இரவு 8 மணி இருக்கும்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம்
வெள்ளிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். சோடியம் லைட்டில் அந்த இடம் முழுவதும்
மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக இருந்தது. சில இடங்களில் லைட் எரியாததால்
இருட்டாகவுமிருந்தது. பள்ளி,கல்லூரி முடிந்து வீட்டுக்கு போகும் குழந்தைகள்,
இரண்டு நாள் லீவுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள், வெள்ளிகிழமை கோவிலுக்கு
சென்றுவிட்டு அதற்கு சாட்சியாக நெத்தியில் பட்டையுடன் நின்று கொண்டிருப்பவர்கள்,
காதல் பேசும் காதலர்கள், பொது இடம் என்று பார்க்காமல் வாய் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் தம்பதிகள், அதை பக்கத்தில் நின்று ஒட்டு கேட்டுகொண்டு தங்களுக்குள்
சிரித்துக்கொள்ளும் குடும்ப(!) பெண்கள், செல்போனை காதில் வைத்து கொண்டு கத்தி
கொண்டிருக்கும் பேச்சாளர்கள், குடித்துவிட்டு அங்கங்கு விழுந்துகிடக்கும் குடிமகன்கள்,
வியாபாரிகள், பிச்சை எடுப்பவர்கள், என அந்த கூட்டத்தில் ஏராளமான முகங்கள்.
ஒவ்வொன்றாக கடந்து போய் கொண்டிருந்தேன். இருட்டான இடங்களிலுள்ள தூண்களிலெல்லாம்
காதலர்கள் என்ற பெயரில் தெரு நாய்கள்.
நகர்ந்தேன்.
300 க்கும் 500 க்கும் பேரம் பேசிக்கொண்டிருந்த ‘அந்த’ வியாபரமும் நடந்து
கொண்டிருந்தது. இதுவும் இருட்டான இடம் தான்.
நகர்ந்தேன்
என் ஊருக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். என்
கிராமத்திற்கு போகும் பஸ் வர இன்னும் அரை மணி நேரமிருந்தது. உட்காரலாம் என்று
இடம் தேடினேன் ‘ஹவுஸ் புல்’.
நான் நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி தான் ‘அந்த’ பேரம் நடந்து
கொண்டிருந்தது. அவர்கள் பேசுவது நன்றாகவே கேட்டது.
“யோவ்! எவ்ளோ தடவ சொல்றது, ரூம்க்கு 200 எனக்கு 300, மொத்தமா 500. வந்தா வா
இல்லாட்டி போய்டு. சும்மா பேசிட்டே..போயா” என்று அந்த பெண் கத்திக்கொண்டிருந்தாள் இடுப்பில்
2 வயது குழந்தையுடன். அவள் குழந்தை என்று தான் நினைக்குறேன். அப்பவும் 400க்கு பேரம்
பேசிகொண்டிருந்தான் அந்த ஆள். அவனுக்கு வயது 50 க்கு அதிகமாக இருக்கும். அந்த
இருட்டில் கொஞ்சிகொண்டு நிற்க்கும் தெரு நாய்களுக்கு இவர்களே தேவலாமென்றிருந்தது.
அதற்கும் கொஞ்சம் தள்ளி ஒருவன் கீழே படுத்திருந்தான். தப்பு தப்பு. குடித்து விட்டு கீழே விழுந்துகிடந்தான்.
பார்ப்பதற்கு கொஞ்சம் படித்தவன் போல தான் இருந்தது. பேண்ட் சட்டை அனிந்திருந்தான்.
காலில் ஒரு செருப்புதானிருந்தது. தள்ளாடி வரும்போது இன்னொன்று விழுந்திருக்க
வேண்டும். இவனை போன்றவர்களை பார்க்க கொஞ்சம் கோவமும் வரும். குடிக்கட்டும் அதை
பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் இவன் குடும்பம் இவனை காணோமென்று
பதறிகொண்டிருக்குமே. அதை பற்றியெல்லாம் கவலை படாமல் இப்படியா விழுந்து
கிடப்படதென்று. இவர்களுக்கென்று ஒரு முகவரியும் சொந்தமும் இருந்தும் இந்த குடி
இவர்களை இப்படி அடிக்கடி ரோட்டில் விழுந்து கிடக்கும் அனாதையாக்கி விடுகிறது. இந்த
போதை தெளியும் நேரம் வரை இவன் அனாதை தான்.
இவனைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு 20 வயது மதிக்கதக்க இளைஞன்
அவனருகில் வந்தான். அந்த ஆளின் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு எதோ தேடினான். என்ன
செய்கிறானென்று எனக்கு விளங்க கொஞ்ச நேரமானது. திருடுகிறான். ஒவ்வொரு
பாக்கெட்டிலும் தேடுகிறான். சட்டை பாக்கெட்டில் கை விடுகிறான். என்னை போலவே அங்கு
பல பேர் அதை பார்த்து கொண்டிருந்தார்கள். நான் முதல் முதல் ஒரு திருட்டை நேரில்
பார்க்கிறேன். லேசாக நடுங்குகிறது.
சட்டை பாக்கெட்டில் கைவிட்டவன் வெளியே எடுக்கும் பொழுது அவன் கையில் 500உம்
100 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் இருக்கிறது. எடுத்தவன் அதிலிருந்த ஒரு 100 நோட்டை
திரும்பவும் அவன் பாக்கெட்டில் வைத்து விட்டு மத்ததை எடுத்து கொண்டு நகரும்பொழுது
அந்த விழுந்து கிடந்த ஆள் விளித்துகொள்கிறான். தட்டு தடுமாறி எழுந்தவாறே எதோ கத்த
முயல மறுபடியும் சரிந்து விழுகிறான்.
அந்த திருடன் அவனை கடந்து என்னை நோக்கி தான் வருகிறான். எனக்கு கோவமும்
சேர்ந்து கொண்டது. ஓங்கி அரையனும் போலிருந்தது. என் முகமெல்லாம் சிவந்து விட்டது.
கோவத்தில் நடுக்கமும் அதிகமாகிறது. அவன் என் பக்கத்தில் வந்து விட்டான். கையை
உதறினால் அவன் கன்னத்தில் விழுந்து விடும். நான் முறைத்து பார்த்து கொண்டிருந்ததை
பார்த்தவன் என்னை பர்த்து லேசாக சிரித்து விட்டு என்னை கடந்து போகிறான். எனக்கு
உடம்பெல்லாம் கூசுகிறது.
நான் எதுவும் செய்யாமல் அமைதியாக நிற்கிறேன்.
செய்ய முடியவில்லை. தட்டி கேட்க கோவம் மட்டும் போதுமா. அவன் கத்தி எதாவது
வைத்திருந்து எடுத்து குத்திவிட்டால் என்ன செய்வது. யாராவது தடுப்பார்களா?? இல்லை
அந்த திருட்டை வேடிக்கை பார்த்தது போல இதையும் வேடிக்கை பார்பார்களா?
என்னை சுற்றி உள்ளவர்களை மறுபடியும் பார்க்கிறேன். அந்த திருட்டை பார்த்துவிட்டு
உச்சு கொண்டிருந்தார்கள். ஒருவன் கூட தடுக்க முயலவில்லை. என்னையும் சேர்த்து தான்
சொல்கிறேன்.
திருடியவன் கூட அவன் நிலைமயை யோசித்து 100 ரூபாயை திரும்ப அவன் பாக்கெட்டில்
திணித்து விட்டு போகிறான். அனால் நாம்!
அசிங்கமாக இருந்தது. ப்துஉ... என்ன மாதிரியான பிளைப்பு இது.
குடித்து விட்டு விழுந்து கிடந்தவன் செய்த தவறையும் அவனிடமிருந்து திருடிகொண்டு
போன அந்த திருடனையும் விட அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நாங்கள் செய்தது தான்
மிக பெரிய பாவம்.
அந்த குடிகாரனிடமிருந்து திருடுபோனது அவன் சம்பளபணமாக இருந்தால் இந்த
மாதமுழுவதும் அந்த குடும்பம் பட்டினி கிடக்க வேண்டுமே. நாங்கள் நினைத்திருந்தால்
தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.
என்ன செய்வது இப்பொழுது சினிமாவில் கூட திருடுபவன் தான் ஹீரோ, தடுப்பவன்
வில்லன், நியாயம் பேசுபவன் காமெடியன்.
எவ்வளவு நேரம் அங்கு நின்று யோசித்து கொண்டிருந்தேனென்று தெரியாது
இப்பொழுது பேருந்து நிலையத்தில் கொஞ்சம் கூட்டம் காலியாகியிருந்தது. ‘அந்த’
பேரம் முடிந்து அந்த குழந்தையின் தாய் வியாபாரமாகியிருந்தாள். அந்த காதல் தெருநாய்கள்
காணாமல் போயிருந்தார்கள். அந்த குடிகாரன் இன்னும் அங்கயேதான் கிடந்தான். அந்த
திருட்டை பார்த்த சாட்சியங்களும் களைந்திருந்தது.
நானும் என் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையை பிடித்து
உட்கார்ந்தேன்.
பயனம் ஆரம்பித்தது.
அந்த பாரதி சொன்ன வேடிக்கை மனிதர் நாம்தான் போல.
-பிரபு மித்ரன்
No comments:
Post a Comment