Friday, 26 July 2024

குகையற்ற சிங்கம்

நிரந்தரமற்ற நிலையை கடக்க வழி தெரியவில்லை.

இருக்குமிடம், உண்ணும் உணவு, படுக்கும் வீடு, பழகும் சிரிப்புகள், கிடைக்கும் பணம் என எதுவும் அடுத்த நாள் நிரந்தரமில்லை என்ற நிலை வந்த பிறகு இன்று இவற்றை அனுபவிக்க முடியுமா?

அனுபவிப்பதில் அர்த்தம் இல்லை என்றவாரே பொழுதை விரக்தியில் கடக்கிறேன்.

நான் விரக்தியில் இருக்கிறேன் என என் கூட இருப்பவர்களுக்கே தெரிவதில்லை. நான் நிம்மதியாக அலட்டல் இல்லாமல் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை நான் வாழ்வைபற்றிய சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்துகொள்வதால் அப்படி பிறர் கண்களுக்கு தெரியலாம். ஏனென்றால் அந்த சிந்தனைகள் சூன்யமாக இருக்கிறது. அதில் வெளிச்சமே தெரிவதில்லை. எப்பொழுதாவது மினுக் மினுக்கெனெ வெளிச்சம் வருவதாக நினைத்து அதை தொடர்ந்து உள்ளே சென்றால் இருளில் மாட்டிக்கொள்கிறேன். பிறகு கட்டிய லுங்கி கழடுமளவுக்கு தலைதெரிக்க வெளியே ஓடி வந்து இப்படி வெறுமனே அலைந்து கொண்டிருக்கிறேன்.

குகையின் இருட்டுக்கு பயந்து வெளியே மரத்தடியில் தன் குகையை பார்த்தபடி அமர்ந்திருக்கும் சிங்கத்தை போல இந்த என் வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன். குகையில்லாமல் வேட்டைக்கு போக பிடிக்கவில்லை. இருப்பிடமற்ற அரசனுக்கு போர் ஒரு கேடா? எத்தனை தூரம் வேண்டுமானாலும் பறந்துவிடுவேன், திரும்ப வந்து அடைய கூடு இருந்தால்.

கூட்டை கட்டிக்கொள்ளலாம் அல்லவா?

பழைய கூடு போல வராதே!!

வெளிச்சம் உள்ள புது குகை தேடிக்கொள்ளலாம்.

பழைய குகையின் வசதி இருக்காதே!!

புது அரண்மனை கட்டிக்கொள்ளலாமே?

பழைய அரண்மனையின் சிறப்பு கிடைக்காதே!!

ஆம் எதுவுமே பழையது போல இருக்கப் போவதில்லை. சந்தர்ப சூழ்நிலையோ, யாருடைய சதி செயலோ, அல்லது நம்முடைய முட்டாள்தனத்தாளோ பழைய வாழ்கை முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டது. இனி அதில் வாழ்வை தொடர்வது சாத்தியமற்றது.

குகையின் வெளிச்சம் நிரந்தரமாக மூடிக்கொண்டது. இனி வாசலில் அமர்ந்து பார்த்துகொண்டிருப்பது பயனற்றது. மர நிழல் இருப்பிடமில்லை. அதனால் தான் நிரந்தரமற்ற சூழலில் இருப்பது போல இருக்கிறது. மிகச்சிரியதாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு குகையை தேடிக்கொள்ளுங்கள்.

அரண்மனை மாதிரி இல்லாமல் போனாலும் சின்னதாக கூரை அமைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் மட்டுமே உங்களுக்கு நிரந்தரம்.

உங்கள் மனம் தான் வெளிச்சம்.

குகையடைந்த பிறகு தான் பசியெடுக்கும்.

பசி தான் உங்களை வேட்டைக்கு நகர்த்தும்.

வேட்டைதான் நீங்கள் யார் என தீர்மாணிக்கும்.

உங்கள் குகையல்ல.



பிரபு மித்ரன்

27.7.24

ஒட்ட-வைக்கப்-பட்ட-வை



எத்தனை வேகமாக வேண்டுமானாலும் ஓடிக்கொள்ளுங்கள்.

அது உங்களது தேவைகளைப் பொருத்தது.

ஆனால்

வழியில் நீங்கள் தட்டி விடும் ஆயிரக்கணக்கான இதயங்களில்

ஒரு சில கண்ணாடி இதயங்களும் இருக்கலாம்.

உதாசினமாக உடைத்துவிட்டு வழக்கம் போல உச்சுக் கொட்டிக் கொள்ளலாம் என நினைத்துவிடாதீர்கள்.

அவை எந்த காலத்திலும் தனது பழைய நிலையை அடையப் போவதில்லை.

என்ன செய்ய?

உங்கள் வாழ்நாளில் நீங்கள் சந்தித்த

அற்புதமான இதயங்கள் பெரும்பாளும் கண்ணாடிகளால் செய்யப்பட்டவைகளே!

பிரபு மித்ரன்

26.7.24

Wednesday, 24 July 2024

மீட்சி

             மனம் எப்பொழுதும் சலனத்துடனே இருக்கின்றது. ஒரு நிலைப்பாட்டில், ஒரு கவனத்தில் குவியாமல் கொடியில் துவைத்து காயப்போட்ட துணி காற்றுக்கு ஆடுவதைப் போல மனம் அலைக்கழிக்கப் படுகிறதே தவிற நான் பல நாட்களாய் அதே இடத்தில் காய்ந்து வெந்து கொண்டிருக்கிறேன்.


           எனக்கு இந்த முடிவில்லா சுழற்ச்சியிலிருந்து வெளியேற எந்த யோசனையோ திட்டங்களோ இல்லை. எதாவது ஒரு கை என் உச்சி முடியை கொத்தோடு பிடித்து இழுத்து வெளியே போட்டுவிடும் என்ற நம்பிக்கையில் அன்னாந்தபடி அமர்ந்திருக்கிறேன். சில சமயம் அழுகிறேன். சில சமயம் நானே வெளியேற நினைத்து கைகால்களை சிராய்த்துக்கொண்டேன். திரும்பவும் என் மீட்பருக்கு காத்திருக்கிறேன். மறுபடியும் அழுகிறேன். நிறைய தூங்குகிறேன். இப்பொழுதெல்லாம் கனவில் கூட வெளிச்சம் வருவதில்லை. இது பாதாள சிறையோ பதுங்கு குழியோ எனக்கு தெரியாது, ஆனால் மேலே மக்கள் எல்லாம் நடமாடும் சத்தம் கேட்கிறது.


           நான் எங்கு தவறு செய்தேன்? எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டேன்? இதெல்லாம் எப்படி நடந்தது என்றே என் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மங்கலாய் மறைய ஆரம்பித்துவிட்டது.


        இப்பொழுது எனக்கு தெரியும் நிஜம் என்பது நான் மட்டுமே. அடர்த்தியற்றுப் போன பரட்டைத் தலையும், அங்கங்கு வெள்ளை முடியுடன் வளர்ந்த தாடியும், நயிந்து கிழிகின்ற துணிகளும், பிஞ்சு போன செருப்பும், தொப்பையும், வெயிளில் காய்ந்து கருகிப்போன தோலும், சோர்வாக இருக்கும் கண்களும், மிதமான தலைவலியும் மட்டுமே நிஜம்.


         நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் வயது வித்யாசமில்லாமல் நம் மீட்பரை தேடும் யாசகனாய் நிற்பது கொடுமை. ஒவ்வொருவரிடமும் பேசிவிட்டு நகரும் பொழுதும் மனம் பெரிய பாறாங்கல்லை சுமக்கும் பாரமாகிவிடுகிறது. இங்கு அவமானம் என்ற சொல்லுக்கு வேலையில்லை. ஏனென்றால் வேலையில்லாதவனுக்கு மானம் என்ற சொல்லே பயன்படுத்த முடியாத பொழுது அங்கு அவமானம் எப்படி பொருந்தும். ஆனால் அதன் அத்தனை வலியும் சுமக்க வேண்டும். காலம் இப்படியே போய்விடுமோ என அஞ்சி நடுங்குகிறேன்.


      இங்கு இந்த இருளில் காலத்தை கணக்கிடுவது அர்த்தமற்றது. காலம் என்பது மாயை. பகலற்ற இருளுக்கு காலமே கிடையாது. இருளில் நகர்வதற்கு பயந்தால் இருக்கும் இடத்திலேயே வேர் விட்டு விடுவேன் என்பது மட்டும் தெரிகிறது.


யாசித்தது போதும்.

அன்னாந்தது போதும்.

மீட்பர் வரப்போவதில்லை.

மீட்பர் வரவேபோவதில்லை.

மீட்சிக்கு தயாராகுங்கள்.

 

 

பிரபு மித்ரன் / 25.7.24


Related Articles