Saturday, 27 September 2014

விஜயுடன் கொஞ்ச நேரம்


என்னை எப்படியும் இந்த புலி கொன்றுவிடும்

என் முகத்தை அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறது

நான் கனவிலும் நினைத்து பார்க்காத ஒரு காட்சி. என் முகத்திற்கு மிக அருகில் புலியின் முகம். என் கண்களை உற்று உற்று பார்க்கிறது.

ஒரு மாடு அளவுக்கு பெரியதாக இருக்கிறது இந்த வெள்ளை புலி. நான் இவ்வளவு நாளாக கற்பனை செய்து வைத்திருந்த புலி நாயை விட கொஞ்சம் பெரியது. அவ்வளவு தான்.
எவ்வளவு பெரிய வித்யாசம் உண்மைக்கும் கற்பனைக்கும்.!

நான் ஏன் இங்கு வந்து விழுந்தேன் என்று எனக்கு மறந்துவிட்டது. அதை ஞாபக படுத்தி பார்க்க எனக்கு நேரமில்லை. பயந்திருக்கிறேன்.

மதில் சுவரோரம் கால்களை குறுக்கிய படி உட்கார்ந்திருக்கிறேன்.நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. அழுகிறேன். புலியிடம் கை எடுத்து கும்பிட்டு கொண்டே இருக்கிறேன். கெஞ்சுகிறேன். எப்படியும் இதெல்லாம் அதுக்கு புரியாது என்று எனக்கு நன்றாக தெரியும். இருந்தும் செய்து கொண்டிருக்கிறேன். ஏன் என்று கேட்காதீர்கள். எனக்கு பதில் தெரியாது.

ஒரு ஓரத்தில் எதோ ஒரு நம்பிக்கை. இல்லை நப்பாசை என்று கூட சொல்லலாம். என்னை கொல்லாமல் விட்டு விடாதா என!!

மேலே இருந்து அதன் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது.
நான் ஒடுங்கி ஒட்டிகொண்டிருக்கும் சுவருக்கு நேர் மேலே இதை பார்க்க ஏராளமானவர்கள் நின்று என்னை விட பயத்துடன் கத்தி கொண்டிருந்தார்கள்.கைகளில் செல்போன் கேமராக்களுடன்!!! 

அவர்களில் ஏதோ ஒரு அறிவாளி இதை செய்திருக்க வேண்டும். ஆனால் அதை இந்த புலி கண்டுகொண்டதாக எனக்கு தோன்றவில்லை


இவங்க ஒருத்தருக்கு கூட நான் பிழைக்கனும்னு ஆசை இல்லை. ஒரு வேலை இந்த புலி என்னை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் இவர்களுக்கு பேஸ்புக்கிலும் யு டியூபிலும் கிடைக்கும் லைக்குகள் வராமல் போய்விடுமே.

எப்படியும் என்னை இந்த புலி கொன்றுவிடும். அனால் என்னை எதற்கு இப்படி பார்க்கிறது என்று தான் தெரியவில்லை. என்னை தொட அதன் முன்னங்கால்களை நீட்டி நீட்டி முயற்சிக்கிறது.

மறுபடியும் ஒரு கல் அதன் உடம்பு மேல் விழுகிறது. இந்த தடவையும் அது கண்டு கொள்ளவில்லை.

அதற்கு நான் யாரென்று புரியவில்லை என நினைக்கிறேன். என்னால் எதையும் ஊகிக்க முடியவில்லை. என்னை போல தான் இதுவும் நினைக்கிறதோ! அதுவும் தெரியவில்லை.
யாரோ “விஜய்.....விஜய்” என்று என் இடது பக்கத்திலிருந்து கத்துகிறார்கள். இதுவும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்கிறது. உடனே என்னிடம் முகத்தை திருப்பி கொள்கிறது.
திரும்பவும் “விஜய்..விஜய்” சத்தம். மறுபடியும் திரும்பி பார்க்கிறது.
அட கடவுளே!! இதன் பெயர் விஜய் போல!!

