Monday, 7 November 2016

மழை வேட்டை

மாலை

வீடெங்கும் மழைக்கு பிறந்த ஈசல்கள்.
என் வீட்டு பல்லி ஒன்று ஈவு இரக்கமின்றி அவற்றை வேட்டையாடிக் கொண்டிருந்தது.
சிக்கிய ஈசலை எல்லாம் கரக் முறுக் என விழுங்கியது.
விடிந்து பார்த்தால் உடலில்லாத இறக்கைகள் வாசலில்.

மதியமும் மழை.
வீட்டு பக்கத்தில் இருந்த வாழை கறிவேப்பிலை பூச்செடி எல்லாம் மழையில் குளித்து சுத்த பத்தமாக தலையை சிலுப்பிக் கொண்டு நின்றிருந்தன.
அடியில் ஒரு மூஞ்சூரு எலி தலையை வெளியே காட்டி சிரித்தது .
பெரிய எலி.
பெருச்சாளி என்று சொல்வதா!!
வேண்டாம்....எலி தான்.
ரொம்ப நாளாக அங்கு வசிக்கிறது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
எங்களை அது தொந்தரவு செய்ததில்லை.
அதனால் நாங்களும் அதன் வழியில் குறுக்கிடுவதில்லை.
அது சமத்தான பக்கத்து வீட்டுக்காரன். அல்லது வீட்டுக்காரி.
எப்பவாவது தான் கண்ணில் படும். ஏதாவது மேய்ந்து கொண்டிருக்கும்.
இன்றும் அப்படி தான்.
ஈர நிலத்தில் செடிகளுக்கு நடுவே என்னமோ தேடிக்கொண்டிருந்தது.
மழை த்தூர ஆரம்பித்ததால் நான் உள்ளே வந்தேன்.

திடீரென கீச் கீச் என சத்தம்.
உடனே அடங்கி விட்டது.
வெளியே வந்து பார்த்தேன். ஒன்றுமில்லை.
சுவரோரம் சாய்த்து வைத்திருந்த தகர கதவு படபடத்தது.
மெதுவாக பக்கத்தில் சென்று சுவருக்கும் தகரத்துக்கும் இடையில் இருந்த இருட்டு சந்தில் குனிந்து பார்த்தேன்.
சிவப்பு வரி பூனை ஒன்று அந்த எலியை வாயில் கவ்வியபடி அதன் கொடூரமான கண்களால் என்னை பார்த்தது.
அதன் பற்களும்... தலை தொங்கிக் கொண்டிருந்த எலிப் பிணமும்.. பூனையின் பார்வையும் என்னை நடுங்கச் செய்தது.
ஓடி வந்து கதவை தாழிட்டுக் கொண்டேன்.

நேற்று இரவு வெளியே நின்று மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தவளை ஒன்று தத்தி தத்தி ரோட்டில் சென்றது. பார்க்க அழகாக இருந்தது.
நடப்பன.. பறப்பன.. ஊர்வன... என எதிலும் அடங்காத தனிப்பிறவி இது.
தாவுவது.
ரோட்டை கடந்து எதிரில் இருந்த கடை வாசலிற்குப் போனது.
கடைக்காரன் விற்பனைக்கு வைத்திருந்த விலக்குமாறை எடுத்து தவளையை ஓங்கி தலையில் ஒரு அடி அடித்து ரோட்டுக்கு தள்ளி விட்டான்.
அதன் வெண்மையான அடிப்பக்கம் வானத்தை பார்க்க கால்களை விரித்து நடு ரோட்டில் சொத்தென விழுந்தது.
செத்து போனது என நினைத்தேன்.
அது நிதானமாக புரண்டு படுத்து கொஞ்சம் இளைப்பாறியது.
தெம்பு வந்ததும் பின்னங்கால்களை ஊன்றி ஒரு தாவு தாவி காற்றில் சென்று நிலத்தில் இறங்கும் பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு வாகனம் சதக் என சத்தத்துடன் ஏற்றிச் சென்றது.
மழையில் அதன் இரத்தம் கரைந்து ரோட்டில் வழிகிறது.

கனத்த இதயத்துடன் தூங்கினேன்.

இரவு முழுவதும் இடி மின்னல்.
பயங்கர மழை.

விடிந்து எழும் பொழுது ஒருவரின் மரண செய்தி வந்தது.
நான் அரைக் கால் சட்டை போட்ட பொடிப்பையனாக இருந்த பொழுதே அவருக்கு முடி முழுவதும் வெள்ளையாக இருக்கும்.
என்னுடைய அந்த வயதுக்கே முதல் முதலில் என்னை வாங்க போங்க என்று அழைத்த பெரியவர் அவர்.
திடீரென காலையில் இறந்து விட்டாராம்.
இன்னும் நிற்கவில்லை !
வேட்டை நடந்து கொண்டே இருக்கின்றது.

மழை..
இந்த மழை தான் இப்பொழுதும் எவ்வளவு அழகு!

பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles