Friday, 9 September 2016

குரங்குத்தனம்

விடிந்து சில நிமிடங்களே கடந்திருக்கும்.

அந்த ரோடும் தெருவும் அப்பொழுது தான் குளித்தது போல பளிச்சென ஈரத்துடன் இருந்தது.
அனைக்க மறந்த தெரு விளக்குகள் மங்கலாக தூங்கி வழிந்து கொண்டிருந்தது.
காற்று வீசுவதே தெரியாதது போல இதமாக வருடிச் சென்றது.

நான் அந்த அமைதியான ரோட்டில் தன்னந்தனியாக ஒரு ஒலிச்சுருக்கியை (ஹெட் செட்) காதில் மாட்டிக்கொண்டு பழைய பாடலை கேட்டவாரு  ஒரு துறவியின் மன நிலையில் பற்றற்று நடந்து வந்து கொண்டிருந்தேன்.

எதிரே தூரத்தில் ஒரு ஸ்கூட்டி வருவது தெரிந்தது.
மெதுவாக என சொல்வதை விட கம்மியான வேகத்தில் ஊர்ந்து வருகிறது.
அதில் நைட்டி அணிந்த 30 வயது மதிக்கதக்க அக்கா ஒருவர் இருந்தார்.
அது ஆடாமல் அசையாமல்  பயணித்து வரும் நேர் கோட்டை பார்த்தால் அவர் ஓட்டி பழகுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
முகத்தை ஒரு வித இறுக்கத்தில் வைத்திருந்தார்
விழுந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையால் என நினைக்கிறேன்.

அதே மெதுவான வேகத்தில் எனக்கு அருகில் வந்த பொழுது...
நான் திடீரென அவரை நோக்கி என் ஒரு காலை முன்னால் வைத்து இரண்டு கைகளையும் விரித்து
"ப்ப்ப்பப்ப்ப்பே......"
என கத்தி பயப்படுத்த வேண்டும் போல இருந்தது.

நல்ல வேளை அப்படி எல்லாம் எதுவும் செய்து வைக்கவில்லை.
சிக்கினால் செருப்படி நிச்சயம் என தெரியும்.

ச்சீ...மோசமானவன்யா நீ!! என்ன ஒரு கெட்ட எண்ணம்.!

அட என்ன செய்ய ..!!?
மனசு அப்படி தான்..... சும்மாவே இருப்பதில்லை....குரங்கு மாதிரி ஏதாவது செய்ய சொல்லிக்கொண்டே இருக்கும்.
நாம் தான் பக்குவமாக அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.

பரவாயில்லை..அதனால் என்ன?
அடுத்தவர்களை காயப்படுத்தாத எந்த ஒரு குரங்குத்தனங்களும் வாழ்கையை சுவாரசியமாக வைத்துக்கொள்ளும்.

அந்த அக்கா என்னை கடந்து போன பிறகு   நினைத்து தனியாக சிரித்துக்கொண்டே நடந்தேன்.

நான் மட்டும் அதை செய்திருந்தால் அடி பிச்சிருப்பார்கள்😁

15 வருட இரகசியம்

15 வருட இரகசியம்

அப்போ எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும்

பள்ளியில் எழுத தருவது எனக்கு எப்பொழுதுமே பிடிக்காது

பத்தாததுக்கு பள்ளியில் எழுதியதை அப்படியே வீட்டில் வந்து இன்னொரு நோட்டில் எழுத வேண்டும். வீட்டுப் பாடமாம்.

நான் இரண்டையுமே செய்ய மாட்டேன்.

காரணம் அது எனக்கு உபயோகப்படாது என்ற என் நம்பிக்கை.
ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிப்போடுவது எல்லாம் எங்களுடைய புத்தகத்தில் அப்படியே இருக்கும். இதை எப்பொழுது நான் கண்டுபிடித்தேனோ அந்த நொடி முதல் எனக்கு அவர்கள் கொடுப்பதை எழுதும் பழக்கமும் நின்றுவிட்டது.

எங்களுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் பாடம் நடத்தி விட்டு போர்டில் கேள்வி பதில் எழுதிப்போடுவார்கள்.
அதை பார்த்து அவர் அவர் நோட்டில் வகுப்பில் அனைவரும் எழுதுவார்கள்.
நான் மட்டும் புத்தகத்தில் அந்த பதில் எங்கு இருக்கு என தேடி கண்டுபிடித்து பென்சில்லில் குறித்துக்கொண்டிருப்பேன்.

எப்படியும் தேர்வுக்கு படிக்க தான் நோட்டில் எழுதுகிறோம். அதுதான் எல்லாமே புத்தகத்திலேயே இருக்கே என்ற எண்ணம் எனக்கு.

இதை
குறுக்கு புத்தி
அதிக பிரசங்கி
திமிர்
கொழுப்பு
என பல பெயர்களில் அன்று சொன்னார்கள்.

கையும் களவுமாக மாட்டிய பொழுதெல்லாம் அடி வாங்கினேன்
முட்டி போட்டேன்
வெளியே நிற்க வைக்கப்பட்டேன்.

திருந்தவே இல்லை.

இந்த கல்வி எல்லாம் குழந்தைகளை அவர்களின் உலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக தர தரவென வெளியே இழுத்து வந்து  செவிலோடு அறைந்து பொறி கலங்கி அந்த பிள்ளைகள் அமரும் பொழுது A for apple என சொல்லி அதை திருப்பி சொல்லும் கிளிக் குழந்தைகளுக்கு so sweet என முத்தம் கொடுப்பது தான்.

இப்படி அடி வாங்கியதிலும் திட்டு வாங்கியதிலும் எனக்கு திடீரென ஒரு விபரீத எண்ணம்.

வீட்டை விட்டு ஓடி விட்டால் என்ன என்று.

உடனே தாயாரானேன்

மெட்ராஸ் தான் போக வேண்டும். அதுவும் ரயிலில் தான்.

தனியாக போக தைரியம் இல்லை.
யாரயாவது கூப்பிட வேண்டும்.

என்னை போலவே அடியும் வசையும் வெறுத்துப்போய் நாடி நரம்பு எல்லாம் சூடான ஒரு நண்பனை தேடிப்பிடித்தேன்.
இல்லை
உருவாக்கினேன் என்று கூட சொல்லலாம்.
திட்டத்தை சொன்னேன்.
உடனே சரி என்றான்.

பள்ளியில் பி.டி பீரியடில் எல்லோரும் விளையாட சென்றவுடன் நாங்கள் இருவரும் எப்படி எல்லாம் ஓடி போலாம் என கனவு கண்டுகொண்டு உட்கார்ந்திருந்தோம்.

ஒரு வாரம் யாருக்கும் தெரியாமல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது.

அட இந்த லெட்டர் வேறு எழுதனும்.
அதெல்லாம் ஓடி போனால் செய்ய வேண்டிய சம்பிரதாயம் அல்லவா.

எழுதினேன். தப்பும் தவறுமாக.
பொம்மை எல்லாம் போட்டு.
கீழே பேர் எழுதி அதன் மீது குறுக்காக சில கோடு இழுத்து அதை என் கையெழுத்து என்று வேறு நம்பினேன்.

கடிதத்தை மடித்து என் பள்ளி பையில் ஒளித்து வைத்துக்கொண்டேன்.

அந்த நாள் வந்தது.
இரவு அனைவரும் தூங்கிய பிறகு நான் அவன் வீட்டு தெருவுக்கு சென்று அவனும் வந்த பிறகு இருவரும் ஓட வேண்டும் என்பது தான் திட்டம்.

கிளம்புவதற்கு முன் அனைவரின் காலையும் தொட்டு கும்பிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அருணாச்சலம் ரஜினி போல.

எல்லாம் ரெடி. துணி எல்லாம் எடுத்து  வைத்து விட்டேன்.

இரவு அவன் தெருவில் நாய் மட்டும் இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.

வழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் விழித்திருந்தால் சந்தேகம் வரும் என தூங்குவது போல பாசாங்கு செய்தேன்.

பிறகு தூக்கம் வருவது போல இருந்ததால் சில மணி நேரம் தூங்கலாம் என தூங்க ஆரம்பித்தேன்.

நான் நினைத்த படி சரியாக 1 மணிக்கு விழிப்பு வந்தது.
எழுந்தேன்.
அறையை நோட்டமிட்டேன்.

