என்னை எப்படியும் இந்த புலி கொன்றுவிடும்
என் முகத்தை அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறது
நான் கனவிலும் நினைத்து பார்க்காத ஒரு காட்சி. என்
முகத்திற்கு மிக அருகில் புலியின் முகம். என் கண்களை உற்று உற்று பார்க்கிறது.
ஒரு மாடு அளவுக்கு பெரியதாக இருக்கிறது இந்த வெள்ளை
புலி. நான் இவ்வளவு நாளாக கற்பனை செய்து வைத்திருந்த புலி நாயை விட கொஞ்சம்
பெரியது. அவ்வளவு தான்.
எவ்வளவு பெரிய வித்யாசம் உண்மைக்கும் கற்பனைக்கும்.!
நான் ஏன் இங்கு வந்து விழுந்தேன் என்று எனக்கு
மறந்துவிட்டது. அதை ஞாபக படுத்தி பார்க்க எனக்கு நேரமில்லை. பயந்திருக்கிறேன்.
மதில் சுவரோரம் கால்களை குறுக்கிய படி
உட்கார்ந்திருக்கிறேன்.நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. அழுகிறேன்.
புலியிடம் கை எடுத்து கும்பிட்டு கொண்டே இருக்கிறேன். கெஞ்சுகிறேன். எப்படியும்
இதெல்லாம் அதுக்கு புரியாது என்று எனக்கு நன்றாக தெரியும். இருந்தும் செய்து
கொண்டிருக்கிறேன். ஏன் என்று கேட்காதீர்கள். எனக்கு பதில் தெரியாது.
ஒரு ஓரத்தில் எதோ ஒரு நம்பிக்கை. இல்லை நப்பாசை என்று
கூட சொல்லலாம். என்னை கொல்லாமல் விட்டு விடாதா என!!
மேலே இருந்து அதன் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது.
நான் ஒடுங்கி ஒட்டிகொண்டிருக்கும் சுவருக்கு நேர் மேலே
இதை பார்க்க ஏராளமானவர்கள் நின்று என்னை விட பயத்துடன் கத்தி கொண்டிருந்தார்கள்.கைகளில்
செல்போன் கேமராக்களுடன்!!!
இவங்க
ஒருத்தருக்கு கூட நான் பிழைக்கனும்னு ஆசை இல்லை. ஒரு வேலை இந்த புலி என்னை எதுவும்
செய்யாமல் விட்டுவிட்டால் இவர்களுக்கு பேஸ்புக்கிலும் யு டியூபிலும் கிடைக்கும்
லைக்குகள் வராமல் போய்விடுமே.
எப்படியும்
என்னை இந்த புலி கொன்றுவிடும். அனால் என்னை எதற்கு இப்படி பார்க்கிறது என்று
தான் தெரியவில்லை. என்னை தொட அதன் முன்னங்கால்களை நீட்டி நீட்டி முயற்சிக்கிறது.
மறுபடியும்
ஒரு கல் அதன் உடம்பு மேல் விழுகிறது. இந்த தடவையும் அது கண்டு கொள்ளவில்லை.
அதற்கு
நான் யாரென்று புரியவில்லை என நினைக்கிறேன். என்னால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
என்னை போல தான் இதுவும் நினைக்கிறதோ! அதுவும் தெரியவில்லை.
யாரோ “விஜய்.....விஜய்”
என்று என் இடது பக்கத்திலிருந்து கத்துகிறார்கள். இதுவும் சத்தம் வந்த திசையை
திரும்பி பார்க்கிறது. உடனே என்னிடம் முகத்தை திருப்பி கொள்கிறது.
திரும்பவும்
“விஜய்..விஜய்” சத்தம். மறுபடியும் திரும்பி பார்க்கிறது.
அட
கடவுளே!! இதன் பெயர் விஜய் போல!!
இந்த
தடவையும் உடனே என் பக்கம் முகத்தை திருப்பி கொண்டது. என் முகத்தில் அப்படி இந்த
புலிக்கு என்ன தெரிகிறதோ. நான் இதுவரை வாழ்ந்த இந்த 20 வருடங்களில் மனிதர்கள் கூட
இவ்ளோ நேரம் என் முகத்தை பார்த்தது கிடையாதே!! அப்படி என்ன இருக்கிறது.
நான்
இப்பொழுதும் அதனிடம் கெஞ்சி அழுது கொண்டிருக்கிறேன். எனக்கு ஓடும் அளவிற்கு
தைரியமில்லை. எப்படி தப்பிப்பதென்று எனக்கு தெரியாது.
இதை எந்த
கல்வியும் எனக்கு சொல்லி கொடுக்கவில்லை
பள்ளியில்
சொல்லி கொடுத்த (a+b)2=a2+b2+2ab
உம் எனக்கு இங்கு உபயோகப்படவில்லை. பிறகு எதற்கு இத்தனை நாள் படித்தேன்!!
மேலே நின்று இதை படமெடுத்து கொண்டிருப்பவர்களுக்கும்
இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நான் செத்த பிறகு “அவன் அப்படி
செய்திருக்கலாம்... இப்படி செய்திருக்கலாமென்று” பல ஐடியாக்கள் தருவார்கள்.
“விஜய்......விஜய்”
அது இப்பொழுதெல்லாம் திரும்புவதில்லை. என்னை இன்னும்
ஆழமாக பார்க்க ஆரம்பித்துவிட்ட்து.
பத்து நிமிடத்திற்கு முன்பு வரை என்னை இங்கு யாருக்கும்
தெரியாது. ஆனால் நாளை என்னை இந்த நாட்டிற்கே தெரிய போகிறது. லைக் வாங்குவதற்காக
எனக்காக கண்ணீர் வடிப்பார்கள். ஒரு ‘லைக்’குக்காக என்னை கொல்ல பாக்கிறார்களோ என்று
கூட தோன்றுகிறது.
இவர்கள் நினைத்திருந்தால் இவ்வளவு நேரத்தில் எதாவது செய்து
என்னை இந்த விஜயிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
என்னை தொட இந்த புலி கிட்ட காலை கொண்டு வரும்
பொழுதெல்லாம் என் உயிர் உடம்பை விட்டு வெளியே போய்விட்டு போய்விட்டு உள்ளே
வருகிறது.
“டொப்”
எவனோ ஒரு பெரிய கல்லை புலி மேல் போட்டுவிட்டான்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த புலியின் முகம் இப்பொழுது
மாறி விட்டது.
எனக்கு நேரம் வந்துவிட்டது.
இரண்டடி பின்னால் குதித்து தலையை மேலே தூக்கி அந்த கேமரா
கூட்டத்தை பார்த்து உறுமுகிறது.
முன்பு விட என்னை சுற்றி சத்தம் அதிகமாக இருக்கிறது.
எல்லோரும் கத்துகிறார்கள். நானும் கத்துகிறேன். முடிவு
நெருங்கிவிட்டதை உணர்கிறேன்.
பின்னங்காலில் உந்தி எழுந்து என் மேல் பாய போகிறது.
அந்த அரை நிமிடம் தான் உண்மையான புலியின் குணத்தை பார்க்கிறேன்.
இரைச்சல் அதிகமாக இருக்கிறது.
பாய்ந்துவிட்டது.
.
என் பின்னங்கழுத்தை கவ்வி பிடித்து இழுக்கிறது. எனக்கு
வலிக்கவில்லை. உயிர் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது.
என்னை இழுத்து கொண்டு ஓடுகிறது. என் தலை இப்பொழுது மேலே
இருந்த கூட்டத்தை பார்த்து திரும்பிவிட்டது.
அடப்பாவிகளா!!
இப்பொழுது கையில் கேமராவை தூக்கி பிடித்துக் கொண்டு
கத்தி கொண்டிருக்கிறார்கள்.
இங்கு எது மிருகம் என்றே எனக்கு
சந்தே...................................