்றோர்கள் இப்படி வேகாத இன்ஜினியர்ஸை உருவாக்கிவிடுகிறார்கள்.
எந்த படிப்பும் கீழ் தரமானதில்லை. எல்லா
துறையிலும் வேலை காத்திருக்கிறது.
அந்த வேலைக்கு தகுந்த அறிவு மட்டுமே தேவை.
அதற்கான அறிவை வளர்க்க தான் கல்வி. அதில்
பாகுபாடு எதற்கு?
இந்த இன்ஜினியரிங்
படிப்பு என்பது ஒரு காலி முட்டை ஓடு மாதிரி தான்.
அதிலிருந்து அழகான ஒரு
கோழி வரவேண்டுமா?
இல்லை
ஹாஃப் பாயில் வர
வேண்டுமா என்பது படிப்பவனின் உண்மையான ஆர்வத்தில் தான் இருக்கிறது.
ஆர்வம் என்பது தான்
விரும்பும் கல்வியின் மேல் தான் வரும்.
தனக்கு விருப்பமில்லாத
கல்வியெனில் எத்தனை வருடமானாலும் அதில் ஆர்வம் வருவது கடினம்.
அதை விடுத்து எந்த
கல்லூரியும் எந்த பெற்றோரும் இதை முடிவு செய்ய முடியாது.
எனக்கு இன்ஜினியரிங்
படிப்பை பற்றி எதுவும் தெரியாது தான்
ஆனால் உண்மையான இன்ஜினியர்ஸை
பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்
அவர்கள் பிரம்மாக்கள்.
நான் Half Boiled பிரம்மா.
பிரபு மித்ரன்.
No comments:
Post a Comment