Monday, 23 May 2022

வெயில் மேகம்

நல்ல வெயில்!

மழை பிடிக்குமா அல்லது வெயில் பிடிக்குமா என கேட்டால் எனக்கு இரண்டுமே பிடிக்கும். தனித் தனியாக இரண்டு காலங்களுக்கும் கொண்டாட்டமாக செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் மறக்காமல் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் செய்துவிடுவேன். 

உதாரணத்திற்கு, வெயில் காலங்களில் உச்சி வெயில் சுளீரென அடிக்கும் நேரத்தில் மொட்டை மாடியிலோ அல்லது வெட்ட வெளியிலோ எங்காவது நின்று வெயில் காய்வேன். மிருகங்கள் எல்லாம் வெயில் காயுமே அது போல் மணிக்கனக்கில் இல்லாவிடிலும் எனக்கு நேரம் இருக்கும் வரை அத்தனை சுகமாக வெயில் காய்வேன். பிறகு எப்பொழுதாவது வெய்யிலில் வேர்க்க விருவிருக்க எங்காவது தூரமாக நடந்தே கடப்பது, நா.முத்துகுமாரின் வரிகளில் ‘வெய்யிலோடு விளையாடி’ பாடலை கேட்பது, ஒரு வகையில் வெய்யிலை ரசிக்கவும், அதை கொண்டாடவும் எனக்கு இந்த பாடல் தான் சொல்லிக்கொடுத்தது என நினைக்கிறேன், கோடை காலங்களில் அங்கங்கு நடக்கும் அம்மன் கோவில் திருவிழாக்களை ரோட்டோரம் நின்று வேடிக்கை பார்ப்பது, பிறகு 6 மணி வெயில் பார்ப்பது , பச்சை தண்ணி குளியல், இலவச மோர்,  லெமன் ஜூஸ், தயிர் சாதம், மாம்பழம் இப்படி வெய்யிலுக்கு செய்ய எதாவது இருந்து கொண்டே இருக்கும்.

அதே போல மழைனா சொல்லவே வேண்டாம். அதற்காக “மழை, டீ, மிளகாய் பஜ்ஜி, ராஜா சார்” இல்லை. நான் இருக்கும் எல்லா இடங்களிலும் மழையை வேடிக்கை பார்க்க என ஒரு இடத்தை வைத்திருப்பேன். மழை வந்தவுடன் அங்கு சென்று அமர்ந்தோ, நின்றோ கொள்வேன். பாட்டி வீட்டின் காம்பவுண்ட் சுவர், அம்மா வீட்டு படிக்கட்டு, மனைவி வீட்டு முன் வாசற்படி, இப்பொழுது இருக்கும் வீட்டின் பெரிய ஜன்னல். மழை சத்தம் கேட்டால் சின்ராசு உடனே அதற்கான இடத்தில் ஆஜராகி விடுவான். அவனுக்கான டீ, காபி எல்லாம் அதே இடத்திற்கு வந்துவிடுவது போல ஒரு செட்டப் செய்து வைத்திருக்கிறேன். 

வெய்யிலை ரசிக்க நா.முத்துகுமார் சொல்லி கொடுத்தார் என்றால், இங்கு மழையை ரசிக்க எனக்கு அம்மாவும், பாட்டியும் சொல்லிக்கொடுத்தார்கள். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் ஒரு பிரமாதமான சமயம் அமையும், அல்லது அதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். அன்று விடுமுறையாக இருக்கும், அல்லது அடுத்த நாள் விடுமுறையாய் இருக்கும். மாலை வேலையில் மழை வருவதற்கான அறிகுறிகலோடு வெய்யிலும் காற்றும் ஒன்றுக்கு ஒன்று போராடிக்கொண்டிருக்கும். அப்பொழுது அந்த அறிவிப்பு அவர்களிடமிருந்து வரும், ‘பஜ்ஜி சுடலாம்’ என. வீடு பரபரப்பாகும், எதிர் கடையிலிருந்து மாவும், வாழைக்காவும் வாங்கிக்கொன்டு வருவார்கள், தொடர்ந்து சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தமும், வெளியே காற்று வெய்யிலை தள்ளிக்கொண்டு கொஞ்சம் இருளடர்ந்து மந்தமாக இருக்கும். சுட சுட பஜ்ஜி நம் கைகளுக்கு வரும் பொழுது வெளியே  மழை பெய்துவிடும். மழைக்காக பஜ்ஜி சுடபட்டதா, அல்லது பஜ்ஜி சுட்டதால் மழை பெய்ததா என்றே சொல்ல முடியாதபடி அப்படி அது இரண்டும் சங்கமிக்கும் அந்த நேரம் அடுத்த மழைக்காலம் வரை திருப்தியை கொடுத்துவிடும். பஜ்ஜிக்கு பிறகு டீ கொடுப்பார்கள், அதை வாங்கிக்கொண்டு மழைக்கான இடத்துக்கு போய் நின்றுகொள்வேன். 

இப்பொழுதெல்லாம் மயிலும் எனது மழைக்காலத்தில் சேர்ந்து கொண்டது. மழை வரும் முன் ஆடும் மயில்களை இங்கு நான் இருக்கும் இடத்தில் எங்கும் காணலாம். யார் பார்த்தால் எனக்கென்ன என அது பாட்டுக்கும் உடலை சிலுப்பி தோகையை நெட்டி விரித்து உடலை குழுக்கி குழுக்கி ஆட்டம் போட்டு திரியும். நான் இங்கு வருவதற்கு முன்வரை மழைக்கு முன் ஆடும் மயில்களை எப்பொழுதாவது பார்த்திருக்கிறேன். இங்கு தான் மழையில் மயில் என்ன செய்யும் என பார்க்கிறேன். மழை வரும் வரை ஆடிக்கொண்டிருக்கும் மயில் மழை வந்ததும் ஓடுவதில்லை. அது மிக சாந்தமாக மழையில் அமர்ந்திருக்கிறது, மழையில் மெதுவாக நடக்கிறது, திரும்பவும் எதாவது திண்டில் ஏறி தோகையை சரியவிட்டு அமர்ந்திருக்கிறது. நாம் குடையின் கீழ் நின்று நனையாமல் வெளியே நனைந்து கொண்டிருக்கும் பொருட்களின் வழியே மழையை ரசிக்கிறோம். அது மழையில் நனைந்தபடியே எதை ரசிக்கிறதோ!

பெரும் மழை பெய்யும் பொழுது அதன் சத்தத்தை கேட்டுக்கொண்டே தூங்குவேன், ஆவி பறக்க நூடில்ஸ் சாப்பிடுவேன், பெரும்பாலும் மழைக்கு பாடல் கேட்கும் ரசனை என்னிடமில்லை. வெய்யிலுக்கும், குளிருக்கும் பாடல்கள் வைத்திருக்கிறேன். ஆனால் மழைக்கு வெறுமனே மழை சத்தமே போதுமானதாய் இருக்கிறது. 

இது எல்லாம் இரண்டு காலங்களும் இடைவெளிவிட்டு தனித்தனியே வரும் பொழுது தான். ஆனால் இந்த ஒரு மாதமாக இவை இரண்டும் புதிதாய் சேர்ந்த காதலர்கள் போல பின்னிப்பினைந்து எது எப்பொழுது இருக்கிறது என்றே சொல்லமுடியாமல் மாறி மாறி அடிக்கிறது. 
கோடை மழை இருக்கும். ஆனால் கோடையில் வெயில் அடித்து துவைக்கும் பொழுது மழை பெய்து குளிர்க்கும். அல்லது லேசாக பெய்து சூட்டை கிளப்பும். ஆனால் இது இரண்டுமல்லாமல் கண்ணால் பார்க்கும் பொழுதே மாயவித்தை போல மாறி மாரி விளையாடுகிறது.

காலையில் மழை வருவது போல இருக்கும், ஜெர்கினை எடுத்து போட்டுகொண்டு பைக்கை எடுத்து அலுவலகம் செல்வதற்குள் வெயில் வந்துவிடும். சரி எப்படியும் வெயில் தான் அடிக்க போகிறது என ஜெர்கின் எடுக்காமல் போவேன், அன்று மழையில் நனைந்து நொந்து போய் வருவேன். 

பைக்கை எடுக்கும் பொழுது வெயில் சுளீரென அடிக்கும், சரி போகும் வழியில் குளு குளுவென எதாவது குடிக்கலாம் என போய்க்கொண்டிருக்கும் பொழுதே மழை மேகமாய் மாறிவிடும்.

மழை வருவது போல இருக்கிறது துணி தொவைக்க வேண்டாம், காயப்போட முடியாது என சொல்லிவிட்டு போனால் வெயில் அடித்துவிடும். சரி வெயில் அடிக்கிறது என தொவைத்து காயப்போட சொன்னால் அன்று மழை வந்து அனைத்தையும் நனைத்து பழி வாங்கிவிடும்.

ஒரே நாளில் பத்து முறைகூட இப்படி மாறி மாறி வெய்யிலும் மழையும் வருகிறது. வெயில் அடிக்கிறது என வெயில் பாட்டு போட்டால் அது முடிவதற்கு முன்னே மழை மேகம் வந்துவிடுகிறது. மழைக்கு சூடா எதாவது சாப்பிடாலாம் என்றால் வெயில் வந்துவிடுகிறது. 

ஒரு கையில் ஐஸ்கிரீமும் இன்னொரு கையில் லெமன் டீயும் வைத்துக்கொண்டு ஐஸ்கிரீம் கையை வாயருகில் கொண்டு போனால் மழையும், சரி என லெமன் டீயை பக்கத்தில் கொண்டு வந்தால் வெயில் அடித்தால் என்ன செய்வது. ஒரு வேலையும் ஓட மாட்டேன் என்கிறது. எனக்கு ஏற்கனவே ‘மூட் ஸ்விங்’ நிறைய இருக்கிறது. இதில் இது வேறு என்னை பாடாய் படுத்தியெடுக்கிறது. 

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இது நன்றாக தான் இருக்கிறது. பெரும் வெய்யிலோ அல்லது பெரும் மழையோ இல்லாமல் ‘கொஞ்சம்’ ‘கொஞ்சம்’ என செல்லம் கொஞ்சிக்கொண்டு இரண்டும் அடிக்கிறது. பிரச்சனை என்னவென்றால். வெய்யிலோ மழையோ, இரண்டும் எதோ ஒரு வகையில் நமது கடந்த காலங்களின் நினைவுச் சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. நான் பெங்களூரில் மழை பார்த்து நிற்கும் பொழுது எனக்கு என் பாட்டி வீட்டு காம்பவுண்ட் சுவர் ஞாபகம் வரும். உச்சி வெயில் சூரியனை பார்க்கும் பொழுது, சின்ன வயதில் சூரியனை கண் சிமிட்டாமல் எத்தனை நேரம் பார்க்க முடியும் என அடிக்கடி சோதனை செய்வது ஞாபகம் வரும். ஒவ்வொரு முறை மழை காலங்களில் ரோட்டோரம் போண்டா பஜ்ஜி கடையை பார்க்கும் பொழுதும் சின்ன வயதில் வீட்டில் நடக்கும் மழை பஜ்ஜி சடங்கு ஞாபகம் வரும். இப்படி நிகழ் காலத்தையும் கடந்த காலத்தையும் இனைக்கும் சில நினைவுச் சங்கிலி இப்படி குறுகிய நிமிடத்தில் மாறி மாறி கிடைக்கும் பொழுது சங்கிலியும் அறுந்து, அறுந்து இணைக்கிறது மனநிலையை எதோ செய்கிறது. இருந்தும் இத்தனை அழகான ஒரு வானிலையை ரசிக்கவில்லையென்றால் எப்படி?!! இனிமேல் வருடா வருடம் இது வந்தால் என்ன செய்வது?

முதல்மாடியிலிருக்கும் என் அலுவலகம் மேற்கு பார்த்து இருப்பதால் வெய்யிலோ மழையோ இரண்டுமே பாரபச்சமில்லாமல் பளீரென தெரியும். அதனால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். வேலையெல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு எதையும் யோசிக்காமல் இருக்கையை வாசலுக்கு நேர் போட்டு சம்மனமிட்டு அமர்ந்து இந்த காலத்தை வெறுமனே வேடிக்கை பார்க்கலாமென்றிருக்கிறேன். இனி இதற்காக செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். முதல்வேலையாக “வெய்யிலோடு விளையாடி வெய்யிலோடு உறவாடி” என முடிந்து ‘’சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், குடையொன்னு குடையொன்னு தா கிளியே’ என ஆரம்பிப்பது போல ப்ளேலிஸ்டை தயார் செய்ய வேண்டும்.
இப்பொழுது மேக மூட்டமாய் மாறிவிட்டது.

No comments:

Post a Comment

Related Articles