Friday, 9 September 2016

நம்பிக்கை

மழை தூரியது
பார்த்து ரொம்ப நாள் ஆனதே என வெளியே வேடிக்கை பார்க்க சென்றேன்.

சின்ன வயதிலிருந்து மழையை பாட்டி வீட்டு காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்து வளர்ந்ததால் இப்பொழுதும் அங்கிருந்து பார்த்தால் தான் மழை அதன் எளிமையுடன் அழகாக தெரிகிறது.

ஒரு விதத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் ரசிக்கலாம்..

வீட்டு ஜன்னல் வழியே கல்யாண ஊர்வலம்.. சாவு ஊர்வலம் இரண்டையும் ஒரே மாதிரி மனநிலையுடன் வேடிக்கை பார்ப்பது போல!!

மழை அப்படியே தான் இன்னும் இருக்கிறது

எனக்கு தான் காம்பவுன்டு சுவரெல்லாம் குட்டியாகிவிட்டது.

எங்கோ ஆடு கத்தும் சத்தம் கேட்டது

சுற்றும் முற்றும் பார்த்தேன்
எங்கு என தெரியவில்லை

விடாமல் கத்தியது
தூரத்தில் ஒரு ஓட்டு வீட்டு ஜன்னலில் கட்டப்பட்ட குட்டி ஆடு தான் மழைக்கு பயந்து கத்துகிறது

பாவம்
உடலை சிலிர்த்துக்கொண்டும்
சுண்ணாம்பு சுவரோடு ஒடுங்கி கொண்டும்  அந்த ஆடு பயத்தில் கத்தியது.

கட்டப்பட்டிருந்த கயிறோ இரக்கமே இல்லாமல் அதை இழுத்துப் பிடித்திருந்தது

ஆடு தன்னை விடுவித்துக்கொள்ள கயிறை இழுத்துக்கொண்டும் தன்னை காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்ற நம்பிக்கையில் கத்தி அழுதுகொண்டுமிருந்தது.

அது தான் எவ்வளவு பாவம் !!!
அதை தவிர எங்கள் எல்லோருக்குமே தெரியும்
அந்த ஆடு கட்டப்பட்டிருந்தது கறிக்கடைக்கார அண்ணனின் வீட்டு ஜன்னல் என!

1 comment:

  1. "ஒரு விதத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் ரசிக்கலாம்..

    வீட்டு ஜன்னல் வழியே கல்யாண ஊர்வலம்.. சாவு ஊர்வலம் இரண்டையும் ஒரே மாதிரி மனநிலையுடன் வேடிக்கை பார்ப்பது போல!"

    Great lines:)..

    ReplyDelete

Related Articles