காதலர் தினம் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது ஹிட்லர் தான்.
சர்க்கரை பொங்கலுக்கு வடை கறியா?
ஹிட்லரை போன்ற ஒரு காட்டுமிராண்டியை வரலாறு பார்த்திருக்காது. பதினைந்து லட்சம் குழந்தைகள் உட்பட ஆறு மில்லியன் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த ராட்சஷன். இரண்டாம் உலகப்போரின் கதாநாயகன் என்று வர்ணிக்கப்படும் ரத்த வெறி பிடித்த
சைக்கோ.
மிருகம்..
கிறுக்கன்..
அயோக்கியன்..
முட்டாள்..
மனித இனம் இருக்கும் வரை அவனை திட்டிக்கொண்டே இருக்க அவ்வளவு காரணங்கள் நமக்கு இருக்கிறது.
அதை எல்லாம் தாண்டி எனக்கு அவன் வாழ்வில் பிடித்த ஒன்று உள்ளது என்றால் அது இறப்பதற்கு முந்தைய அவனின் கடைசி 36 மணி நேரங்கள்.
ஈவா ப்ரான் என்ற பெண்ணுடன் ஹிட்லருக்கு இருந்த காதலை உலகம் அறிந்து கொண்ட அந்த 36 மணி நேரம்.
ஈவா தனது பதினேழாம் வயதில் ஹிட்லரை சந்தித்திருக்கிறாள். இருவருக்கும் 23 வயது வித்தியாசம். ஹிட்லரை போன்ற ஒருவனை இவ்வுலகில் ஒரு உயிர் பைத்தியமாய் காதலித்திருக்கும் என்றால் அது ஈவா மட்டுமாக தான் இருக்க முடியும். அவனுக்காக சாகும் அளவுக்கு அவள் பைத்தியக்காரி.
துப்பாக்கியால் தன் நெஞ்சில் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்று ஹிட்லரின் கவனத்தை அவள் பக்கம் திருப்பியிருக்கிறாள்.
ஹிட்லர் தன்னுடன் நேரம் செலவிடவில்லை என்பதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டு சாக முயன்றிருக்கிறாள்.
16 வருடம் பழகியிருந்தாலும் இந்த உறவை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தாா் ஹிட்லர். அதற்கு காரணம் மக்களிடம் அவருக்கு இருந்த பிம்பம். தனக்கு துணை என்ற ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் தான் உருவாக்கி வைத்கிருக்கும் அந்த பிம்பம் சேதமடைந்து விடும் என பயந்தாா். திருமணமாகதவராக இருப்பது தான் தனது இந்த அரசியல் செல்வாக்குக்கு சரி என நம்பினார். அவளும் அதை எதிர் பார்க்கவில்லை.
போர் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது ஈவாவை அழைத்த ஹிட்லரின் நண்பர் அவளை தப்பித்து செல்ல வற்புறுத்தினார். அதற்கு ஈவா "ஹிட்லரை தனியா சாக விடுவேன்னு நினைக்குறியா? கடைசி நொடி வரை நான் அவர் கூட தான் இருப்பேன்" என்றாள் உறுதியாக.
எதிரி படைகள் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்க கண்டிப்பாக தோற்றுவிடுவோம் என்ற இக்கட்டான நேரத்தில் ஹிட்லர் தன் வாழ்நாள் முழுவதும் கட்டி உருவாக்கிய அந்த அரசியல் பிம்பம் பற்றி கவலைப்படாமல் அன்று அந்த முடிவை எடுத்தான்.
அந்த முடிவு தான் அவனுடைய ரத்தம் படிந்த சரித்திரத்தில் கடைசி புள்ளியை மட்டும் ஆச்சரியப்படும்படி அழகாக முடித்து வைத்துவிட்டது. ஏப்ரல் 28, 1945 ஆம் தேதி முடிந்து நடு இரவில் ஹிட்லர் ஈவாவை திருமணம் செய்து கொண்டான்.
திருமணம் முடிந்து அடுத்த 36 மணி நேரம் கழித்து 30 ஏப்ரல் மதியம் 3:30 மணிக்கு துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த சிறிய அறைக்குள் நுழைந்தனர். உள்ளே ஈவா சைனைடு சாப்பிட்டு இறந்து கிடக்க பக்கக்தில நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஹிட்லரின் உடல்.
எதிரி படையிடம் பிரேதம் கூட கிடைத்துவிடக்கூடாது என இரண்டு உடல்களையும் உடனே தூக்கி வந்து ஒன்றாக எரிக்க ஹிட்லரும் ஈவாவும் இரண்டரை மணி நேரம் சேர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து காற்றோடு காற்றாக தங்கள் காதலை கலந்து ஜெர்மனி முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.
உலகின் மிக மோசமான சர்வாதிகாரி தனது முடிவை இவ்வளவு அழகாக முடித்திருக்கக்கூடாது. ❤
No comments:
Post a Comment