Monday, 7 November 2016

பேசும் தாடி

கடந்த 3 வருடங்களாக பெரும்பாலும் நான் தாடியுடன் தான் இருந்திருக்கேன்.

இப்பொழுது வந்து சிலர் கேள்வி கேட்டு  கடுப்பேத்துகிறார்கள்
"என்ன திடீர்னு தாடி எல்லாம்.... 'ப்ரேமம்' பார்த்தா?"
"ஆமா 'இருமுகன்' 'கொடி' னு எல்லாம் இதுதானே ஃபேஷன்"

அப்படி கேட்பவர்களிடமெல்லாம்
"ஏன் இவ்ளோ நாள் கோமா-ல இருந்தியா?" என கேட்க தோன்றுகிறது.

இது ஒரு மன நோய்.
எவன் எதை செய்தாலும் அதை எங்காவது யாரையாவது பார்த்து தான் செய்திருப்பார்கள் என முடிவு செய்துகொள்வது.

இன்னும் சிலர்
"என்ன லவ் ஃபெய்லியரா?" என்கிறார்கள்.

அய்யா.. எனக்கு லவ் ஃபெய்லியரான பொழுது தாடியே வளர ஆரம்பித்திருக்கவில்லை.!😂

அது சரி காதலுக்கும் தாடிக்குமே என்ன சம்பந்தம்?  இப்பொழுதெல்லாம் காதலில் தோற்றால் தான் க்ளீன் ஷேவ்வே செய்து கொள்கிறார்கள். அப்டேட் ஆகுங்க ப்பா.!!

தாடி வளர்க்க நான் காரணம் பல வைத்திருக்கிறேன்.
அது நேரத்துக்கு நேரம் மாறுபடும்.
சில சமயம் சோம்பேறித்தனம்.
சில சமயம் தாடிக்குள் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்.
சில சமயம் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்படி நிறைய இருக்கிறது.

ஒரு முறை என் கல்லூரி ஹெச்.ஓ.டி என்னுடைய தாடி வைத்த நண்பனிடம்
"தாடி வைப்பது பெரிதில்லை... ஆனால் அது எதனுடைய அடையாளம் என தெரிந்து அதன் பிறகு வைத்துக்கொள். இப்பொழுது எடுத்துவிடு" என்றார்.
பின்னாளில் அவரிடம் அதை பற்றி கேட்ட பொழுது சொன்னார் "தாடி வைத்துக்கொள்வது புரட்சியாளர்களின் மரபு" என்று.
எனக்கு அது பிடித்திருந்தது.

எல்லா மனிதனும் வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் ஒரு முறையேனும் தாடிக்குள் சென்று வந்தவர்களாக தான் இருப்பார்கள்.

வாழ்வை வெறுப்பவன் மட்டும் அல்ல,
வாழ்வை ரசிப்பவனும் தாடி வளர்ப்பான்.

வரலாற்றை பாருங்கள். அதன் பக்கங்களை நிரப்பிய பல தாடிக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள்.

புரட்சியாளனில் இருந்து பைத்தியகாரன் வரை எல்லோரும் தாடிக்காரர்கள் தான்.

இயேசுவும் தாடிதான்.சாய்பாபாவும் தாடிதான்.

மோடியும் தாடி. மன்மோகன்சிங்கும் தாடி.

இவ்வளவு ஏன் எங்க பெரியார் கூட தாடி தான்டா.

இதில் சினிமா நடிகர்களுக்கு என்ன வேலை?
அது வளர்கிறது.
நாங்கள் வளர்க்கிறோம்.
அதில்.. அந்த மயிருக்கு பின்னால் 'காதல் கதைகள்' 'சினிமா நடிகர்கள்' என சில்லரை காரணங்களை தேடிக்கொண்டு அலையாதீர்.

நல்ல வேளை
'பின் லேடன்'  நம்ம நாட்டில் வந்து பிறந்து  தொலைக்கவில்லை

அப்படி பிறந்திருந்தால்
"என்னடா  பின் லேடா!! எங்க ஊர் திருவள்ளுவர பார்த்து தாடி எல்லாம் வச்சுட்டே போல!!"
என்று சொல்லி வாயில் சுடப் பட்டிருப்பார்கள்.

ஃபன்னி ஃபெல்லோஸ்

பிரபு மித்ரன்

மழை வேட்டை

மாலை

வீடெங்கும் மழைக்கு பிறந்த ஈசல்கள்.
என் வீட்டு பல்லி ஒன்று ஈவு இரக்கமின்றி அவற்றை வேட்டையாடிக் கொண்டிருந்தது.
சிக்கிய ஈசலை எல்லாம் கரக் முறுக் என விழுங்கியது.
விடிந்து பார்த்தால் உடலில்லாத இறக்கைகள் வாசலில்.

மதியமும் மழை.
வீட்டு பக்கத்தில் இருந்த வாழை கறிவேப்பிலை பூச்செடி எல்லாம் மழையில் குளித்து சுத்த பத்தமாக தலையை சிலுப்பிக் கொண்டு நின்றிருந்தன.
அடியில் ஒரு மூஞ்சூரு எலி தலையை வெளியே காட்டி சிரித்தது .
பெரிய எலி.
பெருச்சாளி என்று சொல்வதா!!
வேண்டாம்....எலி தான்.
ரொம்ப நாளாக அங்கு வசிக்கிறது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
எங்களை அது தொந்தரவு செய்ததில்லை.
அதனால் நாங்களும் அதன் வழியில் குறுக்கிடுவதில்லை.
அது சமத்தான பக்கத்து வீட்டுக்காரன். அல்லது வீட்டுக்காரி.
எப்பவாவது தான் கண்ணில் படும். ஏதாவது மேய்ந்து கொண்டிருக்கும்.
இன்றும் அப்படி தான்.
ஈர நிலத்தில் செடிகளுக்கு நடுவே என்னமோ தேடிக்கொண்டிருந்தது.
மழை த்தூர ஆரம்பித்ததால் நான் உள்ளே வந்தேன்.

திடீரென கீச் கீச் என சத்தம்.
உடனே அடங்கி விட்டது.
வெளியே வந்து பார்த்தேன். ஒன்றுமில்லை.
சுவரோரம் சாய்த்து வைத்திருந்த தகர கதவு படபடத்தது.
மெதுவாக பக்கத்தில் சென்று சுவருக்கும் தகரத்துக்கும் இடையில் இருந்த இருட்டு சந்தில் குனிந்து பார்த்தேன்.
சிவப்பு வரி பூனை ஒன்று அந்த எலியை வாயில் கவ்வியபடி அதன் கொடூரமான கண்களால் என்னை பார்த்தது.
அதன் பற்களும்... தலை தொங்கிக் கொண்டிருந்த எலிப் பிணமும்.. பூனையின் பார்வையும் என்னை நடுங்கச் செய்தது.
ஓடி வந்து கதவை தாழிட்டுக் கொண்டேன்.

நேற்று இரவு வெளியே நின்று மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தவளை ஒன்று தத்தி தத்தி ரோட்டில் சென்றது. பார்க்க அழகாக இருந்தது.
நடப்பன.. பறப்பன.. ஊர்வன... என எதிலும் அடங்காத தனிப்பிறவி இது.
தாவுவது.
ரோட்டை கடந்து எதிரில் இருந்த கடை வாசலிற்குப் போனது.
கடைக்காரன் விற்பனைக்கு வைத்திருந்த விலக்குமாறை எடுத்து தவளையை ஓங்கி தலையில் ஒரு அடி அடித்து ரோட்டுக்கு தள்ளி விட்டான்.
அதன் வெண்மையான அடிப்பக்கம் வானத்தை பார்க்க கால்களை விரித்து நடு ரோட்டில் சொத்தென விழுந்தது.
செத்து போனது என நினைத்தேன்.
அது நிதானமாக புரண்டு படுத்து கொஞ்சம் இளைப்பாறியது.
தெம்பு வந்ததும் பின்னங்கால்களை ஊன்றி ஒரு தாவு தாவி காற்றில் சென்று நிலத்தில் இறங்கும் பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு வாகனம் சதக் என சத்தத்துடன் ஏற்றிச் சென்றது.
மழையில் அதன் இரத்தம் கரைந்து ரோட்டில் வழிகிறது.

கனத்த இதயத்துடன் தூங்கினேன்.

இரவு முழுவதும் இடி மின்னல்.
பயங்கர மழை.

விடிந்து எழும் பொழுது ஒருவரின் மரண செய்தி வந்தது.
நான் அரைக் கால் சட்டை போட்ட பொடிப்பையனாக இருந்த பொழுதே அவருக்கு முடி முழுவதும் வெள்ளையாக இருக்கும்.
என்னுடைய அந்த வயதுக்கே முதல் முதலில் என்னை வாங்க போங்க என்று அழைத்த பெரியவர் அவர்.
திடீரென காலையில் இறந்து விட்டாராம்.
இன்னும் நிற்கவில்லை !
வேட்டை நடந்து கொண்டே இருக்கின்றது.

மழை..
இந்த மழை தான் இப்பொழுதும் எவ்வளவு அழகு!

பிரபு மித்ரன்

அழையா கோபம்

அலுவலக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அருகில் வந்த ஒரு பெண் அதன் கையில் இருந்த பேனாவால் எனது மேஜையை 'டொக்' 'டொக்' என தட்டி என்னை அழைத்தாள்.

ஹெட் செட்டை கலட்டி வைத்துவிட்டு எழுந்து அவர்  செவிலுடன் சேர்த்து 'பொளேர்' என்று ஒன்னு வைக்கலாம் போல இருந்தது.

"ஏன் வாயில கூப்பிட மாட்டாளா?!! இல்ல  கூப்பிட்டா தான் கேட்காதா?"

ஆமா எப்படி கேட்கும்?
அதான் ஹெட் செட் போட்டிருந்தேனே!!

அறிவை மீறி சில சமயம் கோபம் புடைத்துக்கொண்டு வந்து மூக்கு மேல் உட்கார்ந்து கொள்கிறது.
கீழே தட்டிவிட்டதும் "யாத்தே" என அலறியவாறு குப்புற விழுந்தது 'கோபம்'.

நான் மெதுவாக அந்த பெண்ணிடம் திரும்பி எப்பவும் போல உம்மனா மூஞ்சியுடன்

"சொல்லுமா" என்றேன்.

இரண்டு ரூபாய் விளையாட்டு

பேருந்து நிறுத்தத்தை ஒட்டியிருந்த உணவகத்தில் சிறப்பாக காலை  சிற்றுண்டியை முடித்துவிட்டு வெளிய வந்து அந்த நிறுத்தத்தின் நிழலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தேன்.

திடீரென காலை யாரோ சுரண்டுவது போல இருந்தது. திரும்பி பார்த்தால் பக்கதில் ஒரு சின்ன பையன்
அழுக்கு டி சர்ட்டும் பல இடத்தில் கிழிந்த அரை கால் சட்டையும் அணிந்திருந்தான்.

கையை நீட்டி "ரெண்டு ரூபா குடு" என்று சொல்லி சிரித்தான்.

நான் "உன் பேர் என்ன?" என்றேன்.

கையை உடனே கீழே இறக்கிவிட்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டான்.

நான் திரும்பவும் "உன் பேர் என்ன?"
(எனக்கு குழந்தைகளிடம் தெரிந்த ஒரே விளையாட்டு பெயர் கேட்பது மட்டும் தான்.)

அவன் எங்கயோ பார்த்துக் கொண்டே உடலை வளைத்தான். வாயை அகல திறந்து அன்னாந்து பார்த்தான். கையை உடலை சுற்றி வளைத்து என்னமோ செய்தான். அதில் எந்த வித காரணமும் இல்லை. அவன் மனம் சொல்லும் விதம் அவனின் உடல் செய்துகொண்டிருந்தது.

நான் அவன் காட்டிக்கொண்டிருக்கும் இந்த வித்தையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வேறு பக்கம் பார்த்தபடி திரும்பவும்    "ரெண்டு ரூபா குடு" என்றான்.

"நீ பேர் என்னனு சொன்னாதான் குடுப்பேன்"

அவன் முகத்தை என் பக்கம் திருப்பவே இல்லை.

சில நிமிடம் இது தொடர்ந்து கடைசியில் காசு குடுத்துவிடலாம் என்று பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தேன்

அந்த பையன் என் பக்கம் திரும்பினான்

காசை தேடி எடுக்கும் பொழுது

"யே... தெரு நாயே...யே.." என ஒரு சத்தம்.
நிமிர்ந்தேன்
ஒரு அழுக்கு சேலை பெண் பரட்டை தலையுடன் ஒரு தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறாள்.
அவள் அடி தொண்டையிலிருந்து மறுபடியும் கத்தினாள்
"பிச்சைகார நாயே.. வாடா.."
இந்த பையனை பார்த்து தான் கத்தினாள்
இவன் என்னை பார்த்தான்.
நான் அந்த பெண்ணை பார்த்தேன்.
வண்டியை நிறுத்திவிட்டு வெறிப் பிடித்தது போல கைகளை முறுக்கி முன்னால் குனிந்து கண்களை அகல விரித்து  "வா..." என அடி வயிற்றிலிருந்து கத்தவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் அவளை திரும்பி பார்த்தனர்.
அவள் குரலில் இருந்த ஆக்ரோஷம் என்னை பயப்படுத்தியது.

இந்த பையன் இறங்கி அவள் பக்கத்தில் ஓடினான்

அந்த தள்ளு வண்டியின் மேலே எதோ பொருட்கள் மழைக் காகிதத்தில் மூடப்பட்டிருந்தது.

அதனுடன் சில மண் வெட்டிகள் கடப்பாரை எல்லாம் வெளியே தெரிந்தது.
அந்த வண்டிக்கு கீழே இருந்த பலகையில் துணி பாத்திரம் எல்லாம் கட்டப்பட்டிருந்தது. அது தான் அவர்களின் வீடு.

"மேல ஏறுடா" கோபம் குறையாமல் சொன்னாள்.
அந்த பையன் வண்டி மீது ஏறுவது போல சென்று அங்கிருந்த காலி பாட்டிலை எடுத்துக்கொண்டு என் பக்கம் ஓடி வந்தான்.

அவ்வளவு தான்.
அவள் அந்த மண் வெட்டியின் கைப்பிடியை 'சடக்'கென உருவி தலைக்கு மேல் ஓங்கி
"இப்போ வண்டில ஏறுலனா உன்னை அடிச்சு பொணமா தான் கொண்டு போவேன்.. நாயிக்கு பொறந்தவனே..ஏறு..இல்ல" என அவனை நோக்கி பாய்ந்தாள்.

அவன் பயந்து பக்கத்தில் போனவுடன் பிடித்திருந்த கட்டையை போட்டுவிட்டு  அவனை அப்படியே இரண்டு கையால் தூக்கி வண்டி மேல் உட்காரவைத்தாள்.
உடனே அவள் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அந்த ராட்ச்சசி மறைந்து சாந்தமாகிவிட்டது.
இவ்வளவு நேரம் அங்கு இருந்தவள் 'நான் இல்லை' என்பது போல் மாறிவிட்டாள்.
அந்த வண்டிச் சுமையுடன் தன் மகன் சுமை சேர்ந்ததால் பாதி எடை குறைந்து போனதாக நினைத்தாளோ என்னவோ.!
சந்தோஷமாக வண்டியை தள்ளினாள்.

அந்த பையன் சம்மனமிட்டு அமர்ந்து பின்னால் தள்ளிக்கொண்டு வரும் அவன் அம்மாவையும்...அவனை கடந்து போகும் உலகத்தையும்...இரண்டு ரூபாயை தர வக்கிருந்தும் தராத ஒரு பிச்சைக்காரனையும் பார்த்துக்கொண்டே வண்டியுடன் சேர்ந்து ஆடியபடி செல்கிறான்.

அந்த பையனுக்குச் சேர வேண்டிய இரண்டு ரூபாய் இப்பொழுது கனமாக என் பார்ஸில் படுத்திருக்கிறது.

பிரபு மித்ரன்

பார்வைகள் மாறுபடுபவை

கல்லூரி முதல் வருடம் படிக்கும் பொழுது எல்லோரையும் பொள்ளாச்சி ஆழியார் அழைத்துச் சென்றார்கள்.
சுற்றுலா எல்லாம் இல்லை.
அங்கு அறிவுத்திருக்கோவிலில் இரண்டு நாள் ஏதோ தியான வகுப்பு என.
இரவு அங்கு சென்று சேர்ந்ததும் சோறு போட்டு பிறகு படுத்து தூங்க 4 பேருக்கு ஒன்று என அருமையான அறையும்  கொடுத்தார்கள்.

அடுத்த நாள் விடிய காலையே எழுப்பி தியானம் ... சொற்பொழிவு... என்றெல்லாம் நடக்க நாங்கள் எல்லாம் அவர்களிடம் சிக்கி விடாமல் ஓடி ஒளிந்து அங்கன குள்ளயே சுற்றி அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்.
வெளியே விட மாட்டார்கள்.

ஒரு இடத்தில் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கான விதியை மீறுவது மட்டுமே வீரம் என நினைத்திருப்போம்.

அதன் வெளிப்பாடே கல்லூரியில் ப்ராக்சி போடுவது.. விடுதியில் சுவர் ஏறி குதிப்பது..குடித்து விட்டு வகுப்புக்கு வருவது போன்ற வீரச்(!) செயல்கள் எல்லாம்.

அப்படி தான் அங்கு சீட்டு விளையாடி மாட்டிக்கொண்ட பொழுது எங்களை வரிசையாக நிற்க வைத்து அந்த இடத்தின் புனிதத்தையே கெடுத்துவிட்டோம் என அங்கு இருந்தவர்கள் எல்லாம் வலிக்காமல் வெய்துகொண்டே வாழ்க வளமுடன் சொல்லிவிட்டு சென்றார்கள்.

இருக்கின்ற இடத்தின் விதியை மீற மட்டுமே நம் நாட்டிற்கு வாய்த தலைவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தது.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக நமக்கு ஒத்துழையாமையை சொல்லிக்கொடுத்த காந்தி இந்திய அரசுக்கு ஒத்துழைக்க சொல்லிக்கொடுப்பதற்கு முன் கொல்லப்பட்டார். சரி ஆழியார் சம்பவத்திற்கு வருவோம்.

அன்று மாலை அனைவரையும் பக்கதிலிருந்த அணையை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றனர்.
கல்லூரி முதல் வருடம் படிப்பவர்கள் அணையையா சுற்றுவார்கள்!! சுற்றி பார்க்க வேண்டியதை எல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

எங்களை அழைத்து வந்த பேருந்தில் ஏறாமல் நடந்து போகலாம் என முடிவெடுத்து நாங்கள் ஒரு முப்பது நாற்பது பேர் மட்டும் ஜாலியாக கலாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினோம்.

வழியில் ஒரு பேக்கரி இருந்தது.

உள்ளே அனைவருக்கும் இடம் இல்லை என்பதால் வெளியேவே நின்று எங்களுக்கு வேணுமென்கிற குளிர்பானத்தை கேட்டு வாங்கி கலர் கலராக உள்ளே தள்ளினோம்.

காசு கொடுக்கும் நேரம் வந்தது.
எவனோ ஒருவன் விளையாட்டாக "டேய் மச்சி..எங்க நாலு பேருக்கும் சேர்த்து நீ காசு குடுத்திடுடா" என சொல்ல நாங்கள் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் "பணத்தை இவன் குடுப்பான்" "அவன் குடுப்பான்" என  சொல்லிக்கொண்டே கடையை விட்டு சிலர்  ஓடினோம்.

யாரையும் திரும்பி பார்க்காமல் ஓட எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மூச்சு வாங்க சிரித்துக்கொண்டே ஓடி ஒரு மரத்தடியில் ஒருவர் மேல் ஒருவராக விழுந்தோம்

சில நிமிடங்களில் ஒருவர் பின் ஒருவராக அங்கு ஓடி வந்து சேர்ந்தார்கள்.

யார் பணம் கொடுத்தார்கள் என வந்த எல்லோரிடமும் விசாரித்ததில் யாருமே கடைசியில் கொடுக்கவில்லை.

மறுபடியும் எல்லோரும் வெடித்துச் சிரித்தோம்.

