Tuesday, 28 February 2017

தாலி என்ற நாய் பெல்ட்

அன்று காலையில் எழும் பொழுதே வீட்டு வாசலில் எதோ சத்தம் கேட்டது.
வெளியே சென்று பார்த்தால் ஒரு ஆணும் பெண்ணும் ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

புருஷன் பொண்டாட்டி சண்டை.

அவர்களின் அந்த வாக்கு வாதத்தில் இருந்து அது பணம் சம்பந்தப்பட்ட சண்டை என தெரிந்தது.

"உன் சங்காத்தமே வேணாம்னு தானே நானும் என் புள்ளையும் தனியா வந்துட்டோம்.. இன்னும் ஏன் எங்க நிம்மதிய கெடுக்குறே..?? என் 'போன' குடு"  என்றவாறே எட்டி அவன் கையிலிருந்த செல் போனை பிடுங்க கையை கொண்டு சென்றாள். அவன் கையை அவளுக்கு எட்டாமல் கையை இழுத்துக் கொண்டு அவளை முழங்கையால் முட்டி தள்ளினான்.

"போன் எல்லாம் தர முடியாது. நீ ஊர் எல்லாம் கடன் வாங்குவே..எல்லாரும் என்கிட்ட பணத்தை திருப்பிக் கேக்குறாய்ங்க.. பணம் குடுத்துட்டு ஃபோன வாங்கிட்டு போ" என்றான்.

"நான் கடன் வாங்குறேன்..திருப்பி குடுக்குறேன்..குடுக்காம இருப்பேன்.. நீ யாரு கேட்க..என் போன குடு, நான் போறேன்"
அவள் அவனின் சட்டையை பிடித்து இழுக்க.. அவன் அவளை பிடித்து தள்ள இருவரும் பக்கத்திலிருந்த சாக்கடையில் விழுந்தனர்.
உடனே அவள் வெளியே வந்துவிட்டாள். அவன் கொஞ்சம் தடுமாறி மேலே ஏறவும் அவள் அவனின் கையிலிருந்த செல் போனை பிடுங்கி விட்டு ஓட கால் எடுக்கும் பொழுது அவன் அவளின் காலை பிடித்து இழுக்க முன் பக்கமாக விழுந்தாள். செல் போன் தெறிச்சு போய் விழுந்தது.
அவன் சென்று எடுத்துக் கொண்டான்.
விழுந்தவள் விறுட்டென எழுந்தாள்.

கையை அவனை நோக்கி நீட்டி "என் 'போன' குடு"

"காசு குடுத்துட்டு ஃபோன வாங்கிக்கோ"

"இப்போ குடுக்க போறியா.. இல்லையா? மரியாதையா குடு"
அவன் எதுவும் பேசவில்லை.

அவள் ஒரு நொடி அவனின் கண்ணை  எரித்து விடுவது போல் பார்த்தாள்.
சற்றும் யோசிக்காமல் தன் கழுத்திலிருந்து தாலி கயிறை கழற்றி அவன் மேல் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.
சுற்றி வேடிக்கை பார்த்த மொத்த கூட்டமும் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது.
அந்த மஞ்சள் துண்டு கூட இல்லாத வெறும் கயிறு அவன் நெஞ்சில் பட்டு கொஞ்சம் தள்ளி விழுந்தது.
என்னமோ தன்னுடைய உயிரே குதித்து உருண்டு விழுவது போல அவன் ஓடிச் சென்று அந்த கயிறை எடுத்து சுருட்டி பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவள் போன திசைக்கு எதிர் திசையில் தலையை குனிந்து கொண்டு அவசர அவசரமாக நடந்தான்.

எனக்கு அவள் அதை கழற்றி எரிந்தது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. என் ஆச்சரியம் எல்லாம் அவன் எதற்காக அதை அப்படி ஓடி சென்று எடுத்து வைத்துக் கொண்டான் என்பது தான்.
அதில் தங்கமோ.. வேறு எதுவோ அந்த கயிறில் இல்லை. வெறும் கயிறு.

எனக்கு என்னவோ தாலி என்பது பெண்களை விட ஆண்களுக்கே முக்கியமாய் இருப்பதாக தோன்றுகிறது.

அந்த நிமிடம் யாருக்கு எப்படி இருந்ததோ தெரியாது. எனக்கு அந்த இடத்தில் அளவிட முடியாத சுகந்திரத்தை அனுபவித்த உணர்வு. கழற்றி வீசி விட்டு அவள் சிங்கம் போல ரோட்டில் நடக்க அவனோ தலையை குனிந்து வேக வேகமாக கயிறை தூக்கிக்கொண்டு  ஓடினான்.

எப்படி முஸ்லிம் பெண்கள் பர்தாவிற்குள்  அடைபட்டிருக்கிறார்களோ அதே போல இங்கே தாலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தாலியை பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் ஆண்கள் வாங்கும் பைக்கில் எப்படி தன் பெயரை எழுதி 'இது என்னோடது' என ஊருக்கு காட்டுகிறார்களோ அப்படி தான் தாலியை கட்டி இந்த பொருள்(பெண்) என்னுடையது என காட்டப்படுகின்றது.

அதற்கு கலாச்சார சாயம் பூசினால் நீங்களும் பதிலுக்கு புருஷன் கழுத்தில் தாலி கட்டி விடுங்கள். இருவரும் தாலியும் கழுத்துமாக சுற்றுங்கள். Equalityஐ அங்கிருந்தே ஆரம்பியுங்கள்.

முன்பு ஆண்கள் மெட்டி அணிந்திருப்பார்களாம்..நீளமாக கூந்தல் வளர்த்திருப்பார்களாம். காதில் கடுக்கன் போட்டிருப்பார்களாம். இன்று எங்களால்  அதை எல்லாம் உடைத்தெரிந்து விட்டு வர முடியும் என்றால் பெண்களாலும் அதை எல்லாம் மீற முடியும் தானே!

இன்னும் அதை புனிதம் என பெண்களே பேசினால் வீட்டு நாய் தன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் பெல்ட்டை தனக்கு கிடைத்த மரியாதையாக நினைப்பது போல தான். அது மரியதைக்கு போடப்பட்ட பெல்ட் இல்லை என்பது அதன் எஜமானனுக்கு மட்டுமே தெரியும்.

No comments:

Post a Comment

Related Articles