Wednesday, 24 July 2024

மீட்சி

             மனம் எப்பொழுதும் சலனத்துடனே இருக்கின்றது. ஒரு நிலைப்பாட்டில், ஒரு கவனத்தில் குவியாமல் கொடியில் துவைத்து காயப்போட்ட துணி காற்றுக்கு ஆடுவதைப் போல மனம் அலைக்கழிக்கப் படுகிறதே தவிற நான் பல நாட்களாய் அதே இடத்தில் காய்ந்து வெந்து கொண்டிருக்கிறேன்.


           எனக்கு இந்த முடிவில்லா சுழற்ச்சியிலிருந்து வெளியேற எந்த யோசனையோ திட்டங்களோ இல்லை. எதாவது ஒரு கை என் உச்சி முடியை கொத்தோடு பிடித்து இழுத்து வெளியே போட்டுவிடும் என்ற நம்பிக்கையில் அன்னாந்தபடி அமர்ந்திருக்கிறேன். சில சமயம் அழுகிறேன். சில சமயம் நானே வெளியேற நினைத்து கைகால்களை சிராய்த்துக்கொண்டேன். திரும்பவும் என் மீட்பருக்கு காத்திருக்கிறேன். மறுபடியும் அழுகிறேன். நிறைய தூங்குகிறேன். இப்பொழுதெல்லாம் கனவில் கூட வெளிச்சம் வருவதில்லை. இது பாதாள சிறையோ பதுங்கு குழியோ எனக்கு தெரியாது, ஆனால் மேலே மக்கள் எல்லாம் நடமாடும் சத்தம் கேட்கிறது.


           நான் எங்கு தவறு செய்தேன்? எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டேன்? இதெல்லாம் எப்படி நடந்தது என்றே என் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மங்கலாய் மறைய ஆரம்பித்துவிட்டது.


        இப்பொழுது எனக்கு தெரியும் நிஜம் என்பது நான் மட்டுமே. அடர்த்தியற்றுப் போன பரட்டைத் தலையும், அங்கங்கு வெள்ளை முடியுடன் வளர்ந்த தாடியும், நயிந்து கிழிகின்ற துணிகளும், பிஞ்சு போன செருப்பும், தொப்பையும், வெயிளில் காய்ந்து கருகிப்போன தோலும், சோர்வாக இருக்கும் கண்களும், மிதமான தலைவலியும் மட்டுமே நிஜம்.


         நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் வயது வித்யாசமில்லாமல் நம் மீட்பரை தேடும் யாசகனாய் நிற்பது கொடுமை. ஒவ்வொருவரிடமும் பேசிவிட்டு நகரும் பொழுதும் மனம் பெரிய பாறாங்கல்லை சுமக்கும் பாரமாகிவிடுகிறது. இங்கு அவமானம் என்ற சொல்லுக்கு வேலையில்லை. ஏனென்றால் வேலையில்லாதவனுக்கு மானம் என்ற சொல்லே பயன்படுத்த முடியாத பொழுது அங்கு அவமானம் எப்படி பொருந்தும். ஆனால் அதன் அத்தனை வலியும் சுமக்க வேண்டும். காலம் இப்படியே போய்விடுமோ என அஞ்சி நடுங்குகிறேன்.


      இங்கு இந்த இருளில் காலத்தை கணக்கிடுவது அர்த்தமற்றது. காலம் என்பது மாயை. பகலற்ற இருளுக்கு காலமே கிடையாது. இருளில் நகர்வதற்கு பயந்தால் இருக்கும் இடத்திலேயே வேர் விட்டு விடுவேன் என்பது மட்டும் தெரிகிறது.


யாசித்தது போதும்.

அன்னாந்தது போதும்.

மீட்பர் வரப்போவதில்லை.

மீட்பர் வரவேபோவதில்லை.

மீட்சிக்கு தயாராகுங்கள்.

 

 

பிரபு மித்ரன் / 25.7.24


No comments:

Post a Comment

Related Articles