ஜீரோ வாட்ஸ் பல்பின் மிதமான ஒளி.
மின் விசிறியின் மெல்லிய சத்தம்.
இதமான காற்று.
கனமான போர்வை.
மெத்தை.
அட போங்கடா என போர்வையை இழுத்துப் போத்தி படுத்துக்கொண்டேன்.

காலையில் எழுந்து பள்ளிக்கு போக பயம்.
அவன் தனியாக ஓடியிருந்தால்!!

வகுப்புக்கு  உள்ளே நுழையும் பொழுது தான் நிம்மதியாக இருந்தது.
அவன் அமர்ந்திருந்தான்
எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.
அவனே ஆரம்பித்தான்.

"நேத்து வந்தியாடா?"

அப்பாடா... அப்போ இவன் வரவில்லை

"ஆமா.. எவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்தேன் தெரியுமா? நீ ஏன் வரலே?" என கோபமாக கேட்டேன்.

"நான் கதவை திறக்கும் போது அம்மா எழுந்துட்டாங்கடா" என்றான் பாவமாக.
சரி என மன்னித்துவிட்டேன்.

மறுபடியும் போலாமா என்றான்.
எனக்கு என்னவோ ஓடி போவதின் மீதிருந்த அந்த முதல் முறை கிலுகிலுப்பு அதன் பிறகு வரவே இல்லை.

நான் அவனிடம் அன்று உண்மையை சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் என்ன செய்ய!
எல்லாம் ஒரு இது தான்..
ஒரு வேளை அவனுக்கு இப்பொழுது அது நினைவில் இருந்தால் இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்வான். 😃

நம்பிக்கை

மழை தூரியது
பார்த்து ரொம்ப நாள் ஆனதே என வெளியே வேடிக்கை பார்க்க சென்றேன்.

சின்ன வயதிலிருந்து மழையை பாட்டி வீட்டு காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்து வளர்ந்ததால் இப்பொழுதும் அங்கிருந்து பார்த்தால் தான் மழை அதன் எளிமையுடன் அழகாக தெரிகிறது.

ஒரு விதத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் ரசிக்கலாம்..

வீட்டு ஜன்னல் வழியே கல்யாண ஊர்வலம்.. சாவு ஊர்வலம் இரண்டையும் ஒரே மாதிரி மனநிலையுடன் வேடிக்கை பார்ப்பது போல!!

மழை அப்படியே தான் இன்னும் இருக்கிறது

எனக்கு தான் காம்பவுன்டு சுவரெல்லாம் குட்டியாகிவிட்டது.

எங்கோ ஆடு கத்தும் சத்தம் கேட்டது

சுற்றும் முற்றும் பார்த்தேன்
எங்கு என தெரியவில்லை

விடாமல் கத்தியது
தூரத்தில் ஒரு ஓட்டு வீட்டு ஜன்னலில் கட்டப்பட்ட குட்டி ஆடு தான் மழைக்கு பயந்து கத்துகிறது

பாவம்
உடலை சிலிர்த்துக்கொண்டும்
சுண்ணாம்பு சுவரோடு ஒடுங்கி கொண்டும்  அந்த ஆடு பயத்தில் கத்தியது.

கட்டப்பட்டிருந்த கயிறோ இரக்கமே இல்லாமல் அதை இழுத்துப் பிடித்திருந்தது

ஆடு தன்னை விடுவித்துக்கொள்ள கயிறை இழுத்துக்கொண்டும் தன்னை காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்ற நம்பிக்கையில் கத்தி அழுதுகொண்டுமிருந்தது.

அது தான் எவ்வளவு பாவம் !!!
அதை தவிர எங்கள் எல்லோருக்குமே தெரியும்
அந்த ஆடு கட்டப்பட்டிருந்தது கறிக்கடைக்கார அண்ணனின் வீட்டு ஜன்னல் என!

எலி கதை

சொந்தக்காரனை திட்டாதவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை

அப்படி என்னய்யா கோபம்?!!
அவங்களை எல்லாம் பேச விட்டு அழகு பாக்கனும்யா...
பாக்கனும்... அவ்வளவு தான்...
ஆனா தலைல எல்லாம் ஏத்திக்க கூடாது.

நமக்கு நல்லது நினைக்குறவனும் இருக்க தான் செய்யுறான்..ஆனா அங்க ஒன்னு இங்க ஒன்னா இருக்காய்ங்க!