இந்த தடவையும் உடனே என் பக்கம் முகத்தை திருப்பி கொண்டது. என் முகத்தில் அப்படி இந்த புலிக்கு என்ன தெரிகிறதோ. நான் இதுவரை வாழ்ந்த இந்த 20 வருடங்களில் மனிதர்கள் கூட இவ்ளோ நேரம் என் முகத்தை பார்த்தது கிடையாதே!! அப்படி என்ன இருக்கிறது.

நான் இப்பொழுதும் அதனிடம் கெஞ்சி அழுது கொண்டிருக்கிறேன். எனக்கு ஓடும் அளவிற்கு தைரியமில்லை. எப்படி தப்பிப்பதென்று எனக்கு தெரியாது.
இதை எந்த கல்வியும் எனக்கு சொல்லி கொடுக்கவில்லை

பள்ளியில் சொல்லி கொடுத்த (a+b)2=a2+b2+2ab உம் எனக்கு இங்கு உபயோகப்படவில்லை. பிறகு எதற்கு இத்தனை நாள் படித்தேன்!!

மேலே நின்று இதை படமெடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நான் செத்த பிறகு “அவன் அப்படி செய்திருக்கலாம்... இப்படி செய்திருக்கலாமென்று” பல ஐடியாக்கள் தருவார்கள்.

“விஜய்......விஜய்”
அது இப்பொழுதெல்லாம் திரும்புவதில்லை. என்னை இன்னும் ஆழமாக பார்க்க ஆரம்பித்துவிட்ட்து.
பத்து நிமிடத்திற்கு முன்பு வரை என்னை இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால் நாளை என்னை இந்த நாட்டிற்கே தெரிய போகிறது. லைக் வாங்குவதற்காக எனக்காக கண்ணீர் வடிப்பார்கள். ஒரு ‘லைக்’குக்காக என்னை கொல்ல பாக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது.
இவர்கள் நினைத்திருந்தால் இவ்வளவு நேரத்தில் எதாவது செய்து என்னை இந்த விஜயிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
என்னை தொட இந்த புலி கிட்ட காலை கொண்டு வரும் பொழுதெல்லாம் என் உயிர் உடம்பை விட்டு வெளியே போய்விட்டு போய்விட்டு உள்ளே வருகிறது.

“டொப்”
எவனோ ஒரு பெரிய கல்லை புலி மேல் போட்டுவிட்டான்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த புலியின் முகம் இப்பொழுது மாறி விட்டது.
எனக்கு நேரம் வந்துவிட்டது.
இரண்டடி பின்னால் குதித்து தலையை மேலே தூக்கி அந்த கேமரா கூட்டத்தை பார்த்து உறுமுகிறது.
முன்பு விட என்னை சுற்றி சத்தம் அதிகமாக இருக்கிறது.
எல்லோரும் கத்துகிறார்கள். நானும் கத்துகிறேன். முடிவு நெருங்கிவிட்டதை உணர்கிறேன்.
பின்னங்காலில் உந்தி எழுந்து என் மேல் பாய போகிறது. அந்த அரை நிமிடம் தான் உண்மையான புலியின் குணத்தை பார்க்கிறேன்.
இரைச்சல் அதிகமாக இருக்கிறது.
பாய்ந்துவிட்டது.
.
என் பின்னங்கழுத்தை கவ்வி பிடித்து இழுக்கிறது. எனக்கு வலிக்கவில்லை. உயிர் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது.
என்னை இழுத்து கொண்டு ஓடுகிறது. என் தலை இப்பொழுது மேலே இருந்த கூட்டத்தை பார்த்து திரும்பிவிட்டது.
அடப்பாவிகளா!!
இப்பொழுது கையில் கேமராவை தூக்கி பிடித்துக் கொண்டு கத்தி கொண்டிருக்கிறார்கள்.
இங்கு எது மிருகம் என்றே எனக்கு சந்தே...................................

பிரபு மித்ரன்



Saturday, 13 September 2014

இது யாருடைய தவறு?- முடிந்தால் சொல்லுங்கள்


இரவு 8 மணி இருக்கும்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம்
வெள்ளிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். சோடியம் லைட்டில் அந்த இடம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக இருந்தது. சில இடங்களில் லைட் எரியாததால் இருட்டாகவுமிருந்தது. பள்ளி,கல்லூரி முடிந்து வீட்டுக்கு போகும் குழந்தைகள், இரண்டு நாள் லீவுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள், வெள்ளிகிழமை கோவிலுக்கு சென்றுவிட்டு அதற்கு சாட்சியாக நெத்தியில் பட்டையுடன் நின்று கொண்டிருப்பவர்கள், காதல் பேசும் காதலர்கள், பொது இடம் என்று பார்க்காமல் வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகள், அதை பக்கத்தில் நின்று ஒட்டு கேட்டுகொண்டு தங்களுக்குள் சிரித்துக்கொள்ளும் குடும்ப(!) பெண்கள், செல்போனை காதில் வைத்து கொண்டு கத்தி கொண்டிருக்கும் பேச்சாளர்கள், குடித்துவிட்டு அங்கங்கு விழுந்துகிடக்கும் குடிமகன்கள், வியாபாரிகள், பிச்சை எடுப்பவர்கள், என அந்த கூட்டத்தில் ஏராளமான முகங்கள்.
ஒவ்வொன்றாக கடந்து போய் கொண்டிருந்தேன். இருட்டான இடங்களிலுள்ள தூண்களிலெல்லாம் காதலர்கள் என்ற பெயரில் தெரு நாய்கள்.
நகர்ந்தேன்.
300 க்கும் 500 க்கும் பேரம் பேசிக்கொண்டிருந்த ‘அந்த’ வியாபரமும் நடந்து கொண்டிருந்தது. இதுவும் இருட்டான இடம் தான்.
நகர்ந்தேன்
என் ஊருக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். என் கிராமத்திற்கு போகும் பஸ் வர இன்னும் அரை மணி நேரமிருந்தது. உட்காரலாம் என்று இடம் தேடினேன் ‘ஹவுஸ் புல்’.
நான் நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி தான் ‘அந்த’ பேரம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் பேசுவது நன்றாகவே கேட்டது.
“யோவ்! எவ்ளோ தடவ சொல்றது, ரூம்க்கு 200 எனக்கு 300, மொத்தமா 500. வந்தா வா இல்லாட்டி போய்டு. சும்மா பேசிட்டே..போயா” என்று அந்த பெண் கத்திக்கொண்டிருந்தாள் இடுப்பில் 2 வயது குழந்தையுடன். அவள் குழந்தை என்று தான் நினைக்குறேன். அப்பவும் 400க்கு பேரம் பேசிகொண்டிருந்தான் அந்த ஆள். அவனுக்கு வயது 50 க்கு அதிகமாக இருக்கும். அந்த இருட்டில் கொஞ்சிகொண்டு நிற்க்கும் தெரு நாய்களுக்கு இவர்களே தேவலாமென்றிருந்தது.

அதற்கும் கொஞ்சம் தள்ளி ஒருவன் கீழே படுத்திருந்தான். தப்பு தப்பு.  குடித்து விட்டு கீழே விழுந்துகிடந்தான். பார்ப்பதற்கு கொஞ்சம் படித்தவன் போல தான் இருந்தது. பேண்ட் சட்டை அனிந்திருந்தான். காலில் ஒரு செருப்புதானிருந்தது. தள்ளாடி வரும்போது இன்னொன்று விழுந்திருக்க வேண்டும். இவனை போன்றவர்களை பார்க்க கொஞ்சம் கோவமும் வரும். குடிக்கட்டும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் இவன் குடும்பம் இவனை காணோமென்று பதறிகொண்டிருக்குமே. அதை பற்றியெல்லாம் கவலை படாமல் இப்படியா விழுந்து கிடப்படதென்று. இவர்களுக்கென்று ஒரு முகவரியும் சொந்தமும் இருந்தும் இந்த குடி இவர்களை இப்படி அடிக்கடி ரோட்டில் விழுந்து கிடக்கும் அனாதையாக்கி விடுகிறது. இந்த போதை தெளியும் நேரம் வரை இவன் அனாதை தான்.
இவனைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு 20 வயது மதிக்கதக்க இளைஞன் அவனருகில் வந்தான். அந்த ஆளின் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு எதோ தேடினான். என்ன செய்கிறானென்று எனக்கு விளங்க கொஞ்ச நேரமானது. திருடுகிறான். ஒவ்வொரு பாக்கெட்டிலும் தேடுகிறான். சட்டை பாக்கெட்டில் கை விடுகிறான். என்னை போலவே அங்கு பல பேர் அதை பார்த்து கொண்டிருந்தார்கள். நான் முதல் முதல் ஒரு திருட்டை நேரில் பார்க்கிறேன். லேசாக நடுங்குகிறது.
சட்டை பாக்கெட்டில் கைவிட்டவன் வெளியே எடுக்கும் பொழுது அவன் கையில் 500உம் 100 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் இருக்கிறது. எடுத்தவன் அதிலிருந்த ஒரு 100 நோட்டை திரும்பவும் அவன் பாக்கெட்டில் வைத்து விட்டு மத்ததை எடுத்து கொண்டு நகரும்பொழுது அந்த விழுந்து கிடந்த ஆள் விளித்துகொள்கிறான். தட்டு தடுமாறி எழுந்தவாறே எதோ கத்த முயல மறுபடியும் சரிந்து விழுகிறான்.
அந்த திருடன் அவனை கடந்து என்னை நோக்கி தான் வருகிறான். எனக்கு கோவமும் சேர்ந்து கொண்டது. ஓங்கி அரையனும் போலிருந்தது. என் முகமெல்லாம் சிவந்து விட்டது. கோவத்தில் நடுக்கமும் அதிகமாகிறது. அவன் என் பக்கத்தில் வந்து விட்டான். கையை உதறினால் அவன் கன்னத்தில் விழுந்து விடும். நான் முறைத்து பார்த்து கொண்டிருந்ததை பார்த்தவன் என்னை பர்த்து லேசாக சிரித்து விட்டு என்னை கடந்து போகிறான். எனக்கு உடம்பெல்லாம் கூசுகிறது.
நான் எதுவும் செய்யாமல் அமைதியாக நிற்கிறேன்.
செய்ய முடியவில்லை. தட்டி கேட்க கோவம் மட்டும் போதுமா. அவன் கத்தி எதாவது வைத்திருந்து எடுத்து குத்திவிட்டால் என்ன செய்வது. யாராவது தடுப்பார்களா?? இல்லை அந்த திருட்டை வேடிக்கை பார்த்தது போல இதையும் வேடிக்கை பார்பார்களா?
என்னை சுற்றி உள்ளவர்களை மறுபடியும் பார்க்கிறேன். அந்த திருட்டை பார்த்துவிட்டு உச்சு கொண்டிருந்தார்கள். ஒருவன் கூட தடுக்க முயலவில்லை. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
திருடியவன் கூட அவன் நிலைமயை யோசித்து 100 ரூபாயை திரும்ப அவன் பாக்கெட்டில் திணித்து விட்டு போகிறான். அனால் நாம்!
அசிங்கமாக இருந்தது. ப்துஉ... என்ன மாதிரியான பிளைப்பு இது.
குடித்து விட்டு விழுந்து கிடந்தவன் செய்த தவறையும் அவனிடமிருந்து திருடிகொண்டு போன அந்த திருடனையும் விட அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நாங்கள் செய்தது தான் மிக பெரிய பாவம்.
அந்த குடிகாரனிடமிருந்து திருடுபோனது அவன் சம்பளபணமாக இருந்தால் இந்த மாதமுழுவதும் அந்த குடும்பம் பட்டினி கிடக்க வேண்டுமே. நாங்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.
என்ன செய்வது இப்பொழுது சினிமாவில் கூட திருடுபவன் தான் ஹீரோ, தடுப்பவன் வில்லன், நியாயம் பேசுபவன் காமெடியன்.
எவ்வளவு நேரம் அங்கு நின்று யோசித்து கொண்டிருந்தேனென்று தெரியாது
இப்பொழுது பேருந்து நிலையத்தில் கொஞ்சம் கூட்டம் காலியாகியிருந்தது. ‘அந்த’ பேரம் முடிந்து அந்த குழந்தையின் தாய் வியாபாரமாகியிருந்தாள். அந்த காதல் தெருநாய்கள் காணாமல் போயிருந்தார்கள். அந்த குடிகாரன் இன்னும் அங்கயேதான் கிடந்தான். அந்த திருட்டை பார்த்த சாட்சியங்களும் களைந்திருந்தது.
நானும் என் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையை பிடித்து உட்கார்ந்தேன்.
பயனம் ஆரம்பித்தது.
அந்த பாரதி சொன்ன வேடிக்கை மனிதர் நாம்தான் போல.

