Saturday, 28 March 2015

'அதில்' ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்


ஒரு நிமிடம் காதை திறந்து கேட்டால்
பெண்களின் சுகந்திரம்
பெண் உரிமை
இப்படி பெண்களுக்காக பல குறல்கள் கேட்கும்..
ஆண்களை கண்டுகொள்வதே கிடையாது
அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருப்பதாகவே நினைக்கின்றனர்

உண்மையில் ஆணாக இருப்பதில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது



ஆண்கள் அழக்கூடாது
சின்ன வயதில் இருந்தே இதை சொல்லி தான் வளர்க்கபடுகிறோம்.
எப்பொழுது அழுதாலும் “பையனா இருந்துட்டு இப்படி அழுகுகிறியே!!!?” என்பார்கள்.
அது என்னங்க பையனுக்கு கண் இல்லையா??
இல்ல அவனுக்கு எப்பவுமே வலிக்காதா?!
வலியை வெளிப்படுத்த அவனுக்கு கற்றுக் கொடுக்கவே படுவதில்லை.
பெண் வலியை அழுது வெளிப்படுத்திவிடுவாள்.
ஆண் கோபத்திலும்...டாஸ்மாக்கிலும்.. தான் வெளிப்படுத்துகிறான்.
அழுவது மன ஆரோகியத்துக்கு நல்லது என மருத்துவம் சொல்கிறது!! அது ஆண் பிள்ளைக்கு கிடைப்பதே இல்லை.
எத்தனை கஷ்டம் வந்தாலும் அவனால் வெடித்து வெளிப்படையாக அழ முடியாது.
அவனுக்குள் வலியை அடக்கிகொண்டு வலிமையானவனாக நடித்து வெளியே காட்டிகொள்ள மட்டும் தான் தெரியும்.

ஆண்களுக்கும் அழ சம உரிமை வேண்டும்!!


விளையாட்டு:
விளையாட்டில் கூட எவ்வளவு ஓரவஞ்சனை தெரியுமா?
தாயம்... பல்லாங்குலி.. பரமபதம்.... 
இப்படி நிம்மதியாக உட்காந்து கொண்டு மணி கணக்கில் பேசி சிரித்து கொண்டே விளையாடும் அருமையான விளையாட்டுகளெல்லாம் பெண்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.

ஆனால் ஆண்களுக்கு கபடி..கிரிக்கெட்..கில்லி.. இப்படி வெய்யிலில் ஓடி நிறம் கருத்து.. களைத்து.. கீழே விழுந்து.. அடிப்பட்டு... இரத்தம் சிந்தி தான் விளையாட வேண்டியதாக உள்ளது.

அவர்கள் எங்கள் விளையாட்டுக்கு வரலாம்.
ஆனால் நாங்கள் அவர்கள் விளையாட்டை விளையாடினால் அவர்களே கேலி செய்வார்கள்.
அனைத்து விளையாட்டுகளிலும் ஆண்களுக்கும் சம மதிப்பு அளிக்கப்படவேண்டும்.

கலர் கலர் உடைகள்
இங்கு ஆண்களின் உடைகளின் நிறத்தை விரல் விட்டு எண்ணி விடலாம்.
வெள்ளை...கருப்பு...நீலம்...இந்த மூன்று நிறங்கள் தான் பெரும்பாளும் ஆண்களின் அடையாளம்.

ஆனால் பெண்களுக்கு!!
உலகத்தில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் அவர்கள் உடை அணியலாம்.

சுற்றி பார்த்தால் தெரியும்... எப்படி வித விதமான நிறங்களில் கலர்ஃபுல்லாக இருக்கிறார்களென.

அப்படியும் மீறி சில ஆண்கள் பளிச் என்று எதாவது கலரில் வந்துவிட்டால் மற்றவர்கள் அவனிடம் கேட்கும் ஒரே கேள்வி...

“நீங்க ராம ராஜன் ஃபேனா???” என்பது தான்.

நிறங்கள் பொதுவுடமையாக்கப்பட வேண்டும்.



பயம்

தைரியமாக பயப்படக்கூட ஆண்களால் முடியாது

அதென்ன பயப்படுவதில் தைரியம் வேண்டிக் கிடக்கிறது!!? கேட்கலாம்

பல்லிக்கும் பேய்க்கும் பயப்படுவேன் என்று ஒரு ஆண் சொல்வதையும் பெண் சொல்வதையும் வித்யாசமாக தான் இங்கு பார்கிறார்கள்.