அப்பொழுது ஒருவன் சொன்னான் "பாவம்டா அந்த பேக்கரிக்காரர்..குடுத்திருக்கலாம்"
அதை யாரும் அன்று காதில் வாங்கவில்லை.
அன்று அந்த எங்களின் சிரிப்பில் அந்த பேக்கரிகாரரின் அழுகை தெரியவில்லை.

இப்பொழுது நினைத்தால் எப்படி அந்த ஒரு பையன்  மட்டும் அன்று அவரை பாவம் என்று சொன்னான என விளங்கவில்லை.
நாங்கள் அதன் பிறகு எத்தனையோ முறை அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த பொழுதெல்லாம் அதை பாவம் என நினைத்து வருந்தியிருக்கிறோம். ஆனால் அன்று அவனுக்கு மட்டுமே அது தோன்றியது. இருந்தாலும் அவன் அப்படி ஒன்றும்  மற்றவர்களுக்காக பாவம் பார்ப்பவன் கிடையாது. அப்புறம் ஏன்?

எதோ இருக்கிறது!
என்ன?
எங்களுக்கும் அவனுக்கும் ஒன்று தான் வித்யாசாம். அந்த பையனின் அப்பா பேக்கரி வைத்திருந்தார். அவனுக்கு அவர்களின் கஷ்டத்தை உணர முடிந்தது. எங்களுக்கு அது தெரியாது.

நமக்கு நம் பெற்றவர்களின் வேலையில் உள்ள கஷ்டம் தெரிவதனால் அந்த தொழில் உள்ளவர்கள் மீது நம்மை அறியாமல் ஒரு ஒட்டுதல் உருவாகி விடுகிறது.

என் அம்மா ஆசிரியை என்பதாலேயே என்னால் பெண் ஆசிரியர்களை மற்றவர்கள் போல கலாய்க்க முடியாது.
படித்து முடித்த பிறகும் எப்பொழுது அவர்களை பார்த்தாலும் நானே சென்று பேசுவேன்.
காரணம் எங்காவது அவளிடம் படித்த யாரயாவது பார்த்தால் என் அம்மா சொல்லுவாள்
"எங்கிட்ட தான் அவ படிச்சா... அப்போ எல்லாம் மிஸ் மிஸ்-்னு கூடவே சுத்துவா.. இப்போ பார்த்தா பேச கூட மாட்டிங்குறா" என்று.
அது எல்லா ஆசிரியர்களுக்கும் தன் மாணவர்கள் மீது உள்ள அதிகபட்ச எதிர்பார்ப்பு. அதை என்னால் உணர முடிவதே நானாக சென்று பேசுவது.

பல சமயங்களில் பஸ் நடத்துனர் பயணிகள் மீது எரிந்து விழுவதை பார்த்திருக்கிறேன். அவர்களின் மேல் நமக்கு கோபமாக வரும். ஒரு நிமிடம் அவரின் வீட்டில் ஒருத்தனாக நினைத்து பார்த்தால் அது அவரின் கால் வலியின் வேதனையும் நூற்றுக்கணக்கான மனிதர்களை சமாளிக்க வேண்டிய பொறுப்பில் ஏற்பட்ட சலிப்பையும் வெளிப்படுத்துவதை புரிந்து கொள்ளலாம்.

எந்த ஆட்டோ ஓட்டுனரின் மகனும் ஆட்டோக்களின் மீட்டரை குறை சொல்லுவதில்லை.
எந்த துப்புரவு தொழிலாளியின் மகளும் டேபிள் துடைப்பவர்களை அதிகாரம் செய்வதில்லை.

நாம் வெளிப்படையாக இதெல்லாம் மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு இல்லாட்டியும் மறைமுகமாக நம்மை சேர்ந்தவர்களின் தொழில் செய்பவர்களுக்கு நம் அனுதாபத்தை செலுத்திக்கொண்டே தான் இருப்போம்.

இங்கே நாம் யாரும் கெட்டவர்கள் எல்லாம் இல்லை.
சிலவற்றை புரிந்துகொள்ள முடியாதவர்களாக மட்டுமே இருக்கிறோம்.

பிரபு  மித்ரன்

Related Articles