பேருந்து நிறுத்தத்தை ஒட்டியிருந்த உணவகத்தில் சிறப்பாக காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு வெளிய வந்து அந்த நிறுத்தத்தின் நிழலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தேன்.
திடீரென காலை யாரோ சுரண்டுவது போல இருந்தது. திரும்பி பார்த்தால் பக்கதில் ஒரு சின்ன பையன்
அழுக்கு டி சர்ட்டும் பல இடத்தில் கிழிந்த அரை கால் சட்டையும் அணிந்திருந்தான்.
கையை நீட்டி "ரெண்டு ரூபா குடு" என்று சொல்லி சிரித்தான்.
நான் "உன் பேர் என்ன?" என்றேன்.
கையை உடனே கீழே இறக்கிவிட்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டான்.
நான் திரும்பவும் "உன் பேர் என்ன?"
(எனக்கு குழந்தைகளிடம் தெரிந்த ஒரே விளையாட்டு பெயர் கேட்பது மட்டும் தான்.)
அவன் எங்கயோ பார்த்துக் கொண்டே உடலை வளைத்தான். வாயை அகல திறந்து அன்னாந்து பார்த்தான். கையை உடலை சுற்றி வளைத்து என்னமோ செய்தான். அதில் எந்த வித காரணமும் இல்லை. அவன் மனம் சொல்லும் விதம் அவனின் உடல் செய்துகொண்டிருந்தது.
நான் அவன் காட்டிக்கொண்டிருக்கும் இந்த வித்தையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வேறு பக்கம் பார்த்தபடி திரும்பவும் "ரெண்டு ரூபா குடு" என்றான்.
"நீ பேர் என்னனு சொன்னாதான் குடுப்பேன்"
அவன் முகத்தை என் பக்கம் திருப்பவே இல்லை.
சில நிமிடம் இது தொடர்ந்து கடைசியில் காசு குடுத்துவிடலாம் என்று பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தேன்
அந்த பையன் என் பக்கம் திரும்பினான்
காசை தேடி எடுக்கும் பொழுது
"யே... தெரு நாயே...யே.." என ஒரு சத்தம்.
நிமிர்ந்தேன்
ஒரு அழுக்கு சேலை பெண் பரட்டை தலையுடன் ஒரு தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறாள்.
அவள் அடி தொண்டையிலிருந்து மறுபடியும் கத்தினாள்
"பிச்சைகார நாயே.. வாடா.."
இந்த பையனை பார்த்து தான் கத்தினாள்
இவன் என்னை பார்த்தான்.
நான் அந்த பெண்ணை பார்த்தேன்.
வண்டியை நிறுத்திவிட்டு வெறிப் பிடித்தது போல கைகளை முறுக்கி முன்னால் குனிந்து கண்களை அகல விரித்து "வா..." என அடி வயிற்றிலிருந்து கத்தவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் அவளை திரும்பி பார்த்தனர்.
அவள் குரலில் இருந்த ஆக்ரோஷம் என்னை பயப்படுத்தியது.
இந்த பையன் இறங்கி அவள் பக்கத்தில் ஓடினான்
அந்த தள்ளு வண்டியின் மேலே எதோ பொருட்கள் மழைக் காகிதத்தில் மூடப்பட்டிருந்தது.
அதனுடன் சில மண் வெட்டிகள் கடப்பாரை எல்லாம் வெளியே தெரிந்தது.
அந்த வண்டிக்கு கீழே இருந்த பலகையில் துணி பாத்திரம் எல்லாம் கட்டப்பட்டிருந்தது. அது தான் அவர்களின் வீடு.
"மேல ஏறுடா" கோபம் குறையாமல் சொன்னாள்.
அந்த பையன் வண்டி மீது ஏறுவது போல சென்று அங்கிருந்த காலி பாட்டிலை எடுத்துக்கொண்டு என் பக்கம் ஓடி வந்தான்.
அவ்வளவு தான்.
அவள் அந்த மண் வெட்டியின் கைப்பிடியை 'சடக்'கென உருவி தலைக்கு மேல் ஓங்கி
"இப்போ வண்டில ஏறுலனா உன்னை அடிச்சு பொணமா தான் கொண்டு போவேன்.. நாயிக்கு பொறந்தவனே..ஏறு..இல்ல" என அவனை நோக்கி பாய்ந்தாள்.
அவன் பயந்து பக்கத்தில் போனவுடன் பிடித்திருந்த கட்டையை போட்டுவிட்டு அவனை அப்படியே இரண்டு கையால் தூக்கி வண்டி மேல் உட்காரவைத்தாள்.
உடனே அவள் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அந்த ராட்ச்சசி மறைந்து சாந்தமாகிவிட்டது.
இவ்வளவு நேரம் அங்கு இருந்தவள் 'நான் இல்லை' என்பது போல் மாறிவிட்டாள்.
அந்த வண்டிச் சுமையுடன் தன் மகன் சுமை சேர்ந்ததால் பாதி எடை குறைந்து போனதாக நினைத்தாளோ என்னவோ.!
சந்தோஷமாக வண்டியை தள்ளினாள்.
அந்த பையன் சம்மனமிட்டு அமர்ந்து பின்னால் தள்ளிக்கொண்டு வரும் அவன் அம்மாவையும்...அவனை கடந்து போகும் உலகத்தையும்...இரண்டு ரூபாயை தர வக்கிருந்தும் தராத ஒரு பிச்சைக்காரனையும் பார்த்துக்கொண்டே வண்டியுடன் சேர்ந்து ஆடியபடி செல்கிறான்.
அந்த பையனுக்குச் சேர வேண்டிய இரண்டு ரூபாய் இப்பொழுது கனமாக என் பார்ஸில் படுத்திருக்கிறது.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment