இரண்டு நாட்களுக்கு முன் உன்னை அப்படி பார்ப்பதற்கு முன்பு வரை வலியை பார்க்க முடியாது., உணர மட்டுமே முடியும் என்று தான் நினைத்திருந்தேன்.
கழுத்து எலும்பு புடைக்க கைகள் கட்டப்பட்ட உன் உடல் வலியில் துடித்து கட்டிலை விட்டு மேலே எழுந்து கீழே விழுந்ததே!! நடுங்கிப் போய்விட்டோம்.
எங்கயோ சந்தோஷமாக பறந்து திரியும் பட்டாம்பூச்சி ஒன்று நம் கையில் வந்து அமர்ந்து உயிர்விட்டால் எப்படி இருக்கும்! அப்படி தான் இருக்கிறது எனக்கு.
கல்லூரி முடிந்து பாதியில் தொடர்பற்று போய் திடீரென எங்கிருந்தோ வந்து கடைசி ஒரு வருடம் என்னுடன் இருந்தவன் இன்று இல்லை. இதற்கு தான் சென்னையில் இருந்து இங்கு வந்தாயா !!?
இனி தினமும் நீயும் நானும் நடந்த சாலை, சாப்பிட்ட உணவகங்கள், தினமும் பயணித்த பேருந்து, நாம் மதியம் சாப்பிடும் இடம், சந்தித்த மனிதர்கள், உன்னிடமிருந்து நான் பிடுங்கிக்கொண்ட ஷூ, நீ தினமும் முகம் பார்க்கும் கண்ணாடி என என்னை சுற்றி நீ விட்டுச் சென்றதை எப்படி பார்த்துக் கொண்டு நான் நடமாடுவேன்.
அழுகையாய் வருகிறது.
உனக்கு ஞாபகம் இருந்திருக்குமா? ஒரு நாள் நீ சொன்னாய் "நமக்கு வியாதி வரும் போது தான் அதுக்கு முன்னாடி வரை எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்னு தெரியும்". அப்பொழுது எனக்கு புரியவில்லை.
லட்சத்தில் ஒருத்தருக்கு தான் அந்த புற்றுநோய் வருமாமே! உனக்கு ஏன் வந்தது?
ஒரு வருடம் அந்த நோயோடு தான் இருந்தாயா? எப்படிடா உனக்கு தெரியாம போச்சு?!!
நீ சொல்லி தான் நான் ஒழுங்காக காலையில் சாப்பிடுகிறேன். உன்னை பார்த்து தான் நிறைய தண்ணீர் குடிக்கிறேன். எந்த உணவில் என்ன சத்து இருக்கிறது என்பதை சாப்பிடும் பொழுது சொல்லுவியே! உனக்கு எப்படிடா தெரியாம போச்சு!?
"நானே வந்து சொல்கிறேன்" என்று நீ சொன்னதால் தானே உன்னை இரண்டு மாதமாக எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன். இப்படி சொல்லாமலே போய் விட்டாய். நியாயமா?
இவ்வளவு சீக்கிரம் போய்விடுவாய் என்றால் ஏன் வாழ்நாள் முழுவதும் அவ்வளவு கனவுகளை அந்த விதி உன்னை சுமக்க விட்டது?
"அண்ணாமலை, பிரபு வந்திருக்கேன் டா" என்ற பொழுது கண்களை திறக்க முடியாமல் கையை தூக்கினாயே! கைகளை பிடித்த பொழுது அசைத்து என்னமோ செய்தாய். என்னிடம் என்னடா சொல்ல வந்தாய்.? இந்த பைத்தியக்காரனுக்கு புரியலையே!
உன்னை பிடித்து வைத்துக்கொள்ள நான் ஆசை படவில்லை. உனக்கு அது பிடிக்காது.
எந்த வலியும் இல்லாமல் இனி நீ சுதந்திரமாக இரு.
ஒரு பறவையை போலே நீ எப்பொழுதும் ஆசைப்பட்டது மாதிரி இந்த உலகத்தை தனியாக சுற்று.
உன் பொருட்களை என்னுடன் எடுத்துச் செல்ல சொன்னாய் அல்லவா! திரும்ப வந்து வாங்கிக் கொள்வாய் என்று தான் சம்மதித்தேன். இப்பொழுது நான் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.
அதற்கு பதில் உனது கனவுகளை நான் எடுத்துக்கொள்கிறேன்.
நீ நிம்மதியாக உறங்கு. உன்னுடைய கனவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
RIP Anna Malai
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment