15 வருட இரகசியம்
அப்போ எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும்
பள்ளியில் எழுத தருவது எனக்கு எப்பொழுதுமே பிடிக்காது
பத்தாததுக்கு பள்ளியில் எழுதியதை அப்படியே வீட்டில் வந்து இன்னொரு நோட்டில் எழுத வேண்டும். வீட்டுப் பாடமாம்.
நான் இரண்டையுமே செய்ய மாட்டேன்.
காரணம் அது எனக்கு உபயோகப்படாது என்ற என் நம்பிக்கை.
ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிப்போடுவது எல்லாம் எங்களுடைய புத்தகத்தில் அப்படியே இருக்கும். இதை எப்பொழுது நான் கண்டுபிடித்தேனோ அந்த நொடி முதல் எனக்கு அவர்கள் கொடுப்பதை எழுதும் பழக்கமும் நின்றுவிட்டது.
எங்களுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் பாடம் நடத்தி விட்டு போர்டில் கேள்வி பதில் எழுதிப்போடுவார்கள்.
அதை பார்த்து அவர் அவர் நோட்டில் வகுப்பில் அனைவரும் எழுதுவார்கள்.
நான் மட்டும் புத்தகத்தில் அந்த பதில் எங்கு இருக்கு என தேடி கண்டுபிடித்து பென்சில்லில் குறித்துக்கொண்டிருப்பேன்.
எப்படியும் தேர்வுக்கு படிக்க தான் நோட்டில் எழுதுகிறோம். அதுதான் எல்லாமே புத்தகத்திலேயே இருக்கே என்ற எண்ணம் எனக்கு.
இதை
குறுக்கு புத்தி
அதிக பிரசங்கி
திமிர்
கொழுப்பு
என பல பெயர்களில் அன்று சொன்னார்கள்.
கையும் களவுமாக மாட்டிய பொழுதெல்லாம் அடி வாங்கினேன்
முட்டி போட்டேன்
வெளியே நிற்க வைக்கப்பட்டேன்.
திருந்தவே இல்லை.
இந்த கல்வி எல்லாம் குழந்தைகளை அவர்களின் உலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக தர தரவென வெளியே இழுத்து வந்து செவிலோடு அறைந்து பொறி கலங்கி அந்த பிள்ளைகள் அமரும் பொழுது A for apple என சொல்லி அதை திருப்பி சொல்லும் கிளிக் குழந்தைகளுக்கு so sweet என முத்தம் கொடுப்பது தான்.
இப்படி அடி வாங்கியதிலும் திட்டு வாங்கியதிலும் எனக்கு திடீரென ஒரு விபரீத எண்ணம்.
வீட்டை விட்டு ஓடி விட்டால் என்ன என்று.
உடனே தாயாரானேன்
மெட்ராஸ் தான் போக வேண்டும். அதுவும் ரயிலில் தான்.
தனியாக போக தைரியம் இல்லை.
யாரயாவது கூப்பிட வேண்டும்.
என்னை போலவே அடியும் வசையும் வெறுத்துப்போய் நாடி நரம்பு எல்லாம் சூடான ஒரு நண்பனை தேடிப்பிடித்தேன்.
இல்லை
உருவாக்கினேன் என்று கூட சொல்லலாம்.
திட்டத்தை சொன்னேன்.
உடனே சரி என்றான்.
பள்ளியில் பி.டி பீரியடில் எல்லோரும் விளையாட சென்றவுடன் நாங்கள் இருவரும் எப்படி எல்லாம் ஓடி போலாம் என கனவு கண்டுகொண்டு உட்கார்ந்திருந்தோம்.
ஒரு வாரம் யாருக்கும் தெரியாமல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது.
அட இந்த லெட்டர் வேறு எழுதனும்.
அதெல்லாம் ஓடி போனால் செய்ய வேண்டிய சம்பிரதாயம் அல்லவா.
எழுதினேன். தப்பும் தவறுமாக.
பொம்மை எல்லாம் போட்டு.
கீழே பேர் எழுதி அதன் மீது குறுக்காக சில கோடு இழுத்து அதை என் கையெழுத்து என்று வேறு நம்பினேன்.
கடிதத்தை மடித்து என் பள்ளி பையில் ஒளித்து வைத்துக்கொண்டேன்.
அந்த நாள் வந்தது.
இரவு அனைவரும் தூங்கிய பிறகு நான் அவன் வீட்டு தெருவுக்கு சென்று அவனும் வந்த பிறகு இருவரும் ஓட வேண்டும் என்பது தான் திட்டம்.
கிளம்புவதற்கு முன் அனைவரின் காலையும் தொட்டு கும்பிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அருணாச்சலம் ரஜினி போல.
எல்லாம் ரெடி. துணி எல்லாம் எடுத்து வைத்து விட்டேன்.
இரவு அவன் தெருவில் நாய் மட்டும் இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.
வழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் விழித்திருந்தால் சந்தேகம் வரும் என தூங்குவது போல பாசாங்கு செய்தேன்.
பிறகு தூக்கம் வருவது போல இருந்ததால் சில மணி நேரம் தூங்கலாம் என தூங்க ஆரம்பித்தேன்.
நான் நினைத்த படி சரியாக 1 மணிக்கு விழிப்பு வந்தது.
எழுந்தேன்.
அறையை நோட்டமிட்டேன்.
ஜீரோ வாட்ஸ் பல்பின் மிதமான ஒளி.
மின் விசிறியின் மெல்லிய சத்தம்.
இதமான காற்று.
கனமான போர்வை.
மெத்தை.
அட போங்கடா என போர்வையை இழுத்துப் போத்தி படுத்துக்கொண்டேன்.
காலையில் எழுந்து பள்ளிக்கு போக பயம்.
அவன் தனியாக ஓடியிருந்தால்!!
வகுப்புக்கு உள்ளே நுழையும் பொழுது தான் நிம்மதியாக இருந்தது.
அவன் அமர்ந்திருந்தான்
எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.
அவனே ஆரம்பித்தான்.
"நேத்து வந்தியாடா?"
அப்பாடா... அப்போ இவன் வரவில்லை
"ஆமா.. எவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்தேன் தெரியுமா? நீ ஏன் வரலே?" என கோபமாக கேட்டேன்.
"நான் கதவை திறக்கும் போது அம்மா எழுந்துட்டாங்கடா" என்றான் பாவமாக.
சரி என மன்னித்துவிட்டேன்.
மறுபடியும் போலாமா என்றான்.
எனக்கு என்னவோ ஓடி போவதின் மீதிருந்த அந்த முதல் முறை கிலுகிலுப்பு அதன் பிறகு வரவே இல்லை.
நான் அவனிடம் அன்று உண்மையை சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் என்ன செய்ய!
எல்லாம் ஒரு இது தான்..
ஒரு வேளை அவனுக்கு இப்பொழுது அது நினைவில் இருந்தால் இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்வான். 😃