கல்லூரி முதல் வருடம் படிக்கும் பொழுது எல்லோரையும் பொள்ளாச்சி ஆழியார் அழைத்துச் சென்றார்கள்.
சுற்றுலா எல்லாம் இல்லை.
அங்கு அறிவுத்திருக்கோவிலில் இரண்டு நாள் ஏதோ தியான வகுப்பு என.
இரவு அங்கு சென்று சேர்ந்ததும் சோறு போட்டு பிறகு படுத்து தூங்க 4 பேருக்கு ஒன்று என அருமையான அறையும் கொடுத்தார்கள்.
அடுத்த நாள் விடிய காலையே எழுப்பி தியானம் ... சொற்பொழிவு... என்றெல்லாம் நடக்க நாங்கள் எல்லாம் அவர்களிடம் சிக்கி விடாமல் ஓடி ஒளிந்து அங்கன குள்ளயே சுற்றி அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்.
வெளியே விட மாட்டார்கள்.
ஒரு இடத்தில் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கான விதியை மீறுவது மட்டுமே வீரம் என நினைத்திருப்போம்.
அதன் வெளிப்பாடே கல்லூரியில் ப்ராக்சி போடுவது.. விடுதியில் சுவர் ஏறி குதிப்பது..குடித்து விட்டு வகுப்புக்கு வருவது போன்ற வீரச்(!) செயல்கள் எல்லாம்.
அப்படி தான் அங்கு சீட்டு விளையாடி மாட்டிக்கொண்ட பொழுது எங்களை வரிசையாக நிற்க வைத்து அந்த இடத்தின் புனிதத்தையே கெடுத்துவிட்டோம் என அங்கு இருந்தவர்கள் எல்லாம் வலிக்காமல் வெய்துகொண்டே வாழ்க வளமுடன் சொல்லிவிட்டு சென்றார்கள்.
இருக்கின்ற இடத்தின் விதியை மீற மட்டுமே நம் நாட்டிற்கு வாய்த தலைவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தது.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக நமக்கு ஒத்துழையாமையை சொல்லிக்கொடுத்த காந்தி இந்திய அரசுக்கு ஒத்துழைக்க சொல்லிக்கொடுப்பதற்கு முன் கொல்லப்பட்டார். சரி ஆழியார் சம்பவத்திற்கு வருவோம்.
அன்று மாலை அனைவரையும் பக்கதிலிருந்த அணையை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றனர்.
கல்லூரி முதல் வருடம் படிப்பவர்கள் அணையையா சுற்றுவார்கள்!! சுற்றி பார்க்க வேண்டியதை எல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
எங்களை அழைத்து வந்த பேருந்தில் ஏறாமல் நடந்து போகலாம் என முடிவெடுத்து நாங்கள் ஒரு முப்பது நாற்பது பேர் மட்டும் ஜாலியாக கலாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினோம்.
வழியில் ஒரு பேக்கரி இருந்தது.
உள்ளே அனைவருக்கும் இடம் இல்லை என்பதால் வெளியேவே நின்று எங்களுக்கு வேணுமென்கிற குளிர்பானத்தை கேட்டு வாங்கி கலர் கலராக உள்ளே தள்ளினோம்.
காசு கொடுக்கும் நேரம் வந்தது.
எவனோ ஒருவன் விளையாட்டாக "டேய் மச்சி..எங்க நாலு பேருக்கும் சேர்த்து நீ காசு குடுத்திடுடா" என சொல்ல நாங்கள் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் "பணத்தை இவன் குடுப்பான்" "அவன் குடுப்பான்" என சொல்லிக்கொண்டே கடையை விட்டு சிலர் ஓடினோம்.
யாரையும் திரும்பி பார்க்காமல் ஓட எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மூச்சு வாங்க சிரித்துக்கொண்டே ஓடி ஒரு மரத்தடியில் ஒருவர் மேல் ஒருவராக விழுந்தோம்
சில நிமிடங்களில் ஒருவர் பின் ஒருவராக அங்கு ஓடி வந்து சேர்ந்தார்கள்.
யார் பணம் கொடுத்தார்கள் என வந்த எல்லோரிடமும் விசாரித்ததில் யாருமே கடைசியில் கொடுக்கவில்லை.
மறுபடியும் எல்லோரும் வெடித்துச் சிரித்தோம்.
அப்பொழுது ஒருவன் சொன்னான் "பாவம்டா அந்த பேக்கரிக்காரர்..குடுத்திருக்கலாம்"
அதை யாரும் அன்று காதில் வாங்கவில்லை.
அன்று அந்த எங்களின் சிரிப்பில் அந்த பேக்கரிகாரரின் அழுகை தெரியவில்லை.
இப்பொழுது நினைத்தால் எப்படி அந்த ஒரு பையன் மட்டும் அன்று அவரை பாவம் என்று சொன்னான என விளங்கவில்லை.
நாங்கள் அதன் பிறகு எத்தனையோ முறை அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த பொழுதெல்லாம் அதை பாவம் என நினைத்து வருந்தியிருக்கிறோம். ஆனால் அன்று அவனுக்கு மட்டுமே அது தோன்றியது. இருந்தாலும் அவன் அப்படி ஒன்றும் மற்றவர்களுக்காக பாவம் பார்ப்பவன் கிடையாது. அப்புறம் ஏன்?
எதோ இருக்கிறது!
என்ன?
எங்களுக்கும் அவனுக்கும் ஒன்று தான் வித்யாசாம். அந்த பையனின் அப்பா பேக்கரி வைத்திருந்தார். அவனுக்கு அவர்களின் கஷ்டத்தை உணர முடிந்தது. எங்களுக்கு அது தெரியாது.
நமக்கு நம் பெற்றவர்களின் வேலையில் உள்ள கஷ்டம் தெரிவதனால் அந்த தொழில் உள்ளவர்கள் மீது நம்மை அறியாமல் ஒரு ஒட்டுதல் உருவாகி விடுகிறது.
என் அம்மா ஆசிரியை என்பதாலேயே என்னால் பெண் ஆசிரியர்களை மற்றவர்கள் போல கலாய்க்க முடியாது.
படித்து முடித்த பிறகும் எப்பொழுது அவர்களை பார்த்தாலும் நானே சென்று பேசுவேன்.
காரணம் எங்காவது அவளிடம் படித்த யாரயாவது பார்த்தால் என் அம்மா சொல்லுவாள்
"எங்கிட்ட தான் அவ படிச்சா... அப்போ எல்லாம் மிஸ் மிஸ்-்னு கூடவே சுத்துவா.. இப்போ பார்த்தா பேச கூட மாட்டிங்குறா" என்று.
அது எல்லா ஆசிரியர்களுக்கும் தன் மாணவர்கள் மீது உள்ள அதிகபட்ச எதிர்பார்ப்பு. அதை என்னால் உணர முடிவதே நானாக சென்று பேசுவது.
பல சமயங்களில் பஸ் நடத்துனர் பயணிகள் மீது எரிந்து விழுவதை பார்த்திருக்கிறேன். அவர்களின் மேல் நமக்கு கோபமாக வரும். ஒரு நிமிடம் அவரின் வீட்டில் ஒருத்தனாக நினைத்து பார்த்தால் அது அவரின் கால் வலியின் வேதனையும் நூற்றுக்கணக்கான மனிதர்களை சமாளிக்க வேண்டிய பொறுப்பில் ஏற்பட்ட சலிப்பையும் வெளிப்படுத்துவதை புரிந்து கொள்ளலாம்.
எந்த ஆட்டோ ஓட்டுனரின் மகனும் ஆட்டோக்களின் மீட்டரை குறை சொல்லுவதில்லை.
எந்த துப்புரவு தொழிலாளியின் மகளும் டேபிள் துடைப்பவர்களை அதிகாரம் செய்வதில்லை.
நாம் வெளிப்படையாக இதெல்லாம் மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு இல்லாட்டியும் மறைமுகமாக நம்மை சேர்ந்தவர்களின் தொழில் செய்பவர்களுக்கு நம் அனுதாபத்தை செலுத்திக்கொண்டே தான் இருப்போம்.
இங்கே நாம் யாரும் கெட்டவர்கள் எல்லாம் இல்லை.
சிலவற்றை புரிந்துகொள்ள முடியாதவர்களாக மட்டுமே இருக்கிறோம்.
பிரபு மித்ரன்