அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்பொழுது என்னால் அதை அமைதியாக கவனிக்க முடிகிறது.
அரசியல் புரியாதவர்கள் அரசியல் பேசும்போது தான் வாய்லயே மிதிக்கனும்னு தோணுது.
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள பேசுகிறார்கள்.
புரியதவர்களில் பலர் அதற்கு முயற்சி கூட எடுப்பதில்லை.
ஆனால் ஒன்று,
புரிகிறதோ தெரிகிறதோ எப்படி இருந்தாலும் இங்கு அனைவரும் கண்டிப்பாக அரசியல் பேச வேண்டும்.
கல்லூரி முடிந்த ஒரு சில நாட்கள் கழித்து நண்பர்களை சந்தித்த பொழுது ரொம்ப நேரம் அரசியல் கட்சிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஒரு நண்பன் சொன்னான் "என்னங்கடா நாம எல்லாம் பெரிய பசங்க ஆகிட்டோமா? இப்டி பாலிடிக்ஸ் பேசிக்குறீங்க!! வேற ஏதாவது பேசுங்கடா.. எனக்கு வயசாயிடுச்சோனு பயமா வருது" என்று. நாங்கள் சிரித்துக்கொண்டு சினிமாவை பற்றி எங்கள் பேச்சை மாற்றினோம்.
நான்கு வருடங்களாகிவிட்டது..
நேற்று மாலை இரண்டு பள்ளி மாணவிகள் ஏதோ பேசிக்கொண்டே சைக்கிளில் என்னை கடந்து சென்றனர்.
அவர்கள் பேசிக்கொண்டதில் ஒரு வார்த்தை மட்டும் தெறித்து வந்து காதில் விழுந்தது
"சசிகலா"
#அரசியல்_பேசு
No comments:
Post a Comment