இன்று விநாயகர் சதுர்த்தி கோவிலுக்கு போக
தயாராகிகொண்டிருந்தேன்.
பூ, பழம், தேங்காய், வீட்டில் செய்த
கொலுக்கட்டை, ஊதுவத்தி, கற்பூரம் எல்லாம் எடுத்தாகிவிட்டது. அடுத்த தெருவில்
தான் கோவில் அதனால் நடந்தே போகலாம் என்றிருந்தேன். வீட்டு வாசலில் வந்து செருப்பு
போடும் போது தான் ஞயாபகம் வந்தது காணிக்கைக்கு சில்லரை எடுக்க மறந்து விட்டேன்.
உள்ளே ஒடி சென்று பூஜை அறையில் சில்லரைக்காக வைத்திருந்த உண்டியலில் இருந்து
இரண்டு பத்து ரூபாயையும் கொஞ்சம் சில்லரை காசுகளையும் எடுத்து சட்டை பாக்கெட்டில்
போட்டு விட்டு கிளம்பினேன்.
நடந்து சென்று ரொம்ப நாள் ஆனது போலிருந்தது.
இதுவும் நல்லாதான் இருக்கு. இனி வாரத்திற்க்கு ஒரு தடவயாவது இப்படி நடந்து
கோவிலுக்கு வர வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிகொண்டேன்.
கோவில் வந்து விட்டது. நல்ல கூட்டம்.
கோவிலுக்கு வெளியே பூக்கடை, பூஜை சாமாங்கள் கடை, பொம்மை கடை என வழியின் இரண்டு
பக்கங்களும் நிரைந்திருந்தது. கொஞ்சம் இரைச்சல் அதிகமாகவே இருந்தது. கூவி கூவி
அழைத்து கொண்டிருந்தார்கள். கையை பிடித்து கடைக்குள் இழுத்து விடுவார்களோ என்று
கொஞ்சம் பயமாக தான் இருந்தது.அனைத்தையும் கடந்து சென்றேன்.
செருப்பு விட “இலவச” போர்டு போட்ட கோவிலுக்கு
சொந்தமான கடை இருந்தது. செருப்பை கொடுத்து விட்டு டோக்கன் வாங்கி பாக்கெட்டில்
வைத்து கொண்டேன். என்னவென்றே தெரியவில்லை ‘இலவசம்’ என்ற வார்த்தையை பார்த்தாலே ஒரு
சந்தோஷம் வந்து விடுகிறது. இதனால் தான் இதை வைத்து ஈஸியாக ஆட்சியை பிடித்து
விடுகிறார்களோ என்னவோ!! ஐயோ.. கோவிலிலாவது அரசியல் பேசவேண்டாமே. எனக்கு நானே
சொல்லி கொண்டேன்.
வாசல் அருகே சென்ற பொழுது வலதுபுறத்தில்
பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்கள். இடதுபுறம் நான்கைந்து பிச்சைகாரர்கள் அமர்ந்து அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். நடுவில் பெரிய
உண்டியலும் வைத்திருந்தார்கள். உள்ளே போய்ட்டு வந்து உண்டியலில் காணிக்கை
செலுத்தலாமென்று நினைத்தவாரே உள்ளே சென்றேன்.
உள்ளே நுழைந்தால்
இரண்டு வழி இருந்தது.
ஒன்று பொது தரிசனம்.
ஆமாம் நம் இலவசம் தான்
அடுத்தது ‘சிறப்பு
தரிசனம்’ அதான் 20 ரூபாய் கொடுத்தால் லைனில் நிக்காமல் நேராக கருவறைக்கே போகலாம்.
யாருக்கு தெரியும் 100 ரூபாய் சேத்தி கொடுத்தால் சாமியிடமே கூட்டிகொண்டு
போய்விடுவார்களோ என்னவோ.