ஆனா முக்கால்வாசி பயலுவோ
கிழவி எப்போ திரும்புவா வடைய எப்போ தூக்கலாம்னு தான் பார்பானுவோ.
கீழ மட்டும் விழுந்துட்டோம்னா அவ்வளவுதான்
வடை மாதிரி கவ்விடுவானுவோ..

ஒரு மேடையில் முனைவர் பர்வீன் சுல்தானா சொன்ன குட்டி கதை ஞாபகம் வந்தது.

ஒரு காட்டில் பூனையும் எலியும் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்து வந்ததாம்

தினமும் ஒன்றாக சுற்றிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தது.

ஒரு நாள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் பூனையை காணவில்லை.

காத்திருந்தது எலி.
மதியமாகியும் பூனை வரவில்லை.
பயந்து போன எலி காடு முழுவதும் பூனையை தேடி அலைந்தது.

மாலையாகிவிட்டது....
தேடி அலைந்து பூனை கிடைக்காத விரக்தியில் சோர்ந்து போய் எலி வந்து கொண்டிருந்தது
தூரத்தில் எலியின் குழந்தையான குட்டி எலி ஓடி வருவது தெரிந்தது

"ஏன் இப்படி ஓடி வர்ர?"

"அப்பா.... நம்ம பூனை மாமா இருக்கார்ல.! அவர் வேட்டைக்காரன் வலைல மாட்டிக்கிட்டாரு!!" என மூச்சு வாங்க சொன்னது குட்டி எலி

இருவரும் பூனை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார்கள்

அங்கு ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக்கிடந்தது பூனை

எலியை பார்த்ததும் நம்பிக்கை வந்ததாய்
"நண்பா... நல்ல வேலை வந்தாய்... வேடன் வரும் நேரமாச்சு...சீக்கிரம் இந்த வலையை கடித்து கத்தரித்து என்னை  காப்பாற்று"என பரிதாபமாக கெஞ்சியது

"பயப்படாதே நண்பா.... நான் வலையை அறுத்து உன்னை  வெளியே கொண்டு வருகிறேன்" என சொல்லிவிட்டு வலையை கொறிக்க ஆரம்பித்தது

அதை பார்த்துவிட்டு குட்டி எலியும் கொறித்தது...

பெரிய எலி மெதுவாக கடித்துக்கொண்டிருந்தது..
அதனால் குட்டி எலியும் மெதுவாக கடித்தது

பூனைக்கு பொறுமையிழந்துவிட்டது

அரை மணி நேரம் ஆகியிருக்கும்

இப்பொழுதும் பெரிய எலி மெதுவாகவும்... குட்டி எலி அதை பார்த்து இன்னும் மெதுவாகவும் கொறித்து கொண்டிருந்தன

அந்த நேரம் பார்த்து வேடன் வந்தான்
அதை பார்த்ததும் பூனை அலரியது
"அய்யோ வேடன் வந்து விட்டான்... நண்பா ஏதாவது செய்"

அவ்வளவு நேரம் பொறுமையாக கொறித்துக்கொண்டிருந்த எலி சில நொடிகளில் கடித்து வலையை அறுக்கவும்
வேடன் கண் முன்னே பூனை தப்பித்து ஓடவும் நேரம் சரியாக இருந்தது.

எலிகள் இரண்டும் மூச்சு வாங்க ஓடி வந்து பேசிக்கொண்டன

குட்டி எலி கேட்டது
"ஏன் அப்பா...நான் தான் சின்னதா இருக்கேன்...வேகமா கடிக்க முடியல.. உன்னால தான் சீக்கிரம் கடிக்க முடியும்ல...? அப்பரம் ஏன் மெதுவா  கொறிச்ச? பாவம் பூனை மாமா.. எப்படி பயந்து வாடி போயிடிச்சு தெரியுமா? போ ப்பா..." என கோவித்துக் கொண்டது

பெரிய எலி நிதானமாக பதில் சொன்னது
"பூனை என் நண்பன் தான்.. இல்லை என சொல்லவில்லை.. காலையில் இருந்து சாப்பிடாமல் பசியுடன் இருந்தான்.. நீ வேறு கொலு கொலு என இருக்கிறாய்.. அவனை விடுவித்தவுடன் முதலில் நம்மேல் தான் பாயுவான்.. எனக்கு என்  நண்பனை காப்பாற்ற வேண்டும். ஆனால் அதற்காக  நம்மை இழந்துவிட கூடாது" என்றது

வெறும் கதையாக பார்த்தால் ஒன்றும் இல்லை தான்.

அந்த எலி இடத்தில் நம்மை வைத்து பார்த்தால் புரியும்

நாம் பல நேரங்களில் உறவுகளை காப்பாற்றிக்கொள்ள நம்மை நாமே பலி கொடுத்துக்கொள்கிறோம்

எவனோ சொன்ன படிப்பை படித்து
எவனுடைய கேள்விக்கோ பயந்து பிடிக்காத வேலைக்கு போய்
எவன் பார்த்தவரயோ கல்யாணம் முடித்து
ஊர் வாய்க்கு பயந்து குழந்தைகளை வளர்த்து..
எவனோ சொன்ன வாழ்க்கையை வாழ்ந்து..
நம்ம வாழ்க்கைக்கே நாம் எவனோ ஒருவனாக இருந்து மடிந்து

நம்மை நாமே அவர்களுக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நமக்கு முக்கியம் தான்...
ஆனால் நம்மை இழந்து அவர்களை மகிழ்விப்பது என்பது
போண்டா துன்ன கொதிக்குற எண்ணை சட்டிக்குள்ள  தலைய உட்ட மாதிரி தான்.

போண்டா எல்லாம் கிடைக்காது குமாரு 😂😂😂

கிருஷ்ண ஜெயந்தி

இன்று கிருஷ்ண ஜெயந்தியாமே!!!
FM இல் சொன்னார்கள்.

கிருஷ்ணன் என்றவுடன் எனக்கு என் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த  சம்பவம் ஞாபகம் வருகிறது

அவர் எப்பொழுதும் எதையாவது சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார்
வேலையை பற்றி..
பணம் காசு பற்றி...
சொந்தக்காரர்களை பற்றி...
எதுவும் கிடைக்கவில்லை என்றால் தனக்கு வந்த கனவை பற்றி கூட புலம்புவார்.
அப்படி ஒரு தேர்ந்த புலம்பர்.

அந்த மாதிரி ஒரு நாள் தன்னுடன் வேலை பார்க்கும் அக்காவிடம் புலம்புகையில்

அந்த அக்கா அவரை நிறுத்தி

"உனக்கு ஒன்னு தெரியுமா?
ராமன் இருக்கார்ல.... அவர் பெரிய மகாராஜா மகனா, ஒரு இளவரசனா அரண்மனைல பிறந்தாரு.. ஆனா அவர் வாழ்க்கைய பாதியை காட்டுல வாழ்ந்து சீதையையும் கஷ்டபடுத்தி
அப்புறம் சீதையை சந்தேகம் கொண்டு தீயில் இறக்கி
அப்புறம் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பி தன் மகன்களைப் பிரிந்து இப்படி வாழ்க்கையே கஷ்டத்துல தான் கழித்தான்.

ஆனா கிருஷ்ணன பாரு
அவன் பிறந்தது சிறையில
பிறந்த உடனே அப்பா அம்மாவை பிரிந்து அநாதையா மாடு மேய்க்கும் வளர்ப்பு பெற்றோர்கிட்ட வளர்ந்தான்
இருந்தாலும் அவன் எப்பவும் தானும் சந்தோஷமாவும் தன்னை சுற்றி இருந்தவர்களையும் தன்னோட குறும்பால் கலகலப்பா வச்சுருந்தான்.

நம்ம வாழ்க்கை நாமலே அமைச்சுக்கிறது தான்.
Life ல எப்பவுமே புலம்புறதுக்கு காரணம் இருந்துட்டே தான் இருக்கும்.
அதுல இருந்து வெளிய வா" என சொல்லி முடித்திருக்கிறார் அந்த அக்கா.

நண்பர் அதை கேட்டுவிட்டு ரெண்டு நாள் அதையே தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

செம இல்ல., நான் அன்னைக்கு தான் first கேட்குறேன்.

சரிங்க.....

எனக்கு இன்னிக்கு லீவ் எல்லாம் இல்லை.
நான் சந்தோஷமா தான்பா சொல்றேன்.
புலம்ப எல்லாம் இல்ல.😂😂

Related Articles