-பிரபு மித்ரன்

Sunday, 7 September 2014

பிச்சைக்கார கடவுள்- சிறுகதை


இன்று விநாயகர் சதுர்த்தி கோவிலுக்கு போக தயாராகிகொண்டிருந்தேன்.

பூ, பழம், தேங்காய், வீட்டில் செய்த கொலுக்கட்டை, ஊதுவத்தி, கற்பூரம் எல்லாம் எடுத்தாகிவிட்டது. அடுத்த தெருவில் தான் கோவில் அதனால் நடந்தே போகலாம் என்றிருந்தேன். வீட்டு வாசலில் வந்து செருப்பு போடும் போது தான் ஞயாபகம் வந்தது காணிக்கைக்கு சில்லரை எடுக்க மறந்து விட்டேன். உள்ளே ஒடி சென்று பூஜை அறையில் சில்லரைக்காக வைத்திருந்த உண்டியலில் இருந்து இரண்டு பத்து ரூபாயையும் கொஞ்சம் சில்லரை காசுகளையும் எடுத்து சட்டை பாக்கெட்டில் போட்டு விட்டு கிளம்பினேன்.

நடந்து சென்று ரொம்ப நாள் ஆனது போலிருந்தது. இதுவும் நல்லாதான் இருக்கு. இனி வாரத்திற்க்கு ஒரு தடவயாவது இப்படி நடந்து கோவிலுக்கு வர வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிகொண்டேன்.

கோவில் வந்து விட்டது. நல்ல கூட்டம். கோவிலுக்கு வெளியே பூக்கடை, பூஜை சாமாங்கள் கடை, பொம்மை கடை என வழியின் இரண்டு பக்கங்களும் நிரைந்திருந்தது. கொஞ்சம் இரைச்சல் அதிகமாகவே இருந்தது. கூவி கூவி அழைத்து கொண்டிருந்தார்கள். கையை பிடித்து கடைக்குள் இழுத்து விடுவார்களோ என்று கொஞ்சம் பயமாக தான் இருந்தது.அனைத்தையும் கடந்து சென்றேன்.

செருப்பு விட “இலவச” போர்டு போட்ட கோவிலுக்கு சொந்தமான கடை இருந்தது. செருப்பை கொடுத்து விட்டு டோக்கன் வாங்கி பாக்கெட்டில் வைத்து கொண்டேன். என்னவென்றே தெரியவில்லை ‘இலவசம்’ என்ற வார்த்தையை பார்த்தாலே ஒரு சந்தோஷம் வந்து விடுகிறது. இதனால் தான் இதை வைத்து ஈஸியாக ஆட்சியை பிடித்து விடுகிறார்களோ என்னவோ!! ஐயோ.. கோவிலிலாவது அரசியல் பேசவேண்டாமே. எனக்கு நானே சொல்லி கொண்டேன்.


வாசல் அருகே சென்ற பொழுது வலதுபுறத்தில் பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்கள். இடதுபுறம் நான்கைந்து பிச்சைகாரர்கள் அமர்ந்து அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். நடுவில் பெரிய உண்டியலும் வைத்திருந்தார்கள். உள்ளே போய்ட்டு வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தலாமென்று நினைத்தவாரே உள்ளே சென்றேன்.


உள்ளே நுழைந்தால் இரண்டு வழி இருந்தது.
ஒன்று பொது தரிசனம். ஆமாம் நம் இலவசம் தான்
அடுத்தது ‘சிறப்பு தரிசனம்’ அதான் 20 ரூபாய் கொடுத்தால் லைனில் நிக்காமல் நேராக கருவறைக்கே போகலாம். யாருக்கு தெரியும் 100 ரூபாய் சேத்தி கொடுத்தால் சாமியிடமே கூட்டிகொண்டு போய்விடுவார்களோ என்னவோ.

லைனில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்கத்தில் போய் விட்டேன். அங்கும் எதோ டேபில் வைத்து விற்று கொண்டிருந்தார்கள்.எட்டி பார்த்தேன். சாமிக்கு தீபமும் அர்ச்சனை சீட்டும் படு ஜோராக வியாபாரமாகி கொண்டிருந்தது.
என் பங்குக்கு நானும் 10 ரூபாய்க்கு வாங்கிகொண்டேன். சாமி குத்தம் ஆய்டபோகுதென்று. எப்படியோ ஒரு வழியாக பிள்ளையாரை பார்த்து வெற்றிகரமாக வணக்கம் வைத்துவிட்டேன். கொண்டு போன பூஜை பொருட்களெல்லாம் கொடுத்து அர்ச்சனையும் முடிந்தாகிவிட்டது. கற்பூரம் காட்டிய ஐயருக்கு சம்பளமாக 10 ரூபாய் தட்டில் போட்டுவிட்டேன்.

வாசலிடம் இருந்த உண்டியலில் பாக்கெட்டிலிருந்த மீதி சில்லரை போட்டுவிட்டு பிரசாதமாக கொடுத்த பொங்கலை வாங்கிகொண்டு அங்கே அருகிலிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தேன்.
பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு வயதானவர் எழுந்து பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் சென்று கை நீட்டினார். நிமிர்ந்து பார்த்தவன் “போய் உட்காரு, கடைசியாக குடுக்கிறேன்” என்று எரிந்து விழுந்தான்.

ஒரு நிமிடம் அந்த பிச்சைகார கிழவர் அவனை உற்று பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை கையிலிருந்த திருவோட்டில் அது வரை சேர்ந்த சில்லரைக்களை எடுத்தார். கொண்டுபோய் அப்படியே உண்டியலில் போட்டுவிட்டு இப்பொழுது மறுபடியும் அவனிடமே கையை நீட்டினார். அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தில் ஒரு குற்ற உணர்ச்சியை காணமுடிந்தது.
கொடுத்த பிரசாத்த்தை வாங்கிகொண்டு அந்த பெரியவர் சிரித்துகொண்டே சொல்கிறார் “யார் கடவுள், யார் பிச்சைக்காரனே தெரியல”
எவ்வளவு பெரிய உண்மை இது.
இதை பார்த்து கொண்டிருந்த எங்கள் அனைவருக்கும் அந்த உண்மை பொளேரென்று அறைந்தது.
கொஞ்சம் என்னை சுற்றி பார்த்தேன். எங்கும் “பணம்” தான். கோவிலென்ற அமைதியே அங்கு இல்லை. வெளியே உள்ள கடைகளில் ஆரம்பித்து உள்ளே கருவரையில் தட்டை நீட்டும் ஐயர் வரை வியாபாரம் தான். கோவில்கள் அதன் அடையாளத்தை தொலைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. கடவுளை அருள் விற்கும் வியாபாரியாக மாற்றிவிட்டார்கள். காசு வாங்கிக்கொண்டு "நீங்க நல்லா இருக்கனும்" என்று சொல்லும் பிச்சைகாரர்களுக்கும் காணிக்கை வாங்கிக்கொண்டு அருள் அளிக்கும் கடவுளுக்கும் நாம் வித்யாசம் இல்லாமல் செய்துவிட்டோம். இப்பொழுது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த கவலையும் என்னோடு சேர்ந்து கொண்டது.
எழுந்து பாக்கெட்டிலிருந்த செருப்பு டோக்கனை எடுத்து அந்த நம் ‘இலவச’ கடையிலுள்ள பெண்ணிடம் நீட்டினேன். என் செருப்பை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு அந்த பெண் மெதுவாக கேட்கிறாள் “பிரியப்பட்டு எதாவது குடுக்குறதுனா குடுங்க”

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது

பிரியமில்லாமல் கோவிலை விட்டு நகர்கிறேன்.


பிரபு மித்ரன்


Saturday, 6 September 2014

யார் இந்த டி. ராஜேந்தர் ?


           எங்கயோ மயிலாடுதுறையில் பிறந்து 70 களின் கடைசியில் சினிமாவை கனவாக கொண்டு ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான்.

எப்படியோ முட்டி மோதி இந்த சினிமாவை கற்று முதல் முதல் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைக்க இயக்குனராகிறான்.

தன் முதல் படம்
ஒரு தாய் குழந்தையை பெற்று எடுக்க எவ்வளவு கஷ்ட்டங்களை அனுபவிப்பாளோ அதை போல தான் இயக்கமும். ஒவ்வொரு frame ஆக பார்த்து பார்த்து செதுக்குகிறான். தானே இசை அமைக்கிறான்.

1980 இல் ரிலீஸ் ஆகிறது.
பிறசவித்த அந்த குழந்தையின் முகத்தை பார்க்க முதல் நாள் தியேட்டரில் கடைசி சீட்டின் அருகிள் உள்ள கதவு ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறான்.
மனது முழுவதும் சந்தோஷத்தோடு.
படம் ஆரம்பமாகிறது
படப் பெயர் போடப்பட்டு ஒவ்வொரு நடிகரின் பெயரும் போடுகிறார்கள்.
கடைசி டைட்டில் கார்டில் இயக்கம் என்ற இடத்தில் வேரு யாரோ பெயர். தயாரிப்பாளரின் பெயர்.

எப்படி இருக்கும்???!!

தான் பார்த்து பார்த்து செதுக்கிய அந்த படத்தை பார்க்காமலே தியேட்டரை விட்டு வெளியே வருகிறான்.

அவன் ஓய்ந்துவிடவில்லை
அதன் பிறகு 80 களில் அவன் இயக்கிய அத்தனை படங்களும் ப்ளாக் பஸ்டர்(Block Buster), 365 நாட்களையும் கடந்து ஓடியவை.
அவர் தான்
இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், இசை அமைப்பாளர்
டி. ராஜேந்தர்



அவர் இயக்கி பார்க்க முடியாமல் போன படம் தான் “ஒரு தலை ராகம்”
1980 ரிலீஸ் ஆகி தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட படம். ஒரு வருடத்தை தாண்டி ஓடி சாதனை படைத்த படம்.
கல்லூரி காதலை மிக அழகாக ஆழமாக சொன்ன முதல் தமிழ் படம்
நம்பிக்கை இல்லை என்றால் 70 களில் பிறந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.


அன்று அவரை ஏமாற்றியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.
இன்றும் இவர் நிலைத்து நிற்க்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சினிமா கலைஞருக்கு நாம் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
சினிமா தெரிந்த யாரும் அவரை கின்டல் செய்வதில்லை
தெரியாதவர்கள் தான்.

இன்றும் அந்த மனிதர் தன்னை நிருபித்துக்கொள்ள ஒவ்வொரு மேடையிலும் போராடிக்கொண்டிருக்கிறார்.
தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்திக்கொள்கிறார்
நாம் போன தலைமுறை கலைஞர்களை காமெடியர்களாக பார்க்க ஆரம்பித்து விட்டோம். அதனால் தான் அவர் எது பேசினாலும் கின்டல் செய்கிரோம்.
ஏன்?? தங்கை பாசம், தாய் பாசம் வைத்து படம் எடுப்பது அவ்வளவு தப்பான விஷயமா???
அனால் நாம் ஒன்றை கவனிக்கனும், இப்படி எவ்வளவு பேர் அவரை வச்சு கின்டல் பன்னுனாலும் அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
அவர் எப்பொழுதும் அவராகவே இருக்கிறார்.
அதுதான் டி.ஆர்

“முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல
முடியும் ங்கறவன் தான் டி.ஆர்”

ச்சே...என்ன ஒரு பாசிட்டிவ் attitude!
Chance eh illa sir. Hats off.


-பிரபு மித்ரன்

Related Articles