லைனில் நின்று கொஞ்சம்
கொஞ்சமாக நகர்ந்து பக்கத்தில் போய் விட்டேன். அங்கும் எதோ டேபில் வைத்து விற்று
கொண்டிருந்தார்கள்.எட்டி பார்த்தேன். சாமிக்கு தீபமும் அர்ச்சனை சீட்டும் படு
ஜோராக வியாபாரமாகி கொண்டிருந்தது.
என் பங்குக்கு நானும்
10 ரூபாய்க்கு வாங்கிகொண்டேன். சாமி குத்தம் ஆய்டபோகுதென்று. எப்படியோ ஒரு வழியாக பிள்ளையாரை
பார்த்து வெற்றிகரமாக வணக்கம் வைத்துவிட்டேன். கொண்டு போன பூஜை பொருட்களெல்லாம்
கொடுத்து அர்ச்சனையும் முடிந்தாகிவிட்டது. கற்பூரம் காட்டிய ஐயருக்கு சம்பளமாக 10
ரூபாய் தட்டில் போட்டுவிட்டேன்.
வாசலிடம் இருந்த
உண்டியலில் பாக்கெட்டிலிருந்த மீதி சில்லரை போட்டுவிட்டு பிரசாதமாக கொடுத்த
பொங்கலை வாங்கிகொண்டு அங்கே அருகிலிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தேன்.
பிச்சை எடுத்து
கொண்டிருந்த ஒரு வயதானவர் எழுந்து பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் சென்று
கை நீட்டினார். நிமிர்ந்து பார்த்தவன் “போய் உட்காரு, கடைசியாக குடுக்கிறேன்”
என்று எரிந்து விழுந்தான்.
ஒரு நிமிடம் அந்த
பிச்சைகார கிழவர் அவனை உற்று பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை
கையிலிருந்த திருவோட்டில் அது வரை சேர்ந்த சில்லரைக்களை எடுத்தார். கொண்டுபோய்
அப்படியே உண்டியலில் போட்டுவிட்டு இப்பொழுது மறுபடியும் அவனிடமே கையை நீட்டினார்.
அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தில் ஒரு குற்ற உணர்ச்சியை காணமுடிந்தது.
கொடுத்த பிரசாத்த்தை
வாங்கிகொண்டு அந்த பெரியவர் சிரித்துகொண்டே சொல்கிறார் “யார் கடவுள், யார் பிச்சைக்காரனே
தெரியல”
எவ்வளவு பெரிய உண்மை
இது.
இதை பார்த்து கொண்டிருந்த
எங்கள் அனைவருக்கும் அந்த உண்மை பொளேரென்று அறைந்தது.
கொஞ்சம் என்னை சுற்றி
பார்த்தேன். எங்கும் “பணம்” தான். கோவிலென்ற அமைதியே அங்கு இல்லை. வெளியே உள்ள
கடைகளில் ஆரம்பித்து உள்ளே கருவரையில் தட்டை நீட்டும் ஐயர் வரை வியாபாரம் தான். கோவில்கள் அதன்
அடையாளத்தை தொலைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. கடவுளை அருள் விற்கும்
வியாபாரியாக மாற்றிவிட்டார்கள். காசு வாங்கிக்கொண்டு "நீங்க நல்லா இருக்கனும்" என்று சொல்லும் பிச்சைகாரர்களுக்கும் காணிக்கை வாங்கிக்கொண்டு அருள் அளிக்கும் கடவுளுக்கும் நாம் வித்யாசம் இல்லாமல் செய்துவிட்டோம். இப்பொழுது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த கவலையும்
என்னோடு சேர்ந்து கொண்டது.
எழுந்து
பாக்கெட்டிலிருந்த செருப்பு டோக்கனை எடுத்து அந்த நம் ‘இலவச’ கடையிலுள்ள பெண்ணிடம்
நீட்டினேன். என் செருப்பை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு அந்த பெண் மெதுவாக
கேட்கிறாள் “பிரியப்பட்டு எதாவது குடுக்குறதுனா குடுங்க”
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
பிரியமில்லாமல் கோவிலை
விட்டு நகர்கிறேன்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment