Thursday, 2 January 2020

டைரி- ஜனவரி 2

இன்றும் வழக்கம் போல காலையில் எழுந்து குளித்து ரெடியாகி அலுவலகம் கிளம்பினேன்.
வெளியே வந்தால் பயங்கரமான பனி. ஆனால் குளிரில்லை!!
வெள்ளையாக புகை பரவியிருந்தால் பனி என்று தானே தோன்றும். காற்று மாசாக கூட இருக்கலாம்.
எனக்கு எப்பொழுது மார்கழி மாசம் குளிர் பற்றிய நினைப்பு வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சொன்னது ஞாபகம் வந்துவிடும்.
குளிருக்கு கைகளை பரபரவென தேய்த்துவிட்டு "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?! மார்கழி மாசம் மரமெல்லாம் நடுங்கும். தைமாசம் தலையெல்லாம் நடுங்கும்னு!!"

வழியில் ரோட்டோரத்தில் ஒருவர் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தார். அவரை நான் பார்த்திருக்கிறேன்.  எப்பொழுதும் சரியாக ஏழரை மணிக்கு நான் ஒரு தெரு முனையை காலை கடப்பேன். அப்பொழுது அவரும் அந்த முனையில் ஒரு ஓரத்தில் வந்து நிற்பார். எங்கிருந்தோ சில நாய்கள் சின்னதும் பெருசுமாக சத்தமில்லாமல் அவரை பார்த்து துள்ளலுடன் ஓடி வந்து வாலாட்டிக்கொண்டு நிற்கும். அவர் தன் பாக்கெட்டிலிருந்து பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க பொறுமையில்லமால் அவை அவரின் மீது முன்னங்கால்களை வைத்து எட்டி வாங்கிக்கொள்ளும். நான் கடந்து சென்றுவிடுவேன். இன்று கொஞ்சம் சீக்கிரமாக நான் வந்துவிட்டதால் இவரை வேறொரு இடத்தில் பார்க்கிறேன். கடந்து நடந்தேன்

எப்படியோ இன்று ரயிலில் இருக்கை கிடைத்தது. நான் பாதியில் விட்ட வெக்கை நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். நேற்று அசுரன் பாதிப்பால் படிக்க சிரமமாக இருந்தது இன்று கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்ச நேரத்தில் ஜன்னல் ஓரம் இருக்கை கிடைக்கவும் வசதியாக வாசித்துக்கொண்டு வந்தேன்.

அலுவலகத்தில் வழக்கம் போல அந்த கொடூர முதலாளி பெங்களூரிலிருந்து போனில் கண்டபடி கத்தினான். மற்றவனை திட்டுவதை கூட கேட்க முடியாமல் எப்பொழுதும் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு இன்றைய பொழுதை கழித்தேன்.

இரவு ரயில் விட்டு இறங்கி வேகமாக பாட்டு கேட்டுக்கொண்டே நடந்த பொழுது கால்களில் கட்டு போட்ட பெரியவர் ஒருவர் தன் பையை படி ஏறும் வரை பிடித்து கொள்ள உதவிக்கு என்னை அழைத்த பொழுது பாட்டின் வேகத்தில் அவரை கடந்து சென்று சுதாரித்து திரும்புவதற்குள் இன்னொருவர் அவருக்கு உதவினார். அவரை பார்த்து அந்த பெரியவர் புன்னகைத்தது எனக்கு வந்திருக்க வேண்டியது. எல்லாம் அவசரம்.

இன்னொரு இடத்தில் போலீஸ் ஒருவரை பிடித்து ஊத சொல்லிக்கொண்டிருக்க அந்த மனிதர் தயங்கி தயங்கி தலையை பின்னுக்கிழுத்து கொண்டிருந்து சிரிப்பாக இருந்தது. 

எல்லாம் முடிந்து இருப்பிடம் வந்து சேர்ந்தாகிவிட்டது.

No comments:

Post a Comment

Related Articles