பயத்தை வெளியே சொல்ல கூச்சப்பட மட்டும் தான் ஆண்களுக்கு சொல்லிதரப்படுகிறது..
பயம் என்பது மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று
அதை வெளிப்படுத்தும் உரிமை கூட ஆண்களுக்கு மறுக்கப்படுகிறது என்பது தான் வேதனை.

அழகு சாதணங்கள்
தெருவுக்கு தெரு பியூட்டி பார்லர்

எந்த சேனலை மாற்றினாலும் பெண்களுக்கான அழகு சாதண விளம்பரம்
கூந்தல்..கண்..காது..சர்மம்..உதடு..என ஒவ்வொண்றுக்கும் தனி தனியாக நூற்றுக்கணக்கான பொருட்கள்

ஆண்களுக்கு இருக்கும் ஒன்றே ஒன்று பாக்கெட் சீப் மட்டுமே!!!

அதையும் மீறி கண்ணாடி முன் கொஞ்ச அதிக நேரம் ஒரு பையன் நின்று விட்டால் உடனே என்னடா பொண்ணு மாதிரி இவ்வளவு நேரம் மேக்கப் போடுற என்று கலாய்த்துவிடுவார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி அழகுக்காக எதாவது செய்யவேண்டும் என்றால் பசங்களுக்கு இருக்கும் ஒரே இடம் ஜிம் தான்

ஆனால் சிக்ஸ் பேக் வைக்க அவன் படும் கஷ்ட இருக்கே...அய்யய்யய்யோ...

நினைத்ததை சாப்பிட முடியாது... பட்டினி கிடந்து தினமும் ஜிம் மாஸ்டரிடம் திட்டு வாங்கி...
உடலெல்லாம் வலிஎடுத்து அங்கங்கு வீங்கி கடைசியில் ஒரு வலியாக அவன் சிக்ஸ் பேக் வைக்கும் பொழுது அன்றைய டிரெண்ட் மாறியிருக்கும்.

எவனாவது எட்டு பேக் உடன் நடித்த படம் ஹிட்டாயிருக்கும்.
திரும்பவும் பட்டினி தான்.
பசங்க பாவம் சார்.


கவிதைகள்
பெண்ணின் அழகை அங்கமங்கமாக வர்னித்து கவிதை எழுத ஏழாயிரம் கவிஞர்கள் இருக்கிறார்கள்.
ஆண்களின் அழகுக்கு ஒரு கவிதை கூட வருவதில்லையே.

உடனே அழகு இருந்தால் தானே வர்னிப்பதற்கு என சொல்லிவிடுவார்கள்.
உலகில் உள்ள அத்தனை உயிரினங்களிலும் ஆண் தான் அழகு.

சிங்கம்...மயில்...யானை... இப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்

மனிதர்களில் மட்டுமே பெண்ணை அழகானவர்களாக வர்னிக்க படுகிறது.
அழகில்லை என சொல்லிவிட முடியாது தான்.
பேரழகு தான்.
ஆனால் அதற்காக ஆண் அசிங்கம் என சொல்வது என்ன நியாயம்.

காரணாம் இங்கு ஆண் கவிஞர்கள் தான் அதிகம். ஆணை பற்றி ஆணே எழுதினால் அது தற்பெருமையாக இருந்துவிடுமே!!

பெண்களும் இந்த துறையில் வந்து ஆண்களை பற்றி எழுத வேண்டும்.

கவிதைகளில் ஆணுக்கும் சம அந்தஸ்து தரப்பட வேண்டும்.
காதலர்கள் காதலிக்காக கவிதை எழுதுவது போல
காதலிகளும் காதலனுக்காக கவிதை எழுத வேண்டும்.

வேலை:
படிப்பு வரவில்லை என்றாலோ
வேலை கிடைக்கவில்லை என்றாலோ பெண்களுக்கு ஹவுஸ் வைஃப் என்ற ஒரு மாற்று வழி இருக்கிறது
அதனால் எதிர்காலத்தை பற்றி பயமில்லாமல் தைரியமாக செயல் பட முடிகிறது.
ஆனால் ஆண்கள் பிறந்ததிலிருந்தே எதிர்காலத்தை பற்றிய பயத்தை ஊட்டியே வளர்க்கப்  படுகிறார்கள்.
ஒரு பெண் வேலை இல்லாமல் வீட்டில் வாழ்க்கை முழுவதும் இருந்துவிடலாம்.

ஆனால் ஒரு ஆண் அப்படி இருந்தால் உதவாக்கரை என்ற பட்டப் பெயரும் சேர்ந்துகொள்ளும்.

அதனால் ஆண்களுக்கும் “ஹவுஸ் ஹஸ்பண்ட்” என்ற ஒரு பொறுப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
அதில் எங்களுக்கும் உரிமை வேண்டும்.

பாலியல் விழிப்புணர்வு 
உண்மையில் ஆண்களை விட பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அதிகம்.
குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்களுக்கு அதெல்லாம் சொல்லி புரியவைக்க ஆள் இருக்கிறார்கள்.

ஆண்களுக்கு அப்படி யாரும் சொல்லிதருவதில்லை.

அவர்களுக்கு எதை செய்யவேண்டும் என்ன செய்ய கூடாது என எதுவும் தெரிவதில்லை.

இப்படி தெளிவில்லாமலே வளர்கின்றனர்.
இந்த குழப்பமே பின்னாலில் அவன் வாழ்கை மட்டுமில்லாமல் அடுத்தவர்களின் வாழ்கையையும் சீரழித்துவிடுகிறது.

வாகனங்கள்:

ஆண்களுக்கு உருவாக்கப்படும் வண்டிகளை பாருங்களேன்.
ஒரு காலில் கியர் போட வேண்டும்
இன்னொரு காலில் பிரேக்.
ஒரு கையில் க்லச்
இன்னொரு கையில் எக்ஸ்லேட்டர் அப்பறம் பிரேக்.
இப்படி இத்தனை கஷ்டபட்டு தான் வண்டி ஓட்டனும். இதில் வண்டியின் எடை வேறு!!
பெண்களுக்கு மிக லேசான எடையுடன் சின்னதாக அழகாக இருக்கும் கலர் கலரான ஸ்கூட்டிகள்.
காலில் எல்லாம் ஒரு வேலையும் இல்லை.
எக்ஸ்லேட்டரை முறுக்கினால் அப்படியே மிதந்து போகும்.
அதை ஆண்கள் ஓட்டினால் கிண்டலடிப்பார்களே என்று தான் நிறைய பேர் தயங்குகிறார்கள்.

பெண்கள் தினம் போல ஆண்கள் தினம் வேண்டும்

ஈவ் டீஸிங்க்கு கேஸ் போடுவது போல ஏடம் டீஸிங்க்கும் கேஸ் போட வேண்டும்.

மகளிர் பேருந்து போல ஆடவர் பேருந்துகள் வேண்டும்

அட!!
இப்படி சொன்னா  சொல்லிட்டே போகலாம்.
இங்கு  உடலளவில் மட்டும் ஆண் பெண் என்று பிரிக்க படவில்லை
உணர்வுகளில்
உடைகளில்
தொழில்களில்
செயல்களில்
ஏன் நாம் காலில் அணியும் செருப்புகளில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொன்றிலும் இது ஆணுக்கு.. இது பெண்ணுக்கு.. என பிரித்து விட்டார்கள்.

பெண்கள் செய்வதை எதையும் ஆண்கள் செய்ய சமூகம் உரிமை அளிப்பதில்லை.

உதாரணத்திற்கு கோலம் போடுவதை ஆண் செய்தால் அதை பெண்களே வித்யாசமாக தான் பார்பார்கள்.

உண்மையில் கோலம் என்பது ஓவியம்.
ஓவியத்திற்கு ஆண் பெண் என்று என்ன வேறுபாடு உள்ளது?

ஆண்கள் செய்வதை பெண்கள் செய்தால் அதன் பெயர் புரட்சி
அதுவே பெண்கள் செய்வதை ஆண்கள் செய்தால் அதுக்கு இங்கு வேறு பெயர்.

இன்று சம உரிமை என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல
ஆண்களுக்கும் தேவை தான்.


பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles