Sunday, 26 January 2020

திருவான்மியூர் கடற்கரை நண்டுகள்

சென்னை வந்ததிலிருந்து விடுமுறை தினங்களில் எப்பொழுதும் அறையில் இருக்க மாட்டேன். எங்காவது கிளம்பிவிடுவேன். இந்த சனிக்கிழமை எங்கும் செல்லவில்லை. காலையிலிருந்து அறையிலேயே 'தேமே' வென உட்காந்திருந்தேன். மாலை போல பெரியார் திடல் சென்று எனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றை வாங்கலாம் என தோன்றியது. அங்கு மட்டும் தான் அது கிடைக்கும். அப்படியும் ரயில் பிடித்து அந்த கூட்டத்தில் அவ்ளோ தூரம் போக சோம்பேறித்தனம். 

அறையில் என் நண்பன் மத்தியானமாக எழுந்து என்னை அறையிலேயே பார்த்ததும் ஆச்சரியமாக "என்னடா ரூம்லயே இருக்கே?" என்றான்.
சிரித்துவிட்டு  'ஆமா, நீ எங்காவது போறியா இன்னைக்கு?" என்றேன்.

"எங்கேயும் இல்லே.. ரூம்ல தான்"

"திரிசூல மலைக்கு போலாமா? ரொம்ப நாளா லிஸ்ட்ல இருக்கு. அந்த கல்குவாரியும் பாக்கணும்"

யோசித்துவிட்டு "சாயந்திரமா போலாமா"

"அப்டியே நைட் பீச் க்கு போய்ட்டு வரலாம்."

"சூப்பர்டா. போலாம்"

எனக்கு அப்பவே தெரியும்  அவன் பீச்சுக்கு மட்டும் தான் வருவான் என்று. எல்லாருக்கும் புது இடங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இருப்பதில்லை. ஏற்கனவே பல முறை பார்த்த பழைய இடங்களுக்கே ஒவ்வொரு வருடமும் சுற்றிலா செல்லும் குடும்பங்களை பார்க்கிறேன். வாரம் தவராமல் பீச்சுக்கு மட்டும் செல்பவர்களை நான் எதுவும் தப்பு சொல்லவில்லை. சென்னையில் கடற்கரைகளே பல இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த இடமும் கடைகளும் மனிதர்களும் அங்கு கிடைக்கும் தின்பண்டங்களும் ஒவ்வொரு கடற்கரைக்கும் மாறும். 

இரவு பத்து மணி இருக்கும்.

திருவான்மியூர் கடற்கரை.

நாங்கள் இருவரும் மணலில் இறங்கி கடல் கரையை தொடும் இடம் நோக்கி நடந்தோம். அவனுக்கு தெரிந்த இருவர் இன்னும் வந்துகொண்டிருந்தனர்.  நாங்கள் கடல் பக்கத்தில் செல்லும் பொழுது கொஞ்ச தூரத்தில் சிலர் கூட்டமாக நின்று குனிந்து பார்த்துக்கொண்டிருந்தனர். யாரோ டார்ச் அடித்துக்கொண்டு மணலில் ஏதோ செய்துகொண்டிருந்தார்.

"அங்கே என்னடா செய்றாங்க?" என்றான்.

"என்ன செய்ய போறாங்க. மணல் வீடு ஏதாவது கட்டிட்டு இருப்பாங்க"

"இல்லடா வேறே ஏதோ பண்றாங்க"

"அப்படியா! வா போய் பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு நடந்தேன். 

பக்கத்தில் சென்று கூட்டத்தை கிழித்துக்கொண்டு தலையை உள்ளே விட்டு பார்த்தோம். அங்கு இரண்டு அடிக்கு ஒரு குழி தோண்டப்பட்டிருத்ததுகுரங்கு குல்லா அணிந்த மனிதர் ஒருவர் அங்கு உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஒடிசலாக டவுசர் போட்டுக்கொண்டு வளைந்த முதுகோடு குத்துக்கால் போட்டு கையில் பாலித்தீன் பய் ஒன்றை பிடித்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். எல்லோரும் செல்போனில் டார்ச் அடித்ததால் வெளிச்சமாக இருந்தது. அப்பொழுது தான் கவனித்தேன். அந்த குரங்கு குல்லா மனிதர் தனது கையில் வலைப்பையை பிடித்திருந்தார். அது முழுவதும் வெள்ளை நண்டுகள். அதன் கால்கள் எல்லாம் வலையின் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தன. அதனுள் கையை விட்டு ஒரு நண்டை எடுத்து இன்னொரு மனிதர் பிடித்திருந்த பாலித்தீன் பையில் உள்ளே போட்டார். அடுத்த நண்டை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன் அத்தனை நண்டுகளும் உயிருடன் இருக்கின்றன. பேரம் பேசி அந்த இரண்டு நண்டுகளை கொசுராக சேர்த்து ஒரு மனிதர் காசுகொடுத்து அந்த பாலித்தின் பையை வாங்கிக்கொண்டு போனார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்தோம்.

அங்கு கண்ணுக்கு எட்டிய வரை ஒவ்வொரு இடைவெளிக்கும் அப்பொழுது தான் தோண்டப்பட்ட குழி இருந்தது.

"நண்டுக்கு பொறி வச்சு புடிச்சுருக்காங்க" என்றான்
நான் இருக்காது, மணலை தோண்டி தான் பிடித்திருப்பார்கள் என்றேன்.

அந்த இருவரும் எழுந்து டார்ச்சை அடித்துக்கொண்டு எதிர் திசையில் இருட்டை நோக்கி கரை ஓரத்தில் நடந்தனர். கூடவே சில பேர் சென்றனர். நான் "வா, எப்படி பிடிக்குறாங்கனு பாக்கலாம்" என அழைத்துச் சென்றேன்.

ஏற்கனவே கடற்கரைகளில் கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த நண்டுகள் அலைகளையும் கரை மணலையும் தொட்டு விளையாடிவிட்டு விருட்டென அங்கே பள்ளம் தோண்டி மணலுக்குள் போய்விடும். நான் ஒரு முறை அதை பிடித்துவிடலாம் என கைகளால் தோண்டினால் அது சென்ற தடமே இல்லை.

அந்த குல்லாக்காரர் அதை போன்ற நண்டு தோண்டிய பொந்துகளை பார்த்தவாறு சென்று அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கையில் வைத்திருக்கும் மன்வெட்டுயால் பரபரவென தோண்டுகிறார். முதல் ஓரடிக்கு எந்த தடமுமில்லை. அதன் பிறகு தோண்ட பெரிய பொந்து அடியில் செல்வது தெரிகிறது. உடனே மண்வெட்டியை கிழே போட்டுவிட்டு மணலில் படுத்து அந்த பொந்துக்குள் கையைவிட்டு கொஞ்ச நேரம் சிரமப்படுகிறார். அவர் அதிலிருந்து எழுந்து உட்காரும் பொழுது கைகில் ஓரளவு பெரிய நண்டு இருக்கிறது. கூட்டம் ஆர்பரிக்கிறது. 

பிடித்த நண்டை தனது கால் கட்டவிரளின் அடியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு கொடுக்கை முறிக்கிறார். அந்த நண்டுக்கு ஒரு கொடுக்கு சின்னதாகவும் இன்னொன்று பெரியதாகவும் இருக்கிறது. சின்னதாக இருக்கும் கொடுக்கிலிருந்து அதன் நகத்தை முறித்து எடுத்து பெரிய கொடுக்கின் நகக்கண்ணில் அழுத்தி குத்தி வைக்கிறார். அதன் பிறகு அந்த பெரிய கொடுக்கின் வாயை அந்த நண்டால் விரிக்க முடியாது.

"ஏன் ஒரு கொடுக்கை மட்டும் முறிக்குறீங்க?" என கேட்டோம்.

"அது ரெண்டையும் முறிச்சா செத்துப்போடும். அப்பறம் வாங்கிட்டு போய் சமைக்க நல்லா இருக்காது" என சொன்னார்.

நான் நண்பனிடம் அவர்களுடன் கொஞ்ச தூரம் போகிறேன் என சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றேன்.

வேறு வேறு கூட்டம் கூடவே வந்துகொண்டிருந்தது. பார்த்துவிட்டு கலைந்த பிறகு அடுத்தது வந்தது.

"எல்லா நாளும் இங்க நண்டு பிடிப்பீங்களா?" என கூடவே அந்த டார்ச் பிடித்துக்கொள்ளும் ஓடிசலானவரிடம் கேட்டேன். 
"வாரத்துல ஒரு நா வருவோம். சில சமயம் ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வருவோ"

அவர் அடுத்த நண்டை பிடித்திருந்தார்.

கட்டை விரலில் வைத்து அழுத்தி பிடிக்கும் பொழுது பார்த்தேன். நண்டுடைய கண்கள் தனியாக வெளியே  எழுந்து நின்றுகொண்டிருந்தது.  அது பயந்தால் அப்படி ஆகுமோ என்னவோ.

"இத பகல்ல புடிக்க முடியாதா" என ஒருவர் கேட்டார்.
"நைட்டு தான் நிறையா மாட்டும். பகல்ல அவ்ளோ எல்லாம் புடிக்க முடியாது"

ஒரு குடும்பம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு காட்டிக்கொண்டிருந்தனர். அந்த  குழந்தைகள் வித விதமான சத்தங்களுடன் கத்திக்கொண்டிருந்தனர்.

அந்த குல்லாக்காரர் அப்பொழுது பிடித்த நண்டை எடுத்து குழந்தைகளிடம் நீட்டினார். எல்லோரும் அலறி சிதரினர். பயங்கரமாக வெடித்து சிரித்தனர்.

கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு அவர்களுக்கு டார்ச் அடிக்கும் ஆளாக ஆகியிருந்தேன். நண்டு பிடித்தபடி சென்றோம்.

வெளிச்சம் இல்லாத இருட்டான பகுதியை அடையும் பொழுது அங்கு நாங்கள் மூன்று பேர் தான் சென்றுகொண்டிருந்தோம். கூட்டம் யாருமில்லை.

"அது ஏன் சனிக்கிழமை மட்டும் பிடிக்குறீங்க? மத்த நாள் என்ன பண்ணுவீங்க" 

குழிக்குள் இருந்து அவர் நண்டை பிடித்து எழுந்தபடி பதில் சொன்னார்.
"கம்பெனில வேலை செய்வோம். ஞாயத்துகெழமை சும்மா இருக்கனும்லே. அதான் சனிக்கெழமை புடிப்போம்."

"கம்பெனியா? என்ன கம்பெனி"

"ஸ்டீல் கம்பெனி. அங்க தான் வேலை"

அவர் பொந்துகளை கவனித்து அது எந்த திசையில் குடையபட்டுள்ளது என்பதை பார்த்து அதன் திசையில் மண்வெட்டியை போடுகிறார். ஆனால் சில பொந்துகளையே அவர் தேர்ந்தெடுக்கிறார்.

"அது எதனால ண்ணா இந்த குழில எல்லாம் தோண்ட மாட்டேங்குறீங்க?"

"அது சைடுல ஓட்டை போட்டுருக்கு. அப்படி போட்டிருந்தா நண்டு மாட்டாது. அது உள்ளுக்குள்ளேயே நாலஞ்சு ஓட்டையை கண்ணா பின்னானு போட்டுருக்கும். அப்பறம் தோண்டியும் பிரயோஜனம் இல்லாம பூடும்.. 

ஓட்டை நேரா போட்டிருந்தா கண்டிப்பா மாட்டிக்கிடும். அப்பறம் நெறய குழி பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் நண்டு மாட்டாது" என சொல்லிவிட்டு நேராக போட்டிருந்த பொந்தை தொண்டினார். ஒரு நண்டு வெளியே வந்து திரும்பவும் உள்ளே ஓடியது.

"குட்டியோட இருக்கு" என சொல்லிவிட்டு கையைவிட்டு தேடி பெரிய நண்டை மட்டும் எடுத்து கொடுக்கை முறித்து சொருகினார்.

"இப்படி பண்ணுனா அதனால கடிக்க முடியாதா?".

"இனி கடிக்காது. அதான் மூக்கு குத்தியாச்சுல்லே"

அந்த நகத்தை பிடுங்கி இன்னொரு கொடுக்கில் சொருகுவதை மூக்கு குத்துவது என்கிறார்கள். அடுத்த நண்டுக்கு அவர் குத்தும் பொழுது எனக்கு நண்டின் கொடுக்கு அதன் மூக்கு என்பது போலவே தோன்றியது.

"இந்த நண்டை என்ன செய்யுவீங்க?"

"எப்பவும் இங்கேயே நல்லா விக்கும். இன்னைக்கு நா லேட்டா வந்துட்டேன். தொள்ளாயிர ரூவாக்கு தான் வித்துச்சு. இனி கிடைக்குறதே நாளைக்கு மார்கெட்டுல குடுத்துடுவோம்"

"மார்கெட்டுல இங்க விட கம்மியான விலைக்கு தான் போகுமா?"

"அதே வெல தான். இங்க கொசுறு ரெண்டு போட்டா போதும். அங்க இன்னும் அதிகமா கேட்பாங்க" என சிரித்தார். 

"நீங்களே மார்க்கெட்ல விப்பீங்களா?"

"என் பெரிமா, அத்தையெல்லாம் இருக்காங்க. அவங்ககிட்ட குடுத்துடுவேன்."

அவர் ஒரு குழியிலிருந்து நண்டை எடுத்து அவசர அவசரமாக அதற்கு மூக்கு குத்திவிட்டு டக்கென பக்கத்தில் கையிலேயே குழி பறித்து அந்த நண்டை போட்டு மண்ணை மூடிவிட்டு திரும்பவும் குழிக்குள் கையைவிட்டு தேடி இன்னொரு நண்டை எடுத்தார். பிறகு அதற்கும் மூக்கு குத்திவிட்டு இன்னொன்றையும் மண்ணை பறித்து எடுத்து இரண்டையும் பையில் போட்டார்.

"நாளைக்கு வரைக்கும் இதெல்லாம் உயிரோட இருக்குமா?"
அவர் சிறுவனை பார்த்து சிரிப்பது போல சிரித்துவிட்டு "இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கும்." என்றார்.

இடையில் ஒரு குடிகாரர் கையில் பார்சல் சாப்பாட்டோடு வந்து நின்று கொண்டு "நல்லா தோண்டு. ரெண்டு மாம்பட்டி போடு. என்ன தோண்டுறெ. ஹா.. அவ்ளோதான். புடிச்சாச்சு" என சொல்லி கடமை முத்த கையோடு ஆடிக்கொண்டே சென்றார்.

"உங்க பேரு ண்ணா?"
"சுனில் குமார்"
கூட இருப்பவரிடம் கேட்டேன். ரவிக்குமார் என்றார்.

"இன்னும் எவ்ளோ நேரத்துக்கு ண்ணா புடிப்பீங்க?"

"அப்படியே புடிச்சுட்டே போனோம்னா ஊட்டுக்கு போயிடுவோம். ஊடு இங்க தான்" என இருட்டில் கை காமித்தார். தூரத்தில் பல வீடுகள் லைட் எரிந்து கொண்டிருந்தன.

அப்பொழுது தான் கவனித்தேன். அலை தொடும் இடமெல்லாம் பெரிய பெரிய நண்டுகள். அத்தனை நண்டுகளை நான் பார்த்ததே இல்லை. அனைத்தும் விளையாடிக் கொண்டிருந்தன. இங்கு நாங்கள் அதன் வீடு புகுந்து அவர்களின் ஆட்களை தூக்கிக்கொண்டிருக்கிறோம்.

"இந்த குழில எல்லாம் ஒரு நண்டு தான் இருக்குமா ண்ணா?"

"இது ஈர மண்ணு. இதுல இப்போ தான் உள்ள போயிருக்கும். அதனால் ஒன்னு தான் இருக்கும். காஞ்ச மணல்ல இருக்குற குழில தான் ரெண்டு கிடைக்கும். அதுக எப்பவும் ஜோடியாதான் இருக்கும். புருஷன் பொண்டாட்டி மாதிரி."

சொல்லிவிட்டு
"நண்டு வேணுமா" என்றார்.

"எனக்கு சமைக்கவே தெரியாது ண்ணா. நான் வாங்கிட்டு போய் என்ன பண்றது. நான் சமைக்க ஆள் ரெடி பண்ணிட்டு வந்து வாங்கிக்குறேன்" என்றேன்.

"சமைக்க தெரியாதா?" என சிரித்தார். சிரித்துவிட்டு "இந்த நண்டு கொழந்தைககுக்கு ரொம்ப நல்லது. சளி.. இருமல் எல்லாம் போயிரும். கடல் நண்டை விட இது தான் நல்லது"

"அப்போ இது கடல் நண்டு இல்லையா? இது என்ன அப்போ?"

"வெள்ளி"

அலையின் சத்தத்தில் எனக்கு புரியலை. "என்ன நண்டு ண்ணா?" என மறுபடியும் கேட்டேன்.

அவர் வானத்தை காமித்துவிட்டு "வெள்ளினு சொல்லுவோம்ல. அந்த நண்டு. 
வெள்ளி நண்டு. இங்க ஓரத்துலயே தான் இருக்கும்."

அடுத்த குழிக்கு சென்று தொண்டினோம்.

"உங்களை இது கடிக்காதா?"

"அது கரெக்ட்டா புடிச்சுடுவேன். ஒன்னு ரெண்டு கடிக்கும். இப்போ அலுப்புல தெரியாது. காலைல கையெல்லாம் பயங்கரமா எரியும். மஞ்சப்பத்து போடணும்"

இந்த கேள்வியை எப்படியும் நான் கேட்டுவிடுவேன் என தெரியும். கேட்டேன்

"உங்களுக்கு கம்பெனி வேலை புடிச்சுருக்கா? இல்லை இந்த வேலை புடிச்சுருக்கா?"

அழுத்தமாக "கம்பெனி வேலை தான்" என்றார்

"கம்பெனி வேலையா?" நான் வேறு எதிர் பார்த்தேன்.

"ஆமா. அங்க நான் மேஸ்திரியா இருக்கேன். 900 ரூவா சம்பளம்." அவ்வளவு பெருமையாக சொன்னார்.

"நீங்க எங்க வேலை பாக்குறீங்க" என்னை கேட்டார்.

"நான் செங்கல்பட்டுக்கிட்ட வேலை பாக்குறேன் ண்ணா" என்றேன். 

"எங்க இருக்கீங்க?"

"தாம்பரத்துல"

"எப்படி வந்தீங்க?"

"பைக்குல"

பேசிக்கொண்டிருந்த பொழுதே நான் ஒரு குழிக்குள் பெரிய நண்டு ஒன்று உள்ளே செல்வதை பார்த்தேன்.

ஓடிச் சென்று "அண்ணா இதுல தோண்டுங்க. இப்போ தான் நண்டு போச்சு" என்றேன்.

அவரும் வேகமாக தொண்டினார். ரெண்டடிக்கு மேல் உள்ளுக்குள் பெரிய குழி தெரிந்தது.

"இப்போ தான் ண்ணா உள்ளே போச்சு. அதுக்குள்ள இவ்ளோ தூரம் போயிருச்சா?"

அவர் வேகமாக படுத்து உள்ளே கையை நுழைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் குழிக்குள் இறங்கியது. அவ்வளவு நேரம் அவர் எடுத்துக்கொண்டதைவிட அதிக நேரம் எடுத்தார்.

ஒருவேளை அவருக்கு மூச்சு திணருகிறதோ என பயந்தேன். அவரின் கால் மட்டும் தான் மேலே இருந்தது. முட்டிக்கு மேலே மொத்த உடலும் குழிக்குள் சென்றுவிட்டது. 
பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாமோ என நினைத்தேன்.
சில நிமிடங்கள் கழித்து ஒரு கையை மட்டும் வெளியே வளைத்து  ஊன்றி எழுந்து உட்கார்ந்தார்.
கையில் பெரியதாக மஞ்சள் நிற நண்டு இருந்தது. நான் இவ்வளவு நேரம்  பார்த்ததை விட ரொம்ப பெருசு.

"இது என்ன நண்டு ண்ணா?"

"இதுவும் வெள்ளி தான். பெருசான மஞ்ச கலருல மாறிடும். இது மீனையே புடிச்சு சாப்ட்டுடும். இதுக்கு முன்னாடி மூணு நாலு தடவ இத புடிச்சுருக்கேன்"என சொன்னார்.

அதன் கொடுக்குகளும் பயங்கரமாக இருந்தது. அவர் எப்பொழுதும் போல கட்டை விரலில் அழுத்தி அதற்கு மூக்கு குத்தினார். 

எனக்கு அழைப்பு வந்துவிட்டது. திரும்பி பார்த்தால் தூரத்தில் குட்டி குட்டி மனிதர்கள் வெளிச்சத்தில் தெரிந்தனர்.

"ண்ணா நான் போயிட்டு வர்றேன். எல்லா சனிக்கிழமையும் இருப்பீங்களான?"

"இருப்போம். ஏழு மணிக்கு அந்தா தெரிது பாரு கோவிலு. அங்க இருந்து ஆரம்பிப்போம். எப்போ வந்தாலும் பாக்கலாம்" என்று டாட்டா காட்டினார். 

நானும் கைகாட்டிவிட்டு வெளிச்சத்தை நோக்கி மணலில்  நடந்தேன்.

ஒரு இரவில் நண்டுகளுடன் இப்படி ஒரு பயணம் வாய்த்தது எனக்கு பேரனுபவம். 

தூரத்தில் போலீஸ் ஜீப்பில் சைரன் வெளிச்சம் தெரிந்தது. திருவான்மியூரில் அந்த ஜீப் அங்கு வந்து நின்றால் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

அடுத்த முறை சனிக்கிழமை இரவு திருவான்மியூர் கடற்கரைக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக டார்ச்சை எடுத்துக்கொண்டு அந்த குல்லாக்கார அண்ணன் பின்னால் நண்டு பிடிக்க  சுற்றிக்கொண்டிருப்பேன்.

பிரபு மித்ரன்

பேரதிர்ஷ்டசாலிகள்

ஞாயிறு மதியம் T-நகர் செல்ல தாம்பரத்தில் ரயில் ஏறினேன்.

அவசரத்தில் விற்பனையாளர்களின் பெட்டியில் எறிவிட்டேன். அது எப்படி இருக்குமென்றால், சுற்றியும் திண்ணை போல மர இருக்கையும் நடுவில் காலி இடமும் இருக்கும். சில்லறை வியாபாரிகள் விற்பனை பொருட்களை கொண்டு செல்ல ஒவ்வொரு ரயிலிலும் இந்த பெட்டி இருக்கும். நான் பெரும்பாலும் இதில் ஏறுவதை தவிர்த்துவிடுவேன். ஏனென்றால் ஒன்று இதில் ஜன்னலுக்கு முதுகை காமித்து உட்கார வேண்டியதால் வெளியே வேடிக்கை பார்க்க முடியாது. இன்னொன்று கூட்டம் அதிகமானால் உள்ளேயும் மனிதர்களை வேடிக்கை பார்க்க முடியாது. மொத்தத்தில் வேடிக்கை பார்க்க முடியாதது தான் பிரதான பிரச்சனை. 

ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் இரவு காலியான பெட்டியில்  ஏறிய பொழுது உள்ளே கதவோரத்தில் டோலக் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு நான்கு பசங்க எதிர் எதிராக தரையில் வழியை மறைத்து உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் வித்யாசமான நிறத்தில் சட்டைகளும், கைகளிலும் கழுத்திலும் பல நிறங்களில் ரப்பரையும், கயிறு, ஜெயின்களையும் போட்டிருந்தனர். முடியை வேறு வெறுவிதமாக வெட்டியிருக்க பார்த்தவுடன் நிச்சயமாக சொல்லிவிடலாம் "புள்ளிங்க". நேராக இப்படியான பசங்களை பார்ப்பது அது தான் முதல் முறை.

ஒருவன் பாட ஒருவன் டோலக்கை அடிக்க மற்ற இருவரும் கைகளை தட்டிக்கொண்டு கோரஸ் பாடிய படி வந்தார்கள். முதலில் தன் நண்பனை காதலிக்க வேண்டாம் என்பதாக ஒரு பாட்டு பாடினான். ரயில் படியில் நிற்பவனை பற்றி அங்கே நிற்க கூடாது, வீட்டில் அம்மா காத்திருப்பாள் என்பதாக ஒரு பாட்டு.  குடித்துவிட்டு ரயில் ஏறிய வயதான ஒருவரிடம் "நைனா இங்க வந்து உட்காரு.. உனக்கு ஒரு பாட்டு பாடுறேன் கேளு" என அவரை அருகில் உட்கார வைத்துவிட்டு குடிக்காதே என்று ஒரு பாட்டு. அந்த பெரியவரும் சிரித்துக்கொண்டே கைதட்டி ஜோதியில் ஐக்கியமானார். அடுத்து அம்மாவை பற்றி பாடினான்

"உருவம் கொடுத்த அம்மாவுக்கு கம்மல் வாங்கி தரணு
என்னை உசுரா நெனெச்ச தாயிக்கு தான் செயினு வாங்கி தரணு

.....
.....
அம்மா தாண்டா எல்லாம்
மத்தது என்னடா சும்மா
......
.....
அம்மா எனக்கு வேணும்
இல்லாட்டி கண்டது எல்லாம் தோணும்
......
உருவம் கொடுத்த அம்மாவுக்கு கம்மல் வாங்கி தரணும்"

அவன் தோன்றியது எல்லாம் பாடிக்கொண்டிருந்தான். பாட்டின் இடையிலேயே "உங்க நண்பன் ரமேஷ் சொல்றேன் கேட்டுக்கோ" என தன் பெயரையும் பதிய வைத்துக்கொண்டான்.

ஏதோ பெண்களை பற்றி ஒரு பாட்டு பாடிவிட்டு
"அக்கா கோச்சுக்காதேக்கா.." என அங்கே சுண்டல் விற்க ஏறி இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்காவிடம் மன்னிப்பு கேட்டான்

உடனே அந்த அக்கா "நான் ஒண்ணுமே சொல்லலேயேடா" என்று சிரித்துவிட்டு கூடையுடன் இறங்கினார்.

டக்கென பார்ப்பவர்களை எல்லாம் அவனின் பாட்டில் கதாபாத்திரங்களாக்கிவிடுவது ஆச்சரியமாக இருந்தது. அங்கே ஒருவர் கூட முகம் சுளிக்கவில்லை. அவர்களும் அந்த டோலக்கும் அவர்களின் அசால்ட்டான போக்கும் மற்றவர்களின் இறுக்கமான மனநிலையை கொஞ்சம் தளர்த்தியது. அன்று ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

இப்பொழுது இந்த மதிய ரயிலில் அப்படியாக என்னை பாட்டு பாடி அழைத்துச் செல்ல யாரும் இல்லை. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வேறு பெட்டிக்கு மாறினால் இடம் கிடைக்குமா என தெரியாது. சரியென உட்கார்ந்திருந்த பொழுது அடுத்த நிறுத்தத்தில் இரண்டு சிறுமிகள் அவர்களின் பெற்றோருடனும் தாய் மாமாக்களுடம் ஏறி என்னருகே வந்து நின்றனர்.

அந்த சிறிய அக்கா தங்கைகளின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். இருவரும் பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டனர். அதில் அக்கா "ஐ.. first time train.. happyஆ இருக்குல" என்று தங்கையும் அப்பாவையும் பார்த்து சிரித்தாள். எல்லோரும் சிரித்தனர். முதல் அனுபவம் ஏற்படும் குழந்தைகளின் முகத்தை பார்ப்பது பேரனுபவம். அதை நீங்கள் எந்த முகத்திலும் ஏன் அந்த குழந்தையின் முகத்திலேயே கூட திரும்ப அந்த உணர்வை பார்க்க முடியாது. தங்கை அவளின் மாமாவின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

ரயில் புறப்பட்டது

10 நொடி அந்த சந்தோஷம் அவர்களின் முகத்திலிருந்தது. அதன் பிறகு அக்கா ஆரம்பித்தாள்.
முகத்திலிருந்து

"என்ன fastஆ வே போகல"

"போகும் இரு"

கொஞ்சம் வேகமாக சென்றது.

தங்கை சொன்னால் "மெதுவா தான் போகுது"

அப்பொழுது இன்னொரு ரயில் எதிர் திசையில் வந்து எங்கள் ரயிலை கடந்தது.

"அந்த trainல போலாம். அதுதான் speedஆ போகுது"

"இதுவும் அப்படி தான் போகுது. உள்ள இருக்கறதால தெரியல"

அக்கா சிணுங்கினாள்.

பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக வந்தனர்.

நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நான் எழுந்தேன். அந்த குழந்தையின் அப்பா திடுமென தாவி வந்து என் இருக்கையை பிடித்துக்கொண்டு

"யாருக்கு சீட்டு வேணுமோ வாங்க" என்கிறார். உடனே இரண்டும் குதித்து வந்து மடியில் எறிக்கொண்டன.

நாம் அதிகமாக சினிமாவிலும் டிவியிலும் இந்த உலகத்தை பார்த்து அலுத்துவிடுகிறோம். அதே விஷயத்தை நேரில் பார்க்கும் பொழுது நாம் நினைத்ததற்கு முரணாகவோ அல்லது கொஞ்சம் எதிர்பார்த்ததை விட கீழாகவோ இருக்க ஏமாற்றமடைகிறோம். 

நான் முதல் முதலில் பணிமலையை பார்க்க போகிறோம் என்ற குதூகலத்தில் சென்று அதை நேரில் பார்க்கும் பொழுது சப்பென இருந்தது.

நாம் அனைத்தையும் காட்சிகளின் வழியே தகவல்களை பெற ஆரம்பித்துவிட்டோம். இனிமேல் பார்வை வழியே ஏற்படும் புது அனுபவம் என்பது இன்றைய இணைய மனிதர்களுக்கு நிகழ வாய்ப்பேயில்லை.

இந்த ரயில்நிலையத்தின் அவசரமான மனிதர்களுக்கு நடுவே நான் தினமும் இரண்டு குடும்பங்களாவது இங்கு இருக்கும் நகரும் படிக்கட்டை புதிதாக பார்த்து போலாமா வேண்டாமா என நிற்பவர்களை பார்க்கிறேன். எப்படியோ முடிவெடுத்து மொத்தமாக அதில் குதித்து ஏறி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து, தாங்கி பிடித்து, கூச்சலிட்டு, சிரித்து, பயந்து திரும்பவும் சிரித்து அந்த மொத்த குடும்பமும் மேலே சென்றடைந்ததும் திரும்பவும் பக்கத்தில் இருக்கும் சாதா படிக்கட்டின் வழியே எல்லோரும் சிரித்து பேசி கீழே நடந்து இறங்கி செல்வார்கள்.

அவர்கள் பேரதிர்ஷ்டசாலிகள்.

பிரபு மித்ரன்

Saturday, 4 January 2020

திரளபதி - பாவம்

உலகில் இப்படி ஒரு அநியாயம் வேறு எந்த மண்ணிலாவது நடக்குமா? 
இப்படி ஒரு அபத்தம்
இவ்வளவு கீழ்த்தரமான புத்தி
இத்தனை மோசமான கட்டமைப்பு
வேறு எங்காவது இருக்குமா?
எத்தனை வருட போராட்டம்? எத்தனை லட்ச கூட்டங்கள்? எத்தனை மேடைகள்? எவ்வளவு பலிகள்? எத்தனை அவமானம்? இன்னும் அது இவ்வளவு அசிங்கமாக நம் முன்னால் நடமாடுகிறதே! யார் பதில் சொல்லுவார்கள்? 

கல்வி கிடைத்தால் மாறிவிடுவார்கள்.
பணம் வந்தால் மாறிவிடும்.
பதவி வந்தால் மாற்றிவிடலாம்.
அப்படி யோசித்து யோசித்து செய்து என்ன கிழித்து விட்டோம்? இப்படி இங்கு இந்த சமுதாயம் கந்தல் கந்தலாக கிழிந்து கிடக்கிறதே!! 

படித்த கூமுட்டைகள் இங்கு பழையதை விட படு மோசமாக சமுகத்தை சீரழிக்கிறார்களே. யார் கேட்பது? 
தொழில்நுட்பம் ஒவ்வொரு படிநிலைகளை கடக்கும் பொழுதும் அதை வைத்து எந்த அசிங்கத்தை அவிழ்த்து காட்டலாம் என அலையும் இந்த கிறுக்கு பசங்களை யார் கண்டிப்பது?

திரௌபதி - இந்த பெயரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். 

மிகச் சரியான பெயர் வைத்திருக்கிறார்கள். மகாபாரதத்தில் எப்படி அந்த பெண்ணை போட்டு இரண்டு கூட்டமும் படாத பாடு படுத்தி கடைசியில் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்வதாக இமயமலைக்கு கூட்டிக்கொண்டு சென்று சாகடித்ததோ அதே போல இந்த படத்தில் சமத்துவத்தை சாகடிக்க பார்க்கிறது.

கலையில் இது ஒரு அசிங்கமான உத்தி. பெண்ணை வைத்து கதையை பிண்ணி அதன் வழியாக மலத்தை படையலிடுவது. இது காப்பியங்களிலிருந்து இப்பொழுது பார்த்த இந்த கருமாந்திரம் வரை இதை செய்கிறவர்கள் எல்லோரும் கோணல் புத்தி படைத்தவர்கள்.

திரௌபதி - துருபத மன்னன், பாண்டவர்களை வைத்து தன்னை தோற்கடித்து அவமான படுத்திய துரோணரை பழிவாங்க யாகம் நடத்தி பெற்றெடுத்த மகள் தான் திரௌபதி. அதாவது பாசத்திற்காக அல்ல சொந்த கௌரவத்திற்காக பழிவாங்க பெத்த பெண்.
சுயம்வரம் என்ற விளையாட்டின் வழியாக அர்ஜுனனுக்கு கட்டி வைத்து பிறகு அந்த கிறுக்கு பசங்களால் ஐந்து பேருக்கும் மனைவியாக்கபட்ட கொடுமை அனுபவித்தவள். அது சிம்பிளான விஷயம். கண் கட்டப்பட்ட அம்மாவிடம் சென்று "அம்மா இங்க பார் அர்ஜுனன் இன்று என்ன பரிசு ஜெயித்து வந்திருக்கிறான் என" சொல்லியது முட்டாள் தனம் என்றால் அதை விட பெரிய முட்டாள் தனம் "எதுவா இருந்தாலும் ஐந்து பேரும் பகிர்ந்து வைத்துக்கொள்ளுங்கள்" என சொன்னவுடன் மூடிக்கொண்டு ஐந்து பேரும் அவளை வைத்துக்கொண்டது. வாயை என்ன வாடகைக்கா விட்டிருந்தார்கள்.சொல்ல வேண்டியது தானே "ஆத்தா. நான் கொண்டு வந்தது பருப்பி அல்ல.காக்கா கடி கடிக்க.. அது ஒரு உயிர் உள்ள பெண்" என்று. அது அவளுக்கு நடந்த அடுத்த அநீதி.
ஐந்து பேருக்கும் ஆளுக்கு ஒரு பையன் பெற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு சூதாடி அத்தனையும் இழந்து கடைசியில் கட்டிய மனைவியையும் சூதாடி தோற்று அவளை மானபங்க படுத்த அனுமதித்து தலையை குனிந்து நின்றது அடுத்த அநீதி. எல்லோரும் சேலையை இழுத்த துச்சாதனையே திட்டுவார்கள். கட்டிய பொண்டாட்டியை சூதாடியவர்களை விட்டுவிடுவார்கள். போர் நடத்தி தன் ஐந்து மகன்களையும் சாக கொடுத்து கடைசி வரை கஷ்டத்தை அனுபவித்து சொர்க்கத்துக்கு செல்ல இமையமலையை தன் ஐந்து கணவர்களுடன் ஏறும் பொழுது அவள் சொர்க்கம் அடையாமல் வழியிலேயே முதலாக செத்துவிடுகிறாள். அதற்கு காரணமாக தர்மன் சொல்கிறான் "அவள் என்ன நம் ஐவருக்கும் மனைவியாக இருந்தாலும் அவள் அர்ஜுனனுக்கு மட்டும் அதிகமாக கரிசனை காட்டினாள். அதனால் அவளுக்கு சொர்க்கம் செல்ல தகுதி இல்லை" என்று. 

உற்று கவனித்தால் இந்த கதையில் அவளை எங்குமே ஒரு மனுஷி போலவே நடத்தப் படவில்லை. அனைவரும் அவளை ஏதோ பொருள் போல நடத்தி கடைசியில் உடைத்திருக்கிறார்கள். ஆனால் மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெண்ணை மானபங்க படுத்தியதால் பெரும் போரெடுத்து வென்றனர் என்று வீரமான வரலாறு போல தெரியும். இதில் "துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவியது" என்ற ஒற்றை வரியில் அவளுக்கு நடந்த மற்ற அத்தனை அநீதியையும் மறைத்து அவளையே நம்ப வைத்து கொன்று விடுகிறார்கள். அது தான் அந்த கதையின் selling point. நம்பி வந்தவளை ஐந்து பேர் பங்கு போட்டது. பொருள் போல அவளை சூதாடி தோற்றது. போர் என்ற பெயரில் சொந்த குழந்தைகளை பலிகொடுத்து அவளை மீளா துயரில் தள்ளியது. கடைசியில் சொர்க்கம் கிடைக்காமல் தன்னந்தனியக உயிரை விட்டது போன்ற அத்தனை அக்கிரமங்களையும் 'சேலையை உருவினான்' என்ற ஒற்றை வரிக்கு பின்னால் மறைத்து விடுகிறார்கள்.

இந்த முன்னோட்டத்திலும் அதே உத்தி. இவர்களின் அசிங்கம் பிடித்த துருப்பிடித்த மனநோயை பெண்களின் முகத்தை காட்டி அவர்களை அழவைத்து விற்க பார்க்கிறார்கள். 

//"வீடியோ எல்லாம் வேண்டாம் ண்ணே
எங்க அப்பா அதெல்லாம் பாத்தா செத்தே போயிடுவாங்க ண்ணே"

"நீ ஓடி வரும் போதே அங்க உங்க அப்பன் உசுரே விட்டிருப்பான்"//

இந்த இடத்தில் "அம்மா ராசாத்தி பாத்தியா. நீ உன் அப்பன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கே. ஆனா உன்னை ஏமாத்தி கூட்டிட்டு போற பசங்களும் அவங்க ஆளுகளும் என்ன செய்யுறாங்க பாத்தியா" என்று பெண்ணை திரையில் காட்டி திரைக்கு வெளியே உட்கார்ந்து படம் பார்க்கும் வயசு பெண்களை பயப்படுத்துகிறார்கள்.

//"படிக்காதது உன் தப்பு.
உன் மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ பண்றது தப்பில்லே?"

"தப்பே இல்லே. அடங்குனா அடங்க கூடாதுனு எங்க அண்ணே சொல்லிருக்காப்பலே! பெரிய ஊட்டு பொண்ண கல்யாண பண்ணுனாதான் லைஃப் கெத்தா இருக்கும்னுசொல்லிருக்காப்ல"//

இது அந்த வீட்டு பசங்களுக்கு "பாத்தியாடா. எப்படி பேசுராணுங்க பாரு. உன் தங்கச்சியையும் அக்காவையும் இவனுங்க மாதிரி ஆளுக கிட்ட இருந்து எப்படி காப்பாத்துறது" என்று சொந்த வீட்டு பெண்ணை காட்டி சிந்தனையை மழுங்கடிக்க.

//"இந்த மாதிரி கீழ்தரமானவங்களை இப்படி தான் கொடூரமா கொல்லனும். நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக நான் அப்பியர் ஆகுறேன்"//
இது சாதிய ஆணவத்தில் கொலை செய்தால் கூட அது தப்பில்லை என்றும் நம்மை காப்பாற்ற நிறைய பேர் வருவார்கள் என்றும் நம்பிக்கை தருவதற்கு.

//"விவசாய தற்கொலை. கடன் தற்கொலைன்னு செத்தவன் பாதி பேரு பொண்ண பெத்தவன் தாண்டா"
"நீங்க விழுப்புரத்தில சிலம்ப வாத்தியார் தானே?" //

இது general audience க்கு. "ஓஹோ!!? இப்படியும் கூட தற்கொலை நடந்துட்டு மாத்தி செய்தி வருதோ. ஆமா ஆமா இருக்கும்" என்ற எண்ணத்தை கொடுக்க.

//"மண்டை காஞ்சு போயிருக்கேன். ஒவ்வொருத்தனையும் துண்டு துண்டா வெட்டி போட்டுடுவேன்"

"வெட்டு. அப்படி நீ எது பண்ணுனாலும் எங்களுக்கு சாதகமா தான் மாறும். அதையும் பண்ணு"//
இது அரைகுறை ஜாதி அரசியல் பேசும் சின்ன பசங்களுக்கு. வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக கேன தனமாக பேசியவர்கள் எல்லாம் இப்படியான ஆட்கள் தான்.

//"எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம். அதுல யாரு கைய வச்சாலும் கைய வெட்டுவோம்."//
இது தான் உச்சம். அதுவும் பெண்ணை வைத்தே இதை பேச வைத்தது. பெண்ணும் மண்ணும் எப்படிடா ஒன்னு ஆகும்?? கிறுக்கு பசங்களா. மண்ணை காசு வாங்கிட்டு விக்கலாம். உங்க வீட்டு பொண்ணையும் காசு வாங்கிட்டு வித்துடுவீங்களா? முட்டா பசங்களா. இதெல்லாம் ஒரு டயலாக்னு கொண்டாட்டம் வேற!! த்து.

ஹீரோ கழுத்தில் வெறும் கயிறும் வில்லனாக வருபவர்களின் கழுத்தில் கனமான தங்க சங்கிலிகளையும் காட்டுவதால் ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் நன்றாக வாழ்பவர்கள் போன்ற ஒரு பொய்யான பார்வையை கொடுக்க பார்க்கிறான் படம் எடுத்தவன்.

வெக்கமே இல்லாமல் அப்பாவி பெண்களின் முதுகுக்கு பின்னால் உட்காந்து கொண்டு மீசையை நெய்யிட்டு முறுக்கிக்கொள்கிறது சாதிய நாய்.

ஹீரோவுக்கு பெயரை பிரபாகரன் என்றும் வில்லனாக வருபவனுக்கு பெயர் கருணா என்பதும் சும்மா கிளுகிளுப்புக்காக. குறியீடு மயிரெல்லாம் இல்லை.

இப்படிபட்டவனால் எத்தனை விழுந்து புரண்டாலும் 'பரியேறும் பெருமாள்' போன்ற அன்பை பிறதானப்படுத்தி கண்ணியமான படைப்பை கொடுக்க முடியாது.

கலையை எவன் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம். எடுப்பவன் சொல்படி அது ஆடும்.

இந்த படத்தில் "புரட்சி" என்ற ஒரு சொல் வருகிறது. அதை கண்ட நாயெல்லாம் கையில் எடுக்க முடியாது. அது மனிதர்களை நேசித்து சமத்துவத்தை கொண்டாடி அதிகாரத்தை எதிர்த்து போராடும் கூட்டத்துக்கு சொந்தமானது. உங்களால் கலவரம் மட்டுமே செய்ய முடியும்.

பிரபு மித்ரன்


Friday, 3 January 2020

டைரி-ஜனவரி 3

இன்று காலை மூன்று மணிக்கே கொஞ்சம் முட்டிக்கொண்டு வந்தது. எழுந்தால் தூக்கம் கலைந்துவிடும் என்று அப்படியே படுத்துக்கொண்டேன். இருந்தும் அவஸ்தையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தேன். கடைசியில் பொறுக்க முடியாமல் எழுத்து சென்று காரியத்தை முடித்து விடுதலை பெருமூச்சுடன் திரும்பிய பொழுது என் அறையிலிருந்து என்னுடைய ஆறு மணி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. 

இன்றும் நேற்று போலவே புகை மண்டலம். என்னை பார்த்ததும் ரோட்டில் ஒரு நாய் குடு குடுவேன் ஓடி என் பக்கத்தில் வந்து என் பின்னால் ரெண்டடி நடந்து நின்றது. இதே போல தான் முன்பொரு முறையும் செயத்து. என்ன நினைத்து செய்கிறது!!

அந்த வயதானவர் இன்றும் குப்பை தொட்டியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அவரின் கையில் சேர்க்கானவே எடுத்த வாட்சும் இந்நூல் சில பொருட்களும் இருந்தன. அவரின் பக்கத்து மரத்தில் இரண்டு பச்சை கிளிகள் குச்சியின் மீது அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

ரயிலில் வெக்கை நாவலை படித்தபடி பயணத்தை முடித்தேன். 

அதன் பிறகு மாலை எப்படி வந்தது எனவும் எப்பொழுது வீட்டுக்கு வந்து இப்படி படுக்கையில் விழுந்தேன் எனவும் ஞாபகம் இல்லை. சுபாரஸ்யம் இல்லாத சம்பவங்கள் எப்பொழுதும் கொஞ்சம் சீக்கிரமாக மறந்து விடுகின்றன. எனக்கு உடனே மறந்துவிடும்.

Thursday, 2 January 2020

டைரி- ஜனவரி 2

இன்றும் வழக்கம் போல காலையில் எழுந்து குளித்து ரெடியாகி அலுவலகம் கிளம்பினேன்.
வெளியே வந்தால் பயங்கரமான பனி. ஆனால் குளிரில்லை!!
வெள்ளையாக புகை பரவியிருந்தால் பனி என்று தானே தோன்றும். காற்று மாசாக கூட இருக்கலாம்.
எனக்கு எப்பொழுது மார்கழி மாசம் குளிர் பற்றிய நினைப்பு வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சொன்னது ஞாபகம் வந்துவிடும்.
குளிருக்கு கைகளை பரபரவென தேய்த்துவிட்டு "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?! மார்கழி மாசம் மரமெல்லாம் நடுங்கும். தைமாசம் தலையெல்லாம் நடுங்கும்னு!!"

வழியில் ரோட்டோரத்தில் ஒருவர் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தார். அவரை நான் பார்த்திருக்கிறேன்.  எப்பொழுதும் சரியாக ஏழரை மணிக்கு நான் ஒரு தெரு முனையை காலை கடப்பேன். அப்பொழுது அவரும் அந்த முனையில் ஒரு ஓரத்தில் வந்து நிற்பார். எங்கிருந்தோ சில நாய்கள் சின்னதும் பெருசுமாக சத்தமில்லாமல் அவரை பார்த்து துள்ளலுடன் ஓடி வந்து வாலாட்டிக்கொண்டு நிற்கும். அவர் தன் பாக்கெட்டிலிருந்து பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க பொறுமையில்லமால் அவை அவரின் மீது முன்னங்கால்களை வைத்து எட்டி வாங்கிக்கொள்ளும். நான் கடந்து சென்றுவிடுவேன். இன்று கொஞ்சம் சீக்கிரமாக நான் வந்துவிட்டதால் இவரை வேறொரு இடத்தில் பார்க்கிறேன். கடந்து நடந்தேன்

எப்படியோ இன்று ரயிலில் இருக்கை கிடைத்தது. நான் பாதியில் விட்ட வெக்கை நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். நேற்று அசுரன் பாதிப்பால் படிக்க சிரமமாக இருந்தது இன்று கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்ச நேரத்தில் ஜன்னல் ஓரம் இருக்கை கிடைக்கவும் வசதியாக வாசித்துக்கொண்டு வந்தேன்.

அலுவலகத்தில் வழக்கம் போல அந்த கொடூர முதலாளி பெங்களூரிலிருந்து போனில் கண்டபடி கத்தினான். மற்றவனை திட்டுவதை கூட கேட்க முடியாமல் எப்பொழுதும் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு இன்றைய பொழுதை கழித்தேன்.

இரவு ரயில் விட்டு இறங்கி வேகமாக பாட்டு கேட்டுக்கொண்டே நடந்த பொழுது கால்களில் கட்டு போட்ட பெரியவர் ஒருவர் தன் பையை படி ஏறும் வரை பிடித்து கொள்ள உதவிக்கு என்னை அழைத்த பொழுது பாட்டின் வேகத்தில் அவரை கடந்து சென்று சுதாரித்து திரும்புவதற்குள் இன்னொருவர் அவருக்கு உதவினார். அவரை பார்த்து அந்த பெரியவர் புன்னகைத்தது எனக்கு வந்திருக்க வேண்டியது. எல்லாம் அவசரம்.

இன்னொரு இடத்தில் போலீஸ் ஒருவரை பிடித்து ஊத சொல்லிக்கொண்டிருக்க அந்த மனிதர் தயங்கி தயங்கி தலையை பின்னுக்கிழுத்து கொண்டிருந்து சிரிப்பாக இருந்தது. 

எல்லாம் முடிந்து இருப்பிடம் வந்து சேர்ந்தாகிவிட்டது.

Wednesday, 1 January 2020

2020

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே போன்ற புத்தாண்டு ஒன்றை நான் எதிர் கொண்டேன். 
பிடிக்காத ஒரு வேலையில் இருந்து கொண்டு அதன் மனஉளைச்சலுடன் அலுவலகத்தில் பொய் சொல்லி விடுப்பு எடுத்து தனியாக இருந்த புத்தாண்டு அது.

அதே போல தான் இந்த புத்தாண்டும். நேற்று மாலை அலுவலகம் விட்டு ரூமிற்கு வர ரயில் எறிவிட்டு நான் அன்று எழுதிய பதிவை வாசித்தேன். நான் எவ்வளவு மாறிவிட்டேன் என தோன்றியது. கையில் ஒன்றுமே இல்லாத பொழுது இருந்த பிரபு மித்ரன் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பொழுது அவனை தேடி அழைகிறேன்.

மகாபலிபுரம் போகலாம், ரிசார்ட் இருப்பதாக நண்பர்கள் அழைத்தனர். இன்னொரு நண்பன் இரவு கடற்கரை போகலாம் என்றான். அண்ணன் ஒருவர் ஸ்காட்ச் வாங்கி வைத்திருக்கிறேன் வீட்டுக்கு வா என்றார். திராவிடர் கழகம் நடத்தும் புது வருட நிகழ்ச்சி பெரியார் திடலில் நடப்பதாக அழைப்பு வந்தது. எதற்கும் போகாமல் ரூமிற்கு வந்து படுத்தேன். அடுத்த நாள் அலுவலகம் போக வேண்டுமே என்று கவலை இருந்தது. ஒரு தமிழ் படத்தை செல்போனில் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன்.

நாடே கொண்டாடிக் கொண்டிருந்த பொழுது நான் ரூமில் தனிமையின் அமைதியில் தூங்கிக்கொண்டிருந்தேன். காலை விடிந்தவுடன் அலாரம் அடித்து எழுப்பியது.

எழுந்தேன்.
மழை பெய்து கொண்டிருந்தது.
இன்று அலுவலகம் வரவில்லை என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரவு பாதி பார்த்த படத்தை பார்த்து முடித்தேன்.

எழுந்து குளித்துவிட்டு வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வந்து பூமணி எழுதிய வெக்கை நாவலை எடுத்துக்கொண்டு பால்கனி சென்று அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே அசுரன் பார்த்துவிட்டதால் அதன் முகங்களே முன்னாள் வந்து நின்றது. இரண்டு அத்தியாயங்களை படித்துவிட்டு குட்டியாக கொஞ்சம் தூங்கினேன். 

எழும் பொழுது திரும்பவும் மழை.
இன்னொரு தமிழ்ப்படத்தை செல்போனில் பார்த்து முடித்தேன். மகாபலிபுரம் சென்ற நண்பர்கள் ரூமிற்கு வந்து சில்லு கருப்பட்டி என்ற சினிமாவிற்கு அழைத்தனர். முதலில் வரவில்லை என்றேன். அழுத்தி அழைக்கவும் சென்றேன். நல்ல முடிவு என்பதை படம் பார்க்கும் பொழுது தோன்றியது. சந்தோஷமாக பார்த்தேன்.

திரும்பி வந்து வெக்கை நாவலை எடுத்து இன்னும் இரண்டு அத்தியாயங்கள் படித்தேன்.

பிறகு ஒரு சிரிப்பு நிகழ்ச்சியை யூடியூபில் பார்த்து நன்றாக சிரித்தேன். 

திரும்பவும் வெளியே மழை.

பல வருடம் கழித்து இன்று புத்தகம், சினிமா, மழை என எனக்கு பிடித்தபடி மூன்றுடன் இருந்திருக்கிறேன்.

அலுவலகம் சென்றிருந்தால் மற்றுமொரு நாளாக இது கடந்திருக்கும். என்ன செய்வது! எனக்கு பிடித்த எதற்கும் பணம் சம்பந்தம் இல்லை. பணம் கிடைக்கும் இடமெதுவும் எனக்கு பிடிப்பதில்லை. அது தான் இன்னும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறதென நினைக்கிறேன்.

பிரபு மித்ரன்



Related Articles