நிரந்தரமற்ற நிலையை கடக்க வழி தெரியவில்லை.
இருக்குமிடம், உண்ணும் உணவு, படுக்கும் வீடு, பழகும் சிரிப்புகள், கிடைக்கும் பணம் என எதுவும் அடுத்த நாள் நிரந்தரமில்லை என்ற நிலை வந்த பிறகு இன்று இவற்றை அனுபவிக்க முடியுமா?
அனுபவிப்பதில் அர்த்தம் இல்லை என்றவாரே பொழுதை விரக்தியில் கடக்கிறேன்.
நான் விரக்தியில் இருக்கிறேன் என என் கூட இருப்பவர்களுக்கே தெரிவதில்லை. நான் நிம்மதியாக அலட்டல் இல்லாமல் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை நான் வாழ்வைபற்றிய சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்துகொள்வதால் அப்படி பிறர் கண்களுக்கு தெரியலாம். ஏனென்றால் அந்த சிந்தனைகள் சூன்யமாக இருக்கிறது. அதில் வெளிச்சமே தெரிவதில்லை. எப்பொழுதாவது மினுக் மினுக்கெனெ வெளிச்சம் வருவதாக நினைத்து அதை தொடர்ந்து உள்ளே சென்றால் இருளில் மாட்டிக்கொள்கிறேன். பிறகு கட்டிய லுங்கி கழடுமளவுக்கு தலைதெரிக்க வெளியே ஓடி வந்து இப்படி வெறுமனே அலைந்து கொண்டிருக்கிறேன்.
குகையின் இருட்டுக்கு பயந்து வெளியே மரத்தடியில் தன் குகையை பார்த்தபடி அமர்ந்திருக்கும் சிங்கத்தை போல இந்த என் வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன். குகையில்லாமல் வேட்டைக்கு போக பிடிக்கவில்லை. இருப்பிடமற்ற அரசனுக்கு போர் ஒரு கேடா? எத்தனை தூரம் வேண்டுமானாலும் பறந்துவிடுவேன், திரும்ப வந்து அடைய கூடு இருந்தால்.
கூட்டை கட்டிக்கொள்ளலாம் அல்லவா?
பழைய கூடு போல வராதே!!
வெளிச்சம் உள்ள புது குகை தேடிக்கொள்ளலாம்.
பழைய குகையின் வசதி இருக்காதே!!
புது அரண்மனை கட்டிக்கொள்ளலாமே?
பழைய அரண்மனையின் சிறப்பு கிடைக்காதே!!
ஆம் எதுவுமே பழையது போல இருக்கப் போவதில்லை. சந்தர்ப சூழ்நிலையோ, யாருடைய சதி செயலோ, அல்லது நம்முடைய முட்டாள்தனத்தாளோ பழைய வாழ்கை முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டது. இனி அதில் வாழ்வை தொடர்வது சாத்தியமற்றது.
குகையின் வெளிச்சம் நிரந்தரமாக மூடிக்கொண்டது. இனி வாசலில் அமர்ந்து பார்த்துகொண்டிருப்பது பயனற்றது. மர நிழல் இருப்பிடமில்லை. அதனால் தான் நிரந்தரமற்ற சூழலில் இருப்பது போல இருக்கிறது. மிகச்சிரியதாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு குகையை தேடிக்கொள்ளுங்கள்.
அரண்மனை மாதிரி இல்லாமல் போனாலும் சின்னதாக கூரை அமைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் மட்டுமே உங்களுக்கு நிரந்தரம்.
உங்கள் மனம் தான் வெளிச்சம்.
குகையடைந்த பிறகு தான் பசியெடுக்கும்.
பசி தான் உங்களை வேட்டைக்கு நகர்த்தும்.
வேட்டைதான் நீங்கள் யார் என தீர்மாணிக்கும்.
உங்கள் குகையல்ல.
பிரபு மித்ரன்
27.7.24
No comments:
Post a Comment